Showing posts with label tamil cinema reviews. Show all posts
Showing posts with label tamil cinema reviews. Show all posts

Thursday, 2 May 2013

சூது கவ்வும்:


திரைப்பட உலகில் ”புதிய அலை” திரைப்படங்கள் என்று ப்ரான்ஸில் வெளியான சில குறிப்பிட்ட படங்களைக் கூறுவார்கள். ஏனென்றால் அவை உண்மையாகவே திரைப்படவரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்தது. அது போல இன்றைய தமிழ் திரைப்பட சூழலை குறும்பட அலை என்று அழைக்கலாம். குறும்படம் இயக்கி வெற்றி பெற்று, அதனையே மூலதனமாகக் கொண்டு படங்களை இயக்கும் இளம் இயக்குநர்களின் படை வெளிவர தொடங்கி இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இது போன்ற இளம் குறும்பட இயக்குநர்களின் பக்கமே தங்களது பார்வையை திருப்பத் தொடங்கி இருக்கின்றனர். இது திரைச்சூழலுக்கு நல்லதா..? கெட்டதா..? என்னும் விவாதம் ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற இளம் படைப்பாளிகளின் படங்களுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு அமோகமாகவே உள்ளது.


பீட்சா இயக்குநரின் நட்பு வட்டாரத்தில் ஒருவரான நலன் குமாரசாமியின் குறும்படங்கள் இணையத்தில் பிரபலம். இப்போது அதே நலன் குமாரசாமியின் முதல் திரைப்படம் சூது கவ்வும் என்ற பெயரில் பீட்சா தந்த தயாரிப்பாளர் C.V.குமாரின் தயாரிப்பில் வெளிவந்து இருக்கிறது. இனி படத்தைப் பற்றி…

இளைஞர்களை பொறுப்புள்ளவர்களாக காட்டுவது சமூக குற்றம் போல… அல்லது அப்படிப்பட்ட காட்சியமைப்புகள் இருந்தால் சென்சார் போர்ட்டு படத்துக்கு “A” சர்டிபிகேட் கொடுத்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்களா என்று தெரியவில்லை… எனவே தமிழ் சினிமா வழக்கப்படி…..

நயன்தாராவுக்கு கோவில் கட்டி பிரச்சனையானதால் ஊரைவிட்டு ஓடி வந்த சிம்ஹா, அலாரம் வைத்து காலையில் எழுந்து தண்ணியடிக்கும் ரமேஷ், சாப்ட்வேரில் வேலையில் இருக்கும் போது ஒரு பெண்ணோடு ஏற்பட்ட பிரச்சனையில் வேலையில் இருந்து நீக்கப்படும் அசோக். இவர்கள் மூவரும் ஒரு அறையில் ஒன்றாக தங்கி இருக்கும் நண்பர்கள்.


தங்கள் வாழ்வில் ஏற்பட்ட தீராத சோகத்தை தீர்க்க.. மதுபானக்கடையின் உதவியை நாட…

அங்கு ஏற்கனவே தான் முயற்சிசெய்த இரண்டு கிட்நேப்பிங்கும் சொதப்பிவிட்டதை எண்ணி நொந்து கொண்டே தன் கனவுக் காதலி ஷம்முவுடன் குடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை சந்திக்கிறார்கள். இவர்கள் ஐவரும் ஒரே ஜோதியில் ஐக்கியம் ஆகி, தங்கள் வாழ்க்கையில் முன்னேற அடுத்த கட்ட நடவடிக்கைகளாக KIDNAPPING என்று முடிவு செய்து களத்தில் இறங்க.. அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை லாஜிக் சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு மேஜிக்கோடு கொஞ்சம் சிரிக்க வைத்து சொல்லி இருக்கிறார்கள்.


