Monday 29 December 2014

மீகாமன்:

தடையற தாக்க இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.. மீகாமன். “தடையற தாக்க” அதன் வித்தியாசமான ஆக்சன் பேக்கேஜ்ஜினால் கவனம் ஈர்த்த திரைப்படம். அதனால் இயல்பாகவே இந்த மீகாமன் திரைப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் இருந்தது. படம் வெளியான பின்னர் வந்த விமர்சனங்கள் பெரும்பாலும் படத்தை வெகுவாக பாராட்டிவந்த நேரத்தில், தி இந்து நாளிதழ் படத்துக்கு 3.5/5 மதிப்பெண் கொடுத்ததும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. இருந்தாலும் இவை எல்லாமுமே சற்று மேலதிகமான பாராட்டுக்களாக இருக்குமோ என்ற சந்தேகமும் தோன்றாமலில்லை.. படம் பார்த்தேன்.. சற்றே மேலதிகமான பாராட்டுதான் என்றாலும், படம் பெரிதாக ஏமாற்றவில்லை என்பதில் திருப்தியே..


இயக்குநர் மகிழ் திருமேனி கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் உதவியாளர் என்பதால் இவரது மேக்கிங் டெக்னிக்குகளை கண்டு ஆச்சரியப்பட தேவையில்லை.. அதுவே இந்தப் படத்திலும் பலமாக இருந்திருக்கிறது.. மிகவும் ரிச் & ப்ளசண்ட் ஆன மேக்கிங். கதை, திரைக்கதை என்கின்ற ரீதியில் பார்த்தால், தனிப்பட்ட முறையில் மகிழ் குழுவினருக்கு இது சற்று பின்னடைவுதான்.. தடையற தாக்க திரைப்படத்தில் சாமானிய மனிதனை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்பதால் அதில் இருந்த டெம்போ இதில் மிஸ்சிங். என்றாலும் கூட, சின்ன சின்ன வித்தியாசங்களில் படத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுவிடுகிறார்..

போதைப் பொருள்களை பெரிய அளவில் கடத்திக் கொண்டிருக்கும் ஒரு கும்பல். அதன் தலைவன் யார் என்பது அந்த கும்பலில் இருப்பவர்களுக்கும் தெரியாது, போலீஸ்க்கும் தெரியாது.. அப்படிப்பட்ட ஒரு கச்சிதமான வலைபின்னல் அவர்களது நெட்வொர்க். அப்படிப்பட்ட அவர்களது நெட்வொர்க் கண்ணிகளை உடைத்து, அந்த போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவனை கைது செய்ய, ரகசிய திட்டத்தை கையாண்டு, ஆண்டாண்டு காலமாக காத்திருக்கிறது ஒரு தனிப்பட்ட போலீஸ் டீம்.. அந்த டீமைச் சேர்ந்த இரண்டு போலீஸ்காரர்கள் ஏற்கனவே அந்த நெட்வொர்க்கில் போதைப் பொருள் கடத்தும் கும்பலோடு இணைந்து, வேறுவேறு இடங்களில் வேலை செய்து வருபவர்கள். இவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பால், ஒரு கட்டத்தில் தலைவனை பிடிப்பதற்கான வாய்ப்பு அமைய, அதை தன் தனிப்பட்ட பொறாமையால், ஒரு போலீஸ் மேலதிகாரி கெடுத்துவிட, இப்பொழுது அந்த இரண்டு போலீஸ்காரர்களும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.. அந்த சிக்கலில் அவர்கள் மீண்டார்களா..?? தலைவனை பிடித்தார்களா…?? என்பது விறுவிறுப்பான மீதிக்கதை..

