Showing posts with label விக்ரம் பிரபு.. Show all posts
Showing posts with label விக்ரம் பிரபு.. Show all posts

Saturday, 14 December 2013

இவன் வேற மாதிரி:



”எங்கேயும் எப்போதும்” தந்த இயக்குநர் சரவணனின் இரண்டாவது படம்.. எங்கேயும் எப்போதும் எனக்குப் பிடித்திருந்தது.. அதில் வரும் இரண்டு காதல் எபிசோடுகளும் மயிலிறகால் வருடிய ஒரு உணர்வை கொடுக்கக்கூடியவை.. அதுமட்டுமின்றி அந்த வெகு யதார்த்தமான காதலையும் தாண்டி ஒரு வலியையும் சுமந்து கொண்டு, ஒரு கண நேரமேனும் சமூக பொறுப்புள்ள ஒரு பிரஜையாக பார்வையாளனை அனுப்பி வைப்பது போல் அத்திரைப்படம் முடிவடையும்.. அதனாலேயே, எங்கேயும் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… அத்திரைப்படம் இயக்குநர் சரவணன் மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தியது..



ஆனால் “இவன் வேற மாதிரி” திரைப்படம் வேறு மாதிரியாக இருக்கிறது.. இப்போதும் இயக்குநர் சரவணன் மீது இருக்கின்ற மரியாதை குறைந்துவிட்டதாக சொல்லவில்லை.. அது அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருந்தது.. ஆனால் அவர் அதை கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்ல வருகிறேன்…

கதைக்களம் என்று பார்த்தால், எங்கேயும் எப்போதுமை விட கனமான கதைக்களம் தான்… ஆனால் இந்த கனமான கதைக் களத்தில் ஏற்கனவே சாமுராய், இந்தியன், அந்நியன் மற்றும் ரமணா…. ஏன்..? ஆயுத எழுத்து கூட எழுதிவிட்டார்கள்… இதனால் அந்தக் கதைக்களமும் மிகப்பெரிய சுவாரஸ்யத்தைக் கொடுக்காமல் சலிப்பையே கொடுக்கிறது… சரி திரைக்கதையிலோ அல்லது யதார்த்தவியலிலோ ஏதேனும் புதுமை செய்திருப்பார்கள் என்று பொறுமையாக காத்திருந்தால், கடைசியில் அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது…

கதை இதுதான்.. ஒரு சட்டத்துறை அமைச்சர்.. தன் சொல்படி ஆடாத சட்டக்கல்லூரி இயக்குநரைப் பழிவாங்க…!!??? சட்டக்கல்லூரியில் பிரச்சனையை தூண்டிவிடுகிறார்.. அதில் மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் இறந்தும் விடுகிறார்கள்.. இந்த சட்டக்கல்லூரி அமைச்சர், அமைச்சராக வருவதற்கு மிகமுக்கிய காரணம் அவரது தம்பி.. இப்போது ஹீரோ தனி ஆளாக நின்று அமைச்சரையும் அவரது தம்பியையும் தண்டிக்கும் காரியத்தையும் பார்த்துக் கொண்டு எப்படி ஓவர்டைம் டியூட்டியாக காதலிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது மீதிக்கதை..



படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் சட்டக்கல்லூரி பிரச்சனை, தமிழகத்தில் உண்மையாக நடந்தபோது அரசியலுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத சாதாரண ஏழை எளிய மக்களை எந்தளவுக்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து வசைபாடச் செய்தது என்பது எல்லோரும் அறிந்ததே… ஆனால் அதே காட்சிகள் அச்சு அசலாக அதே தோரணையுடன் இங்கு வெண் திரையில் விரியும் போது.. நம்மில் ஒரு சிறு அதிர்வைக் கூட ஏற்படுத்தாமல்… இதை வைத்து படம் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தையே மேலெழச் செய்து, சிரிப்பை வரவழைப்பது மிகப்பெரிய சோகம். அந்த ஆரம்பப் புள்ளியிலேயே திரைப்படம் எதார்த்தம் என்ற புள்ளியிலிருந்து விலகிவிடுகிறது..

