Showing posts with label சிகரம் தொடு. Show all posts
Showing posts with label சிகரம் தொடு. Show all posts

Sunday, 14 September 2014

சிகரம் தொடு:

இயக்குநர் கெளரவ் அவர்களின் முதல்படமான தூங்கா நகரம் திரைப்படம் தவறான திரைக்கதை உத்தியை கையாண்டு ஒருவிதமான எரிச்சலை கொடுத்த திரைப்படம் என்பதால், அவரது இரண்டாவது படமான இந்த “சிகரம் தொடு திரைப்படத்தின் மீது எனக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது… ட்ரைலரையும் நான் பார்க்கவில்லை.. அதனால் கதையைப் பற்றி எந்தவிதமான தகவலும் தெரியாதவனாகத்தான் படம் பார்க்கச் சென்றிருந்தேன்.. ஆனால் ஒரு சின்ன ஆச்சர்யம்.. படம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது… இப்பொழுதெல்லாம் இந்த “படம் நன்றாக இருந்தது, படம் நன்றாக இல்லை” என்பதான சொல்லாடல்களை பயன்படுத்தும் போது, என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன், எதன் அடிப்படையில் இது நன்றாக இருக்கிறது, அல்லது எதன் அடிப்படையில் இது நன்றாக இல்லை என்று..


எனக்கு இதற்கு பதிலாக கிடைப்பவை இவைகள் தான், நான் நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று இரு தரப்புகளாகப் பிரித்து அவைகளுக்கு இடையே கிழிக்கின்ற கோடு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது..“ ஒரு திரைப்படம் அது என்ன சொல்ல வருகிறது என்பதை வைத்தோ, அத்திரைப்படம் காட்டும் ஒப்பனை இல்லாத வாழ்வியலை வைத்தோ, அத்திரைப்படத்தின் சிறப்பான திரைக்கதையை வைத்தோ அல்லது பழக்கப்பட்ட கதையாகவே இருந்தாலும் அந்தப் பழக்கப்பட்ட கதைகளைக் கூட சுவாரஸ்யம் குன்றாத தன்மையுடன் சொல்கின்ற வித்தையை கொண்டிருக்கும் திரைப்படங்கள் எல்லாம் “நன்றாக உள்ளது” என்ற பிரிவில் விழுந்துவிடுகின்றன… இவை எதுவுமே இல்லாமல் வெறும் வணிகத்தை மட்டுமே குறி வைத்து எடுக்கப்படும் படங்களோ அல்லது மேற்சொன்ன அம்சங்களில் ஏதேனும் ஒன்றை (கதை, திரைக்கதை, வாழ்வியலோ, செய்தியோ அல்லது சுவாரஸ்யமோ) வைத்திருந்து அதை தெளிவாக சிறப்பாக கையாளாமல், மெத்தனமாக மேலோட்டமாக கையாளும் திரைப்படங்கள் எல்லாம் “நன்றாக இல்லை” என்கின்ற பிரிவுக்குள் விழுந்துவிடுகின்றன.. தமிழில் பெரும்பாலும் “பார்க்கலாம் என்றோ ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றது என்றோ” சொல்கின்ற படங்கள் பெரும்பாலும் அந்த கடைசித் தேவையான “குறைந்தபட்ச சுவாரஸ்யம்” என்கின்ற விதியைத்தான் பூர்த்தி செய்கின்றன…. அரிமா நம்பி வரிசையில் அடுத்த குறைந்தபட்ச சுவாரஸ்யத்துடன் வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த சிகரம் தொடு..

ஆனால் ஒப்பீட்டு அடிப்படையில் பார்த்தால், தொய்வில்லாத திரைக்கதை, தொழில்நுட்ப லாவகம் இவைகளின் அடிப்படையில் அரிமா நம்பி, சிகரம் தொடுவை விட ஒரு படி உயர்ந்துவிடுகிறது… இருப்பினும் அரிமா நம்பியை விடவும் அமர காவியமும், அமர காவியத்தை விடவும் சலீமும், சலீமை விட ஜிகர்தண்டாவும் உயர்ந்த படிநிலைகளில் இருப்பவை… இதுதான் நான் நன்றாக இருக்கிறது என்று பிரிக்கின்ற திரைப்படங்களில் இருக்கும் இறங்குநிலை படி வரிசை.. சரி தேவையே இல்லாமல் எதற்கு இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால், எனது பதிவுகளை படிக்கும் நீங்கள் நான் எதன் அடிப்படையில் படங்களை தரம் பிரிக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டீர்களானால், நான் நன்றாக இருக்கிறது, ஓரளவு நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்கின்ற படங்கள், உங்களது ரசனைக்கு எப்படி ஒத்துப் போகுமென்பதை புரிந்து கொள்வீர்கள் என்பதால் தான்… சரி கதைக்கு செல்வோம்…

இது என்னமாதிரியான திரைப்படம் என்றால், பழகிப்போன கதை அமைப்பான ஹீரோ வில்லனை வெற்றி கொள்வது என்கின்ற சூத்திரத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும், ஆனால் மேலே சொன்னபடி குறைந்த பட்ச சுவாரஸ்யத்தைக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் அவ்வளவே…. நாயகனுக்கு அவனது இளம் பிராயத்தில், அவனது தந்தை காக்கி சீருடை அணிந்து காவலராக பணிபுரிவது பெருமிதம் தருகிறது… தானும் ஒரு போலீஸாகி சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்… ஆனால் ஒரு கலவரத்தில் காலை இழந்து, அதன் பிண்ணனியில் தன் மனைவியையும் இழக்கும் தன் தந்தையை இந்த சமூகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும் போது, அந்த வலியை ஜீரணிக்க முடியாத அந்தச் சிறுவன் தன் போலீஸாகும் கனவுகளுக்கு மனதளவில் மூட்டை கட்டுகிறான்… இருப்பினும் தன் தந்தையின் மகிழ்சிக்காக அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டே வேறு வேலையில் சேர முயலுகிறான்.. அவன் போலீஸ் ஆனானா..?? ஆகவில்லையா….?? ஆகவில்லை என்றால் ஏன் என்று சொல்ல வேண்டியதில்லை… ஆனான் என்றால் ஏன் என்று சொல்லவேண்டும் அல்லவா…?? அதைத் தான் திரையில் பல லாஜிக் உறுத்தல்களோடு சொல்லி இருக்கிறார்கள்…

ஏ.டி.எம்மில் நடக்கும் விதவிதமான திருட்டுகள் எப்படி நடக்கின்றது, அதிலிருந்து நம்மையும் நம் பணத்தையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக ஓரிரு வருடங்களுக்கு முன்னால் வந்த செய்திகளை அழகாக தொகுத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்..

அப்பாவாக சத்யராஜ், மகனாக விக்ரம் பிரபு.. சத்யராஜ்க்கு ராஜா ராணி திரைப்படத்துக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம்.. ஆனால் அதே கதாபாத்திரம் இவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாருப்பா என்கின்ற அளவுக்கு காமெடியாக மாறிப் போவதும் சோகமே.. முதல் பாதியில் இவர் வருகின்ற இடங்கள் தான் படத்துக்கான எனர்ஜி.. விக்ரம் பிரபுவிடம் சீறிய வளர்ச்சி தெரிகின்றது… கதை தேர்வு செய்யும் விதத்தில் சற்று கவனிக்க வைக்கிறார்…. நடிப்பிலும் ஒரு சின்ன முன்னேற்றம் இருக்கிறது… ஆனால் இன்னும் அதன் உச்சத்தை இவர் தொடவில்லை என்பதும் உண்மை… நாயகியாக மோனல் கஜ்ஜார்… ஏதோ ஒரு கதாநாயகியின் சாயல் இவரிடம் தெரிகிறது…. யார் என்று தான் தெரியவில்லை… சில காட்சிகளில் அழகாகத் தெரிகிறார்… வழக்கம் போல் காதலில் விழுந்து காதலனின் பின்னால் சுற்றும் கதாபாத்திரம் என்பதால், நடிப்பு பற்றி சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை.. சதீஷ், சிங்கம் புலி, மனோகர், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கெளரவ் என ஏகப்பட்ட பாத்திரங்கள்…