கிட்நேப் செய்வதற்கான அடிப்படை விதிகள் ஐந்து என்ற விதிகளோடு தொடங்கும் விஜய் சேதுபதியின் அலட்டலான நடிப்பு படு சுவாரஸ்யம். ” அதில் முதல் விதியான ”அதிகாரத்தின் மீது கை வைக்காதே..” என்னும் விதியை மீறி அவர்கள் ஒரு அமைச்சரின் மகனை கிட்நேப் செய்ய முனைவதில் இருந்து ஆரம்பிக்கிறது படத்தின் சுறுசுறுப்பு. விஜய் சேதுபதி ஆங்காங்கே பேசும் அந்த உடைந்து போன ஆங்கிலம், கடத்திய பெண்ணையே காசு கொடுத்து தங்கள் கட்சிக்கு சாதகமாக்கும் முயற்சி, கடத்தியப் பின்னர் வீட்டுக்கு போன் செய்து அவர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சி, சண்டே நாங்க எந்த வேலையும் பாக்க மாட்டோம்.. அதனால மண்டே கால் பண்றே… என அலம்புவது என விஜய் சேதுபதி படத்தை பக்காவாக பேலன்ஸ் செய்கிறார். சின்ன சின்ன கேரக்டர்களில் எல்லாம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார்கள். உதாரணமாக அந்த டாக்டர் ரவுடி, நம்பிக்கை கண்ணன், ஞானோதயம், அருட்பிரகாசம் இப்படி.. ஷம்மு கேரக்டரைசேசன் அருமை. ஆனால் அது மனதில் நிற்காமல் போய்விடுகிறது.


அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் சூப்பர். அவரது மகனை அப்பாவுக்கு அப்படியே நேர் எதிரான கதாபாத்திரமாக காண்பித்து, கடைசியில் க்ளைமாக்ஸ்சில் அடித்திருக்கும் ட்விஸ்ட் மிக அருமை. ஆனால் ஏன் அவரே லஞ்சம் கொடுக்க வரச் சொல்லிவிட்டு அவர்களை காட்டியும் கொடுக்க வேண்டும் என்னும் கேள்விக்கு பதிலே இல்லை. பல இடங்களில் ட்விஸ்ட் என்று அடிக்கும் திருப்பங்கள் எல்லாம் குறும்பட அளவிலேயே இருந்ததென்னவோ உண்மை.

இப்படி எல்லாம் கிட்நாப் செய்ய முடியுமா..? இதெல்லாம் நடக்குமா..? என்ற எந்த எதிர்பதமான கேள்விகளும் கேட்காமல், கண்ணை மூடிக் கொண்டு ஒரு குழந்தை கதை கேட்பது போல் கதை கேட்டுக் கொண்டே இருந்தால்.. குழந்தைக்கு கிடைப்பது போன்ற சுவாரஸ்யமான திருப்பங்கள் நமக்கும் கிடைக்கும்… கேள்வி கேட்கத் தொடங்கினால்.. கேள்விக்கு பதிலும் கிடைக்காது.. கேள்வி மட்டுமே மிஞ்சி நிற்கும்.


சந்தோஷ் நாராயணின் இசையும் பிண்ணனி இசையும் மிகமிக அருமை. படத்தின் பெரும்பாலான இடங்களில் இசை அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது. வசனங்கள் படத்தை லைவ்வாக வைத்திருப்பதில் அதிகபடியாகவே உதவி இருக்கின்றன எனலாம்.. இல்லையென்றால் திரைக்கதையின் இரண்டாம் பாதியில் உள்ள தொய்வு பல் இளித்திருக்கும். அதிலும் குறிப்பாக பிரம்மா என்னும் அந்த போலீஸ் அதிகாரி அத்தனை பில்டப்புகளுடன் வந்தும்.. அதனால் எந்த பலனும் இல்லை என்பது பெரிய மைனஸ். ஏற்கனவே படத்தின் மீது இருந்த அதீதமான எதிர்பார்ப்பு, விஜய் சேதுபதியின் ஸ்கீரின் ப்ரசன்ஸ், ஸ்டூடியோ க்ரீனின் விளம்பரங்கள், ஆங்காங்கே தலைகாட்டும் சின்ன சின்ன காமெடிகள், இவை எல்லாம் சேர்த்து ஓரளவுக்கு படத்தை ரசிக்க வைக்கிறது என்றாலும்.. ஒரு வாரம் கழித்து அந்தப் படத்தில் என்ன இருந்தது என்று எண்ணிப் பார்த்தால் எதுவுமே நினைவுக்கு வராது என்பதும் உண்மையே…


