Showing posts with label ரவி.கே.சந்திரன்.. Show all posts
Showing posts with label ரவி.கே.சந்திரன்.. Show all posts

Sunday, 5 October 2014

யான்:

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம்.. எனக்கு ரவி.கே.சந்திரன் என்ற பெயர் பரிச்சியமான அளவுக்கு அவரது முகமோ அல்லது அவர் சார்ந்த இன்னபிற தகவல்களோ பரிச்சயம் இல்லை… எனக்குத் தெரிந்த அளவில் அவர் ஒரு மிகச்சிறந்த அழகுணர்ச்சி சார்ந்த ஒளிப்பதிவாளர்… மலையாளம், தமிழ், இந்தி என பல்வேறு திரையுலகில் மதிக்கப்படும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பது மட்டுமே… அவரைப் பற்றிய குறிப்புகளை விக்கியில் தேடிக் கொண்டிருந்ததன் வாயிலாக, அவரது தொழில் அனுபவம் என் வயதுக்கு சமமானதாக இருக்கும் என்று கணிக்கிறேன்.. ஆனால் இப்படிப்பட்ட ஒரு அனுபவம் மட்டுமே ஒரு நல்ல திரைப்படத்தை கொடுப்பதற்கு போதாது என்பதும், வரிச்சலுகைக்காக சங்க கால நூல்களை துளைத்து ஒரு நல்ல தமிழ் பெயரை எடுத்துக் கொண்டு, ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இருப்பது போல ஒரு கதாநாயகனையும் தேர்ந்தெடுத்து விட்டு, மப்பும் மந்தாரமுமான ஒரு கதாநாயகியை இடை அதிர ஓடிவர செய்து, கேமராவினை துடைத்து காட்சி பிம்பங்களை பளிச்சென காட்டுவதில் மட்டுமே ஒரு நல்ல திரைப்படம் கைகூடி விடாது என்பதற்கான உதாரணம் தான் இந்த யான்…


ஒரு திரைப்படம் எதன் அடிப்படையில் உருவாகிறது என்று என்னை கேட்டால், ஒன்று வாழ்வியலின் அடிப்படையிலோ, அனுபவத்தின் அடிப்படையிலோ அல்லது கற்பனையின் அடிப்படையிலோ என்று கூறுவேன்… பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பவர் தான் இயக்குநர் ரவி கே. ஆகவே அவர் அனுபவத்தில் சறுக்குவதற்கு வாய்ப்பே இல்லை.. ஆயினும் அவர் சறுக்குகிறார் எனில், அவர் எதில் சறுக்குகிறார் என்பதை தெரிந்து கொள்வது மிகமுக்கியம்… அவர் எதில் சறுக்குகிறார் என்றால் வாழ்வியலிலும் கற்பனையிலும் தான்… இந்த வாழ்வியல் என்பது அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை குறிப்பது.. இது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் கைகொடுக்கும்.. கற்பனை என்பது என்ன என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.. ஆனால் இந்த வாழ்வியல், கற்பனை இரண்டுக்குமே ஒரு மறைமுக தொடர்பு உண்டு.. இந்த கற்பனை என்கின்ற வார்த்தைக்கு இன்னொரு சரியான பதம் கனவு… இந்த இடத்தில் கனவு என்ற வார்த்தையையே பயன்படுத்தலாம்… பெரும்பாலும் யார் கனவு காண்பார்கள்.. (தூக்கத்தில் வரும் கனவு அல்ல…) மிகச் சராசரியான ஆசைகள் கூட நிறைவேறாத மக்களுக்கு ஏகப்பட்ட கனவுகள் இருக்கும்.. அவை விசித்திரமானதாகவும், குரூரமானதாகவும், பயங்கரமானதாகவும் சில சமயங்களில் யதார்த்தமானதாகவும் கூட இருக்கும்… ஆனால் சிறு வயதில் இருந்து எல்லாவிதமான ஆசைகளும் பூர்த்தி செய்யப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு கனவுகள் என்பவை பெரும்பாலும் தூக்கத்தில் வருபவையாக இருக்கும் அல்லது நகல் எடுக்கப்பட்ட கனவுகளாக இருக்கும்… இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.. அவர்கள் எல்லாம் பெரும்பாலும் அனுபவத்தின் மூலமாகவும், ஆர்வத்தின் மூலமாகவும் தங்களது கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள்…. ஆக ஆசைகள் பூர்த்தியாகும் போது கற்பனையின் கதவுகள் அடைத்துக் கொள்கின்றன… அதை நீங்கள் ஆர்வத்தாலோ அல்லது அனுபவத்தாலோ உடைத்து திறந்து புதிதாக கனவு காண வேண்டும்… ஆனால் இயக்குநர் ரவி.கே அவர்கள் தனது வாழ்வியலால் பூட்டிக்கொண்ட கற்பனையின் கதவுகளை அனுபவங்களைக் கொண்டு திறக்க முயற்சிக்கவே இல்லை… அதனால் தான் இப்படி ஒரு கற்பனை வறட்சி உடைய அல்லது நகல் எடுக்கப்பட்ட ஒரு கனவை படைப்பாக அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது…

யான் திரைப்படத்தில் இவருடைய கனவு என்ன தெரியுமா….? நாயகன், நாயகியை பார்த்த அடுத்த நிமிடத்தில் அவனுக்கு காதல் வருகிறது… நாயகிக்கு படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் காதல் வருகிறது… காதலிக்கிறார்கள்… காதலிக்கிறார்கள்.. காதல் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது…. “ நீ என்ன வேலை பார்க்கிறாய்….?? என் மகளை எப்படி வைத்து காப்பாத்துவாய்…??” என்ற நியாயமான கேள்விக்கு நாயகனுக்கு நியாயமான…!!?? கோபம் வருகிறது… ”காதலிக்கும் வரை வேலை இல்லாதவன்னு தெரியல… கல்யாணம்னு வந்ததும் வேலை இல்லாதது பெரிய குறையாக தெரிகிறதோ..?? என்று வாதம் செய்யும் அவன் ரோசப்பட்டு வேலை தேடுகிறான்.. மும்பையிலோ அல்லது இந்திய நாட்டிலோ எந்த வேலையுமே நாயகனுக்கு இல்லை என்பதால் பஸிலிஸ்தான் செல்கிறார்…. இந்த இடத்திலேயே மூன்று டூயட்டுகளின் உதவியோடு இடைவேளை வந்துவிடுகிறது.. பிறகு போன இடத்தில் நாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள… அந்த அரசாங்கத்திடம் இருந்து நாயகனுக்கு தலை துண்டிக்கப்படும் தண்டனை கிடைக்கிறது… நாயகனின் நண்பர் வட்டாரம் “ அவனை ஏன் வேலைக்கு போகச் சொன்னாய்…?? உன்னால் தான் அவன் சாகப் போகிறான்…!!” என்று நாயகியின் வீட்டில் கல்லெறிந்து கலாட்டா செய்கிறது…. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அந்த வேலையை நாயகனுக்கு வாங்கிக் கொடுத்ததும், அந்த நண்பர் வட்டாரத்தில் உள்ள ஒருவன் தான்…. இறுதியில் அந்த தண்டனையில் நாயகன் உயிர் பிழைத்தானா…?? இல்லையா…?? என்பது தமிழ்படம் பார்க்கும் நம் எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான விசயம்…. இதுதான் இயக்குநர் ரவி.கே.சந்திரன் அவர்களின் கற்பனை, கனவு எல்லாமே…. இதே கனவு வேறு யாருக்காவது வந்திருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் வந்ததில்லை… ஓரிருவரைத் தவிர… அந்த ஓரிருவர் மரியான் இயக்குநரும், தாம்தூம் இயக்குநரும்…


படத்தில் ஐந்து பாடல்கள்…. ஐந்தும் டூயட் பாடல்கள்… இடைவேளை வரும் வரை படத்தின் கதை தொடங்குவதே இல்லை…  தவறான எமோஷ்னல் லாஜிக்குகள்.. கற்பனை வறட்சி நிலவும் காட்சிகளின் கோர்ப்புகள்… வெளிநாட்டின் ராணுவத்தினரிடம் இருந்து வெகு எளிதாக தப்பித்துச் செல்லும் ஹீரோ, எமோஷ்னலை பிடுங்குவதற்காக திணிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்று ஏகப்பட்ட மைனஸ்… படத்தின் எந்தவொரு காட்சியிலும் எந்தவொரு உணர்வுமே வருவதில்லை.. ஒட்டு மொத்தமாக நமக்குக் கிடைப்பது எரிச்சல் மட்டுமே… ஒரு பழைய திரைப்படம்.. எம்.ஜி.ஆர் படமோ சிவாஜி படமோ…. எது என்று சரியாக நினைவில் இல்லை… சிவந்த மண் திரைப்படமாக இருக்கலாம்… சீன பார்டரில் இருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டும்… ஒரு குட்டையில் விழுந்து ஏறி இந்தப் பக்கம் வருவார் சிவாஜி…. ஒரு அட்டையில் ”இந்தியா” என்று தமிழில் ஒரு போர்ட்டு எழுதி வைத்திருப்பார்கள்… அவ்வளவு தான் பார்டரை கடந்தாகிவிட்டது…. இதற்கு ஈடான ஒரு காட்சி இந்தத் திரைப்படத்திலும் உண்டு… திறனிருந்தால் திரையில் கண்டு கொள்ளுங்கள்…

சரி… இயக்குநர்கள் இந்த கற்பனை வறட்சியை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் போது, அதிமுக அணியினரின் பதாகைகள் கண்ணில் தெரிந்தது…. அதில் ஒரு விளம்பரத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருக்கிறது…. அதற்கு கீழே இந்த வாசகங்கள்… “ காவிரிய நீயே வச்சுக்க….. அம்மாவக் குடு…” இதை படித்தவுடன் அப்படி ஒரு சிரிப்பு வந்தது…. ( இது ஆனந்த சிரிப்பும் அல்ல…. ஆணவ சிரிப்பும் அல்ல…) இப்படி ஒரு சின்ன உணர்வை கூட இந்த திரைப்படம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை… வரவர தமிழகத்தின் அரசியல் கட்சி உறுப்பினர்களில் பலர் திறமையான கற்பனாவாதிகளாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள்… இவர்களுக்கு இருக்கும் கற்பனை கூட நம் இயக்குநர்களுக்கு இல்லாமல் போனது தமிழக மக்கள் செய்த துரதிஷ்டம் தான்….

பார்வையாளர்கள் எல்லாம் மிகப்பெரிய கதை சொல்லிகளாக மாறி வருகிறார்கள்… இந்த யான் திரைப்படத்தில் இயக்குநர் மிகப்பெரிய திருப்பம் என்று வைத்திருக்கும் ஒரு விசயத்தை மிக எளிதாக கணித்துவிடுகிறார் என் அருகில் அமர்ந்து படம் பார்த்த ஒரு சாமானிய மனிதர்… அவ்வளவு பலவீனமாக இருக்கிறது திரைக்கதை.. நம் தமிழ் இயக்குநர்கள் எல்லாம் தங்களது மேதமைதனத்திலேயே திளைத்துக் கொண்டிருக்காமல் உடல் வருத்தி கதைக்காக மெனக்கெடாவிட்டால் தோல்விகளை தவிர்க்கவே முடியாது என்று தோன்றுகிறது…..

அஞ்சான், இரும்புக் குதிரை- யின் வரிசையில் யானும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறான் இந்த யான்… மொத்தத்தில் இந்த “ யான் “ வீண்…