மேலும் சட்டக்கல்லூரியில் எதனால் கலவரம் வந்தது என்பது பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும் பேசுவதற்கு தயங்கும் ஒரு காரணமாக இருப்பதால், அதை அப்படியே கூட வைக்க வேண்டாம்.. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நம்பத்தகுந்த வேறு ஏதேனும் ஒரு காரணத்தை கூறி இருக்கலாம்.. அப்படி கூறாமல் இருந்ததுவொரு மைனஸ்… ஏது இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவன் தான் ஹீரோ என்றோ அல்லது இந்த கலவரத்தில் இறந்த ஒருவனின் நண்பன் தான் ஹீரோ என்றோ வைத்துக் கொண்டு பயணித்தால் பல பழைய தமிழ்படங்களின் சாயல் வந்துவிடுமோ என்கின்ற அச்சத்தில் அதுபோன்ற விகாரங்களை தவிர்த்திருக்கின்றனர்… நல்லதுதான்…

ஆனால் அதை தவிர்க்கும் போது, பார்வையாளனால் படத்தோடு அகப்பூர்வமாக ஒன்றமுடியாமல் படத்துக்கும் பார்வையாளனுக்கும் இடையே ஒரு இடைவெளி தோன்றும்.. அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் கச்சாப் பொருட்களான… நாயகனின் குணாதிசயம் சார்ந்த ஏதோ ஒரு பின்புலமோ (உதாரணமாய் அந்நியனில் இருந்ததைப் போல்) அல்லது வேறு ஏதேனும் அகவியல் காரணியோ (ரமணாவில் இருந்ததைப் போல்) இருந்திருக்க வேண்டும்… அப்படி இல்லாமல் போனது மற்றொரு மைனஸ்…

அமைச்சரின் மகனைக் கடத்துவதற்கு திட்டமெல்லாம் போட வேண்டாம் பெட்டிக் கடை போட்டால் போதும் என்பது சூது கவ்வும் மாதிரியான காமெடிப் படங்களுக்கு ஓகே… ஏனென்றால் அதைப் பார்த்து சிரிக்கத்தான் போகிறோம்.. ஆனால் இதுபோன்ற ஆக்சன் பேக்கேஸ் படங்களில் இது போன்ற காட்சிகள் பிரத்யேகமான முறையில் பேசப்படுவது போல் அமைந்திருக்க வேண்டும்… அப்படி இல்லாமல் ஒரு மிகச்சாதாரண முறையில் தான் இங்கும் கடத்தல் காட்சிகள் அரங்கேறுகிறது… இப்படி ஆக்சன் பேக்கேஜ் முழுவதும் ஏகப்பட்ட மைனஸ்கள்…. இது தவிர்த்துஆங்காங்கே பல லாஜிக் கேள்விகள் வேறு இடித்துக் கொண்டே இருக்கின்றன.. மேலும் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக அமையும் அந்த அக்கவுண்ட் நம்பரை போனில் சொல்லும் காட்சியையெல்லாம் பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாமே என்று தோன்றுகிறது.. இது போதாதென்று “பேசுறவ செய்யமாட்டா… செய்றவன் பேசமாட்டா…” என்று சாமுராய் கால பழைய வசனங்களை வேறு பேசி சில இடங்களில் நம்மை வெறுப்பேற்றுகிறார்கள்..


இப்படி மைனஸே சொல்லிக் கொண்டிருக்கிறாயே.. படத்தில் ப்ளஸே இல்லையா..? என்று கேட்டீர்களானால்…? அதுவும் இருக்கிறது என்றே சொல்லுவேன்… அது என்னவென்றால் இயக்குநர் சரவணனின் பலமான அவரது ட்ரேட் மார்க் “காதல் எபிசோட்…” இதிலும் காதல் எபிசோடுகள் இயக்குநரின் கைவண்ணத்தில் மிளிருகிறது… சுரபிக்கும் விக்ரம் பிரபுவுக்குமான அந்த முதல் சந்திப்பும் அதனால் ஏற்படும் தொடர்பும் சூப்பர்.. அந்த ஒரு நாள் வேலைக்கு சம்பளமாக வலையைப் போட்டு மீனை அள்ளும் நாயகனின் செயல் அட..!! என ஆச்சரியப்பட வைப்பதோடு… அந்த மீனைக் கொண்டே அடுத்த காட்சியில் காதலுக்கு இயக்குநர் போட்ட தூண்டிலும் அட்டகாசம்…

