Showing posts with label chetan bhagat. Show all posts
Showing posts with label chetan bhagat. Show all posts

Thursday, 14 March 2013

KAI PO CHE:


Kai po che என்பது குஜராத் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு ப்ரேஸ் ஆகும். அதற்கு ”அந்தப் பட்டத்தை நான் அறுத்துவிட்டேன்” என்று பொருள். காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து பறக்கத் தொடங்கும் பட்டமானது, வானை மட்டுமே அதன் ஒரே குறிக்கோளாகக் கொண்டு மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். தீடீரென்று எதிர்பாராமல் அதன் வால் அறுந்துவிட்டால் அந்தப் பட்டத்தின் நிலை என்னாகும்..? காற்றினால் அலைகழிக்கப்பட்டு திக்குத் தெரியாமல் சுற்றி தரையில் வீழ்ந்து கிடக்கும் அல்லவா..! அந்தப் பட்டம் போல தங்களுக்கென சில குறிக்கோள்களைக் கொண்டு முன்னேறத் துடிக்கும் மூன்று இளைஞர்கள், அவர்களது வாழ்க்கையில் சந்திக்கும் சில எதிர்பாராத வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவங்களால் எப்படி காதறுந்த பட்டம் போல் வீழ்ந்து போகின்றார்கள் என்பதே படத்தின் கதை. கதைக்கு மிகச்சரியாகப் பொருந்துவது போல் கவித்துவமான ஒரு டைட்டில்.

கோவிந்த், இஷாந்த், ஓமி என்று மூன்று இளைஞர்கள், மிக நெருக்கமான நண்பர்கள். தங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, கோவிந்த் சொந்தமாக தொழில் தொடங்குவோம் என ஐடியா கொடுக்க, மற்ற இருவரும் அதனை ஆமோதிக்கிறார்கள். இந்து முண்ணனி கட்சி ஒன்றில் செயலாளராக இருக்கும் ஓமியின் மாமா பணம் தருகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு கோயில் பின்புறம் ஒரு சிறிய இடத்தில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கூடத்தை தொடங்குகிறார்கள். கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளவனாக இருக்கும் இஷாந்த கடையின் பின்புறம் கிரிக்கெட் கோச்சிங்கும், கணிதத்தில் புலியாக இருக்கும் கோவிந்த டியூசனும் எடுக்கிறார்கள். ஓமி இவர்களுக்கான பணத்தேவைகளை மாமாவிடம் இருந்து பணம் பெற்று நிறைவேற்றுபவனாக இருக்கிறான். அதற்கு பிரதிபலனாக மாமா அவனிடம் இருந்தும் அவனது நண்பர்களிடம் இருந்தும் கட்சி பணிகளை எதிர்பார்க்க.. அவர்கள் முடிந்தவரை டிமிக்கி கொடுத்து தப்பிக்கிறார்கள்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஷாப்பிங் மாலில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, தங்கள் தொழிலில் அடுத்த படிநிலைக்கு செல்ல அவர்கள் முற்படும் போது அவர்கள் வாழ்வில் விழும் மிகப்பெரிய அடி அவர்களது வாழ்வை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது மீதிக் கதை.

3 mistakes of my life என்ற சேத்தன் பகத் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். நாவலை நான் படித்ததில்லை என்பதால் படத்திற்கும் நாவலுக்குமான வித்தியாசத்தை உணர முடியவில்லை. குஜராத் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போன்ற வரலாற்று நிகழ்வுகளை திரைக்கதையில் மிகச்சிறப்பாக பயன்படுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், இது போன்ற உண்மை நிகழ்வுகளை படமாக்கும் போது, அது ஏதாவது ஒரு தரப்புக்கு சாதகமான அம்சமாக நம்மை அறியாமலும் (சில நேரங்களில் அறிந்தே..!) அமைந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அதை இதில் வெகு சிறப்பாக தவிர்த்து இருக்கிறார்கள்.

மேலும் அதற்கான காரணகர்த்தா யார், அது எப்படி நடந்தது என்பதான விவரணைகளை தேவை இல்லாமல் வலியத் திணிக்கும் முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. ஏனென்றால் இந்த இரு மறக்கமுடியாத சம்பவங்களும் சாதாரண மக்களின் வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக அந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றிப்போடுகிறது என்பது தான் கதையின் மையப்புள்ளி என்பதால் அவர்கள் அதைவிட்டு இம்மி அளவும் பிசகாமல் கதை சொல்லி இருக்கிறார்கள்.

முதல்பாதியில் இஷாந்தாக வரும் சுசாந்த் சிங் ராஜ்புத் நடிப்பும், கோவிந்தாக வரும் ராஜ்குமார் யாதவ் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. இஷாந்த் கிரிக்கெட் மீது உள்ள தீவிரமான காதலால் வீட்டில் எதிர்கொள்ளும் அவமானம், அலி என்னும் முஸ்லீம் சிறுவனிடம் இருக்கும் அபாரமான திறமையைக் கண்டு அவனை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக மாற்ற படும்பாடு, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பன் ஓமியை அப்டி இப்டி அசையவிடாமல் அமரச் செய்து, ”நீ அசையாத, அசைஞ்சா விக்கெட் விழுது…” என்று கோபப்படுவது, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமியருக்கு உதவச் சொல்லி சண்டையிடும் போதும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

டியூசன் சொல்லிக் கொடுக்க வந்த இடத்தில், நண்பனின் தங்கை தன்னிடம் வரம்பு மீறும் போது அதை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கும் இடத்திலும், பூகம்பத்தால் இடிந்துகிடக்கும் மாலுக்கு முன் நின்று அழும் காட்சியிலும், தன் நண்பன் கடையில் வைத்திருந்த பணத்தை எடுத்து தான தர்மம் செய்யும் போது அடக்கி வைத்திருந்த கோபத்தை வெடித்து வெளிக்காட்டும் இடத்திலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஓமியாக வரும் அமித் சத்துக்கு இவர்கள் இருவரை விடவும் ஸ்கோர் செய்வதற்கான ஏரியா குறைவுதான். இருந்தாலும் அதை இரண்டாம் பாதியில் ஈடு செய்வது போன்ற காட்சிகளில் தன்னை நிருபித்து இருக்கிறார்.

தங்கையாக வரும் அம்ரிதா புரி அண்ணனின் நண்பனிடம் தனக்கு ”பயாலஜிதான் பிடிக்கும் ஏன்னா அததா நாம அட்லீஸ்ட் ரியலைஸ் பண்ணமுடியும்” என்று சொல்லிக் கொண்டே கையை தொடும் காட்சியிலும், அண்ணனை நண்பர்களுடன் சேர்க்க, அவனது தவறை புரியவைக்கும் காட்சியிலும் அசத்தலான நடிப்பு. அலியாக நடித்திருக்கும் திக்விஜய் தேஷ்முக்கின் நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. படத்தின் முதல்பாதியில் கதை பெரிதாக நகருவதில்லை என்பது மட்டுமே குறை. மற்றபடி தரமான ஒளிப்பதிவு, அமித் திரிவேதியின் உறுத்தாத இசை, அபிஷேக் கபூரின் சிறப்பான இயக்கமும் ஒரு நல்ல காண்பனுபவத்தைக் கொடுக்கும் படமாக இந்த Kai po che யை உருமாற்றி இருக்கிறது.