Showing posts with label ஜீவா. Show all posts
Showing posts with label ஜீவா. Show all posts

Sunday, 5 October 2014

யான்:

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம்.. எனக்கு ரவி.கே.சந்திரன் என்ற பெயர் பரிச்சியமான அளவுக்கு அவரது முகமோ அல்லது அவர் சார்ந்த இன்னபிற தகவல்களோ பரிச்சயம் இல்லை… எனக்குத் தெரிந்த அளவில் அவர் ஒரு மிகச்சிறந்த அழகுணர்ச்சி சார்ந்த ஒளிப்பதிவாளர்… மலையாளம், தமிழ், இந்தி என பல்வேறு திரையுலகில் மதிக்கப்படும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பது மட்டுமே… அவரைப் பற்றிய குறிப்புகளை விக்கியில் தேடிக் கொண்டிருந்ததன் வாயிலாக, அவரது தொழில் அனுபவம் என் வயதுக்கு சமமானதாக இருக்கும் என்று கணிக்கிறேன்.. ஆனால் இப்படிப்பட்ட ஒரு அனுபவம் மட்டுமே ஒரு நல்ல திரைப்படத்தை கொடுப்பதற்கு போதாது என்பதும், வரிச்சலுகைக்காக சங்க கால நூல்களை துளைத்து ஒரு நல்ல தமிழ் பெயரை எடுத்துக் கொண்டு, ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இருப்பது போல ஒரு கதாநாயகனையும் தேர்ந்தெடுத்து விட்டு, மப்பும் மந்தாரமுமான ஒரு கதாநாயகியை இடை அதிர ஓடிவர செய்து, கேமராவினை துடைத்து காட்சி பிம்பங்களை பளிச்சென காட்டுவதில் மட்டுமே ஒரு நல்ல திரைப்படம் கைகூடி விடாது என்பதற்கான உதாரணம் தான் இந்த யான்…


ஒரு திரைப்படம் எதன் அடிப்படையில் உருவாகிறது என்று என்னை கேட்டால், ஒன்று வாழ்வியலின் அடிப்படையிலோ, அனுபவத்தின் அடிப்படையிலோ அல்லது கற்பனையின் அடிப்படையிலோ என்று கூறுவேன்… பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பவர் தான் இயக்குநர் ரவி கே. ஆகவே அவர் அனுபவத்தில் சறுக்குவதற்கு வாய்ப்பே இல்லை.. ஆயினும் அவர் சறுக்குகிறார் எனில், அவர் எதில் சறுக்குகிறார் என்பதை தெரிந்து கொள்வது மிகமுக்கியம்… அவர் எதில் சறுக்குகிறார் என்றால் வாழ்வியலிலும் கற்பனையிலும் தான்… இந்த வாழ்வியல் என்பது அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை குறிப்பது.. இது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் கைகொடுக்கும்.. கற்பனை என்பது என்ன என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.. ஆனால் இந்த வாழ்வியல், கற்பனை இரண்டுக்குமே ஒரு மறைமுக தொடர்பு உண்டு.. இந்த கற்பனை என்கின்ற வார்த்தைக்கு இன்னொரு சரியான பதம் கனவு… இந்த இடத்தில் கனவு என்ற வார்த்தையையே பயன்படுத்தலாம்… பெரும்பாலும் யார் கனவு காண்பார்கள்.. (தூக்கத்தில் வரும் கனவு அல்ல…) மிகச் சராசரியான ஆசைகள் கூட நிறைவேறாத மக்களுக்கு ஏகப்பட்ட கனவுகள் இருக்கும்.. அவை விசித்திரமானதாகவும், குரூரமானதாகவும், பயங்கரமானதாகவும் சில சமயங்களில் யதார்த்தமானதாகவும் கூட இருக்கும்… ஆனால் சிறு வயதில் இருந்து எல்லாவிதமான ஆசைகளும் பூர்த்தி செய்யப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு கனவுகள் என்பவை பெரும்பாலும் தூக்கத்தில் வருபவையாக இருக்கும் அல்லது நகல் எடுக்கப்பட்ட கனவுகளாக இருக்கும்… இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.. அவர்கள் எல்லாம் பெரும்பாலும் அனுபவத்தின் மூலமாகவும், ஆர்வத்தின் மூலமாகவும் தங்களது கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள்…. ஆக ஆசைகள் பூர்த்தியாகும் போது கற்பனையின் கதவுகள் அடைத்துக் கொள்கின்றன… அதை நீங்கள் ஆர்வத்தாலோ அல்லது அனுபவத்தாலோ உடைத்து திறந்து புதிதாக கனவு காண வேண்டும்… ஆனால் இயக்குநர் ரவி.கே அவர்கள் தனது வாழ்வியலால் பூட்டிக்கொண்ட கற்பனையின் கதவுகளை அனுபவங்களைக் கொண்டு திறக்க முயற்சிக்கவே இல்லை… அதனால் தான் இப்படி ஒரு கற்பனை வறட்சி உடைய அல்லது நகல் எடுக்கப்பட்ட ஒரு கனவை படைப்பாக அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது…