அந்த மீனை வீட்டுக்கு எடுத்துச்சென்று சுரபி படும்பாடு ரசனையானது… ஆனால் அந்தக்காட்சி ஒரு ஹைக்கூ போல இருக்கும் போது ரசிக்க முடிந்த என்னால்… மரபுக்கவிதை நீளத்துக்கு அந்த மீன் ரோடு, ஆட்டோ என்று பயணிக்கும் போது ஏற்படும் வறட்சியால் பிறகு ரசிக்கமுடியாமல் போய்விட்டது… இப்படி காதல் காட்சிகளிலும் சில காட்சிகளில் மிக நன்றாக ஆரம்பித்து மிக மோசமாக முடிந்தது…. அப்படி முடிந்த காட்சிகள் எல்லாமே யதார்த்த எல்லைகளை மீறி சினிமாத்தனமாக இருந்ததும் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம்..

நாயகன் விக்ரம் பிரபு வெகு சீக்கிரமே இது போன்ற ஹீரோயிச சப்ஜெக்டை தேர்வு செய்தது எனக்கு ஒரு குறையாகவே படுகிறது… அந்த கதாபாத்திரத்துக்கு அவர் படுகச்சிதமாக பொருந்தாவிட்டாலும்.. அவரால் என்ன முடியுமோ… அதை செய்திருக்கிறார்… படத்திற்கு நாயகி சுரபி மிகப்பெரிய ப்ளஸ்… அந்த வசீகரிக்கும் முக அழகும், அந்த கண்களும் காதல் காட்சிகளை இன்னும் அழகாக்குகின்றன… ஓரளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார்… ஆனால் க்ளைமாக்ஸில் இவர் பேசும் வசனங்களும் சரி, இவரைப் பார்க்காமல் விக்ரம் பிரபு புலம்பிக் கொண்டே பேசிச் செல்லும் வசனமும் சரி படுசெயற்கைத்தனம்…


எங்கேயும் எப்போதுமில் ஆக்சிடெண்ட் சீனில் மேக்கிங்கில் மிரட்டிய இயக்குநர்.. இதில் சண்டைக்காட்சிகளின் மேக்கிங்கில் உண்மையாகவே மிரட்டி இருக்கிறார்… தத்ரூபமாக இருக்கிறது.. அற்புதமான மேக்கி்ங்… சத்யாவின் பாடல்களை விட பிண்ணனி இசை சிறப்பாக இருந்தது… அந்த மீனைக் கொண்டு செல்லும் போது வருகின்ற பாடல் கதையில் பெரிய இடையூறாக இருந்தாலும்.. தனிப்பட்ட பாடலாக எனக்கு பிடித்தே இருந்தது…. மேலும் அது எங்கேயும் எப்போதுமில் அனன்யா போர்சனில் வரும் “சென்னையில் புதுப் பொண்ணு….” பாடலை நினைவுபடுத்துவதாகவும் அமைந்தது…

மொத்தத்தில் இந்த ”இவன் வேற மாதிரி” வேற மாதிரில்லாம் இல்லை.. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோ மாதிரியே தான்.. முதல்படத்தில் மென்மையான காதல்கதையில் கூட ஒரு வலியை உணரச் செய்த… இயக்குநர் சரவணனால், வலி நிறைந்த ஒரு கதைத்தளத்தில் மென்மையான ஒரு வலியைக் கூட உணரச் செய்யாமல் சிரிக்க வைத்தது என்னைப் பொறுத்த வரை ஒருவிதத்தில் தோல்விதான்.. ஆனாலும் அவரது பிரத்யேக பலமான காதல் எபிசோடுகளும், ஒரு நல்ல விசயத்தை பார்வையாளனுக்குச் சொல்ல வேண்டும் என்கின்ற உயரிய எண்ணமும், அவருக்கு இருக்கும் சமூகத்தின் மீதான அக்கறையும் சேர்ந்து இந்த திரைப்படத்தை ஒருமுறையாவது பார்ப்பதற்கு தகுதியுடையதாக மாற்றிவிடுகிறது….

Monday, 24 December 2012

கும்கி:



”மைனா” புகழ் பிரபு சாலமனின் அடுத்த படம். மைனா திரைப்படத்தின் வெற்றி, கும்கி திரைப்படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைத்தது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவ்வபோது படத்தைப் பற்றிய பல தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன. முதலில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியில்லை என்பதால் மீண்டும் சில காட்சிகள் மாற்றப்பட்டு ரீ-சூட் செய்யப்பட்டது என்ற அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்திய படம். திரைக்கு வெளியே இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய படம், திரைக்கதையில் இல்லாத பரபரப்பால் கும்கி என்னும் கம்பீரத்தை இழந்து கோவில் யானையாக அசமந்தமாகவே நடை போடுகிறது..

படத்தின் கதை இதுதான். மலையடிவார கிராமம் ஒன்றில் அத்துமீறி நுழையும் காட்டுயானை ஒன்று மலைவாழ் மக்களையும் கொன்று, பயிர்களை அழித்து நாசம் செய்கிறது. மலைவாழ் மக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கமோ, மலை கிராமத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர வழி செய்கிறது. அதை மறுக்கும் கிராமமக்கள் கும்கி யானையின் துணையுடன் காட்டு யானையினை விரட்டி இந்த முறை அறுவடை செய்கிறோம் என்று சவால்விட்டு ஒரு கும்கி யானையை அழைத்து வருகின்றனர். ஆனால் வந்தது கும்கி யானை அல்ல, வேறு வழியில்லாத காரணத்தால் இரண்டு நாள் சமாளிக்க வந்த கோயில் யானை என்பது ஊர்காரர்களுக்கு தெரியாது. கோயில் யானையின் பாகனான நாயகனுக்கு கிராம தலைவரின் மகள் மீது காதல். காதல் மீது உள்ள பற்றால் உண்மையான கும்கி யானை வர தயாராகும் போதும் அதை தடுத்து என் திருவிழா யானையை கொண்டே காட்டு யானையை விரட்டுகிறேன் என நாயகன் முடிவெடுக்க… இறுதியில் என்ன ஆனது…? ஊரும், அறுவடையும், மக்களும், கோயில் யானையும் பிழைத்தார்களா இல்லையா…? என்பது பதரவைக்காத க்ளைமாக்ஸ்.

விக்ரம்பிரபு தான் சிறுவயதில் இருந்து வளர்க்கும் மாணிக்கம் என்ற யானையை கொண்டு பிழைப்பு நடத்துபவன். அவனை ஒட்டிக்கொண்டே திரியும் தாய்மாமாவாக தம்பி ராமையாவும், உண்டியல் என்ற சிறுவனும். மார்கெட்டில் தம்பி ராமையாவின் பழக்கத்தால் ஊறுகாய், சிப்ஸ் எனத் திருடும் மாணிக்கத்திடம் கோபித்துக்கொண்டு பொம்மன்(விக்ரம் பிரபு) செல்ல.. அவன் பின்னாலேயே குழந்தை போல் ஓடிச் சென்று மன்னிப்பு கேட்டு பாசம் காட்டும் மாணிக்கம் நெகிழ வைக்கிறான்..

ஆனால் கும்கி யானை என்ற பெயரில் அவர்கள் யானையை கூட்டிக் கொண்டு ஆதிக் காட்டுக்குள் நுழைந்தவுடனே திரைக்கதை நொண்டியடிக்க ஆரம்பிக்கிறது.. இந்த காட்சியில் இருந்து கடைசி க்ளைமாக்ஸ் வரை நடக்கும் காட்சிகள் எல்லாமே கொம்பனைப் பற்றிய பில்டப்களும், ஊர்காரர்களுடன் காமெடி என்ற பெயரில் ராமையா நடத்திக் கொண்டிருக்கும் சொற்பொழிவுகளும், பல படங்களில் பார்த்து சலித்த காதல் எபிசோட் டிராமாக்களுமே.. பொம்மனான விக்ரம் பிரபுவிக்கும் மாணிக்கம் என்கின்ற அந்த கோயில் யானைக்கும் இடையிலான உறவும், அல்லி(லட்சும் மேனன்) மற்றும் பொம்மன் இடையிலான  உறவும் படத்தில் இன்னும் வலுவாக சொல்லப்பட்டு இருக்க வேண்டும்.. இரண்டுமே ஒட்டவில்லை… இறுதியில் வரும் யானை சண்டை க்ராபிக்ஸ் பயங்கர காமெடி…

காதலில் கூட வசீகரிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. நாயகியை பார்த்ததும் காதலிக்கும் நாயகன், அவனை எந்த காரணமுமின்றி காதலிக்க தயாராகும் நாயகி, இப்படி பல படங்களில் பார்த்து அலுத்துப் போன அதே காட்சிகள். மைனா திரைப்படத்தில் தம்பி ராமையாவின் காட்சிகள் ரசனையாக வெகு இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் கும்கியில் அவர் பேசிக் கொண்டே இருப்பது பல இடங்களில் வெறுப்பாகவே இருக்கிறது. மைனாவுடன் ஒப்பிட்டு பேச பல விசயங்கள் படத்தில் உண்டு. விக்ரம் பிரபு பாடலின் போது தரையில் படுத்துக் கொண்டு காலைத் தூக்கி ஆட்டிக்கொண்டே இருப்பது, அழகு சார்ந்த காட்சிகளில் கேமரா அதிகமாக பயணிப்பது, மைனாவை செடி கொடிகளுக்கு இடையில் வைத்து கேமரா சுற்றி சுற்றி வருவது போல் இங்கும் அல்லியை கேமரா சுற்றி சுற்றி வரும் காட்சிகள்.. இப்படி நிறைய.. அதனை தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும்.. அவை படத்திற்கு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு முதல் படம். குறை ஏதும் இல்லை. கொடுத்த கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார். கன்னத்தில் சற்று சதை பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்… லட்சுமி மேனனுக்கு இரண்டாவது படம். பார்வையிலும், முக பாவனையிலுமே பல உணர்வுகளை எளிதாகவே கடத்துகிறார்.. தம்பி ராமையா, உண்டியலாக வருகின்ற சிறுவன், ஜீனியர் பாலையா மற்றும் உண்மையான கும்கி யானையின் பாகனாக வரும் யார் கண்ணன் முதலானோரும் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தி போகின்றனர்…
        
படத்தின் மையகருத்து என்ன…? காடுகளில் மனிதர்களும், அரசாங்கமும் செய்யும் அத்துமீறல்களால் வழிதடம் மாறி ஊருக்குள் வரும் காட்டு யானைகளா…? கிராம மக்களுக்கு உதவி செய்ய முன்வராமல் அவர்களை அவர்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கும் அரசாங்கமா…? காட்டு யானையை கூட கரகரவென்று சுற்றி தூக்கி எறிந்துவிடலாம் என்ற தைரியத்தை கொடுக்கும் காதலா…? என்று கேட்டால் பிரபு சாலமன் தைரியத்தை கொடுக்கும் காதல் தான் என்று சொல்லுவார் போலும்… “லவ் பண்ணுங்க சார்…. லைஃப் நல்லா இருக்கும்…” என்று சொன்னவர்தானே….

படத்தின் ஆரம்பகாட்சிகள் ஒரு வசனம் வருகிறது…”முன்னெல்லாம் கொம்பன்(காட்டு யானை) எல்லக் காடு வரைய தான் வருவான்.. இப்ப இங்க வரைக்கும் வர்றான்னா என்ன அர்த்தம்யா.. நீங்க வழிநெடுக ஓட்டல கட்டி அவன் பாதைய மறிச்சிடுறீங்க… அவன் இங்க வாரான்….” இதுதான் உண்மையும் கூட… ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸ் மனதில் கொம்பன் என்கின்ற அந்த காட்டு யானையானது ஒரு கொடூர வில்லனாகவே சித்தரிக்கப்படுகிறது…. இது போன்ற காட்டு யானைகளின் வாழ்வியல் பாதிக்கப்படுவது முதலில் வந்த அந்த வசனத்தோடு முற்று பெற்றுவிடுகிறது. காட்டு விலங்குகளின் வாழ்வியல் என்கின்ற ஒரு உண்மை நிலவரத்துக்குள் மக்களை பயணிக்க அனுமதிக்காமல் படத்தின் திரைக்கதை ஏற்கனவே நாம் பழக்கப்பட்ட ஒருவகை காதல் சார்ந்த கமர்ஸியல் மசாலாவுக்குள் நம்மை தள்ளிக் கொண்டு செல்கிறது..

பிரபு சாலமன் இமான் இருவருக்குமான புரிந்துணர்வு இதிலும் சிறப்பாகவே இருக்கின்றது. பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்… பிண்ணனி இசையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.. சுகுமாரின் கேமரா வழக்கம் போல குறிஞ்சி நில அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

இப்படி பல குறைகள் இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸ்க்கு படம் பிடித்தே இருக்கிறது.. நீதானே என் பொன்வசந்தத்தின் தோல்வியும், யானை தொடர்பான கதை என்கின்ற அம்சமும் மட்டுமே கும்கியின் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது….