Sunday 25 November 2012

களங்கமில்லா கற்பு



குடுகுடு கிழவியவள்
கூட்டமில்லாத பேருந்தில்   
கூடைப் பையுடன் ஏறினாள்
இருக்கைகள் எங்கும் இருவராயிருக்க
நான் மட்டும் தனித்திருந்தேன்
தயக்கத்துடன் நெருங்கியவள்
தாராளமாய் இடமிருந்தும்…..!
இருக்கையில் எனக்கருகே இடம்விட்டு
ஓரத்தில் ஒட்டிக் கொண்டாள்…
இருவருக்குமான இடைவெளியில்
இறுமாப்புடன் அமர்ந்திருந்தது
இந்திய பெண்களின் கற்பு…..!?
தளர்வான பிடியால்
தடுமாறி கீழே விழுந்தாள்
தலையில் காயம்பட
பதற்றத்தில் பதறிக் கொண்டிருந்தோம்…..
பவ்யமாய் பல் இளித்தது…..
எங்களூர் பெண்களின் கற்பு….

Friday 23 November 2012

விபத்தால் பிழைத்தது



எங்குமே நிற்காமல்
எதையுமே நேசிக்காமல்
இழந்ததை மீட்பதாய் எண்ணி
இருப்பதையும் இழந்து கொண்டு
எங்கே ஓடுகிறோம்…?
எதற்காய் ஓடுகிறோம்..?
என்றறியாமல் ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திரகதி வாழ்க்கையின்
இரண்டு நிமிடங்களை இழுத்து நிறுத்தியது
அந்த நெடுஞ்சாலை விபத்து….
கூட்டத்தினரின் பிரார்தனைகளையும்
உச்சுக் கொட்டல்களையும்
உதாசீனப்படுத்தி உருகி ஓடியது
அடிபட்டு கிடப்பவனின் உயிர்….
அந்த நிமிடங்களில்
அவன் இறந்திருந்தான்…..
அவசர சிகிச்சையில் இருந்த
மனிதநேயம் பிழைத்துக் கொண்டது……

Wednesday 21 November 2012

துப்பாக்கி:


மாஸ் ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் நல்லகதை இல்லாவிட்டால் அந்த படம் ப்ளாப் தான் என்று இருக்கும் இன்றைய நிலையில் விஜய்க்கு நண்பனை தொடர்ந்து மற்றொரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும் படம். ஏழாம் அறிவு தோல்விக்கு பிறகு முருகதாஸ்க்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கும் படம்.

பொதுவாக எனக்கு முருகதாஸ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அதில் ஒரு நல்லவிதமான செய்தி ஒளிந்திருக்கும். ரமணா, கஜினி, ஏழாம் அறிவு போன்றவை அதற்கு உதாரணம். அதை தொடர்ந்து இதில் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையில் அவன் செய்கின்ற அர்பணிப்புகளை கொஞ்சமேனும் கொஞ்சம் யோசிக்க வைத்திருப்பதாலேயே இந்த படம் எனக்கு பிடித்திருக்கிறது. தமிழ் சினிமா அடித்து துவைத்த கதைதான்.. ஊரை காரணமேயின்றி அழிக்க நினைக்கும் தீவிரவாதி, அவனை தனக்கு எந்த இழப்பும் இன்றி அழித்து, தன் நாட்டை காக்கும்  மிலிட்டரி ஹீரோ.


இந்த அதர பழசான கதை எப்படி மெருகேறியது என்று கேட்டால் மொத்தம் நான்கு சீன்களால் மட்டுமே என்பேன். பன்னிரெண்டு தீவிரவாதிகளை கொல்ல விஜய் எடுக்கும் நடவடிக்கை.. (முக்கியமாக அவரே 12 பேரையும் கொல்லாதது), விஜயின் டீமை கண்டறிய வில்லன் எடுக்கும் நடவடிக்கை, வில்லன் தன்னை எந்த வழியாக நெருங்குவான் என்பதை கண்டறிய விஜய்க்கு கிடைக்கும் க்ளு… நாயைக் கொண்டு விஜய் செய்யும் ஹீரோயிசம்…. என்னை பொருத்தவரை கண்டிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிக்காக இல்லை. இந்த நான்கு சீன்களே மொத்த படத்தையும் காப்பாத்துகின்றன.

படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் அம்சங்கள் என்று பார்த்தால், வசனம், சில டைமிங் காமெடிகள், ஜெயராமின் நடிப்பு. ”டிரய்ன் சரியா எத்தன மணிக்கு வரும்ன்னு தெரியணும்னா வந்தப்புறந்தா தெரியும்” ”தமிழ் கொஞ்ச தெரியும், தமிழன நெறையா தெரியும்” உயிர எடுக்கணும்னு நினைக்கிறவனே தன் உயிர பத்தி கவலப்படல.. உயிர காப்பாத்தணும்னு நினைக்கிற நாம நம்ம உயிர பத்தி கவலைப்படலாம” “என்ப்பா உன் வீட்டு ட்ரஸ்ல புத்தகம், ட்ரஸ் இதெல்லாம் இருக்கவே இருக்காதா…” ”பெட்ரோமாஸ் லைட்டேதா வேணுமா…” “அப்பாவ அடி.. அப்பாவ அடி..ன்னு நீங்கதான சொன்னீஙக…” என பல இடங்களில் வசனம் குத்தலாகவும் குதூகலமாகவும் இருக்கிறது.

கமாண்டோ கேப்டன் ஜெகதீசாக விஜய். நாயைக் கொண்டு கடத்தல்காரர்களை கண்டறியும் இடத்தில் இவரின் உடல்மொழி அபாரம், மேலும் ஜெயராமுடனான ஹோட்டல் சீனில் சொல்லிக் கொள்வது போல் இருக்கிறது நடிப்பு. காஜலை திருமணம் செய்ய நிச்சயித்த மாப்பிள்ளையாக ஜெயராம் மனுசன் அலட்டாமல் சிரிக்க வைத்துவிடுகிறார். இது போக சத்யனும் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்…. பாடல்கள் மனதில் நிற்கவே இல்லை… இந்த கூட்டணி உடைந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.. ஒவ்வொரு பிரேமிலும் சந்தோஷ் சிவன் தெரிகிறார்.

குறை என்று பார்க்கப் போனால் சில ஆடியன்ஸ்க்கு நிறைவாக தெரியும் அதே காட்சிகள் தான். குறிப்பாக அந்த பன்னிரண்டு தீவிரவாதிகளை பிந்தொடர்ந்து செல்லும் கமாண்டோக்களின் லட்சணம் இருக்கிறதே… அட போங்கப்பா… எங்க ஊர்ல பசங்க பொண்ணுங்கள பாலோ பண்ணும் போதே இதவிட பெட்டரா பண்ணுவாய்ங்க…. யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி…

விஜய் வீட்டில் தப்பிக்கும் தீவிரவாதிக்கு டைரக்டர் என்ன கட்டளை இட்டார்னே தெரியல… மனுசன் இந்தப் பக்கம் அந்த பக்கம் திரும்பாம.. பத்தடி தூரத்துல பாலோ பண்ற விஜய் ஜீப்புக்கு தொந்தரவு கொடுக்காம அட்டென்சன்லயே நடக்கிறாரு.. எத்தனையோ பேப்பர்ல படிச்சிருக்கேன்… போலீஸ் மோப்ப நாய் பாதி தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை என்று… போலீசுக்கு கூட கிடைக்காத சூப்பர் மோப்ப நாய் முருகதாஸ் சார் டீமுக்கு கிடைச்சிருக்கு… அது கடைசி தூரம் வரைக்கும் ஓடி களவாணி பயல பூரா காட்டிகுடுத்திருது….