யான் திரைப்படத்தில் இவருடைய கனவு என்ன தெரியுமா….? நாயகன், நாயகியை பார்த்த அடுத்த நிமிடத்தில் அவனுக்கு காதல் வருகிறது… நாயகிக்கு படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் காதல் வருகிறது… காதலிக்கிறார்கள்… காதலிக்கிறார்கள்.. காதல் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது…. “ நீ என்ன வேலை பார்க்கிறாய்….?? என் மகளை எப்படி வைத்து காப்பாத்துவாய்…??” என்ற நியாயமான கேள்விக்கு நாயகனுக்கு நியாயமான…!!?? கோபம் வருகிறது… ”காதலிக்கும் வரை வேலை இல்லாதவன்னு தெரியல… கல்யாணம்னு வந்ததும் வேலை இல்லாதது பெரிய குறையாக தெரிகிறதோ..?? என்று வாதம் செய்யும் அவன் ரோசப்பட்டு வேலை தேடுகிறான்.. மும்பையிலோ அல்லது இந்திய நாட்டிலோ எந்த வேலையுமே நாயகனுக்கு இல்லை என்பதால் பஸிலிஸ்தான் செல்கிறார்…. இந்த இடத்திலேயே மூன்று டூயட்டுகளின் உதவியோடு இடைவேளை வந்துவிடுகிறது.. பிறகு போன இடத்தில் நாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள… அந்த அரசாங்கத்திடம் இருந்து நாயகனுக்கு தலை துண்டிக்கப்படும் தண்டனை கிடைக்கிறது… நாயகனின் நண்பர் வட்டாரம் “ அவனை ஏன் வேலைக்கு போகச் சொன்னாய்…?? உன்னால் தான் அவன் சாகப் போகிறான்…!!” என்று நாயகியின் வீட்டில் கல்லெறிந்து கலாட்டா செய்கிறது…. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அந்த வேலையை நாயகனுக்கு வாங்கிக் கொடுத்ததும், அந்த நண்பர் வட்டாரத்தில் உள்ள ஒருவன் தான்…. இறுதியில் அந்த தண்டனையில் நாயகன் உயிர் பிழைத்தானா…?? இல்லையா…?? என்பது தமிழ்படம் பார்க்கும் நம் எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான விசயம்…. இதுதான் இயக்குநர் ரவி.கே.சந்திரன் அவர்களின் கற்பனை, கனவு எல்லாமே…. இதே கனவு வேறு யாருக்காவது வந்திருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் வந்ததில்லை… ஓரிருவரைத் தவிர… அந்த ஓரிருவர் மரியான் இயக்குநரும், தாம்தூம் இயக்குநரும்…


