Showing posts with label சமர். Show all posts
Showing posts with label சமர். Show all posts

Thursday, 24 January 2013

சமர்:


தீராத விளையாட்டு பிள்ளை இயக்குநர் திருவின் இரண்டாவது படம். அவன் இவன் சூட்டிங்கில் ஆர்யாவுக்கு கதை சொல்ல காத்திருந்த திருவிடம் விஷால் கதை கேட்டு கதை பிடித்துப் போக தானே இந்த படத்தில் நடிப்பதாக ஆர்யாவிடம் கேட்டு, அவரும் பெருந்தன்மையாக…! விட்டு கொடுக்க.. இப்போது விஷால் நடிப்பில் வந்திருக்கும் படம்.

கதை தமிழ் சினிமாவிற்கு சற்று புதியது. ஆனால் அது மட்டுமே படத்தை காப்பாற்றி விடாதே… ஒரு நல்லகதை அமைந்தும் திரைக்கதை சரியாக அமையாவிடில் படம் தோல்வியடையும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம்.. இது த்ரில்லர், சஸ்பென்ஸ் வகையறா படமாக இருப்பதால் கதை இதுதான் என்று விரிவாக சொல்லமுடியாத சூழ்நிலை.

விஷாலின் அப்பா அழகம்பெருமாள் ஃபாரஸ்ட் ரேஞ்சர்.. அந்த காட்டில் ட்ரக்கராக வேலை செய்யும் விஷாலுக்கும், சுனைனாவுக்கும் காதல்… தன் காதலுக்கு அவன் மரியாதை தரவில்லை… என்கின்ற கோபத்தில் காதலை முறித்துக் கொண்டு பாங்காங்க் பறக்கிறார் சுனைனா.. இரண்டு மாதம் கழித்து அவரிடம் இருந்து வரும் கொரியரில் விஷால் பாங்காங்க் வருவதற்கான விமான டிக்கெட்டும்.. விஷாலை மறக்கமுடியவில்லை என்று எழுதிய காதல் கடிதமும் வந்து சேர.. இவரும் தாய்லாந்து செல்ல.. ஏர்போர்ட்டில் த்ரிஷாவும் விஷாலும் நண்பர்களாகின்றனர்…

காதலி சொன்ன இடத்தில் விஷால் காத்திருக்க காதலி வரவில்லை… மேலும் விஷால் ஒரு மல்டி மில்லினியர், நம்பர் ஒன் பிஸினஸ்மேன் என ஒரு கூட்டம் துரத்த.. ஒரு கூட்டம் அவரை கொல்ல துரத்துகிறது.. காதலி என்ன ஆனாள்… தாய்லாந்தில் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளவும்….

படத்தில் அநியாயத்திற்கு பல லாஜிக் ஓட்டைகள். ஒரு புதிய விசயத்தை பிடித்துவிட்டோம்.. இதுவே போதும் படம் ஜெயித்துவிடும் என்கின்ற மிதப்பிலேயே இருந்திருப்பார்கள் என்று தோணுகிறது.. படத்தில் பாங்காங்க் போனவுடன் வரும் சில காட்சிகளான விஷாலை ஜான்விஜய் ஆட்கள் பாஸ் என்று சொல்லிக் கொண்டு பின்னால் சுற்றுவது, அவரை மல்டிமில்லினியர் என்று நம்புவது இவை போன்ற காட்சிகள் திரைக்கதை நகர்விற்கு எந்தவிதத்தில் உதவி இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏனெனில் வில்லன்களின் முக்கிய குறிக்கோள் விஷாலை குழப்புவது இல்லை (ஒரு வேளை இயக்குநரின் முக்கிய குறிக்கோள் சுவாரஸ்யம் என்ற பெயரில் நம்மை குழப்புவதாக இருக்கலாம்) என்பதும் பின்வரும் காட்சிகளில் விளக்கப்படுகிறது.

மேலும் விஷால் தன்னை சுற்றி நடக்கும் குழப்பமான விசயங்களில் கவனம் செலுத்தும் போது, த்ரிஷாவின் மீது ஏற்படும் காதலும் தோல்வியும் எப்படி அவரை பாதிக்கும். அதற்கு பதிலாக முதலில் இருந்தே விஷாலுக்கு குழப்பமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை, அவருக்கு த்ரிஷாவின் மீது காதல் வருகிறது, த்ரிஷா தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று தெரிய வருகிறது என்று வைத்துக் கொண்டால் அப்போது ஏற்படும் விரக்தியால் வில்லன்கள் எதிர்பார்க்கும் சாதகமான விசயங்கள் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் உண்டே.

த்ரிஷாவிற்கு விஷாலின் மீது காதல் வரும் காட்சிகளில் நமக்கு எரிச்சலே வருகிறது. இது போக காதல் என்ற பெயரில் சில இடங்களில் பேசும் வசனங்கள் எல்லாம் படு அபத்தம். சில வசனங்கள் க்யூட். உதாரணமாக “யார்கிட்டயும் நான் பயன்படுத்தாத வார்த்தை.. நீ தூக்கிப் போட்டுறாத”, ”காதல் ப்ளைண்டுன்னு தெரியும்.. கலர் ப்ளைண்டுன்னு இப்பதா தெரியும்..” இப்படி ஆங்காங்கே எஸ்.ராவின் சில வசனங்கள் ஈர்க்கின்றன. படத்தின் இசை யுவன் சங்கர் ராஜாவாம். டைட்டில் கார்டில் மட்டுமே அவர் இருப்பதை உணர முடிகிறது.

பாலாவின் படத்தில் நடித்துவிட்டு திரும்பிய பின்னரும் விஷாலுக்கு நடிப்பு வருவேனா என்கிறது. விரக்தியோ கோபமோ எது வந்தாலும் தலைக்குப் பின்னால் கையை வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி உடலை பின்புறம் வளைத்து கத்த தொடங்கிவிடுகிறார். கத்துவது எப்போதுமே நடிப்பாகிவிடாது என்று யாராவது அவரிடம் சொன்னால் நன்றாய் இருக்கும். த்ரிஷாவின் பாடி லாங்க்வேஜ், எக்ஸ்பிரஸன்ஸ் எல்லாமே க்யூட், சுனைனா கவர்ச்சி பதுமையாக வலம் வந்து சற்று நேரத்தில் காணாமல் போகிறார். ஜான்விஜய், ஜே.டி சக்ரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய், சம்பத், ஜெயபிரகாஷ், அழகம் பெருமாள் என ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது. கேரக்டர்களுக்கான ஸ்கோப் தான் இல்லை.

தமிழ்சினிமாவின் சமீபத்திய சில மசாலா மொக்கை படங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான கருவை கொண்டு படம் எடுக்க முயற்சித்த திருவின் முயற்சி பாராட்டுக்குரியது. அவரது முதல் படமான தீராத விளையாட்டு பிள்ளையை ஒப்பிடும் போது கண்டிப்பாக இது ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் திரைக்கதையில் இருந்த சில ஓட்டைகள் படத்தை யுத்தத்தில் தோற்கடித்துவிடுகின்றன. (சமர் என்றால் யுத்தமாம்…!?)