கதையாக பார்த்தால், மிகப் புதிதான கதை ஒன்றும் இல்லை.. பல்வேறு கோணங்களில் பல்வேறு படங்களில் பார்த்த அதே கதைதான்..  ஆனால் அந்தக் கதையை நகர்த்திச் சென்றிருக்கும் விதத்தில், அவர்களது கற்பனையையும் உழைப்பையும் காண முடிகிறது.. அதே நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் சின்ன சின்ன திருப்பங்களும், புதிய முயற்சிகளும் தான் திரைப்படத்தை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது.. இந்தப்படத்திலும் வழக்கம் போல காதல் உண்டு.. ஆனால் அது வழக்கமான காதலாக இருப்பதில்லை.. இரவில் தன்னத்தனியாக இருக்கும் நாயகன் தன் வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருவதை பார்த்தும், அவனை தவறானவன் என்று நம்பிய பின்னரும் கூட, அவனிடம் இருந்து தன் மனதை திருப்ப முடியாமல் அவதிப்படும் பெண்ணாக நாயகி ஹன்சிகா.. முதன் முறை ஆர்யாவைப் பார்த்துவிட்டு, தன்னை அவனது பார்வைக்கு தயார்படுத்திக் கொள்ளும் காட்சிகள், தன்னிடம் அவன் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை என்றதும் அவனைப் பற்றி தவறாக பேசுவது, காமத்தின் தாபத்தில் இருக்கும் போது எங்கே ஃப்யர் ஆகிவிடுமோ என்ற பயத்தில் தன் தோழியை கிளம்பச் சொல்வது என கொஞ்சம் புதிதான ரசிக்க வைக்கும் கதாபாத்திரம்.. ஆனால் அவர் நடையைத் தான் சகிக்க முடியவில்லை. அதே போல் அந்த காதலை அழகாக நிராகரிக்கும் ஆர்யாவின் கதாபாத்திரமும், மிஷனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத துணிவும் கொண்ட கதாபாத்திரமாக நேர்த்தி..

படத்தின் குறைகள் என்று பார்த்தால், அதீதமான ஹீரோயிசம் நிரம்பி இருப்பதால், ஒரு மறைமுக போலீஸ்காரரின் வாழ்க்கை என்பதில் இருந்து மாறி, ஒரு சாகச ஹீரோவின் வாழ்க்கையாக திரைப்படம் மாறிவிடுகிறது.. அதுபோல் படம் தொடங்கி நாற்பது நிமிடத்து மேலாக ஆகிய பின்னரும் தொடர்ந்து கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதும் சோர்வைக் கொடுக்கிறது.. அதுபோல் முக்கியமானதாக கருதப்படும் சில திருப்பங்கள் எல்லாமே முன்கூட்டி தீர்மானிக்ககூடியதாகவே இருக்கிறது. (அந்த செல்போன் ட்விஸ்ட் தவிர்த்து..) இருப்பினும் நிறைகளும் இல்லாமல் இல்லை.. அளவுக்கு அதிகமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது என்பது ஒரு குறையாக இருந்தாலுமே, அதுவே நம் கவனத்தை திசை திருப்பி, ஒரு செயலை முன்கூட்டியே நாம் யூகிக்க முடியாதபடி தடுக்கிறது என்பதனையும் சொல்லியே ஆக வேண்டும்.. அதுபோல உயர் அதிகாரி மட்டத்தில் நடக்கும் ஈகோ போட்டிகளால், கிடைமட்டத்தில் எந்தவித காரணமும் இன்றி பலியாகும் கடைநிலை காவல்காரர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் அம்சமும் முக்கியமானது.. இது தவிர்த்து குறைந்தபட்ச சுவாரஸ்யத்தை திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியிலும் தக்கவைத்துக் கொண்டது, மிக வேகமான, காட்சிகளில் கவனத்தை திசைதிருப்பும் ஸ்ரீகாந்தின் அதிவேக எடிட்டிங், பல காட்சிகளில் அரை இருட்டில் அதிஅற்புதமாக படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவு, தமனின் கதையோட்டத்து உதவும் பிண்ணனி இசை, சிறப்பான கதாபாத்திர தேர்வு என்று நிறைய நிறைகளும் உண்டு..

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்பவர்களுக்கு இந்த திரைப்படம் திருப்தி கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம்.. ஆனால் சாதாரண எதிர்பார்ப்புகளுடன் வருகின்ற பார்வையாளரை திருப்திபடுத்துவதற்கான கூறுகள் படத்தில் இருப்பதாலும், தொய்வில்லாமல், எரிச்சலடைய செய்யாமல் செல்லும் திரைக்கதை உத்தியாலும் மீகாமன் சற்று கவனம் கோருகிறது…

கப்பலை நம்பாவிட்டாலும், மீகாமனை(கேப்டன்) நம்பலாம்..



No comments:

Post a Comment