பாவம் தமிழக மக்கள் மிகுந்த மன இறுக்கத்துடன் வாழ்கிறார்கள் போலும். எங்களை சிரிக்க வைக்கமாட்டீர்களா என்று ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் தவம் இருக்கிறார்கள். ஒன்றுமில்லாத வசனங்களுக்குக்கூட சிரிப்பு வைத்தியம் எடுக்க வந்தவர்கள் போல் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மூன்றாம்தர மேம்போக்கான சிரிப்பு வைத்திய காட்சிகள் இந்த படத்தில் குறைவு என்பது என் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.



மூன்று பேர் மூன்று காதல்:


விமல் லாசினி, சேரன் பானு, மற்றும் அர்ஜீன் சுர்வின் இவர்களின் தனித்தனி காதல் அத்தியாயங்களே இந்த மூன்று பேர் மூன்று காதல். கவித்துவமான தலைப்பு. ஆனால் அந்த கவித்துவமோ அல்லது கொஞ்ச நஞ்ச கதையோ கூட படத்தில் இல்லை என்பதுதான் பெருத்த ஏமாற்றம். S.M வசந்தின் சில படங்கள் எனக்குப் பிடிக்கும். உதாரணமாக கேளடி கண்மணி, ஆசை, சத்தம் போடாதே போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். அது போன்ற திரைப்படங்களைத் தந்த வசந்தின் சமீபத்திய திரைப்படம் இது என்பதை நம்புவது கடினம்.


ஆரம்பத்தில் மலையும் மலை சார்ந்த இடமும் என்று நீலகிரி மலை பிரதேசத்தைக் காட்டி விமலின் காதல் கதையை ஆரம்பிக்கிறார்கள். அதில் மொத்தக் காட்சியிலும் நாம் புரிந்து கொள்வது விமல் பணக்கார வீட்டு பையன். ஒரு பெண்ணை எதேச்சையாக சந்தித்து காதலிக்கிறான். அவள் ஏற்கனவே இன்னோரு பையனை காதலிப்பவள். அவர்கள் இருவருக்கும் நிச்சயமும் ஆகி இருக்கிறது. இது தெரிந்து விமல் தன் காதலை உதற நினைக்க… அதற்குள் லாசினியும் அவளது காதலனும் கருத்து வேறுபாட்டால் பிரிய.. விமல் லாசினி காதல் வளருகிறது. கல்யாணத்துக்கு நாள் குறித்து கல்யாண நாள் நெருங்கும் போது.. “இந்த கல்யாணம் நடக்காது… அதற்கு காரணம் நான் பார்த்த காதல் ஜோடி…” என்று சேரன் பானு காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார் விமல்.

கடலும் கடல் சார்ந்த இடமும் என்று நாகர்கோவில் பகுதியில் அடுத்த காதல் கதை. பானு பிசியோதெரபி மருத்துவம் செய்யும் நர்ஸ், சேரன் ஏதேதோ பெரிய பெரிய படிப்புகள் படித்துவிட்டு, ஜெயிலில் இருந்து தண்டனை முடிந்து வரும் கைதிகளுக்கு மறுவாழ்வு அமைத்து தர பாடுபடும் ”புன்னகை” அமைப்பை நடத்தி வருபவர். ஒரு சந்தர்ப்பத்தில் பானுவுக்கு சேரன் உதவ.. பானுவுக்கு சேரன் மீது காதல் வருகிறது. பானு சேரனின் தாயிடம் நான் உங்க மகனை கல்யாணம் பண்ண நினைக்கிறேன் என்று சொல்ல. சேரனின் தாய் அவன் யாரையும் கல்யாணம் பண்ணமாட்டாம்மா.. அவனுக்கு வாழ்க்கையே இந்த புன்னகை அமைப்புதான்னு அந்த அமைப்பைப் பற்றி விளக்க… சேரனிடம் நல்ல பெயர் வாங்க பானுவும் அந்த அமைப்பில் சேர்ந்து சாதிக்க.. அவரிடமே அந்த அமைப்பை ஒப்படைத்துவிட்டு பிரான்ஸ் செல்கிறார். சேரன்.

ஏன் வருகிறது, எதற்கு வருகிறது. இதை யார் யாருக்கு சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட பிரக்ஞையேயின்றி டைட்டில் கார்டில் சில பல வருடங்களை மாற்றிப் போட்டு நம்மை அலைகழிப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. அந்த ஸ்டைலில் அடுத்த கதை ஓப்பன்.

நிலமும் நிலம் சார்ந்த இடமும். சென்னை. அர்ஜீன் ஒரு நீச்சல் பயிற்சியாளர். தன் ஸ்டூடண்ட் திவ்யாவை(சுர்வின்) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்க வைப்பேன் என்று சொல்லிக் கொண்டே அவரை காதலிக்கவும் செய்கிறார். திவ்யாவோ ஒரு மாநிலப் போட்டியில் தோல்வி அடைகிறாள். இருந்தும் கோச் அவள் மீதான தன் நம்பிக்கையை விடுவதில்லை. அவள் ஒலிம்பிக்குக்கு தயாராகும் தருணத்தில் அர்ஜீனுக்கு ஆக்ஸ்டெண்ட் ஆகிறது. தலையை தவிர உடலில் எந்த பாகமும் வேலை செய்யாத நிலையில் படுக்கையில் விழ, காதலி உடைந்துபோகிறாள். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி.. இதில் திவ்யா ஜெயித்தாளா.. மற்ற காதல் கதைகள் என்ன ஆனது…? தைரியமிருந்தால் வெள்ளித் திரையில் பார்த்துக் கொ(ல்)ள்ளுங்கள்…

பானுவின் உழைப்பும் யுவனின் இசைமழையும் பாலையில் பெய்த மழை. அதாங்க மணலும் மணல் சார்ந்த இடமும். ஆரம்பத்தில் வந்த அதே விமல் கடைசியில் வந்து நான் இந்த மூன்று காதலையும் கொண்டு புத்தகம் எழுதினேன் என்கிறார். அவர் ஏன் புத்தகம் எழுதினார்…? இயக்குநருக்கு கடிதம் எழுதிதான் கேட்க வேண்டும்.

மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார், எதற்காக இந்தப்படம் என்பது கடைசி வரையிலும் புரியாமலே போய்விட்டது தான் மனதை ஏதோ செய்கிறது. இருந்தாலும் ஐந்து பேர் ஐந்து காதல் என்று ஐவகை நிலத்தின் காதல் கதையையும் சொல்லாமல், நம்மீது பரிதாபப்பட்டு மூன்றோடு நிறுத்திக் கொண்ட வசந்தின் நல்ல மனதுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடையை கட்டினேன்… அப்போதும் விமல் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்…

Thursday, 24 January 2013

சமர்:


தீராத விளையாட்டு பிள்ளை இயக்குநர் திருவின் இரண்டாவது படம். அவன் இவன் சூட்டிங்கில் ஆர்யாவுக்கு கதை சொல்ல காத்திருந்த திருவிடம் விஷால் கதை கேட்டு கதை பிடித்துப் போக தானே இந்த படத்தில் நடிப்பதாக ஆர்யாவிடம் கேட்டு, அவரும் பெருந்தன்மையாக…! விட்டு கொடுக்க.. இப்போது விஷால் நடிப்பில் வந்திருக்கும் படம்.

கதை தமிழ் சினிமாவிற்கு சற்று புதியது. ஆனால் அது மட்டுமே படத்தை காப்பாற்றி விடாதே… ஒரு நல்லகதை அமைந்தும் திரைக்கதை சரியாக அமையாவிடில் படம் தோல்வியடையும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம்.. இது த்ரில்லர், சஸ்பென்ஸ் வகையறா படமாக இருப்பதால் கதை இதுதான் என்று விரிவாக சொல்லமுடியாத சூழ்நிலை.

விஷாலின் அப்பா அழகம்பெருமாள் ஃபாரஸ்ட் ரேஞ்சர்.. அந்த காட்டில் ட்ரக்கராக வேலை செய்யும் விஷாலுக்கும், சுனைனாவுக்கும் காதல்… தன் காதலுக்கு அவன் மரியாதை தரவில்லை… என்கின்ற கோபத்தில் காதலை முறித்துக் கொண்டு பாங்காங்க் பறக்கிறார் சுனைனா.. இரண்டு மாதம் கழித்து அவரிடம் இருந்து வரும் கொரியரில் விஷால் பாங்காங்க் வருவதற்கான விமான டிக்கெட்டும்.. விஷாலை மறக்கமுடியவில்லை என்று எழுதிய காதல் கடிதமும் வந்து சேர.. இவரும் தாய்லாந்து செல்ல.. ஏர்போர்ட்டில் த்ரிஷாவும் விஷாலும் நண்பர்களாகின்றனர்…

காதலி சொன்ன இடத்தில் விஷால் காத்திருக்க காதலி வரவில்லை… மேலும் விஷால் ஒரு மல்டி மில்லினியர், நம்பர் ஒன் பிஸினஸ்மேன் என ஒரு கூட்டம் துரத்த.. ஒரு கூட்டம் அவரை கொல்ல துரத்துகிறது.. காதலி என்ன ஆனாள்… தாய்லாந்தில் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளவும்….

படத்தில் அநியாயத்திற்கு பல லாஜிக் ஓட்டைகள். ஒரு புதிய விசயத்தை பிடித்துவிட்டோம்.. இதுவே போதும் படம் ஜெயித்துவிடும் என்கின்ற மிதப்பிலேயே இருந்திருப்பார்கள் என்று தோணுகிறது.. படத்தில் பாங்காங்க் போனவுடன் வரும் சில காட்சிகளான விஷாலை ஜான்விஜய் ஆட்கள் பாஸ் என்று சொல்லிக் கொண்டு பின்னால் சுற்றுவது, அவரை மல்டிமில்லினியர் என்று நம்புவது இவை போன்ற காட்சிகள் திரைக்கதை நகர்விற்கு எந்தவிதத்தில் உதவி இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏனெனில் வில்லன்களின் முக்கிய குறிக்கோள் விஷாலை குழப்புவது இல்லை (ஒரு வேளை இயக்குநரின் முக்கிய குறிக்கோள் சுவாரஸ்யம் என்ற பெயரில் நம்மை குழப்புவதாக இருக்கலாம்) என்பதும் பின்வரும் காட்சிகளில் விளக்கப்படுகிறது.

மேலும் விஷால் தன்னை சுற்றி நடக்கும் குழப்பமான விசயங்களில் கவனம் செலுத்தும் போது, த்ரிஷாவின் மீது ஏற்படும் காதலும் தோல்வியும் எப்படி அவரை பாதிக்கும். அதற்கு பதிலாக முதலில் இருந்தே விஷாலுக்கு குழப்பமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை, அவருக்கு த்ரிஷாவின் மீது காதல் வருகிறது, த்ரிஷா தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று தெரிய வருகிறது என்று வைத்துக் கொண்டால் அப்போது ஏற்படும் விரக்தியால் வில்லன்கள் எதிர்பார்க்கும் சாதகமான விசயங்கள் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் உண்டே.

த்ரிஷாவிற்கு விஷாலின் மீது காதல் வரும் காட்சிகளில் நமக்கு எரிச்சலே வருகிறது. இது போக காதல் என்ற பெயரில் சில இடங்களில் பேசும் வசனங்கள் எல்லாம் படு அபத்தம். சில வசனங்கள் க்யூட். உதாரணமாக “யார்கிட்டயும் நான் பயன்படுத்தாத வார்த்தை.. நீ தூக்கிப் போட்டுறாத”, ”காதல் ப்ளைண்டுன்னு தெரியும்.. கலர் ப்ளைண்டுன்னு இப்பதா தெரியும்..” இப்படி ஆங்காங்கே எஸ்.ராவின் சில வசனங்கள் ஈர்க்கின்றன. படத்தின் இசை யுவன் சங்கர் ராஜாவாம். டைட்டில் கார்டில் மட்டுமே அவர் இருப்பதை உணர முடிகிறது.

பாலாவின் படத்தில் நடித்துவிட்டு திரும்பிய பின்னரும் விஷாலுக்கு நடிப்பு வருவேனா என்கிறது. விரக்தியோ கோபமோ எது வந்தாலும் தலைக்குப் பின்னால் கையை வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி உடலை பின்புறம் வளைத்து கத்த தொடங்கிவிடுகிறார். கத்துவது எப்போதுமே நடிப்பாகிவிடாது என்று யாராவது அவரிடம் சொன்னால் நன்றாய் இருக்கும். த்ரிஷாவின் பாடி லாங்க்வேஜ், எக்ஸ்பிரஸன்ஸ் எல்லாமே க்யூட், சுனைனா கவர்ச்சி பதுமையாக வலம் வந்து சற்று நேரத்தில் காணாமல் போகிறார். ஜான்விஜய், ஜே.டி சக்ரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய், சம்பத், ஜெயபிரகாஷ், அழகம் பெருமாள் என ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது. கேரக்டர்களுக்கான ஸ்கோப் தான் இல்லை.

தமிழ்சினிமாவின் சமீபத்திய சில மசாலா மொக்கை படங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான கருவை கொண்டு படம் எடுக்க முயற்சித்த திருவின் முயற்சி பாராட்டுக்குரியது. அவரது முதல் படமான தீராத விளையாட்டு பிள்ளையை ஒப்பிடும் போது கண்டிப்பாக இது ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் திரைக்கதையில் இருந்த சில ஓட்டைகள் படத்தை யுத்தத்தில் தோற்கடித்துவிடுகின்றன. (சமர் என்றால் யுத்தமாம்…!?)

Monday, 24 December 2012

கும்கி:



”மைனா” புகழ் பிரபு சாலமனின் அடுத்த படம். மைனா திரைப்படத்தின் வெற்றி, கும்கி திரைப்படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைத்தது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவ்வபோது படத்தைப் பற்றிய பல தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன. முதலில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியில்லை என்பதால் மீண்டும் சில காட்சிகள் மாற்றப்பட்டு ரீ-சூட் செய்யப்பட்டது என்ற அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்திய படம். திரைக்கு வெளியே இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய படம், திரைக்கதையில் இல்லாத பரபரப்பால் கும்கி என்னும் கம்பீரத்தை இழந்து கோவில் யானையாக அசமந்தமாகவே நடை போடுகிறது..

படத்தின் கதை இதுதான். மலையடிவார கிராமம் ஒன்றில் அத்துமீறி நுழையும் காட்டுயானை ஒன்று மலைவாழ் மக்களையும் கொன்று, பயிர்களை அழித்து நாசம் செய்கிறது. மலைவாழ் மக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கமோ, மலை கிராமத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர வழி செய்கிறது. அதை மறுக்கும் கிராமமக்கள் கும்கி யானையின் துணையுடன் காட்டு யானையினை விரட்டி இந்த முறை அறுவடை செய்கிறோம் என்று சவால்விட்டு ஒரு கும்கி யானையை அழைத்து வருகின்றனர். ஆனால் வந்தது கும்கி யானை அல்ல, வேறு வழியில்லாத காரணத்தால் இரண்டு நாள் சமாளிக்க வந்த கோயில் யானை என்பது ஊர்காரர்களுக்கு தெரியாது. கோயில் யானையின் பாகனான நாயகனுக்கு கிராம தலைவரின் மகள் மீது காதல். காதல் மீது உள்ள பற்றால் உண்மையான கும்கி யானை வர தயாராகும் போதும் அதை தடுத்து என் திருவிழா யானையை கொண்டே காட்டு யானையை விரட்டுகிறேன் என நாயகன் முடிவெடுக்க… இறுதியில் என்ன ஆனது…? ஊரும், அறுவடையும், மக்களும், கோயில் யானையும் பிழைத்தார்களா இல்லையா…? என்பது பதரவைக்காத க்ளைமாக்ஸ்.

விக்ரம்பிரபு தான் சிறுவயதில் இருந்து வளர்க்கும் மாணிக்கம் என்ற யானையை கொண்டு பிழைப்பு நடத்துபவன். அவனை ஒட்டிக்கொண்டே திரியும் தாய்மாமாவாக தம்பி ராமையாவும், உண்டியல் என்ற சிறுவனும். மார்கெட்டில் தம்பி ராமையாவின் பழக்கத்தால் ஊறுகாய், சிப்ஸ் எனத் திருடும் மாணிக்கத்திடம் கோபித்துக்கொண்டு பொம்மன்(விக்ரம் பிரபு) செல்ல.. அவன் பின்னாலேயே குழந்தை போல் ஓடிச் சென்று மன்னிப்பு கேட்டு பாசம் காட்டும் மாணிக்கம் நெகிழ வைக்கிறான்..

ஆனால் கும்கி யானை என்ற பெயரில் அவர்கள் யானையை கூட்டிக் கொண்டு ஆதிக் காட்டுக்குள் நுழைந்தவுடனே திரைக்கதை நொண்டியடிக்க ஆரம்பிக்கிறது.. இந்த காட்சியில் இருந்து கடைசி க்ளைமாக்ஸ் வரை நடக்கும் காட்சிகள் எல்லாமே கொம்பனைப் பற்றிய பில்டப்களும், ஊர்காரர்களுடன் காமெடி என்ற பெயரில் ராமையா நடத்திக் கொண்டிருக்கும் சொற்பொழிவுகளும், பல படங்களில் பார்த்து சலித்த காதல் எபிசோட் டிராமாக்களுமே.. பொம்மனான விக்ரம் பிரபுவிக்கும் மாணிக்கம் என்கின்ற அந்த கோயில் யானைக்கும் இடையிலான உறவும், அல்லி(லட்சும் மேனன்) மற்றும் பொம்மன் இடையிலான  உறவும் படத்தில் இன்னும் வலுவாக சொல்லப்பட்டு இருக்க வேண்டும்.. இரண்டுமே ஒட்டவில்லை… இறுதியில் வரும் யானை சண்டை க்ராபிக்ஸ் பயங்கர காமெடி…

