Showing posts with label அனுஷ்கா. Show all posts
Showing posts with label அனுஷ்கா. Show all posts

Thursday, 5 December 2013

இரண்டாம் உலகம்:

செல்வராகவனின் இரண்டாம் உலகத்தைப் பற்றி இரு விதமான எதிர்வினைகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன… ஒரு சாரர் இதனை பதிவிடுவதற்கு தகுதி இல்லாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருப்பது ஒரு வினையாக இருக்கும் போது, மறு சாரர்களோ செல்வா தவறு செய்துவிட்டார்.. அவர் இந்தத் திரைப்படத்தை தமிழில் எடுத்துவிட்டார்.. இதே திரைப்படத்தை வேறு வெள்ளைத் தோல் உள்ள ஆசாமி ஆங்கிலத்தில் எடுத்திருந்தார் என்றால், இதே மூட மக்கள் இதனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியிருப்பார்கள் என்கின்ற சாயலிலான மற்றொரு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்.. இந்த இரண்டு குழுக்களிலுமே திரைப்படத்தை திரைப்படம் சார்ந்த பார்வையில் மட்டுமே பார்க்காமல், செல்வாவின் ஆளுமையின் மீது கொண்ட அதீத பக்தியாலும், அதீத வெறுப்பாலும் பார்த்தவர்கள் சரிசமமாக கலந்தே ஜீவித்திருப்பார்கள் என்பது என் எண்ணப்பாடு… எனக்கு மேற்சொன்னபடி செல்வாவின் மீது அதீத பக்தியோ, அதீத வெறுப்போ இரண்டுமே கிடையாது என்றாலும், இந்த பதிவின் முடிவில் என்னையும் இந்த ஏதேனும் இரண்டு பிரிவுகளில் வைத்துவிடுவார்களே என்ற கவலையும் எனக்கு உண்டு… ஆனால் அதை தவிர்க்க என்னால் எதுவுமே செய்ய இயலாது என்பதை உணர்ந்தவனாகவே இந்தப் பதிவை எழுதுகிறேன்…


செல்வாவின் படங்களில் எனக்கு பிடித்த படங்களாகச் சொல்ல வேண்டும் என்றால் காதல் கொண்டேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டையும் சொல்லலாம்.. துள்ளவதோ இளமையைகூட ஏதோ ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்வேன்…. ஆயிரத்தில் ஒருவன் தொடர்பான அரசியல் பிரச்சனைகளைத் தாண்டி ஒரு கலைஞனாக அதில் அவர் காட்டிய கற்பனை வளம் என்னைக் கட்டிப் போட்டது உண்மை.. ஆட்கொண்டதும் உண்மை.. பிறருக்குள்ள அரசியல் நிலைப்பாடுகளுடன் செல்வாவும் ஒத்துப் போக வேண்டும் என்பது இயலாத ஒன்று… அப்படி ஒத்துப் போகின்ற பட்சத்தில் ஒருவருக்கான தனித்தன்மை என்பதே இல்லாமல் போய்விடும்.. ஆக ஆயிரத்தில் ஒருவனை நான் ஒரு ரசிகனாக ரசித்தேன் என்பதும் உண்மை. இது தவிர்த்து செல்வாவின் படங்களிலொரு தவிர்க்க முடியாத குறை இருக்கும்… அது தனிமை என்னும் சிறை.. அது இருப்பது தவறல்ல… ஆனால் தொடர்ச்சியாக அது ஒரே மாதிரியான உணர்வுகளையே பார்வையாளனுக்கு கடத்துவது தான் பிழை… உதாரணமாக காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, மயக்கம் என்ன இப்படி எல்லா படங்களிலும் நாயகன் ஒருவித தனிமையில் தவிப்பவனாகவே இருப்பான்.. அவன் தனது சுயத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், தனக்கான நம்பிக்கையை அவன் விரும்புகின்ற அல்லது அடைய நினைக்கின்ற வேறொருவர் வந்து அவனுக்குள் விதைக்க வேண்டிய கட்டாயத்தை அவன் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்வான்… பெரும்பாலும் இவரது நாயகர்கள் இவரை பிரதியெடுத்தது போல் இருப்பார்கள்… மூன்றில் இரண்டு பங்கு கலைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் இருந்துதான் தங்களுக்கான கலையை உருவாக்குகிறார்கள்.. இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.. மேலும் அப்படி எடுக்கப்படுகின்ற படைப்புகள் தான் ஆகச் சிறந்த கலையாகவும் ஆகி நிற்கிறது.. என்பதிலும் சந்தேகம் இல்லை… ஆனால் அந்தக் கலை தருகின்ற வெற்றியே சில நேரங்களில் அந்தக் கலைஞர்களை அதேவித டெம்ப்ளெல்ட் வகையறாக்களில் மாட்டிக் கொள்ள செய்வதோடு, அதே பாணியில் அவர்கள் தருகின்ற படங்களை மக்கள் புறக்கணிக்கும் போது அவர்களின் ரசனையைப் பற்றி கலைஞர்களை மக்களுக்கு எதிராக பரிகாசம் செய்யவும் தூண்டுகிறது.. ஆக எனக்கு செல்வாவின் படங்களில் மிகவும் பிடித்த படங்கள் உண்டு.. ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, ஏன் மயக்கம் என்ன திரைப்படத்தின் பின்பாதியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்… இத்தனைப் படங்கள் எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் இரண்டாம் உலகம் எனக்குப் பிடிக்கவில்லை…



ஏன்..? ஏனென்றால் இரண்டாம் உலகம் இந்த உலகத்தை விட கடும் வறட்சியில் காண சகிக்காமல் காட்சி கொடுக்கிறது.. நான் வறட்சி என்று சொல்வது கற்பனை வறட்சி… ஆம்.. இரண்டாம் உலகத்தில் என்னென்னவோ இருக்கிறது.. நாம் கண்டிராத விசித்திரமான இரண்டே இரண்டு விலங்குகள்.. அவ்வபோது ஆஜானுபாகுவான தோற்றத்தில் இறக்கை விரித்துப் பறக்கும் ஒன்றிரண்டு பறவைகள்.. கலர் கலராய் கண்ணைப் பறிப்பதைப் போல் மின்னிக் கொண்டு இருக்கும் ஓராயிரம் பூக்கள்.. பூமிக் கோளங்களைப் போல் மிகப்பெரிய ஒளி வீசும் பந்து கோளங்கள் இவை மட்டும் தான் இரண்டாம் உலகம்… இதில் செல்வாவின் கற்பனை எங்கு இருக்கிறது… மேற்சொன்ன அத்தனை விசயங்களையும் அனிமேஷன் பார்த்துக் கொள்ளும்… செல்வா என்ன பார்த்துக் கொண்டிருந்தார்.. அவரது கற்பனைவளம் என்ன ஆனது.. அந்த இரண்டாம் உலக மக்களின் மொழி என்ன…? உணவு என்ன…? அங்கு காற்று உண்டா…? ஒளி உண்டா..? அவர்கள் குடிப்பதும் தண்ணீர்தானா..? அவர்கள் விவசாயம் செய்து உணவைப் பயிருடுகிறார்களா…? அவர்கள் போக்குவரத்துக்கு எதனைப் பயன்படுத்துகிறார்கள்..? அங்கு இருந்த விலங்குகள் எது..? அதன் உணவு என்ன..? மக்கள் ஒற்றுமையுடன் இருந்தார்களா…? அவர்கள் மக்கள் தானா…? அவர்களுக்கும் பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கும் என்ன வித்தியாசம்…? அவர்களுக்கு தெய்வங்கள் உண்டா..? அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமானப் பிரச்சனை என்ன…? இப்படி எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அதற்கு விடை கொடுக்க யோசித்திருந்தாலே இன்னும் அழகாக இந்த இரண்டாம் உலகத்தை சிருஷ்டித்திருக்க முடியும்… ஆனால் செல்வா என்ன செய்திருக்கிறார் இரண்டாம் உலக மக்களை நம்மிலிருந்து ஆடையில் மட்டும் மாற்றிவிட்டு, உணவு, உடை, உறைவிடம், மொழி ஏன் பெண்கள் மீதான அடிமைத்தனத்தில் கூட அச்சு அசலாக பூமியை காப்பியடித்து வரைந்தது போல் உலவவிட்டு ஆங்காங்கே சில அத்தி பூத்தாற் போல் அனிமேஷன் அத்தியாயங்கள் தலைகாட்ட வைத்திருக்கிறார்… இதைத் தான் நம் வீட்டுக் குழந்தை முதற்கொண்டு வெள்ளைக்கார ஆசாமிகளின் படங்களில் பார்த்தாகிவிட்டதே….

இத்தகைய சுவாரஸ்யமே இல்லாத ஒரு உலகத்தில் நாம் பயணித்தால் அது நமக்கு எப்படி இருக்கும்… திரைக்கதையின் பயணத்தில் குறைந்தது ஒரு யானை துரத்திய பீதியோ, பாம்பு நம்மைக் கடித்த பதற்றமோ கூட வேண்டாம்.. ஒரு எறும்பு கடித்த உணர்வாவது….. அல்லது ஒரு மயில் பீலிகையால் வருடிய சுகமாவது கிடைக்க வேண்டாமா….? ஆனால் நமக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா…? செல்வா சிருஷ்டித்த இந்த இரண்டாம் உலகத்தில் பயணிக்கும் போது, சுடும் மணல் நிரம்பிய வனாந்தரத்தில் தண்ணீருக்காக தவிக்கும் ஒருவனின் தவிப்புதான் நமக்கு மிஞ்சுகிறது…

ஒரு ஆர்யா கதை சொல்லத் தொடங்குகிறார்.. இரண்டு உலகத்து கதையையும் சேர்த்தே… இரண்டுமே காதல் கதைகள்.. பூமியில் நடக்கும் கதையில் அனுஷ்கா ஆர்யாவைத் துரத்த… மற்றொரு உலகில் ஆர்யா அனுஷ்காவைத் துரத்துகிறார்… பூமியில் காதல் கைகூடி வந்து கல்யாணம் நெருங்கும் நேரத்தில் அனுஷ்கா எதிர்பாராமல் மரணிக்க…. அதை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கும் பூலோக ஆர்யா சாவைத் தழுவ முயல… மற்றொரு உலகிலும் இதே மாதிரியான சூழல், அனுஷ்கா தன்னைத் தானே குத்திக் கொண்டு உயிருக்கு போராடுகிறார்… அங்கிருக்கும் தெய்வம் இங்கிருந்து ஆர்யாவைக் காப்பாற்றி அங்கே கொண்டு போய், அந்த உலகுக்கே காதலைக் கற்றுத் தருகிறது.. இறுதியில் அவர் அங்கும் இறந்து அடுத்த உலகுக்கு செல்கிறார்.. இப்படி எனக்குப் புரியாத ஜென் கவிதைகளைப் போல்தான் படமும் இருக்கிறது… ஆனால் ஜென் கவிதை எனக்குப் பிடிக்கும்… அதில் பலமுறை வாசிக்கும் போது ஒரு ஆழ்ந்த அமைதியும்… ஒரு வாழ்க்கை அனுபவுமும் இருப்பது புலப்படும்… இதில் பலமுறை யோசித்துப் பார்த்தும் அப்படி எதுவும் இருப்பது போல் புலப்படவே இல்லை…


மன்னித்துவிடுங்கள்… இந்தப் படத்தை ஜென் கவிதைகளோடு ஒப்பிடக்கூடாது தான்… ஒரு வேளை வாழ்க்கையின் நியதி இறப்பின்மை என்பதைச் சொல்லவே இயக்குநர் முயன்றிருக்கிறார் என்கின்ற நோக்கில் திரைப்படத்தை அணுகினாலும், அதிலும் இயக்குநர் தோற்றே இருக்கிறார்… ஏனென்றால் அது எந்தவொரு பாமர ரசிகனுக்கும் எட்டவே இல்லை… உண்மையில் அவரது எண்ணம் மனித வாழ்க்கையில் இறப்பின்மையை சொல்லி, முடிவற்ற பயணத்தை காட்டுவதுதான் என்பதாக கொண்டாலும் அதையும் இன்னும் அழகாக செய்திருக்கலாம் என்பதே என் அனுமானம்.

இதையும் மீறி ரசிக்கும்படி அமைந்த காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே… அதுவும் செல்வாவின் முத்திரையைச் சொல்லும் ஓரிரு வசனங்கள்… அது போக பூலோக அனுஷ்காவின் தோழியாக வரும் அந்த பெண் பேசும் ஓரிரு நிமிட அனாடமி வசனங்கள் மட்டுமே… அழகான நடிக்கத் தெரிந்த அனுஷ்காவை இப்படி வீணடித்திருக்கிறார்கள்.. ஆர்யாவைப் பற்றி என்ன சொல்ல என்றே தெரியவில்லை… படமே இப்படி கொடுமையான அனுபவமாக இருக்கும் போது.. அதன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என்று ஒவ்வொன்றாக ஆய்வது… இன்னும் எரிச்சலைக் கொடுக்கும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்..


இறுதியாக இரண்டாம் உலகத்தைப் பற்றி என்ன சொல்வது என்றால், நம் பூலோகம் எத்தனையோ வன்முறை, போர், ரத்தம், கொலை, காதல், தாய்மை, சகோதரத்துவம், நேசம், மரியாதை, சமச்சீர்யின்மையால் கலந்து இருந்தாலும் இரண்டாம் உலகத்தை விட அழகாகவே இருக்கின்றது என்று சொல்லலாம்… எந்த வெள்ளைக்கார ஆசாமி இந்தப் படத்தை எடுத்திருந்தாலும் நான் இப்படித்தான் சொல்லி இருப்பேன்...

Tuesday, 2 October 2012

தாண்டவம்:



டைரக்டர் விஜயும் நடிகர் விக்ரமும் சேர்ந்து செய்த இரண்டாவது படம். எப்போதும் டைரக்டர் விஜயின் படங்களை எடுத்துப் பார்த்தோமானால் அந்த கதைக்களனில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அந்த கதைக்குரிய கரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்தாலும்… அது வெளிநாட்டுப் படங்களின் நகல் என்று விவாதிக்கப்பட்டாலும் கூட அவரது படங்களில் ஒரு சுவாரஸ்யம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக மதராஸ பட்டினத்தில் ஆர்யா உயிரோடு இருப்பாரா..? மாட்டாரா…? அவர்கள் காதல் வெற்றி பெற்றதா..? இல்லையா…? மேற் சொன்ன இரண்டு விசயங்களிலும் இரண்டு நிகழ்வுகளுமே நிகழ சாத்தியக்கூறுகள் உண்டு. அது போலவேதான் தெய்வதிருமகளும்.. சாராவும் விக்ரமும் சேருவார்களா இல்லையா… சேருவதற்கும் சேராமல் போவதற்குமான சாத்தியக்கூறுகள்  இரண்டுமே அதில் கலந்து இருக்கும். ஒரு லைவ்வான விளையாட்டின் முடிவைப் போலத்தான்…! வெற்றி தோல்வி இரண்டுமே சாத்தியமான அம்சங்கள். அந்த சுவாரஸ்யம்தான் பார்வையாளனை தொற்றிக் கொண்டு அவனுக்கு க்ளைமாக்ஸ் வரை எந்த அலுப்பும் ஏற்படாமல் இழுத்துச் செல்ல உதவும். அது இந்த தாண்டவத்தில் இல்லவே இல்லை.

உங்களுக்கு எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். அவர் எங்கள் வீட்டுக்கு அருகில் குடி வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. ராமமூர்த்தி என்ற பெயர் கொண்ட மிக அற்புதமான மனிதர். ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தன் ஒரே மகனை ப்ரைன் டியூமர் நோய்க்கு பலி கொடுத்த சோகம் எப்போதும் அவர் முகத்தில் இருந்து கொண்டே இருக்கும். அவரது மகன் வயது குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்வார். கேட்காமலே எல்லாமே வாங்கிக் கொடுப்பார். நண்பர்களுக்கு என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்பவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு நண்பர் சண்முகம்.. அவரும் எனக்கு பரிச்சயமே.. இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். குடும்ப நண்பர்கள் போல பழகி வந்தவர்கள்.

ஒரு நாள் அவர்கள் நிதி நிறுவனத்தில் கொள்ளை நடந்து பேப்பரில் பிரசுரமாகி பெரிய பிரச்சனையாகிவிட்டது. பின்னர் ஒரு நாள் அவரே என்னிடம் பேசும் போது அந்த கொள்ளை சம்பவத்திற்கு காரணம் சண்முகம் தான்.. அலுவலகத்தில் கொள்ளையடித்து செல்லும் போது விபத்தில் அவன் ஒரு காலை இழந்துவிட்டான்… அவன் தான் திருடன் என்ற உண்மை தெரிந்து அவன் மனைவி அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிவிட்டாள். அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான் என்றார். அவன் புத்தி ஏன் தான் இப்படி போனது என்றே தெரியவில்லை என்று பரிகாசப்பட்டார்.
     
இதை அவர் என்னிடம் சொல்லி ஒரு வாரத்தில் அதே கால் இழந்த சண்முகம் பெயிலில் வந்து அவரை கொன்றுவிட்டான். பின்பு தான் உண்மை தெரிய வருகிறது.. அந்த கொள்ளை சம்பவத்தை செய்தவரே ராமமூர்த்திதான்.. செய்ததும் அல்லாமல் தான் மாட்டாமல் இருக்க தன் நண்பரை மாட்டிவிட்டு இருக்கிறார் என்று…

மன்னிக்கவும்… நான் பொய்யுரைத்துவிட்டேன்.. இது உண்மை சம்பவம் அல்ல.. இதுதான் தாண்டவத்தின் கதை. ஆனால் இதில் நீங்கள் இருவரையுமே (ராமமூர்த்தி, சண்முகம்) கெட்டவராகவோ அல்லது நல்லவராகவோ முன்னமே தீர்மானித்திருக்க முடியாது. அதனால் உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரஸ்யமாவது இருந்திருக்கும். ஏனென்றால் அவர்கள் கதைமாந்தர்கள் மட்டுமே கதாநாயகர்கள் அல்ல.

நிதிநிறுவனத்திற்க்கு பதில் RAW (இந்திய உளவு அமைப்பு) சண்முகத்திற்கு பதில் சிவக்குமார்(விக்ரம்), ராமமூர்த்திக்கு பதில் சரத், கொள்ளைக்கு பதில் வெடிகுண்டு தயாரிக்கும் சாட், விபத்தில் கால் போவதற்கு பதில் கண், மனைவி தற்கொலைக்கு பதில் கொலை… இதுதான் தாண்டவத்தின் கதை. படத்தின் முதல் காட்சியிலேயே லண்டனில் 2011/1 ல் பிரிட்ஜ் மற்றும் சில பொது இடங்களில் குண்டு வெடிக்கிறது. அடுத்து ஒரு வருடம் கழித்து கண்பார்வை இல்லாத விக்ரம் ஒருவரைக் கொன்று மாடியில் இருந்து தூக்கி கீழே போடுகிறார். இதற்கு பின்னர் எல்லா பார்வையாளர்களும் விக்ரமிற்கு பின்னே செல்ல தொடங்கிவிடுவர்.. அவர் எதிராளியை கொல்ல ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு…
பார்வையாளனுக்கு எல்லா முடிச்சுகளும் அந்த இடத்திலேயே அவிழ்ந்து விடும். அதற்கு பின்பு அதில் என்ன தான் சுவாரஸ்யம் இருந்துவிட முடியும்.. ஒவ்வொரு படத்திற்கும் விக்ரம் கொடுக்கின்ற உழைப்பு பிரமிப்பானது.. ஆனால் அது இப்படி விழலுக்கு இறைத்த நீராவதுதான் வருத்தம்.

”கண் பார்வை இல்லாத ஒருத்தர் ஒலிஅலைகளை எழுப்பி அவை எதிரே இருக்கும் பொருளில் பட்டு திரும்பிவருவதைக் கொண்டு எங்கே எந்த பொருள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்” என்கின்ற ஒரே ஒரு சிறப்பான அம்சம் கொண்ட கதாபாத்திரம் என்பதற்காகவே விக்ரம் இந்த கதையை தேர்வு செய்தார் என்றால் அவரை என்னவென்று சொல்வது… அவருடைய நடிப்பை அந்த கதாபாத்திரத்துக்கு 100% மேலேயே அவர் கொடுத்திருந்தாலும் இது போன்ற ஒரு சாதாரண கதைக்கு ஏன் இவர் இவ்வளவு மெனக்கெடுகிறார் என்று தான் தெரியவில்லை.

லண்டனில் குண்டு வெடித்ததனாலோ என்னவோ முதல் பாதியில் பாதி நேரம் ஆங்கிலம் பேசும் வெளிநாட்டவர் ஆங்கிலத்தில் கதைக்க, மறுபக்கம் நாசர் கொலையாளியை, சந்தோசமாக ஆங்கிரி பேர்ட் விளையாடிக் கொண்டே தேடிக் கொண்டு இருக்கிறார். கண் தெரியாத விக்ரமோ கொலை செய்து கொண்டும் பியானோ கச்சேரி வாசித்துக் கொண்டு இருக்க, மறுபுறம் எமி ஜாக்சனோ அழகிபட்டம் வாங்கினாலும் கண் தெரியாத விக்ரமை காதலிப்பதாக பின்னாலயே திரிகிறார். கொஞ்சமேனும் ஆறுதலிப்பது சந்தானம் மட்டுமே.

அடுத்து வரும் அனுஷ்காவுடனான கல்யாணம், நட்பு, காதல் காட்சிகளே படத்தை ஓரளவேனும் உயிரோட்டமுள்ளதாக ஆக்குகின்றன. படுக்கையறையில் இருவருமே மாறி மாறி அடுத்தவர் தூங்குவதை ரசிப்பதும், விக்ரம் அனுஷ்காவிற்காக நடத்தும் பெயிண்டிங் கண்காட்சியும், தன் கணவனை சப்-இன்ஸ்பெக்டர் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் வேலைக்கு சிபாரிசுக்கு வரச்சொல்லும் காட்சிகளும்(லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும் கூட..) கவித்துவமான காட்சிகள். பின்பு நடப்பதை எல்லாம் அதர பழசான காட்சிகள்.. ஒரு பத்து நிமிடம் நீங்கள் வெளியே சென்று வந்தாலும் கூட எதையுமே மிஸ் செய்ய மாட்டீர்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை ஆஹா.. பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்.. மீண்டும் மீண்டும் அதையே பேசியே வெறுப்பேற்றுகிறார். ஜி.வியின் சொதப்பலான இசை மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நீரவ்ஷாவின் கேமரா வழக்கம் போல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், கதையோடு ஏனோ ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற கதையை வைத்துக் கொண்டு பெரிய ஆர்ட்டிஸ்டிகளின் தயவில் பிழைத்துக் கொள்ளலாம் என்று, இயக்குநர்கள் நினைப்பார்களானால் அது தமிழ் சினிமாவிற்கான சாபகேடு.

தாண்டவம்- 100ரூபாய் கொடுத்து படம் பார்த்தால் நீங்கள் ஆடத்தான் வேண்டும்.