க்ளைமாக்சில் நடுக்கடலில் எல்லாவிதமான டெக்னிக்குகள் மற்றும் திட்டங்களுடன் அமர்ந்திருக்கும் தீவிரவாதி கூட்டத்திற்கு கடலுக்கு அடியில் வந்து பாம் வைக்கும் டெக்னிக் எப்படி தெரியாமல் போகும். இதைகூடவா அவர்கள் யோசிக்காமல் இருப்பார்கள். மேலும் ஒரு பக்கத்து பார்வை போல் தீவிரவாதிகள் என் குண்டை வெடிக்க செய்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்ற கேள்விக்கும் விடையே இல்லை.

இன்னொரு குறையாக பட்டது என்னவென்றால் ராணுவ வீரர்களை போலீஸ் நபர்களுடன் ஏன் ஒப்பிட வேண்டும். இரண்டு வீரர்களுமே மிக முக்கியமான அர்ப்பணிப்புகளை நம் நாட்டிற்காக ஆற்றுபவர்கள். அதில் ஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என்கின்ற ரீதியிலான ஒப்புமையை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதற்கு பதில்  கடவுளாக மதிக்கப்படும் விளையாட்டு வீரர்களையோ அல்லது திரைப்பட நடிகர்களையோ அல்லது அரசியல் தலைவர்களையோ ஒப்புமைபடுத்தி பேசியிருந்தால் அந்த காட்சிகள் இன்னும் வலுவாக அமைந்திருக்கும் என்பது என் எண்ணம்.

இப்படி எந்த எந்த காட்சிகள் பிற ரசிகர்களால் ரசிக்கப்படுகிறதோ அதே காட்சிகளில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளே என் கண்ணை உறுத்துகின்றன.. இருப்பினும் அங்கங்கே வரும் ஹீரோயிசமும், சின்ன சின்ன வசனம் மற்றும் காமெடியும் எந்த அயர்ச்சியும் இன்றி முழுப்படத்தையும் காணவைப்பதே இதன் முக்கியமான வெற்றி.


இருப்பினும் மற்ற எத்தனையோ குப்பை படங்களுக்கு மத்தியில் எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் நல்லகருத்தை பின்புலமாக கொண்டு இந்த திரைப்படத்தை கொடுக்க முனைந்து இருக்கும் முருகதாஸ் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்..

பீட்சா:



துவண்டு போய் இருந்த தமிழ் சினிமா வணிகத்திற்கு ஆறுதலாக வந்து, சிறு பட்ஜெட் படங்களை நம்பிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும் படம். இந்த படத்தின் விமர்சனங்களை எழுதிய பலரும் கதையைப் பற்றி கூறினால் அது சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும் என்று கூறி ஜகா வாங்கிக் கொண்டனர். ஆனால் நான் இந்த கதையைப் பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணிய காரணத்தால் தான் பல நாட்கள் கழித்து இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை எழுதுகிறேன். பெரும்பாலான மக்கள் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள்.. எனவே நான் கதையை பற்றி விவாதிப்பது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் இதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

பீட்சா கடையில் வேலை பார்க்கும் மைக்கேல் (விஜய் சேதுபதி) என்ற இளைஞனும், பேய்கள் பற்றிய அதீத ஆர்வத்தால் பேய்களைப் பற்றி கதைகள் எழுதிக் கொண்டும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் யுவதியும் காதலர்கள். லிவிங் டுகதர் கல்சரில் கல்யாணம் ஆகாமலே ஒரே வீட்டில் வசித்து வருபவர்கள். அவள் எப்போதும் பேய் படங்களை பார்த்துக் கொண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டும் இருப்பவள். மைக் என்கின்ற மைக்கேலுக்கு பேய் மீது நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பயம் உண்டு. இந்த நிலையில் அவள் கர்ப்பமாக முதலில் யோசித்த மைக் பின்னர் திருமணம் செய்ய சம்மதித்து பணத்தட்டுபாட்டால் இப்போது நமக்காக திருமணம் செய்து கொள்வோம் என யாரையுமே அழைக்காது வீட்டிலேயே இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர்.

பீட்சா கடை ஓனரின் வீட்டுக்கு பைல்களை கொடுக்க சென்ற மைக், பேய் பிடித்து இருக்கும் அவரது மகளைப் பார்க்கிறான். அவளிடம் யார்மீதாவது உனக்கு கோபம் இருக்கிறதா…? யாரையாவது பழிவாங்க நினைக்கிறாயா சாந்தி என பேய் நிபுணர் ஒருவர் கேட்க… அவள் ”என் பேர் நித்யா” என கூறிக் கொண்டே உக்கிரமாக மைக்கேலை திரும்பி பார்க்க.. அவன் பயந்து போய் வீடு திரும்புகிறான். அவனது காதலி சொல்லுகிறாள் “எல்லாருக்கும் ஒரு தருணம் வரும் அவநம்பிக்கைய நம்பிக்கையா மாத்துற தருணம், உனக்கான தருணம் வந்திருச்சி” என கூற அவன் பயப்படுகிறான். இதை தொடர்ந்து வரும் காட்சிகளில் தன் வீட்டில் ஒரு பார்சலை கொடுக்க சொல்லி கடை ஓனர் (நரேன்) வீட்டுக்கு அனுப்ப.. மைக் தயங்கி தனக்கு டெலிவரி இருப்பதாக சொல்ல.. ”என் மகள் உன்ன கொன்ற மாட்டா…” என திட்டி அவனை அனுப்புகிறார்.

நடுநிசியில் பரபரப்புடன் கடைக்கு ஓனர் வர.. மற்ற இரண்டு ஊழியர்களும் அடிபட்ட ரத்த காயங்களுடன் இருக்க… மைக் எங்கே என அவர் கேட்க… உள்ளே அவர்கள் கைகாட்ட… உள்ளே மைக்கும் ரத்த காயங்களுடன் அமர்ந்து இருக்க… ஓனர் “டேய் மைக் டெலிவரி கொடுக்கவும் போகல.. வீட்டுக்கும் ஆள் வரலங்கிறாங்க.. எங்கடா போன..” என கேட்க.. அவன் பைத்தியம் பிடித்தவன் போல் “தன் மனைவி இறந்துவிட்டதாக போலீஸ் கூறுவதாகவும், அவளை காணவில்லை எனவும், தான் ஒரு அமானுஸ்ய பங்களாவில் மாட்டிக் கொண்டதாகவும் கூறி நடந்ததை விவரிக்க தொடங்க… அந்த அமானுஸ்ய பங்களாவில் என்ன நடந்தது..? அவனது மனைவி என்ன ஆனாள் என்பது மீதிக்கதை….

படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்க:
இந்த படத்தின் திரைக்கதை யுத்தியை நாம் இரண்டு விதமாக கொள்ளலாம். ஒன்று இதனை புத்திசாலித்தனமான திரைக்கதை (Intelligent type) எனலாம். அல்லது ஏமாற்றும் விதத்திலான திரைக்கதை (cheating type) என்றும் சொல்லலாம்.. இரண்டு விதமான திரைக்கதை பெயரும் இப்படத்திற்கு பொருந்தும் என்பதற்கு காரணம் ஒன்று மட்டுமே அது பார்வையாளர்களை இதில் ஏதேனும் ஒன்று நடந்து இருக்கலாம் என்று யோசிக்க வைத்துவிட்டு அதில் எதுவுமே நடக்கவில்லை என்று புதிதாக ஒன்றை கூறுவதே.

படத்தைப் பார்க்கின்ற பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு பின்னர் மைக்கேலை ஒரு மனநோயாளியாகவோ அல்லது பேய் பிடித்தவனாகவோ அல்லது கொலைகாரனாகவோ நினைக்க வாய்ப்புண்டு… அதே நேரத்தில் கதாநாயகி ஒரு கற்பனைப் பாத்திரம் என்று நாம் நினைத்துக் கொள்வதற்கான தருணங்களையும் இயக்குநர் ஏற்படுத்துகிறார். நாம் மேற்கண்ட ஏதேனும் ஒன்றுதான் காரணமாக இருக்கும் என்ற தடத்தில் பயணித்து மேற்கொண்டு செல்லும் போது இயக்குநர் ஒரு u turn எடுத்து இது எதுவுமே காரணம் இல்லை. ஓனர் வீட்டில் கொடுக்க சொன்ன பாக்ஸில் இருந்த வைரங்களை கொள்ளை அடிக்க இருவரும்(கணவன், மனைவி) சேர்ந்து நாடகமாடுகின்றனர் என்ற ஒரு புதிய கோணத்தில் கதை சொல்லி முடிக்கிறார். எனக்கு இந்த முக்கியமான திருப்பம் சிறிது ஏமாற்றத்தை கொடுத்தது.. அந்த இரண்டு கேரக்டரும் சேர்ந்து ஓனரை ஏமாற்றியது இருக்கட்டும்… அவர்களுடன் இயக்குநரும் சேர்ந்து கொண்டு நம்மையும் அல்லவா ஏமாற்றியிருக்கிறார் என்ற உணர்வே பிரதானமாக எழுந்தது. அந்த ஒரே ஒரு காரணம் படம் பார்த்தப் பின்னர் ஏற்படும் பாதிப்பை சிறிது குறைத்ததும் உண்மை.    

இந்த படத்தைப் பற்றியே மேற்கொண்டு சிந்தித்திக் கொண்டிருக்கும் போது  இந்த திரைக்கதையை இப்படி வைத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம் கண்டிப்பாக இயக்குநருக்கும் தோன்றியிருக்கும். இருந்தாலும் அவர் இப்போது படமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைக்கதை உத்தியே சிறந்தது என்று முடிவு செய்திருப்பார் என்றே தோணுகிறது. ஏனென்றால் அந்த மாற்று திரைக்கதையில் சுத்தமாக விறுவிறுப்பு இருக்காது. ஆனால் சற்று யோசித்து இருந்தால் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்க முடியும். இந்த மாற்று திரைக்கதை உத்தியையும் இயக்குநர் யோசித்து வேண்டாம் என்று நிராகரித்து இருப்பார் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட காட்சியை விளக்குகிறேன்.

படத்தில் ஒரு காட்சி. …………மைக்கேல் பீட்சா டெலிவர் செய்து விட்டு 435 ரூபாயாக கொடுங்கள். என்னிடம் சில்லறை இல்லை என்று கூற… அந்த வீட்டின் பெண்மணி சில்லறை எடுத்து வருவதாக கூறி மேல்மாடி செல்கிறாள். கரெண்ட் வேறு இல்லை. மெழுகுவர்த்தி (ஒளிப்பதிவாளரின் உதவிக்காக) கொழுத்திவைத்து விட்டு செல்கிறாள். சத்தம் கேட்க.. மைக்கேல் மேலே சென்று பார்க்க.. அவள் இறந்து கிடக்க… வீட்டை விட்டு வெளியே செல்ல முயல… வீடு உட்புறமாக பூட்டிக் கொள்கிறது. எப்படி கொலை நடந்தது என்றே தெரியாத சூழ்நிலை… கொலைகாரன் அல்லது பேய் உள்ளே இருக்கின்ற பட்சத்தில் அடுத்து கொலை செய்யப்படுவது நீங்களாகவும் இருக்கலாம்.. அந்த சூழலில் மைக் கண்ணாடி ஜன்னலின் வழியே கத்துகிறான்.. யாரும் உதவிக்கு வரவில்லை………

இந்த காட்சியை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். இதே சூழ்நிலையில் அடைக்கப்பட்ட வீட்டுக்குள் நீங்கள் இருந்தால் “கண்ணாடி ஜன்னலின் உள்ளே இருந்து கத்திக் கொண்டு இருப்பீர்களா… கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியேறுவீர்களா…? கண்டிப்பாக கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளிவருவீர்கள்… ஆனால் மைக்கேல் அதை செய்வதில்லை… ஏனென்றால் அவன் அங்கு ஒரு கட்டுக்கதையை பொய் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான்… அவனும் ஒரு கட்டத்தில் தன் பொய்யில் மெக்கா சைஸ் ஓட்டை இருப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு ஓனரோ  சக பணியாளர்களோ அவனிடம் “நீ ஏன் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே வரவில்லை என்று கேட்பதற்கு முன்பு முந்திக் கொண்டு அதற்கும் ஒரு கதை சொல்கிறான். இவன் இரும்பு ராடால் அடித்தும் கூட அங்கிருந்த எந்த ஒரு கண்ணாடி பொருளும் உடையவில்லை என்று” இதுதான் அந்த மற்றொரு திரைக்கதைக்கான ஐடியா….

இது போன்ற அனுபவம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்பட்டு இருக்கும்.… ஏதாவது ஒரு பொய் சொல்லிக் கொண்டு இருப்போம்.. உதாரணமாக “ஆபிஸில் லீவு போட்டதுக்கு காரணமாக மனைவி வீட்டில் வழுக்கி விழுந்ததாக சொல்லிக் கொண்டு இருப்போம்.. எதிர் இருக்கை காரர் கேட்பார்… ’நேற்று இரவு உங்களையும் உங்கள் மனைவியையும் புட் பஜாரில் பார்த்தேனே…’. என்பார்.. மனதுக்குள் அவரை அசிங்கமாக திட்டியவாறே… ’நோ நோ நோ யூ ஆர் மிஸ்டேக்கன்… என்கூட வந்தது என் மிஸஸோட சிஸ்டர்… அவுங்க டிவின்ஸ்….” என்று இன்னொரு பொய்யை சொல்லி சமாளிப்போம்….

இப்படிதான் மைக்கும் சமாளிக்கிறான்… ஆபிஸில் லீவு போடுவதற்காக மேற்சொன்ன பொய்யை நீங்கள் சற்று கவனித்தால் ஒரு திரைப்படத்தின் சாயல் தெரியும்… அதான் இல்லாத இரட்டையரை இருப்பதாக கூறும் திரைப்படம்… “தில்லுமுல்லு” இதே திரைப்படம் தான் மைக்கேல் அந்த வீட்டுக்குள் நுழையும் போது டிவியில் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்த தில்லுமுல்லு, பீட்சா இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்னவென்றால்.. தில்லுமுல்லுவில் ரஜினி(இந்திரன்) தன் முதலாளி தேங்காய் சீனிவாசனை ஏமாற்றுகிறார் என்பது படத்தில் வரும் பிற கேரக்டருக்கு தெரியாது. ஆடியன்ஸ்க்கு தெரியும். பீட்சாவில் மைக்கேல்(விஜய் சேதுபதி) ஏமாற்றுகிறார் என்பது படத்தில் வரும் பிற கேரக்டர்களுக்கும் தெரியாது. ஆடியன்ஸான நமக்கும் தெரியாது… இது முதல் வேற்றுமை.. இரண்டாவது வேற்றுமை அங்கு இரட்டையர் என்ற பொய்… இங்கு பேய் வீடு என்ற பொய்…

மாற்றுதிரைக்கதையாக நான் இங்கு முன்வைக்கும் திரைக்கதையும் தில்லுமுல்லு பாணிதான்.. அதாவது மைக்கேலின் வாழ்க்கை நடக்கும் விதத்தை முன்பின் மாற்றாமல் அப்படியே காட்டுவது.. அவன் பீட்சா டெலிவரி செய்ய செல்ல.. கீழே விழ.. வீட்டுக்கு சென்று டிரஸ் மாற்ற… டைமண்டை அவனது மனைவி பார்க்க… அவர்கள் திட்டம் போட… மைக்கேல் அதை அரங்கேற்றம் செய்ய….பொய் சொல்லத் தெரியாமல் பொய் சொல்லி அவன் மாட்டிக் கொள்ளப் போகிறான் என ஆடியன்ஸ் என்னும் போது புத்திசாலித்தனமாக மற்றொரு பொய்… இப்படி செல்லும் அந்த திரைக்கதை.. இதில் கண்டிப்பாக ஒரு பேய் கதைக்கான த்ரில் இருக்காது. ஆனால் காமெடி மிகச்சிறப்பாக அமைய வாய்ப்புண்டு… நடிப்புக்கும் அற்புதமான வாய்ப்பு உண்டு…

பீட்சா மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த மாற்றுதிரைக் கதையை வழக்கமான திரைக்கதை… இதில் என்ன புதுமை உள்ளது என்றே பெரும்பாலானோர் எதிர்கொள்வர். இருப்பினும்… ஒரிஜினல் திரைக்கதையின் முடிவில் ஒரு ஏமாற்றம் தோன்றுவதாலும்… இதற்கு ஒரு மாற்றுதிரைக்கதை உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே இதை பகிர்ந்து கொள்கிறேன்.

இதனை தவிர்த்து பார்க்கும் போது பீட்சா மிகச்சிறப்பான அடையாளமாக தமிழ்சினிமாவில் இருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு. சில மெழுகுவர்த்திகளையும், டார்ச் வெளிச்சத்தையும் கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்ட உணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்துக்கு வாழ்த்துக்கள். இசையும் பிண்ணனியிசையும் வெகு நேர்த்தி. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.. விஜய் சேதுபதிக்கு பீட்சா ஒரு நல்ல திருப்பமாக அமையும்… அது போலவே தமிழ் சினிமாவிற்கும்.. தனது முதல்படம் என்பதற்கான அறிகுறியை எங்குமே விடாத இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்க்கும்…..


Thursday 15 November 2012

BABEL



 Babel  என்று ஒரு மெக்சிகன் மொழி திரைப்படம். அதை மெக்சிகன் மொழி திரைப்படம் என்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அதன் கதைக்களம் மெக்சிகோ, யு.எஸ், மொராக்கோ, ஜப்பான் ஆகியவற்றில் நடக்கும் இருவேறு நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்டு உள்ளது. எனவே அந்தந்த இடங்களுக்கு ஏற்ப அவர்கள் அதற்குரிய மொழியை பேசுகின்றனர். இதன் இயக்குநர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த . இவரது முக்கியமான மற்றொரு திரைப்படம் தான்  ”ameros perross” ஆகும். அந்த திரைப்படம் அதன் திரைக்கதை உத்திக்காக சினிமா படைப்பாளிகளால் மிகவும் சிலாகிக்கப்பட்ட படம்.


Babel ம் ஏறத்தாழ அதே மாதிரியான ஒரு வகை திரைக்கதை உத்தியால் அமைக்கப்பட்டது தான். ஆனால் இதுவும் அமரோஸ் பெரோஸ் போல ஒரு அலாதியான காண்பனுவத்தைக் கொடுத்தது என்பது உண்மை. கதையின் ஆரம்ப களம் மொராக்கோ எனப்படும் பாலைவனப்பகுதியில் நடக்கிறது. ஆடு மேய்க்கும் தொழிலை செய்யும் ஒரு குடும்பத்தினர். மலைப்பகுதியில் ஆடுகளை மேய்க்கும் அந்த குடும்பத்தின் தலைவன் ஆடுகளை உண்ண வரும் நரிகளை கொல்ல ஒருவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை வாங்குகின்றான். விற்றவன் அதைக் கொடுக்கும் போது இந்த துப்பாக்கியைக் கொண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை சுடமுடியும் என்று தன்னிடம் விற்றவர் கூறியதாக சொல்லிவிட்டு செல்கிறான் அந்த துப்பாக்கியை விற்பவன். அதை பரிசோதிக்க விரும்பும் அவரது இரண்டு மகன்களும் மலைகளில் இருந்து கொண்டு, மலையை சுற்றிச் செல்லும் சாலைகளில் வரும் வாகனங்களை நோக்கி சுடுகின்றனர். முதலில் மூத்தவன் மெக்மூத் சுட.. சுடப்பட்ட வண்டி எந்த மாற்றமும் இல்லாமல் செல்கிறது. மெக்மூத் துப்பாக்கியை விற்றவன் நம்மை ஏமாற்றிவிட்டான் என்று சொல்ல, அவனது தம்பி உனக்கு சுடத் தெரியவில்லை என்று துப்பாக்கியை வாங்க, மெக்மூத் தம்பி யூசூப்பை ரோட்டில் தூரமாய் வந்து கொண்டிருக்கும் ஒரு பேருந்தை காட்டி அதை சுடச் சொல்ல… அவனும் சுடுகிறான். அந்த பேருந்தும் எந்த மாற்றமும் இல்லாமல் செல்ல.. “ஆம், அவன் நம்மை ஏமாற்றிவிட்டான் என்று யூசூப் ஆமோதிக்க.. அதே நேரம் யூசூப் சுட்ட பஸ் சற்று தூரம் சென்று பின் நிற்க.. பஸ்சுக்குள் ஏதோ சலசலப்பு ஏற்படுவதைக் கண்டு பதற்றம் அடைந்த அண்ணனும் தம்பியும் ஓடத் தொடங்குகின்றனர்.


ஒரு வீட்டின் உள்ளறையில் ஒரு சிறுவன் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வது போல் அடுத்த பகுதி அமெரிக்க நகர்பகுதியில் தொடங்குகிறது. அந்த சிறுவனும் அவனது தங்கையும் ஒளிந்து கொள்ள அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தோற்பது போல் நடிக்கிறாள் அமெலியா(Amelia..). அமெலியா ஒரு 50 வயதை நெருங்கும் பெண்மணி. அந்த சிறுவர்களை கவனிப்பதற்காக அவர்களது பெற்றோரால் நியமிக்கப்பட்டவள். அப்போது போன் ஒலிக்கிறது. போனில் பேசும் அந்த குடும்பத் தலைவன் தாங்கள் இன்று இரவு திரும்பி வர இயலாது என்பதை தெரிவிக்கிறான். அமெலியா, மேடம் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறாள். அன்று இரவு அவர்களை அவள் பார்த்துக் கொள்கிறாள். அடுத்த நாள் காலையிலும் குழந்தைகளது பெற்றோர் வர இயலாது என்பதை குடும்ப தலைவன் தெரிவிப்பதோடு மட்டுமின்றி தாங்கள் வர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் அதுவரை நீ அவர்களை பார்த்துக் கொள் என்று ஆணையிடுகிறான்.

அமெலியா தன் எஜமானனிடம் கெஞ்சுகிறாள். அன்று தன் மகனுக்கு திருமணம் மெக்சிகோவில் வைத்து நடக்கிறது என்றும் தான் குழந்தைகளை வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு உடனடியாக சென்று திரும்புகிறேன் என்று கூறியும் அவன் அதை ஏற்க மறுத்துவிடுகிறான். வேறு சிலரிடம் உதவி கேட்டும் அவர்கள் மறுக்கவே.. வேறு வழியின்றி இரு குழந்தைகளையும் தன்னுடன் மெக்சிகோ அழைத்து செல்ல தீர்மானிக்கிறாள். தன் தம்பி மகன் மற்றும் இரு குழந்தைகளுடன் அவள் மெக்சிகோவை நோக்கி பயணிக்கிறாள்.


மொராக்கோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக டெண்டுகளில் சில பயணிகள் தங்கியிருக்கின்றனர். அதில் ஒரு கணவன் மனைவி இருவரும் ஒருவிதமான ஊடல் மனநிலையில் இருக்கின்றனர். அந்த பெண் சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்ட இறந்து போன அவர்களது குழந்தையைப் பற்றி பேசிக் கொண்டு இருக்க.. இருவருக்கும் இடையே அது வாக்குவாதமாக மாறி சூழ்நிலையை மேலும் இறுக்கமாக்குகிறது. அவர்கள் வந்த டூரிஸ்ட் பஸ் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறது.. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தும் அவர்களுக்கு இடையேயான.. இறுக்கம் இன்னும் தளரவில்லை. மனைவி தன் கணவனின் கையை இறுக பற்றுகிறாள். அவனுடைய பிடியில் இறுக்கம் இல்லாமல் தளர்வாக இருப்பதை உணர்ந்து.. தன் கையை விடுவித்துக் கொள்கிறாள். பஸ்சில் பயணம் செய்யும் பலவிதமான முகங்கள் காட்டப்படுகிறது. பஸ் முன்னரே நமக்கு காட்டப்பட்ட ஒரு மலைச்சரிவுக்கு அருகே உள்ள ஓடுபாதையில் திரும்புகிறது. இறுதியில் அந்த மனைவியின் முகமும் அவள் சாய்ந்து அமர்ந்திருக்கும் பஸ் ஜன்னல் கண்ணாடியும் மிட்சாட்டில் தெரிய.. கேமரா அந்த காட்சியிலேயே சிறிது நேரம் நிலைக்க… கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஒரு தோட்டா அவளது உடலை துளைக்கிறது.. மனைவி ரத்தம் தோய்ந்த உடலுடன் கணவன் மீது சாய… கணவன் அதிர்ச்சியில் கத்த பஸ் ஸ்தம்பிக்கிறது..


ஜப்பான் நகரில் ஒரு வளை பந்தாட்ட போட்டி நடக்கிறது. அது காது கேட்காத வாய் பேசமுடியாத பெண்களுக்கான போட்டி. அந்த போட்டியில் நடுவர் தவறான தீர்ப்பளிக்க.. நடுவரிடம் முறையிடும் ஒரு பெண்.. நான் செவிடு.. குருடு இல்லை என கோபமாய் செய்கை செய்ய.. அவள் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது அணி தோற்கிறது. இதை காலரியில் அமர்ந்திருக்கும் நடுத்தர வயது மனிதர் ஒருவர் கவலை தோய்ந்த முகத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவளது நண்பிகள் அவளோடு இன்னும் யாரும் உடலுறவு கொள்ளவில்லை.. அதனால் தான் அவள் அப்படி கோபப்படுகிறாள்.. என்று கிண்டல் செய்ய.. அவள் ஆம்.. அந்த ஆசையை இன்று உன் அப்பாவுடன் இருந்து நான் தீர்த்து கொள்ளப் போகிறேன் என்று கோபமாக சொல்லி அவள் வெளியேறுகிறாள்.


காரில் காலரியில் அமர்ந்திருந்த அவளது தந்தையுடன் பயணிக்கும் அவள் தந்தையுடன் எதுவும் பேசுவதில்லை. அவர் கேட்கும் கேள்விக்கும் கோபத்துடன் பதில் சொல்லும் அவள் தன் தாய் இருந்திருந்தால் அவள் தன்னை நன்றாக கவனித்திருப்பாள் என்று குற்றம் சாட்ட… அவளது தந்தை தான் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக பார்த்துக் கொள்வதாக கூறுகிறார். பப்புக்கு தன் நண்பிகளுடன் செல்லும் அவளை ஒரு இளைஞன் சைட் அடிக்க… அவள் அதை ரசிக்கிறாள். அதே இளைஞன் அவள் காது கேட்காத.. வாய் பேசமுடியாத பெண் என்பதை உணர்ந்து அவளை புறக்கணிக்கும் போது.. தன் பெண்மையின் அந்தரங்கத்தை காட்டி அவர்களை ஏளனம் செய்கிறாள். அவர்கள் அதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ள.. அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள். தன் தந்தை ஈவினிங்கில் பல் டாக்டரிடம் அப்பாய்ண்மெண்ட் தனக்காக வாங்கியதை நினைவு கூர்ந்து அங்கு செல்கிறாள்,

தன் பற்களை பரிசோதிக்கும் மருத்துவரின் உதட்டில் முத்தம் கொடுக்க முனைந்தும், தன் தொடைகளுக்கு இடையில் மருத்துவரின் கையை சொருகியும் உசுப்பேற்ற முயல்கிறாள். அவன் தன்நிலை உணர்ந்து அவளை திட்டி வெளியே போகச் சொல்ல அவள் அவமானத்துடன் வெளியேறுகிறாள். வீட்டிற்கு சென்றால் அவளது தந்தையை தேடி போலீஸ் வந்திருக்கிறது. தன் தாயின் மரணத்தைப் பற்றி விசாரிக்க அவர்கள் வந்ததாக எண்ணி அவள் தன் தந்தையையும் அவர்கள் கைது செய்துவிடுவரோ…? என பயம் கொள்ள.. அவர்கள் வேறு ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வந்ததாக தெரிவிக்கின்றனர்.

 நான் மொத்த கதையையும் கூறவில்லை. இது முதல் நாற்பது மணி நேர காட்சி மட்டுமே. படம் மொத்தம் 2 மணி நேரமும் 13 நிமிடமும். குண்டடி பட்ட பெண்மணி பிழைத்தாளா…? தவறுதலாக ஒரு ஆர்வத்தில் சுட்ட சிறுவர்களின் நிலைமை என்ன ஆனது…? போலீஸ் அவர்களை கைது செய்ததா..? மெக்சிகோ சென்ற இடத்தில் அமெலியாவின் தம்பி மகன் டோல்கேட்டில் தப்பிச் செல்ல… குழந்தைகள் யு.எஸ், மெக்சிகோவிற்கு இடைப்பட்ட வனாந்தரத்தில் தனித்துவிடப்படுகின்றனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது..? புறக்கணிப்பையே சந்தித்துக் கொண்டிருக்கும் அந்த வாய்பேச முடியாத பெண்ணின் வாழ்க்கையில் உறைந்த வெறுமை என்ன ஆனது….? இவைகளை தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் நீங்கள் இந்த படத்தைப் பாருங்கள்…

கனவின் மெய்பொருளை திருடி உங்களுக்கு கூறுபவன் என்று நான் கூறிக் கொண்டாலும்.. அதற்கான தருணம் பெரும்பாலான தமிழ்சினிமாவில் அமைவது இல்லை. இது போன்ற திரைப்படங்கள்தான் அதற்கு தீனி போடுகின்றன… இந்த திரைப்படம் எந்த விசயத்தை பூடகமாக சொல்லவருகிறது என்று கேட்டால் எனது பதில் ”வாழ்க்கையைதான்” என்பதாக இருக்கும். ஏனென்றால் மாணிக்கவாசகரின் இறைவாழ்த்து எதைப் பற்றி கூறுகிறது என்று கேட்டால் எளிதில் கூறலாம் இறைவனைப்பற்றி என்று. திருக்குறளை கேட்டால் என்ன கூறமுடியும்.. ஏனென்றால் அது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளையும் ஆழமாக விளக்குகிறது.

அப்படித்தான் இந்தப்படம் மனிதனின் ஒவ்வொரு அழகிய உணர்வுகளை தெளிந்த நீராகவும், ஆழ்மனதின் அழுக்குகளை கறைபடிந்த பாசிகளாகவும் காட்டுகிறது. படத்தில் காதல்,காமம், வெறுப்பு, புறக்கணிப்பு, இயலாமை, வேட்கை, அழுகை, சிரிப்பு, என வாழ்வின் ஒவ்வொரு உணர்ச்சி தருணங்களை இந்த படத்தின் திரைக்கதை தத்ரூபமாக சுமந்து செல்கிறது. காதல், காமம், அழுகை இவை நான்கு பகுதிகளிலும் வருகின்றன. காதலில் தம்பி யூசுப் தன் அண்ணனை காப்பாற்ற சொல்லி கெஞ்சும் காட்சியிலும், எதிர் காற்றுவீசும் மலையில் அண்ணனும் தம்பியும் அதை எதிர்த்து நிற்கின்ற காட்சியை கூறலாம். குண்டடி பட்டு கிடக்கும் தன் மனைவியை கண்டதும் அவனது மனதில் இருந்த இறுக்கம் மறைந்து காதல் பிறக்கும் காட்சி.யும், வாய் பேசமுடியாத பெண் தன் அப்பாவை கடைசி காட்சியில் கட்டி தழுவிக் கொள்வதும், சிறு குழந்தைகளின் மேல் அமெலியா காட்டும் அன்பும் எடுத்துகாட்டாகும்.

   காமம் என்று பார்த்தோமானால் தன் தமக்கை ஆடைமாற்றுவதை அவள் அறியும் வண்ணம் பார்க்கும் தம்பி யூசூப் இருவருக்குமிடையில் இருக்கும் அறியாபருவ காமம், இளமை பருவத்தில் தன் காம வேட்கையை தீர்த்துக் கொள்ள போராடி அதன் மூலம் தன்னையும் ஒரு பெண்ணாக ஆண் பாவிக்கிறான் என்ற  மனநிலை அடைய முற்படும் ஊமைப் பெண் கதாபாத்திரம், தன் மனைவியின் கையைகூட பிடிக்க விரும்பாத கணவன், குண்டடிபட்ட தன் மனைவி சிறுநீர் கழிக்க பாத்திரத்தை அடியில் பிடித்துக் கொண்டே அவளது உதட்டில் முத்தமிடும் தருணங்கள் பக்குவப்பட்ட காமத்தின் வெளிப்பாடு. அமெலியாவின் காதலும் முத்தமும் முதிர்ந்த காதலுக்கான உதாரணமாக இருப்பவை.

அழுகையில் இரு குழந்தைகளையும் தொலைத்துவிட்டு அமெலியா அழும் அழுகையும், தன் அண்ணனை காப்பாற்ற சொல்லி யூசுப் அழும் அழுகையும், தன் இயலாமையின் வெளிப்பாடாக அந்த ஊமைப்பெண் போலீஸ் அதிகாரி முன் அழும் அழுகையும், குண்டடிபட்ட தன் மனைவியைப் பார்த்து கதறும் கணவனின் அழுகையும் முக்கிய உதாரணங்கள்.

நம் வாழ்க்கையில் சாலையோர பயணங்களின் போது எத்தனையோ விபத்துகளைப் பார்த்திருப்போம்.. அதில் மாட்டிக் கொண்டவர்களின் கதி என்ன என்பதை கூட அறிந்து கொள்ளாமல் எத்தனை தருணங்களில் நாம் அந்த இடத்தை வெகு எளிதாக கடந்து இருப்போம். அப்படிப்பட்ட நாம் திரைப்படத்தில் மட்டும் ஏன் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு முடிவை கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.. நமக்கு அந்த அறுகதை எப்படி வந்தது. நம் நிஜ வாழ்க்கையிலேயே அந்த நிகழ்வுகளைப் பற்றிய சலனமின்றி கடக்கும் போது… சலனப்படத்தில் மட்டும் அதை நாம் எதிர்பார்ப்பது எப்படி சரியாகும்… அதனால் தானோ என்னவோ இந்த படத்தில் சிலவிசயங்களுக்கு முடிவு சொல்லப்படவில்லை… அது பார்வையாளரின் விருப்பத்துக்கு விடப்படுகிறது…

ஒரு முஸ்லீம் படத்தின் ஆரம்பத்திலே துப்பாக்கியுடன் நடந்து வருகிறான். நமக்கு வழக்கமாக என்ன தோன்றும். (அவன் ஒரு தீவிரவாதி) ஆனால் அவன் ஆடுகளை காக்க துப்பாக்கியை விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஜீவனம் செய்பவன். சிறுவர்கள் விளையாட்டாக சுட்ட நிகழ்வை அமெரிக்கா தீவிரவாதிகளின் செயல் என்று அறிவித்து ஆர்பாட்டம் செய்யும் நையாண்டியும், அமெரிக்கனுக்கு உடன் வந்த அமெரிக்கர்கள் யாரும் உதவாத பட்சத்தில் அவனுக்கு உதவுபவனும் ஒரு முஸ்லீம், இப்படி ஏகப்பட்ட கேலிச் சித்திரங்கள் பார்ப்பவர்களின் கருத்தை கவரும்.

மேலும் யு.எஸ்சில் இருந்து வெளியில் செல்வது என்பது எளிது. ஆனால் யு.எஸ்சிக்குள்  நுழைவது எவ்வளவு கடினம் என்பதை சொல்லும் டோல்கேட் காட்சிகள், அமெரிக்கர்கள் சிறுவர்களிடம் கூட மெக்சிகன்ஸ் மக்களை பற்றி தவறான எண்ணங்களை பரப்புவதை வலுவாக முறையிடுகிறது. மெக்சிகோ தொடர்பான காட்சிகள் மெக்சிகோ மக்களின் கலாசாரத்தையும், மொராக்கோ காட்சிகள் அவர்களது கலாசாரத்தையும் அப்படியே அவர்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துகிறது. நமது கலாசாரத்துக்கு தொடர்பில்லாத இசை என்றாலும் அது என்னை உலுக்கியது உண்மை. இது போன்ற சிறப்பான ஒளிப்பதிவும், பிண்ணனியிசையும், படத்தொகுப்பும் கொண்ட படங்களை பார்த்து வெகுநாட்களாகிவிட்டது. கண்டிப்பாக தவறவிடக் கூடாத ஒரு படம்…

காவல் கோட்டம்



    இதை நாவல் என்ற பிரிவில் சேர்க்கவா வேண்டாமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் இதை நாவல் என்று சொல்வதற்கும் என்னிடம் காரணம் உண்டு. நாவல் இல்லை என்று சொல்வதற்கும் என்னிடம் காரணம் உண்டு. இருப்பினும் 2011-ம் ஆண்டில் நாவல் பிரிவில் தமிழ் மொழியின் சார்பாக சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்பட்டு இருப்பதால் இதை நாமும் நாவலாகவே அணுகுவோம்.

                                               
   சென்ற ஆண்டில் இலக்கியவாதிகள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நாவல் இது. இதை மிகச் சிறப்பான நாவல் என்று ஒரு சாரரும், மிகவும் அபத்தமான நாவல் என்று ஒரு சாரரும் கடுமையான சொற்போரில் ஈடுபட்டனர். ஆனால் இது எத்தகைய நாவல் என்பது பற்றிய நிலையான முடிவு இன்றுவரை எட்டப்படவில்லை எனலாம். அவர்கள் அனைவருமே மிகப்பெரிய எழுத்தாளர்கள். முக்கியமாக அந்த புத்தகத்தை முழுமையாக படித்தவர்கள். ஏதாவது ஒருவிதத்தில் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையோ கோபத்தையோ கொடுத்திருக்கலாம். நாமும் படித்துவிட்டு எந்த கட்சியிலும் சேர்ந்து கொள்ளலாம். அது நமது கருத்து சுதந்திரம். படிக்காமலே யார் கருத்தையாவது ஆதரிக்க முயன்றால் நாமும் செம்மறி ஆட்டுக்கூட்டமாகி விடுவோம். யாரையும் நம்ப வேண்டாம். உங்களை தவிர… ஏனென்றால் மெய்பொருள் காண்பது மட்டுமே அறிவு.

      இந்த நாவல் ஒரு ஆரம்பகால வாசிப்பு நிலையில் உள்ள என் போன்ற வாசிப்பாளர்களுக்கு எந்தவிதமான ஏமாற்றத்தையும் கண்டிப்பாக தராது என்று என்னால் அறுதியிட்டு கூறமுடியும். மேலும் இது ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை பற்றி பேசுகிறது என்கின்ற குறுகிய மனப்பான்மையோடு நாம் இந்த நாவலை அணுகினால் அதன் சாராம்சத்தை நாம் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். எல்லா பிரிவு மக்களும் ஒன்றே.. அனைவரின் வாழ்வியல் சித்திரங்களும் பதிவு செய்யப்பட வேண்டியவைகளே.. என்கின்ற கண்ணோட்டத்துடன் நாம் இதனை வாசிக்க முயன்றோமானால் நம் சமூக பிண்ணனியில் உளவும் பல முக்கியமான பிரச்சனைகளின் மூலவேர்களை அறிந்து கொள்வதோடு, நம் முன்னோர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதைகளை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்..

     இந்த நாவலின் ஆசிரியர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் ஒரு இரண்டு பக்க மையக்கருவைக் கொண்டு புனையப்பட்ட திரைப்படம் தான் அரவான். ஆனால் அரவான் திரைப்படத்தை விட இந்த நாவல் மிகச்சிறப்பான ஒரு வாசிப்பனுபவத்தை தரும் என்பது திண்ணம்.

  இது பிற நாவல்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றால் இதில் குறிப்பாக தலைவன் தலைவி என்கின்ற ரீதியிலான தனிப்பட்ட கதாபாத்திரங்கள் நாவல் முழுவதும் வருவதில்லை. மேலும் இதில் எந்தவொரு கதாபாத்திரமுமே நாவல் முழுவதுமே வருவதில்லை. ஏனென்றால் இது பழங்கால மதுரையின்(அரவ நாடு) மேற்கில் 20 கி.மீ தொலைவில் உத்தப்பநாயக்கனூருக்கு அருகில் உள்ள தாதனூர் என்ற சிற்றூரை மையமாக கொண்டு வாழ்ந்த கள்ளர்களின் 400 ஆண்டுகால வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை வெறும் 700 பக்கங்களில் கடந்து செல்லும் ஒரு அசாத்தியமான முயற்சி ஆகும்.

    படிக்கின்ற வாசகர்களுக்கு ஒரு வேளை முதல் 300 பக்கங்கள் சற்று அயர்ச்சியைக் கொடுக்கலாம். ஏனென்றால் அவை வரலாற்று பக்கங்கள். அதில் விஜயநகர பேரரசின் தோற்றமும் வளர்ச்சியும், அழிவும் மிகவும் விரிவாக ஒரு கதைப் போல் விளக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் தமிழ்நாடு, கர்நாடக பகுதிகளில் விரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தெலுங்கு மொழி குடும்பத்தை சார்ந்த மக்கள் எந்தக் கால கட்டத்தில் இங்கு வந்து குடியமர்த்தப்பட்டனர் என்பதை அறிந்து கொள்ளமுடியும். மேலும் அப்போது காகிதியநாட்டை(ஆந்திரா) சேர்ந்த கம்பணனும், கம்பளி நாட்டை(கர்நாடகா) சார்ந்த கங்காதேவியும் மணமுடித்து தங்கள் பொது எதிரியை அழிக்கின்றனர்., இன்று மொழி வாரியான சமூகமாக நாம் பிரிந்து ஒருவரை ஒருவர் வெறுத்து நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அது போன்ற பக்கங்களை எளிதில் புரட்டி செல்ல முடியாது.

     பாளையங்கள் எப்படி அமைக்கப்பட்டன, பாளையக்காரர்கள் என்பது யார், விஜய நகர பேரரசை சார்ந்த மன்னர்கள் எப்போது மதுரையை ஆளவந்தனர், மதுரையிலும் திருச்சியிலும் கட்டப்பட்ட கோட்டைகளின் அமைப்பு எப்படிப்பட்டது, மதுரை நகரின் எந்த வீதியில் அந்த கோட்டை இருந்தது,  கலெக்டர் ப்ளாக் பெர்ன் அந்த பாரம்பரியமிக்க கோட்டையை பைசா செலவு இல்லாமல் எப்படி நம் மக்களை கொண்டே இடித்து தள்ளினார், அத்தகைய ப்ளாக் பெர்ன் கலெக்டரின் நினைவு இடம் இன்றைய மதுரையில் எங்கு உள்ளது, முல்லை பெரியாறு அணையின் தேவை யாருக்கு இருந்தது, அதன் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் யார், அந்த பெரியாறை கண்டறிந்தவர்கள் யார், முல்லை பெரியாறு கட்டப்பட்ட இடம் அன்றைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திற்கு உட்பட்டது இல்லை என்பதற்கான ஆதாரங்களை இந்த நாவல் பிரிட்டிஷ் ஆவணங்களின் உதவியுடன் மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலும் பாக் ஜலசந்தி கட்டுமானம் என்ற பெயரில் ஆங்கில அரசு அதன் பிண்ணனியில் நடத்திய கொலைவெறி ஆட்டங்கள் ஜெர்மனின் கொலைகலன், இலங்கையின் வெள்ளை வேன்களுக்கு ஈடானவை. ஆனால் இவை நமது வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்டுள்ளன.

     இவை தவிர கிறிஸ்துவ மதத்தை எப்படி நம் மக்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்தார்கள் என்பதும், அதன் பிண்ணனியில் இருந்த சாதியக் கொடுமைகளும் நம் கண்களுக்கு அதிகமாக தென்படாதவை. கிறிஸ்துவ பாதிரியார்கள் நம் நாட்டில் முதன்முதலாக பள்ளிகளை திறப்பதற்கான காரணங்களையும் நாம் புரிந்துகொள்ள இயலும். மேலும் இந்த சாதிய பூசல்களை கொண்டு எளிதாக வேரூன்றிய கிறிஸ்துவ மதத்தில் மட்டும் சாதிய கொடுமைகள் இல்லையா..? என்ற கேள்விக்கும் இதில் பதில் உண்டு.

    இதுவொரு புனையப்பட்ட நாவல் அல்ல… மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் வாழ்கின்ற மனிதர்களில் 100 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் மனிதர்களிடம் நேரிடையாக பேசி அவர்களிடம் கிடைத்த தகவல்களை தொகுத்த தகவல் களஞ்சியமாகவும் இது விளங்குகிறது. மேலும் இந்த நாவலுக்காக இந்த நூலின் ஆசிரியர் செலவளித்த காலங்கள் பத்து ஆண்டுகள். தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்துவதற்காக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தின் போது எழுதப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் போன்றவற்றையும் நாவலின் ஊடாக இணைத்துள்ளார்.

     இந்த வரலாற்றை தவிர வாழ்வியல் ஏதும் இல்லையா என்று கேட்கிறீர்களா.. அதுவும் உண்டு. ஒரு காலத்தில் படைவீரர்களாகவும், ஊரின் காவல்காரர்களாகவும் இருந்த மக்களின் வாழ்க்கை, மன்னராட்சி முறையில் இருந்து ஆங்கிலேய கம்பெனிகளின் கைக்கு ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்ட போது எப்படி தடம் புரண்டது என்பதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டமாக உள்ளது. இத்தகைய மாற்றங்களின் போது நசிந்து போகும் மனிதர்களின் வாழ்க்கையை நாம் எப்போதுமே கண்டு கொள்வது இல்லை..

   இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளும், சலுகைகளும் எட்டமுடியாத இடத்தில் வாழும் மலைவாழ் மக்கள் அரசின் வன்கொடுமை நடவடிக்கைகள் எளிதில் எட்டக்கூடிய இடத்தில் வாழ்வது தர்க்கப்பிழை.  இத்தகைய மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த எந்தமாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி அரசு என்றுமே அக்கறை கொண்டதில்லை. ஆனால் அந்த மலைசார்ந்த கனிமவளங்கள் ஒரு பெருவணிக நிறுவனத்துக்கு தேவைப்படும் போது அரசு அந்த மலைவாழ் மக்களை அங்கிருத்து துரத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கும். அவர்களை அங்கிருந்து நாம் துரத்தியடித்தால் அவர்கள் எங்கே போவார்கள்,? என்ன தொழில் செய்வார்கள்? என்பதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள போராடினால் அவர்களின் நடவடிக்கைகள் அரசுக்கு நியாயமற்ற நடவடிக்கையாக தெரியும்.. இதேதான் இந்த நாவலிலும் நடைபெறுகிறது.

    களவுக்கும் காவலுக்குமான மறைமுக தொடர்புதான் இந்த நாவலின் மையக்கரு.. சில வரலாற்று மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்களை அறிந்து கொள்ள இந்த நாவல் கண்டிப்பாக உதவும். பொதுவாகவே பழங்காலத்தில் கிராமப்புறங்களில் காவல் என்ற அமைப்பு உண்டு. இந்த காவல்காரர்கள் இரவு நேரத்தில் நிலம் மற்றும் இன்னபிற மக்களின் உடைமைகளை காவல் காப்பதை தொழிலாக செய்து, அதற்கான கூலியைப் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள். இதே மக்கள்தான் எந்த ஊரில் காவல் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்களோ அந்த ஊரில் இரவு நேரத்தில் புகுந்து திருடவும் செய்வர். திருடு போன பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் இவர்களைத்தான் நாட வேண்டியது வரும். அவர்கள் பொருளை மட்டும் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.. ஆனால் திருடிய நபர்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். இப்படி திருடப்பட்ட பொருளை துப்பு கொடுத்து மீட்டு வருவதற்கு கூலியாக துப்புகூலி வாங்கிக் கொள்வர். அந்த துப்புக்கூலி காவல்கூலியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இதற்கு பயந்து கொண்டே அனைத்து ஊர் மக்களும் காவல் உரிமையை கொடுத்துவிடுவர்.

    இதுவே பழங்கால நடைமுறை. திருமலைநாயக்கர் மன்னராக இருந்த காலத்தில் அவரது அரண்மனையின் கட்டுகாவலை மீறி ராஜமுத்திரையை திருடிச் சென்ற திருடனின் திறமையை பாராட்டி அந்த ஊர் மக்களுக்கு மதுரை நகரை காவல் செய்வதற்கான அதிகாரத்தை கொடுக்கிறார் திருமலைநாயக்கர். இது நடந்தது 17ம் நூற்றாண்டு. பின்னர் அவரது வழிவந்த பிற அரசர்களும் இதே முறையை பின்பற்ற எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால் ஆங்கிலேயர்களின் கம்பெனி ஆட்சி அதிகாரம் வரும் போது அவர்கள் நகர் காவலுக்கு என்று கச்சேரி(போலீஸ் ஸ்டேசன்) ஒன்றை நிறுவி இனி தாதனூர் மக்கள் காவல்புரிய ஊருக்குள் வரக்கூடாது என்று அறிவிக்கும் இடமே பிரச்சனையின் ஆரம்பபுள்ளி.

   இப்படி அந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் ஒரு தகவல் இருந்து கொண்டே இருக்கிறது. எனவேதான் சொல்கிறேன்… மற்ற செய்திகளை இந்த நாவலை படித்தே தெரிந்து கொள்ளுங்கள்.