Saturday 13 October 2012

மாற்றான்


மாற்றான்:
    

சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் இரண்டாவது படம். ”கோ”வின் வெற்றி படத்தின் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தாலும், கடந்த சில காலங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலவிவரும் ”இந்தபடம்” இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்ற குற்றசாட்டுகளில் கேவியின் அயன் (MARIA FULL OF GRACE), கோ (STATE OF PLAY) போன்ற படங்களும் சிக்கிக்கொள்ள.. படத்தின் நாயகன் சூர்யாவும், டைரக்டர் கே.வி ஆனந்தும் சேர்ந்து மாற்றான் எந்த படத்தின் தழுவலும் இல்லை என்று பேட்டி கொடுக்கும் அளவுக்கு அவர்களை இழுத்துச் சென்றது. இருப்பினும் மாற்றானும் ஏதோ ஒரு படத்தின் (STUCK ON YOU) அப்பட்டமான தழுவல்தான் என்றும் ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கிறது. அது உண்மையா..? அல்லது வதந்தியா..? என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்பதால் இப்போதைக்கு இதை முழுக்க முழுக்க கேவி.ஆனந்தின் படைப்பாகவே கருதி விமர்சனம் எழுத துணிகிறேன்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.. அதில் ஒருவன் கொல்லப்பட.. மற்றொருவன் கொன்றவர்களையும்… கொல்ல தூண்டியவர்களையும் கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதுதான் மாற்றானின் கதை. தமிழ்சினிமாவிற்கான யூஸ்வல் லைன் தான். ஆனால் அந்த இரட்டையரில் ஒருவன் எதற்காக இறக்கிறான்.. என்கின்ற காரணம் சற்று தமிழ் சினிமாவிற்கு கொஞ்சமே கொஞ்சம் புதுசு..

திரைக்கதையில் முதல் பாதியில் இருக்கின்ற முக்கியமான மூன்று முடிச்சுகள் மிகச்சிறப்பாக அமைந்திருக்கின்றன. அந்த தைரியத்தில் தான் இரண்டாம் பாதியைப் பற்றி கவலையே படாமல் அவர்கள் இஸ்டத்திற்கு ஏதோ தோன்றியதை எடுத்திருப்பார்கள் போல் இருக்கிறது. அது படத்திற்கு பெரிய மைனஸ். அது சரியாக அமைந்திருந்தால் படம் மிகப்பெரிய ஹிட். ஆனால் அது அப்படி அமையவில்லை என்பதுதான் உண்மை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

வழக்கமான தமிழ்சினிமாவின் வெகு சாதாரணமான இரண்டாம் பாதிதான் இங்கும். பழி வாங்கும் படலம். அதை சொல்வதற்கு எத்தனையோ விதமான முறைகள் உள்ளன. ஆனால் நான் புதிதாக ஒன்றை முயற்சி செய்கிறேன் என்ற எண்ணத்தில் இருப்பதிலேயே மொண்ணையான ஒரு முறையை கையாண்டிருப்பதுதான் மிகப்பெரிய குறை.

விமலன் அகிலன் என இரண்டு கதாபாத்திரத்தில் சூர்யா. நடிப்பில் சூர்யாவிற்கு இன்னோரு மைல்கல் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு திருஸ்டி போல் இரண்டாம் பாதியில் ஆரம்ப காட்சிகளை தவிர்த்து சூர்யாவின் நடிப்பு கொடுமை செய்கிறது. அதற்கு அவரை குற்றம் கூறி பிரயோசனம் இல்லை. அயனில் பிரபுவை கொன்றப் பிறகு கடைசி இருபது நிமிடங்களில் வரும் ஒரு அலட்டலான நடிப்பு குறிப்பாக பொன்வண்ணனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இருக்கும் மேனரிசங்களும் உடல்மொழியும் அப்படியே தொடர்வது போன்ற எண்ணம் தோன்றுகிறது. இயக்குநர் அதை உற்று நோக்கி சற்று தவிர்த்திருக்கலாம்.

காஜலை சூர்யாவின் கம்பெனியில் வேலை செய்பவள் என்று அறிமுகப்படுத்திவிட்டு கடைசிவரை சூர்யாவுடன் போகும் இடமெல்லாம் சுத்திக் கொண்டே இருப்பதை தவிர வேறு வேலையே அவரை செய்யவிடவில்லை. மரபியல் விஞ்ஞானி ராமசந்திரனின் (சச்சின் கண்டேல்கர்) கேரக்டரிலும் பல குழப்பங்கள்.. புறக்கணிப்பால் அவர் அப்படி நடந்து கொண்டார் என்றும் சொல்ல முடியாது.. ஏனென்றால் அது தொடர்பான காட்சிகள் வழுவற்றவை.. அடிப்படையில் கே.வி.ஆனந்த் ஒரு இளங்கலை வேதியியல் பட்டபடிப்பு முடித்தவர்.. எனவே கனா கண்டேன், அயன், எனத் தொடர்ந்து மாற்றானிலும் சில கெமிஸ்ட்ரி தொடர்பான சரக்குகள் உண்டு

அயனில் நம்ம டீம் எந்த வெளிநாட்டுக்கு போச்சி… ஓ காங்கோல்ல… அங்க இருந்து டையகோனலா ஒரு கோடு போட்டா எங்க போய் முட்டுது.. சோவியத் யூனியன்லயா… அப்ப அங்க சோவியத் யூனியன்ல இருந்து பிரிஞ்ச ஒரு கண்ட்ரி வச்சு கதை பண்ணிருவோம்னு யோசிச்சிருப்பாங்களோ… சத்தியமா படம் பாக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

சினிமா இண்டஸ்ட்ரியில் அடுத்த சங்கர் ”கே.வி.ஆனந்த்” என்று பேசத் தொடங்கியதாலோ என்னவோ அவருக்கும் நாட்டுப்பற்று தொற்றிக் கொண்டது. கோ-வில் இளைஞர் சமுதாய அரசியலை சொ(கொ)ன்னவர்.. இங்கு சூர்யாவை வைத்து என் நாட்டுக் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று போராடி இருக்கிறார். அயனில் சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை என்றால், இங்கு குடியரசு தலைவரின் விருது.

படத்தில் பல இடங்களில் லாஜிக்கே இல்லை. அதிலும் இந்த சைண்டிஸ்டின் அடியாட்கள் ஒரு நாட்டு ராணுவத்துடன் மோதுவது எல்லாம் உச்சபட்ச கொடுமை. அதிலும் சூர்யா மொழி தெரியாத நாட்டில் நுழைந்து அடிக்கும் லூட்டியும்(அது அகிலனின் கேரக்டரைசேசன்… என்று நீங்கள் சொன்னாலும்..) ராணுவ கேம்பில் இருந்து ஜஸ்ட் லைக் தெட் தப்பிப்பதும், ராணுவ அதிகாரியையே காப்பாற்ற அவரிடம் ஒரு சான்ஸ் கேட்டு அவரது உயிரையும் காப்பாற்றுவதும்…. என்னமோ போங்க என்று சொல்லத் தோன்றுகிறது.

அதுசரி… முக்கியமான ஒரு மர்மத்தின் முடிச்சை கண்டுபிடிக்க போகின்றவன் இப்படி கொஞ்சம் கூட சீரியஸே இல்லாமலா குழந்தைதனமாக அலைந்து கொண்டு இருப்பான். வோல்காவின் கதாபாத்திரம், வோல்காவுக்கும் காஜலுக்குமான உறவு, வோல்காவை முதலில் ரஞ்சித் ஏன் உள்ளே அனுமதிக்கிறான்.. என பல இடங்களில் லாஜிக் உறுத்தலுடன் காட்சிகள் அமைந்துள்ளன.. இவ்வளவு செய்கின்ற அந்த சைண்டிஸ்ட் வெளி நாட்டில் இருந்து ஏன் அந்த ஃபெர்டிலைசரை உணவுக்காக அல்ல என்று சொல்லி வாங்கி மாட்டுதீவணத்தில் பயன்படுத்த வேண்டும். அதை அவர் இங்கே தயாரித்துக் கொள்ள முடியாதா.. இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