காதலில் கூட வசீகரிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. நாயகியை பார்த்ததும் காதலிக்கும் நாயகன், அவனை எந்த காரணமுமின்றி காதலிக்க தயாராகும் நாயகி, இப்படி பல படங்களில் பார்த்து அலுத்துப் போன அதே காட்சிகள். மைனா திரைப்படத்தில் தம்பி ராமையாவின் காட்சிகள் ரசனையாக வெகு இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் கும்கியில் அவர் பேசிக் கொண்டே இருப்பது பல இடங்களில் வெறுப்பாகவே இருக்கிறது. மைனாவுடன் ஒப்பிட்டு பேச பல விசயங்கள் படத்தில் உண்டு. விக்ரம் பிரபு பாடலின் போது தரையில் படுத்துக் கொண்டு காலைத் தூக்கி ஆட்டிக்கொண்டே இருப்பது, அழகு சார்ந்த காட்சிகளில் கேமரா அதிகமாக பயணிப்பது, மைனாவை செடி கொடிகளுக்கு இடையில் வைத்து கேமரா சுற்றி சுற்றி வருவது போல் இங்கும் அல்லியை கேமரா சுற்றி சுற்றி வரும் காட்சிகள்.. இப்படி நிறைய.. அதனை தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும்.. அவை படத்திற்கு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு முதல் படம். குறை ஏதும் இல்லை. கொடுத்த கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார். கன்னத்தில் சற்று சதை பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்… லட்சுமி மேனனுக்கு இரண்டாவது படம். பார்வையிலும், முக பாவனையிலுமே பல உணர்வுகளை எளிதாகவே கடத்துகிறார்.. தம்பி ராமையா, உண்டியலாக வருகின்ற சிறுவன், ஜீனியர் பாலையா மற்றும் உண்மையான கும்கி யானையின் பாகனாக வரும் யார் கண்ணன் முதலானோரும் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தி போகின்றனர்…
        
படத்தின் மையகருத்து என்ன…? காடுகளில் மனிதர்களும், அரசாங்கமும் செய்யும் அத்துமீறல்களால் வழிதடம் மாறி ஊருக்குள் வரும் காட்டு யானைகளா…? கிராம மக்களுக்கு உதவி செய்ய முன்வராமல் அவர்களை அவர்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கும் அரசாங்கமா…? காட்டு யானையை கூட கரகரவென்று சுற்றி தூக்கி எறிந்துவிடலாம் என்ற தைரியத்தை கொடுக்கும் காதலா…? என்று கேட்டால் பிரபு சாலமன் தைரியத்தை கொடுக்கும் காதல் தான் என்று சொல்லுவார் போலும்… “லவ் பண்ணுங்க சார்…. லைஃப் நல்லா இருக்கும்…” என்று சொன்னவர்தானே….

படத்தின் ஆரம்பகாட்சிகள் ஒரு வசனம் வருகிறது…”முன்னெல்லாம் கொம்பன்(காட்டு யானை) எல்லக் காடு வரைய தான் வருவான்.. இப்ப இங்க வரைக்கும் வர்றான்னா என்ன அர்த்தம்யா.. நீங்க வழிநெடுக ஓட்டல கட்டி அவன் பாதைய மறிச்சிடுறீங்க… அவன் இங்க வாரான்….” இதுதான் உண்மையும் கூட… ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸ் மனதில் கொம்பன் என்கின்ற அந்த காட்டு யானையானது ஒரு கொடூர வில்லனாகவே சித்தரிக்கப்படுகிறது…. இது போன்ற காட்டு யானைகளின் வாழ்வியல் பாதிக்கப்படுவது முதலில் வந்த அந்த வசனத்தோடு முற்று பெற்றுவிடுகிறது. காட்டு விலங்குகளின் வாழ்வியல் என்கின்ற ஒரு உண்மை நிலவரத்துக்குள் மக்களை பயணிக்க அனுமதிக்காமல் படத்தின் திரைக்கதை ஏற்கனவே நாம் பழக்கப்பட்ட ஒருவகை காதல் சார்ந்த கமர்ஸியல் மசாலாவுக்குள் நம்மை தள்ளிக் கொண்டு செல்கிறது..

பிரபு சாலமன் இமான் இருவருக்குமான புரிந்துணர்வு இதிலும் சிறப்பாகவே இருக்கின்றது. பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்… பிண்ணனி இசையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.. சுகுமாரின் கேமரா வழக்கம் போல குறிஞ்சி நில அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

இப்படி பல குறைகள் இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸ்க்கு படம் பிடித்தே இருக்கிறது.. நீதானே என் பொன்வசந்தத்தின் தோல்வியும், யானை தொடர்பான கதை என்கின்ற அம்சமும் மட்டுமே கும்கியின் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது….