Wednesday 21 November 2012

பீட்சா:



துவண்டு போய் இருந்த தமிழ் சினிமா வணிகத்திற்கு ஆறுதலாக வந்து, சிறு பட்ஜெட் படங்களை நம்பிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும் படம். இந்த படத்தின் விமர்சனங்களை எழுதிய பலரும் கதையைப் பற்றி கூறினால் அது சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும் என்று கூறி ஜகா வாங்கிக் கொண்டனர். ஆனால் நான் இந்த கதையைப் பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணிய காரணத்தால் தான் பல நாட்கள் கழித்து இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை எழுதுகிறேன். பெரும்பாலான மக்கள் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள்.. எனவே நான் கதையை பற்றி விவாதிப்பது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் இதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

பீட்சா கடையில் வேலை பார்க்கும் மைக்கேல் (விஜய் சேதுபதி) என்ற இளைஞனும், பேய்கள் பற்றிய அதீத ஆர்வத்தால் பேய்களைப் பற்றி கதைகள் எழுதிக் கொண்டும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் யுவதியும் காதலர்கள். லிவிங் டுகதர் கல்சரில் கல்யாணம் ஆகாமலே ஒரே வீட்டில் வசித்து வருபவர்கள். அவள் எப்போதும் பேய் படங்களை பார்த்துக் கொண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டும் இருப்பவள். மைக் என்கின்ற மைக்கேலுக்கு பேய் மீது நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பயம் உண்டு. இந்த நிலையில் அவள் கர்ப்பமாக முதலில் யோசித்த மைக் பின்னர் திருமணம் செய்ய சம்மதித்து பணத்தட்டுபாட்டால் இப்போது நமக்காக திருமணம் செய்து கொள்வோம் என யாரையுமே அழைக்காது வீட்டிலேயே இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர்.

பீட்சா கடை ஓனரின் வீட்டுக்கு பைல்களை கொடுக்க சென்ற மைக், பேய் பிடித்து இருக்கும் அவரது மகளைப் பார்க்கிறான். அவளிடம் யார்மீதாவது உனக்கு கோபம் இருக்கிறதா…? யாரையாவது பழிவாங்க நினைக்கிறாயா சாந்தி என பேய் நிபுணர் ஒருவர் கேட்க… அவள் ”என் பேர் நித்யா” என கூறிக் கொண்டே உக்கிரமாக மைக்கேலை திரும்பி பார்க்க.. அவன் பயந்து போய் வீடு திரும்புகிறான். அவனது காதலி சொல்லுகிறாள் “எல்லாருக்கும் ஒரு தருணம் வரும் அவநம்பிக்கைய நம்பிக்கையா மாத்துற தருணம், உனக்கான தருணம் வந்திருச்சி” என கூற அவன் பயப்படுகிறான். இதை தொடர்ந்து வரும் காட்சிகளில் தன் வீட்டில் ஒரு பார்சலை கொடுக்க சொல்லி கடை ஓனர் (நரேன்) வீட்டுக்கு அனுப்ப.. மைக் தயங்கி தனக்கு டெலிவரி இருப்பதாக சொல்ல.. ”என் மகள் உன்ன கொன்ற மாட்டா…” என திட்டி அவனை அனுப்புகிறார்.

நடுநிசியில் பரபரப்புடன் கடைக்கு ஓனர் வர.. மற்ற இரண்டு ஊழியர்களும் அடிபட்ட ரத்த காயங்களுடன் இருக்க… மைக் எங்கே என அவர் கேட்க… உள்ளே அவர்கள் கைகாட்ட… உள்ளே மைக்கும் ரத்த காயங்களுடன் அமர்ந்து இருக்க… ஓனர் “டேய் மைக் டெலிவரி கொடுக்கவும் போகல.. வீட்டுக்கும் ஆள் வரலங்கிறாங்க.. எங்கடா போன..” என கேட்க.. அவன் பைத்தியம் பிடித்தவன் போல் “தன் மனைவி இறந்துவிட்டதாக போலீஸ் கூறுவதாகவும், அவளை காணவில்லை எனவும், தான் ஒரு அமானுஸ்ய பங்களாவில் மாட்டிக் கொண்டதாகவும் கூறி நடந்ததை விவரிக்க தொடங்க… அந்த அமானுஸ்ய பங்களாவில் என்ன நடந்தது..? அவனது மனைவி என்ன ஆனாள் என்பது மீதிக்கதை….

படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்க:
இந்த படத்தின் திரைக்கதை யுத்தியை நாம் இரண்டு விதமாக கொள்ளலாம். ஒன்று இதனை புத்திசாலித்தனமான திரைக்கதை (Intelligent type) எனலாம். அல்லது ஏமாற்றும் விதத்திலான திரைக்கதை (cheating type) என்றும் சொல்லலாம்.. இரண்டு விதமான திரைக்கதை பெயரும் இப்படத்திற்கு பொருந்தும் என்பதற்கு காரணம் ஒன்று மட்டுமே அது பார்வையாளர்களை இதில் ஏதேனும் ஒன்று நடந்து இருக்கலாம் என்று யோசிக்க வைத்துவிட்டு அதில் எதுவுமே நடக்கவில்லை என்று புதிதாக ஒன்றை கூறுவதே.

படத்தைப் பார்க்கின்ற பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு பின்னர் மைக்கேலை ஒரு மனநோயாளியாகவோ அல்லது பேய் பிடித்தவனாகவோ அல்லது கொலைகாரனாகவோ நினைக்க வாய்ப்புண்டு… அதே நேரத்தில் கதாநாயகி ஒரு கற்பனைப் பாத்திரம் என்று நாம் நினைத்துக் கொள்வதற்கான தருணங்களையும் இயக்குநர் ஏற்படுத்துகிறார். நாம் மேற்கண்ட ஏதேனும் ஒன்றுதான் காரணமாக இருக்கும் என்ற தடத்தில் பயணித்து மேற்கொண்டு செல்லும் போது இயக்குநர் ஒரு u turn எடுத்து இது எதுவுமே காரணம் இல்லை. ஓனர் வீட்டில் கொடுக்க சொன்ன பாக்ஸில் இருந்த வைரங்களை கொள்ளை அடிக்க இருவரும்(கணவன், மனைவி) சேர்ந்து நாடகமாடுகின்றனர் என்ற ஒரு புதிய கோணத்தில் கதை சொல்லி முடிக்கிறார். எனக்கு இந்த முக்கியமான திருப்பம் சிறிது ஏமாற்றத்தை கொடுத்தது.. அந்த இரண்டு கேரக்டரும் சேர்ந்து ஓனரை ஏமாற்றியது இருக்கட்டும்… அவர்களுடன் இயக்குநரும் சேர்ந்து கொண்டு நம்மையும் அல்லவா ஏமாற்றியிருக்கிறார் என்ற உணர்வே பிரதானமாக எழுந்தது. அந்த ஒரே ஒரு காரணம் படம் பார்த்தப் பின்னர் ஏற்படும் பாதிப்பை சிறிது குறைத்ததும் உண்மை.    

இந்த படத்தைப் பற்றியே மேற்கொண்டு சிந்தித்திக் கொண்டிருக்கும் போது  இந்த திரைக்கதையை இப்படி வைத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம் கண்டிப்பாக இயக்குநருக்கும் தோன்றியிருக்கும். இருந்தாலும் அவர் இப்போது படமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைக்கதை உத்தியே சிறந்தது என்று முடிவு செய்திருப்பார் என்றே தோணுகிறது. ஏனென்றால் அந்த மாற்று திரைக்கதையில் சுத்தமாக விறுவிறுப்பு இருக்காது. ஆனால் சற்று யோசித்து இருந்தால் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்க முடியும். இந்த மாற்று திரைக்கதை உத்தியையும் இயக்குநர் யோசித்து வேண்டாம் என்று நிராகரித்து இருப்பார் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட காட்சியை விளக்குகிறேன்.

படத்தில் ஒரு காட்சி. …………மைக்கேல் பீட்சா டெலிவர் செய்து விட்டு 435 ரூபாயாக கொடுங்கள். என்னிடம் சில்லறை இல்லை என்று கூற… அந்த வீட்டின் பெண்மணி சில்லறை எடுத்து வருவதாக கூறி மேல்மாடி செல்கிறாள். கரெண்ட் வேறு இல்லை. மெழுகுவர்த்தி (ஒளிப்பதிவாளரின் உதவிக்காக) கொழுத்திவைத்து விட்டு செல்கிறாள். சத்தம் கேட்க.. மைக்கேல் மேலே சென்று பார்க்க.. அவள் இறந்து கிடக்க… வீட்டை விட்டு வெளியே செல்ல முயல… வீடு உட்புறமாக பூட்டிக் கொள்கிறது. எப்படி கொலை நடந்தது என்றே தெரியாத சூழ்நிலை… கொலைகாரன் அல்லது பேய் உள்ளே இருக்கின்ற பட்சத்தில் அடுத்து கொலை செய்யப்படுவது நீங்களாகவும் இருக்கலாம்.. அந்த சூழலில் மைக் கண்ணாடி ஜன்னலின் வழியே கத்துகிறான்.. யாரும் உதவிக்கு வரவில்லை………

இந்த காட்சியை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். இதே சூழ்நிலையில் அடைக்கப்பட்ட வீட்டுக்குள் நீங்கள் இருந்தால் “கண்ணாடி ஜன்னலின் உள்ளே இருந்து கத்திக் கொண்டு இருப்பீர்களா… கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியேறுவீர்களா…? கண்டிப்பாக கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளிவருவீர்கள்… ஆனால் மைக்கேல் அதை செய்வதில்லை… ஏனென்றால் அவன் அங்கு ஒரு கட்டுக்கதையை பொய் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான்… அவனும் ஒரு கட்டத்தில் தன் பொய்யில் மெக்கா சைஸ் ஓட்டை இருப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு ஓனரோ  சக பணியாளர்களோ அவனிடம் “நீ ஏன் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே வரவில்லை என்று கேட்பதற்கு முன்பு முந்திக் கொண்டு அதற்கும் ஒரு கதை சொல்கிறான். இவன் இரும்பு ராடால் அடித்தும் கூட அங்கிருந்த எந்த ஒரு கண்ணாடி பொருளும் உடையவில்லை என்று” இதுதான் அந்த மற்றொரு திரைக்கதைக்கான ஐடியா….

இது போன்ற அனுபவம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்பட்டு இருக்கும்.… ஏதாவது ஒரு பொய் சொல்லிக் கொண்டு இருப்போம்.. உதாரணமாக “ஆபிஸில் லீவு போட்டதுக்கு காரணமாக மனைவி வீட்டில் வழுக்கி விழுந்ததாக சொல்லிக் கொண்டு இருப்போம்.. எதிர் இருக்கை காரர் கேட்பார்… ’நேற்று இரவு உங்களையும் உங்கள் மனைவியையும் புட் பஜாரில் பார்த்தேனே…’. என்பார்.. மனதுக்குள் அவரை அசிங்கமாக திட்டியவாறே… ’நோ நோ நோ யூ ஆர் மிஸ்டேக்கன்… என்கூட வந்தது என் மிஸஸோட சிஸ்டர்… அவுங்க டிவின்ஸ்….” என்று இன்னொரு பொய்யை சொல்லி சமாளிப்போம்….

இப்படிதான் மைக்கும் சமாளிக்கிறான்… ஆபிஸில் லீவு போடுவதற்காக மேற்சொன்ன பொய்யை நீங்கள் சற்று கவனித்தால் ஒரு திரைப்படத்தின் சாயல் தெரியும்… அதான் இல்லாத இரட்டையரை இருப்பதாக கூறும் திரைப்படம்… “தில்லுமுல்லு” இதே திரைப்படம் தான் மைக்கேல் அந்த வீட்டுக்குள் நுழையும் போது டிவியில் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்த தில்லுமுல்லு, பீட்சா இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்னவென்றால்.. தில்லுமுல்லுவில் ரஜினி(இந்திரன்) தன் முதலாளி தேங்காய் சீனிவாசனை ஏமாற்றுகிறார் என்பது படத்தில் வரும் பிற கேரக்டருக்கு தெரியாது. ஆடியன்ஸ்க்கு தெரியும். பீட்சாவில் மைக்கேல்(விஜய் சேதுபதி) ஏமாற்றுகிறார் என்பது படத்தில் வரும் பிற கேரக்டர்களுக்கும் தெரியாது. ஆடியன்ஸான நமக்கும் தெரியாது… இது முதல் வேற்றுமை.. இரண்டாவது வேற்றுமை அங்கு இரட்டையர் என்ற பொய்… இங்கு பேய் வீடு என்ற பொய்…

மாற்றுதிரைக்கதையாக நான் இங்கு முன்வைக்கும் திரைக்கதையும் தில்லுமுல்லு பாணிதான்.. அதாவது மைக்கேலின் வாழ்க்கை நடக்கும் விதத்தை முன்பின் மாற்றாமல் அப்படியே காட்டுவது.. அவன் பீட்சா டெலிவரி செய்ய செல்ல.. கீழே விழ.. வீட்டுக்கு சென்று டிரஸ் மாற்ற… டைமண்டை அவனது மனைவி பார்க்க… அவர்கள் திட்டம் போட… மைக்கேல் அதை அரங்கேற்றம் செய்ய….பொய் சொல்லத் தெரியாமல் பொய் சொல்லி அவன் மாட்டிக் கொள்ளப் போகிறான் என ஆடியன்ஸ் என்னும் போது புத்திசாலித்தனமாக மற்றொரு பொய்… இப்படி செல்லும் அந்த திரைக்கதை.. இதில் கண்டிப்பாக ஒரு பேய் கதைக்கான த்ரில் இருக்காது. ஆனால் காமெடி மிகச்சிறப்பாக அமைய வாய்ப்புண்டு… நடிப்புக்கும் அற்புதமான வாய்ப்பு உண்டு…

பீட்சா மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த மாற்றுதிரைக் கதையை வழக்கமான திரைக்கதை… இதில் என்ன புதுமை உள்ளது என்றே பெரும்பாலானோர் எதிர்கொள்வர். இருப்பினும்… ஒரிஜினல் திரைக்கதையின் முடிவில் ஒரு ஏமாற்றம் தோன்றுவதாலும்… இதற்கு ஒரு மாற்றுதிரைக்கதை உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே இதை பகிர்ந்து கொள்கிறேன்.

இதனை தவிர்த்து பார்க்கும் போது பீட்சா மிகச்சிறப்பான அடையாளமாக தமிழ்சினிமாவில் இருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு. சில மெழுகுவர்த்திகளையும், டார்ச் வெளிச்சத்தையும் கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்ட உணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்துக்கு வாழ்த்துக்கள். இசையும் பிண்ணனியிசையும் வெகு நேர்த்தி. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.. விஜய் சேதுபதிக்கு பீட்சா ஒரு நல்ல திருப்பமாக அமையும்… அது போலவே தமிழ் சினிமாவிற்கும்.. தனது முதல்படம் என்பதற்கான அறிகுறியை எங்குமே விடாத இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்க்கும்…..


No comments:

Post a Comment