படத்தில் எனக்குப் பிடித்த அம்சமே… தன் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பால் நாயகனுக்கு ஏற்படும் அந்த உளவியல் பிண்ணனி தான்… நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் காவலர்களையும், ராணுவ வீரர்களையும் நம் சமுதாயம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை என்கின்ற வலிதான்… ஆனால் இந்த மனப்போராட்டங்களில் இருந்து மீண்டு வந்து, போலீஸ் வேலையின் புனிதத்தையும், அதன் தேவையையும், அதன் பலத்தையும் அறிந்து கொண்டு நாயகன் மீண்டும் அந்த வேலையை கையில் எடுக்கிறான் என்றுதான் கதை இருந்திருக்க வேண்டும்.. ஆனால் நாயகன் போலீஸ் வேலையை வெறுப்பதற்கான காரணத்தையே இயக்குநர் பாதியில் மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது… அது இரண்டாம் பாதியில் சராசரியான ஹீரோ வில்லன் மோதலாக மட்டுமே பயணிக்கிறது..  நாயகன் போலீஸ் வேலையை மீண்டும் கையில் எடுக்கும் இடத்தில் இருக்க வேண்டிய அந்த கணம் கொஞ்சம் கூட திரைக்கதையில் இல்லை…

அதுபோல லாஜிக் பார்க்கத் தொடங்கிவிட்டால் படத்தில் எல்லா சுவாரஸ்யங்களும் கெட்டுவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.. நாயகியின் தந்தை எதனை நம்பி ஒரு மாதம் மட்டும் வேலை பார் என்கிறார்… இயக்குநரின் திரைக்கதையின் படி ஒரு மாதத்துக்குள் அவன் வேலையை விட முடியாத சூழல் வந்துவிடும் என்பதை நம்பித்தானா…?? அதுபோல அவர்களை முதல் முறை பிடிக்கும் போதே அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருக்குமே…??? அதற்குப் பின்னரும் எப்படி அவர்கள் சாவகாசமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து பழி வாங்கத் தொடங்குவார்கள்..?? அவர்கள் முதல்முறை பிடிபடும் போது, இவ்வளவு க்ரிட்டிகலான இஸ்யூவை எந்த உயரதிகாரியும் இல்லாமலேவா டீல் செய்வார்கள்… அவர்களுக்கு கொடுக்கப்படும் பந்தோபஸ்தை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது… கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும் அவர்களை விசாரனை கைதிகளுக்கான சிறையில் அடைப்பது ஏன்..?? இப்படி ஏகப்பட்ட லாஜிக் உறுத்தல்கள்..

அதுபோல வில்லன்கள் மிகவும் பலகீனமானவர்களாக தெரிகிறார்கள்… முதலில் திருடு போவது 5 இலட்சம் பணம்… இரண்டாவதாக திருடு போவது 40 இலட்சம் என்கிறார்கள்… இப்படி சில்லறை திருடுகளில் ஈடுபடும் குற்றவாளிகள் தான் வலிய வந்து போலீஸ் அதிகாரியை பழிவாங்க வேண்டும் என்று சைக்கோ லெவலுக்கோ அல்லது ரவுடிகள் போலவோ திட்டம் தீட்டுவார்கள் என்கின்ற கேள்விகள் எல்லாம், என்னதான் அந்த குற்றவாளி கோபமானவன் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு சென்றாலும் வந்துகொண்டே தான் இருக்கின்றன… அதுபோல அந்த ஹரித்துவார் காதல் எபிசோடுகளும் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பை ஏற்படுத்துகிறது… அதுபோல எரிச்சலை கொடுக்கும் மற்றொரு கதாபாத்திரம் காமெடிக்காகவே நுழைக்கப்பட்டு இருக்கும் அந்த எஸ்.ஐ கதாபாத்திரம்… இமானுக்கு என்ன ஆயிற்றோ…??? பிண்ணனி இசை என்ற பெயரில் ஒரே இரைச்சலை கொடுத்திருக்கிறார்… உலகநாத்தின் கேமராவும் பிரவீனின் எடிட்டிங்கும் செய்நேர்த்தியுடன் இருக்கிறது…


மொத்தத்தில் இந்த சிகரம் தொடு குழுவினர், சமீபத்தில் வந்த பர்மா, பொறியாளன் போன்ற பட குழுவினரை ஒப்பிடுகையில் கண்டிப்பாக சிகரம் தொட்டிருக்கிறார்கள் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.. அதே நேரத்தில் அது கொஞ்சம் உயரம் குறைவான சிகரம் தான்…. என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்…