படத்தில் வரும் கதாபாத்திரம் சம்பவங்கள் அனைத்துமே கற்பனை என்று சொல்கிறார்கள். ஆனால் 1992ம் ஆண்டு பிற நாடுகளை பின் தள்ளிவிட்டு ஒலிம்பிக்கின் பதக்க பட்டியலில் ரஷ்யா முன்னிலை பெற்றது உண்மை… அப்படி என்றால் அதிக மெடல் எப்படி வாங்கினார்கள் என்கின்ற கற்பிதம்  கற்பனையா..? விடை எனக்கு தெரியவில்லை.. அது உண்மையோ பொய்யோ.. ஆனால் இது போன்று காட்சியமைத்திருப்பது எப்படி ரஷ்ய நாட்டு தூதரக அதிகார்களுக்கு தெரியாமல் போனது என்று கேள்வி எழுகிறது.

வசனம் சுபா. முதல் முறை சுபாவுடன் கூட்டணி.. முதல் பாதியில் ஆங்காங்கே கவனிக்கும்படி இருக்கிறது வசனம். உதாரணமாக கம்யூனிசம் தொடர்பான வசனங்களை சொல்லலாம்… “ஏண்டா மொக்க மொக்க புக்கா படிச்சிட்டு வந்து அவ மேல வாந்தி எடுக்கிற..” “நெக்ஸ்ட் என்ன…. ம்ம்ம்.. புரோட்டா மாவு பிசஞ்சேல.. இப்ப சால்னா ஊத்து…” இரண்டாம் பாதியில் அவர் எழுதவே இல்லையோ என்று சந்தேகம் எழுகிறது. கே.வி ஆனந்துக்கு கம்யூனிசத்தின் மீது என்ன கோபமோ…? கோ-வைத் தொடர்ந்து இதிலும் பாய்ந்திருக்கிறார். வேறு யாரும் அவர் மீது பாய்ந்து விடக்கூடாது என்பதற்காக பேலன்ஸ் செய்யும் விதத்தில் சில வசனங்களும் உண்டு. உதாரணமாக “உனக்கு தின்ன உடுத்த எல்லா கிடைச்சா போதும்.. அடுத்தவன பத்தி எந்த கவலையும் இல்ல…” சொல்லலாம்.

பேக் ரவுண்ட் மீயூசிக் பல இடங்களில் சிறப்பாகவும், பல இடங்களில் மிக மோசமாகவும் அமைந்திருக்கிறது. இதில் இரண்டாம் பாதியில் சேசிங் காட்சியில் ஒரு குத்தாட்ட பாடலுக்கான பின்னணியிசை மனசாட்சியே இல்லாமல் போட்டிருக்கிறார்.. பாடல்கள் ஹரிஸுன் பழைய பாடல்களை நினைவு படுத்தினாலும் படத்தோடு பார்க்கும் போது ஒன்றிப்போவதால் பிரச்சனை இல்லை. குறிப்பாக “ரெட்டை கதிரே..” மாண்டேஜ் சாங் அருமை.. ”யாரோ யாரோ”(எம்மா எம்மா காதல் பொன்னம்மா ரீமிக்ஸ்) ”ராணி, கோணி” ஆகியவை ஒரு முறை கேட்கலாம் ரகம்.. கேமரா செளந்தர்ராஜன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… அது போல் எடிட்டிங்கும் சில இடங்களில் மிக சுமாராகவே இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. எடிட்டிங் ஆண்டனி..!

மொத்தத்தில் இந்த மாற்றான் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்களே விரும்பவில்லை போலும். எனவே இது சாதாரண வெற்றிப்பட வரிசையில் இடம் பெறும் என்பது என் அனுமானம். அதற்கு முழு முதற்காரணம் சூர்யாவின் நடிப்பும், முதல் பாதியும் மட்டுமே..

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் கொஞ்சம் மணம் உண்டு…

Thursday 4 October 2012

barfi- ஒரு ஃபாரின் சரக்கு...!?


சிறு குழந்தையின் கையில் உள்ள சாக்லேட்டை சாப்பிடும் நாயகன், சிலை திறப்பு விழாவில் சிலையின் கைகளில் படுத்திருக்கும் நாயகன் போன்ற காட்சிகள் சார்லி சாப்ளின் வகைப்படங்களை நினைவு படுத்துவதாலும்.. ரன்பீரும் பிரியங்காவும் காரை நிறுத்துவதற்கு செய்யும் முயற்சிகள்.. போன்றவை கிக்கிஜிரோவில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் என்று அப்பட்டமாக தெரிவதாலும் பிற நல்ல நல்ல காட்சிகளையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
       சந்தேகம் நிவர்த்தியானது. நண்பர்களே ஃபார்பி தொடர்பான என் இடுகையில் நான் மேற்சொன்னவாறு கூறியிருந்தேன். பிற நல்ல காட்சிகள் என்று எண்ணிக் கொண்ட பல காட்சிகள் பல படங்களில் இருந்து அங்கங்கே உருவப்பட்டுள்ளன என்பது நிருபணமாகியுள்ளது. எந்தெந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது என்றால் cop, citylights, note book, kikijiro, singing in the rain, adventure, project-a, lovers concerto, koshish, swadish-ad, black cat white cat, getting home, goonies, the cops, tommy boy, fried green tomatoes,
இத்தனைப் படங்களிலிருந்து காட்சிகள் அனுமதியின்றி திருடப்பட்டுள்ளது. இதனை ஒரு மிகச்சிறந்த படம் என்று பதிவிட்ட என் அறியாமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.
மேலும் எந்தெந்த காட்சிகள் உருவப்பட்டவை என்று அறிய விரும்புபவர்கள் கீழ்கண்ட உரலியை சொடுக்குவதின் மூலம் அதை அறிந்து கொள்ளமுடியும்..

Tuesday 2 October 2012

தாண்டவம்:



டைரக்டர் விஜயும் நடிகர் விக்ரமும் சேர்ந்து செய்த இரண்டாவது படம். எப்போதும் டைரக்டர் விஜயின் படங்களை எடுத்துப் பார்த்தோமானால் அந்த கதைக்களனில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அந்த கதைக்குரிய கரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்தாலும்… அது வெளிநாட்டுப் படங்களின் நகல் என்று விவாதிக்கப்பட்டாலும் கூட அவரது படங்களில் ஒரு சுவாரஸ்யம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக மதராஸ பட்டினத்தில் ஆர்யா உயிரோடு இருப்பாரா..? மாட்டாரா…? அவர்கள் காதல் வெற்றி பெற்றதா..? இல்லையா…? மேற் சொன்ன இரண்டு விசயங்களிலும் இரண்டு நிகழ்வுகளுமே நிகழ சாத்தியக்கூறுகள் உண்டு. அது போலவேதான் தெய்வதிருமகளும்.. சாராவும் விக்ரமும் சேருவார்களா இல்லையா… சேருவதற்கும் சேராமல் போவதற்குமான சாத்தியக்கூறுகள்  இரண்டுமே அதில் கலந்து இருக்கும். ஒரு லைவ்வான விளையாட்டின் முடிவைப் போலத்தான்…! வெற்றி தோல்வி இரண்டுமே சாத்தியமான அம்சங்கள். அந்த சுவாரஸ்யம்தான் பார்வையாளனை தொற்றிக் கொண்டு அவனுக்கு க்ளைமாக்ஸ் வரை எந்த அலுப்பும் ஏற்படாமல் இழுத்துச் செல்ல உதவும். அது இந்த தாண்டவத்தில் இல்லவே இல்லை.

உங்களுக்கு எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். அவர் எங்கள் வீட்டுக்கு அருகில் குடி வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. ராமமூர்த்தி என்ற பெயர் கொண்ட மிக அற்புதமான மனிதர். ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தன் ஒரே மகனை ப்ரைன் டியூமர் நோய்க்கு பலி கொடுத்த சோகம் எப்போதும் அவர் முகத்தில் இருந்து கொண்டே இருக்கும். அவரது மகன் வயது குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்வார். கேட்காமலே எல்லாமே வாங்கிக் கொடுப்பார். நண்பர்களுக்கு என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்பவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு நண்பர் சண்முகம்.. அவரும் எனக்கு பரிச்சயமே.. இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். குடும்ப நண்பர்கள் போல பழகி வந்தவர்கள்.

ஒரு நாள் அவர்கள் நிதி நிறுவனத்தில் கொள்ளை நடந்து பேப்பரில் பிரசுரமாகி பெரிய பிரச்சனையாகிவிட்டது. பின்னர் ஒரு நாள் அவரே என்னிடம் பேசும் போது அந்த கொள்ளை சம்பவத்திற்கு காரணம் சண்முகம் தான்.. அலுவலகத்தில் கொள்ளையடித்து செல்லும் போது விபத்தில் அவன் ஒரு காலை இழந்துவிட்டான்… அவன் தான் திருடன் என்ற உண்மை தெரிந்து அவன் மனைவி அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிவிட்டாள். அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான் என்றார். அவன் புத்தி ஏன் தான் இப்படி போனது என்றே தெரியவில்லை என்று பரிகாசப்பட்டார்.
     
இதை அவர் என்னிடம் சொல்லி ஒரு வாரத்தில் அதே கால் இழந்த சண்முகம் பெயிலில் வந்து அவரை கொன்றுவிட்டான். பின்பு தான் உண்மை தெரிய வருகிறது.. அந்த கொள்ளை சம்பவத்தை செய்தவரே ராமமூர்த்திதான்.. செய்ததும் அல்லாமல் தான் மாட்டாமல் இருக்க தன் நண்பரை மாட்டிவிட்டு இருக்கிறார் என்று…

மன்னிக்கவும்… நான் பொய்யுரைத்துவிட்டேன்.. இது உண்மை சம்பவம் அல்ல.. இதுதான் தாண்டவத்தின் கதை. ஆனால் இதில் நீங்கள் இருவரையுமே (ராமமூர்த்தி, சண்முகம்) கெட்டவராகவோ அல்லது நல்லவராகவோ முன்னமே தீர்மானித்திருக்க முடியாது. அதனால் உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரஸ்யமாவது இருந்திருக்கும். ஏனென்றால் அவர்கள் கதைமாந்தர்கள் மட்டுமே கதாநாயகர்கள் அல்ல.

நிதிநிறுவனத்திற்க்கு பதில் RAW (இந்திய உளவு அமைப்பு) சண்முகத்திற்கு பதில் சிவக்குமார்(விக்ரம்), ராமமூர்த்திக்கு பதில் சரத், கொள்ளைக்கு பதில் வெடிகுண்டு தயாரிக்கும் சாட், விபத்தில் கால் போவதற்கு பதில் கண், மனைவி தற்கொலைக்கு பதில் கொலை… இதுதான் தாண்டவத்தின் கதை. படத்தின் முதல் காட்சியிலேயே லண்டனில் 2011/1 ல் பிரிட்ஜ் மற்றும் சில பொது இடங்களில் குண்டு வெடிக்கிறது. அடுத்து ஒரு வருடம் கழித்து கண்பார்வை இல்லாத விக்ரம் ஒருவரைக் கொன்று மாடியில் இருந்து தூக்கி கீழே போடுகிறார். இதற்கு பின்னர் எல்லா பார்வையாளர்களும் விக்ரமிற்கு பின்னே செல்ல தொடங்கிவிடுவர்.. அவர் எதிராளியை கொல்ல ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு…
பார்வையாளனுக்கு எல்லா முடிச்சுகளும் அந்த இடத்திலேயே அவிழ்ந்து விடும். அதற்கு பின்பு அதில் என்ன தான் சுவாரஸ்யம் இருந்துவிட முடியும்.. ஒவ்வொரு படத்திற்கும் விக்ரம் கொடுக்கின்ற உழைப்பு பிரமிப்பானது.. ஆனால் அது இப்படி விழலுக்கு இறைத்த நீராவதுதான் வருத்தம்.

”கண் பார்வை இல்லாத ஒருத்தர் ஒலிஅலைகளை எழுப்பி அவை எதிரே இருக்கும் பொருளில் பட்டு திரும்பிவருவதைக் கொண்டு எங்கே எந்த பொருள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்” என்கின்ற ஒரே ஒரு சிறப்பான அம்சம் கொண்ட கதாபாத்திரம் என்பதற்காகவே விக்ரம் இந்த கதையை தேர்வு செய்தார் என்றால் அவரை என்னவென்று சொல்வது… அவருடைய நடிப்பை அந்த கதாபாத்திரத்துக்கு 100% மேலேயே அவர் கொடுத்திருந்தாலும் இது போன்ற ஒரு சாதாரண கதைக்கு ஏன் இவர் இவ்வளவு மெனக்கெடுகிறார் என்று தான் தெரியவில்லை.

லண்டனில் குண்டு வெடித்ததனாலோ என்னவோ முதல் பாதியில் பாதி நேரம் ஆங்கிலம் பேசும் வெளிநாட்டவர் ஆங்கிலத்தில் கதைக்க, மறுபக்கம் நாசர் கொலையாளியை, சந்தோசமாக ஆங்கிரி பேர்ட் விளையாடிக் கொண்டே தேடிக் கொண்டு இருக்கிறார். கண் தெரியாத விக்ரமோ கொலை செய்து கொண்டும் பியானோ கச்சேரி வாசித்துக் கொண்டு இருக்க, மறுபுறம் எமி ஜாக்சனோ அழகிபட்டம் வாங்கினாலும் கண் தெரியாத விக்ரமை காதலிப்பதாக பின்னாலயே திரிகிறார். கொஞ்சமேனும் ஆறுதலிப்பது சந்தானம் மட்டுமே.

அடுத்து வரும் அனுஷ்காவுடனான கல்யாணம், நட்பு, காதல் காட்சிகளே படத்தை ஓரளவேனும் உயிரோட்டமுள்ளதாக ஆக்குகின்றன. படுக்கையறையில் இருவருமே மாறி மாறி அடுத்தவர் தூங்குவதை ரசிப்பதும், விக்ரம் அனுஷ்காவிற்காக நடத்தும் பெயிண்டிங் கண்காட்சியும், தன் கணவனை சப்-இன்ஸ்பெக்டர் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் வேலைக்கு சிபாரிசுக்கு வரச்சொல்லும் காட்சிகளும்(லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும் கூட..) கவித்துவமான காட்சிகள். பின்பு நடப்பதை எல்லாம் அதர பழசான காட்சிகள்.. ஒரு பத்து நிமிடம் நீங்கள் வெளியே சென்று வந்தாலும் கூட எதையுமே மிஸ் செய்ய மாட்டீர்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை ஆஹா.. பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்.. மீண்டும் மீண்டும் அதையே பேசியே வெறுப்பேற்றுகிறார். ஜி.வியின் சொதப்பலான இசை மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நீரவ்ஷாவின் கேமரா வழக்கம் போல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், கதையோடு ஏனோ ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற கதையை வைத்துக் கொண்டு பெரிய ஆர்ட்டிஸ்டிகளின் தயவில் பிழைத்துக் கொள்ளலாம் என்று, இயக்குநர்கள் நினைப்பார்களானால் அது தமிழ் சினிமாவிற்கான சாபகேடு.

தாண்டவம்- 100ரூபாய் கொடுத்து படம் பார்த்தால் நீங்கள் ஆடத்தான் வேண்டும்.