படத்தில் ஐந்து பாடல்கள்…. ஐந்தும் டூயட் பாடல்கள்… இடைவேளை வரும் வரை படத்தின் கதை தொடங்குவதே இல்லை…  தவறான எமோஷ்னல் லாஜிக்குகள்.. கற்பனை வறட்சி நிலவும் காட்சிகளின் கோர்ப்புகள்… வெளிநாட்டின் ராணுவத்தினரிடம் இருந்து வெகு எளிதாக தப்பித்துச் செல்லும் ஹீரோ, எமோஷ்னலை பிடுங்குவதற்காக திணிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்று ஏகப்பட்ட மைனஸ்… படத்தின் எந்தவொரு காட்சியிலும் எந்தவொரு உணர்வுமே வருவதில்லை.. ஒட்டு மொத்தமாக நமக்குக் கிடைப்பது எரிச்சல் மட்டுமே… ஒரு பழைய திரைப்படம்.. எம்.ஜி.ஆர் படமோ சிவாஜி படமோ…. எது என்று சரியாக நினைவில் இல்லை… சிவந்த மண் திரைப்படமாக இருக்கலாம்… சீன பார்டரில் இருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டும்… ஒரு குட்டையில் விழுந்து ஏறி இந்தப் பக்கம் வருவார் சிவாஜி…. ஒரு அட்டையில் ”இந்தியா” என்று தமிழில் ஒரு போர்ட்டு எழுதி வைத்திருப்பார்கள்… அவ்வளவு தான் பார்டரை கடந்தாகிவிட்டது…. இதற்கு ஈடான ஒரு காட்சி இந்தத் திரைப்படத்திலும் உண்டு… திறனிருந்தால் திரையில் கண்டு கொள்ளுங்கள்…

சரி… இயக்குநர்கள் இந்த கற்பனை வறட்சியை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் போது, அதிமுக அணியினரின் பதாகைகள் கண்ணில் தெரிந்தது…. அதில் ஒரு விளம்பரத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருக்கிறது…. அதற்கு கீழே இந்த வாசகங்கள்… “ காவிரிய நீயே வச்சுக்க….. அம்மாவக் குடு…” இதை படித்தவுடன் அப்படி ஒரு சிரிப்பு வந்தது…. ( இது ஆனந்த சிரிப்பும் அல்ல…. ஆணவ சிரிப்பும் அல்ல…) இப்படி ஒரு சின்ன உணர்வை கூட இந்த திரைப்படம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை… வரவர தமிழகத்தின் அரசியல் கட்சி உறுப்பினர்களில் பலர் திறமையான கற்பனாவாதிகளாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள்… இவர்களுக்கு இருக்கும் கற்பனை கூட நம் இயக்குநர்களுக்கு இல்லாமல் போனது தமிழக மக்கள் செய்த துரதிஷ்டம் தான்….

பார்வையாளர்கள் எல்லாம் மிகப்பெரிய கதை சொல்லிகளாக மாறி வருகிறார்கள்… இந்த யான் திரைப்படத்தில் இயக்குநர் மிகப்பெரிய திருப்பம் என்று வைத்திருக்கும் ஒரு விசயத்தை மிக எளிதாக கணித்துவிடுகிறார் என் அருகில் அமர்ந்து படம் பார்த்த ஒரு சாமானிய மனிதர்… அவ்வளவு பலவீனமாக இருக்கிறது திரைக்கதை.. நம் தமிழ் இயக்குநர்கள் எல்லாம் தங்களது மேதமைதனத்திலேயே திளைத்துக் கொண்டிருக்காமல் உடல் வருத்தி கதைக்காக மெனக்கெடாவிட்டால் தோல்விகளை தவிர்க்கவே முடியாது என்று தோன்றுகிறது…..

அஞ்சான், இரும்புக் குதிரை- யின் வரிசையில் யானும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறான் இந்த யான்… மொத்தத்தில் இந்த “ யான் “ வீண்…


Sunday, 22 December 2013

என்றென்றும் புன்னகை:



தலைப்புக்கு ஏற்றார் போல் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் திரைப்படம்.. அதனால் தானோ என்னவோ அவர்கள் கதை என்னும் வஸ்துவுக்காக கஷ்டப்படவே இல்லை.. கெளதம்(ஜீவா), ஸ்ரீ(வினய்) மற்றும் பேபி(சந்தானம்) என மூன்று நண்பர்கள். இவர்கள் மூவருக்குமே காதல், கல்யாணம் என்றாலே பிடிக்காது, ஆனால் வினய்க்கு பெண்களைப் பிடிக்கும்.. படம் தொடங்கி பத்து நிமிடத்துக்குள் மூவருமே தங்களது பிற நண்பர்கள் மத்தியில் தாங்கள் கல்யாணமே செய்யாமல் கடைசி வரை நல்ல நண்பர்களாக சேர்ந்து இருக்கப் போவதாக சத்தியம் செய்கின்றனர்.. அப்போதே கடைசியில் என்ன நடக்கப் போகிறது என்பதும் தெரிந்து விடுகிறது..



இப்படிப்பட்ட எந்தவித புதுமையும் இல்லாத கதையும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும் தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.. இந்தப் படத்திலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹீரோ சந்தானம் தான்.. கடந்த நாலைந்து படங்களில் சறுக்கிய சந்தானம்.. இதில் சற்றே நிமிர்ந்து இருக்கிறார்... பத்து நிமிடங்களில் முழுக்கதையும் தெரிந்துவிடுகின்ற சூழலில் காட்சிகளை கொஞ்சமேனும் கலகலப்பாக நகர்த்துவதற்கு உதவி இருப்பது சந்தானத்தின் காமெடியைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை… இத்திரைப்படத்தின் கதை சார்ந்தும், அதில் இருந்த குழப்பங்கள் சார்ந்து பேசுவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் இருக்கின்றன… அந்த எண்ணங்களின் தொகுப்பையே கீழே கொடுக்கிறேன்…. இது படம் பார்க்கும் போது என்னுடைய பார்வையில் எனக்கு ஏற்பட்ட கேள்விகள் மட்டுமே…? அதே நேரத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த முகம் பேர் தெரியாத இளவயது ரசிகர் ஒருவர் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தார்.. என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்…. இனி என்னுடைய பார்வையில் படத்தின் கதையில் இருந்த குழப்பம் பற்றிய குறிப்புகள்…



ஒரு ஆணுக்கு பெண் என்றாலே பிடிக்காது… ஏன்..? இதற்கு உளவியல் ரீதியாக எத்தனையோ விதமான சுவாரஸ்யமான பதில்களை நம்மால் யூகித்து, கற்பனை செய்து காட்சிப்படுத்த முடியும்.. ஆனால் இந்த இடத்தில் இயக்குநரின் கற்பனையென்பது ஆணாதிக்க மனோபாவத்தில் திளைத்தோங்கும் நம் தமிழ்சமூகத்தின் மங்கலான மட்டுப்பட்ட பார்வையாகத்தான் இருக்கிறது… காலங்காலமாக கட்டப்பட்டு வரும் கருத்துப் பேழையில் இருந்து ஒரு அழுகிப் போன அற்பமான கருத்தை உருவி… உலவவிடுகிறார்… அவனுடைய தாய் ஒழுக்கங்கெட்டவள்.. ஓடிப்போனவள்… அதனால் அவனது தந்தை மனமொடிந்து தன் மகனைக் கட்டிக் கொண்டு அழுது, பெண்கள் மீது பிரத்யேகமாகக் கட்டப்பட்டு இருக்கும் ஒழுக்கமற்றவர்கள்.. நம்பிக்கை துரோகிகள் என்கின்ற ஒரு பிம்பத்தை அவனது மகனுக்குள்ளும் விதைத்துவிடுகிறார்… அதையே மகனான ஜீவாவும் கடைபிடித்து வாழத் தொடங்குகிறான்..

ஒரு பெண் தன் குடும்ப வாழ்க்கையை விடுத்து வேறொருவனுடன் ஓடத் தயாராகின்றாள், என்றால் அந்த தயார் நிலையை பெரும்பாலும் மிகச் சாதாரணமான காட்சிகளை அடுக்கி நம் தமிழ் சினிமா கடந்துவர முயற்சிக்கிறது.. ஆனால் யதார்த்த வாழ்வியலில் அது அவ்வளவு எளிதானதல்ல….. அதற்கு அவள் ஏகப்பட்ட மனப் போராட்டங்களை கடந்து வந்திருக்க வேண்டும்.. ஆனால் அவளது அந்த இக்கட்டான காலக்கட்டங்களை கண்டுகொள்ளாமல் நாம் வெகு சுலபமாக “ஒழுக்கங்கெட்டவள்” என்ற வார்த்தை வடிவத்தில் அதை கடந்துவந்து விடுகிறோம்.. அவள் ஏன் ஓடிப் போனாள்…? என்ற கேள்வியை எந்த கதாபாத்திரமும் கேட்காது..? பார்வையாளனும் அதைக் கேட்க விரும்புவது இல்லை.. இப்படி ஒழுக்கத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து இருக்கும் நாயக கதாபாத்திரம் கூட தன்னுடனே சுற்றிக் கொண்டு திரியும், நண்பன் வினயின் ஒழுக்கத்தைக் கண்டு கொள்வதே இல்லை.. ஏனென்றால் அவன் தான் ஆண் ஆயிற்றே..? போகின்ற வருகின்ற இடத்தில் எல்லாம் அவன் எல்லா பெண்களுக்கும் ப்ராக்கெட் போடுகிறான்.. கல்யாணம் ஆனப் பின்பும் அவன் மொட்டைமாடியில் நின்று கொண்டு கடந்து செல்லும் பெண்களுக்கு பறக்கும் முத்தத்தைப் பரிசளிக்கிறான்… இதைக் கண்டு கொள்ளாமல் அவனது இரண்டு நண்பர்களும் அதை நகைப்புக்குரியதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்கின்றனர்… நண்பர்கள் மாத்திரம் அல்ல… பார்வையாளனும் அதைக் கண்டு நகைக்கத்தான் செய்கிறான்…. இதையே தானே அவனது அம்மாவும் செய்திருப்பாள்… அது எப்படி  ஒரே செயல் ஆண் செய்யும் போது நகைப்புக்குரியதாகவும், பெண் செய்யும் போது விரசமாகவும் மாறி விவாதத்துக்குள்ளானதாக மாறியது என்பதையெல்லாம் நாம் விவாதிக்கவே கூடாது போலும்….

சரி… போகட்டும்… ஜீவாவின் அப்பாவாக வரும் நாசர், தன் மனைவி பிரிந்தவுடன், அவர்களது மொழியில் சொன்னால் ஓடிப் போனவுடன், பெண்களைப் பற்றி பிதற்றி, அரற்றி ஒரு பிம்பத்தை தன் மகனின் மனதில் ஏற்படுத்த, மகனும் அப்பா சொன்னதை அப்படியே வேதவாக்காக நம்புகிறான்.. ஓரிரு மாதங்களில் பெண்களைப் பற்றி அவ்வளவு அவதூறு பேசிய அப்பாவே.. எப்படி மீண்டும் ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தார்.. அப்படியென்றால் இவர் முதலில் சொன்னது உண்மையா..? இப்போது சொல்வது உண்மையா…? என்று அந்த சிறுவயதில் கூட எந்த குழப்பச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், அப்பா முதலில் சொன்னதுதான் உண்மை… இரண்டாவது சொன்னது பொய்…. என்று எண்ணி.. அப்பா முதலில் சொன்ன விசயத்தையே பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கிறானாம்… அதுவும் இல்லாமல் அப்பாவுடன் பேசுவதையே நிறுத்தியும் விடுகிறானாம்… இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.. சரி.. இதையும் விடுங்கள்…



கடைசியில் பிரியாவாக, தன் ப்ரொடக்சன் கம்பெனியில் கோ-ஆர்டினேட்டராக வரும் த்ரிஷா கிருஷ்ணனின் ஓரிரு அக்கறையான விசாரிப்புகளைக் கொண்டு.. எல்லாப் பெண்களும் அப்படியில்லை… என்று மனம் திருந்தி கல்யாணம் செய்து கொள்வதாக படம் முடிகிறது… அப்படி அவரது மனமாற்றத்துக்கான காரணமாக இருந்தது, ஒரு சின்ன சச்சரவின் போது த்ரிஷா ஜீவாவுக்கு சப்போர்ட்டாக பேசுவதும், ஓரிரு அக்கறையான விசாரிப்புகளும், அவர் மாடலாக மாறி ஒரு மாடர்ன் ட்ரெஸில் நடந்து வரும் போது ஜீவாவைப் பாதித்த த்ரிஷாவின் அழகும், ஒரு சின்ன முத்தமும் தான்… இவைதான்.. இவை மட்டும்தான் ஒட்டுமொத்தமாக ஜீவாவை மாற்றிவிடுகிறதாம்…. “எல்லாப் பெண்களும் அப்படியில்லை…” என்கின்ற ரீதியில் ஜீவா மாறியதாக அறிக்கைவிடும் போது… “எப்படியில்லை..” ”அதை எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்..” என்றே கேட்கத் தோன்றுகிறது..



இதுதவிர்த்து ஜீவா என்னும் கெளதமுக்கு, மற்றுமொரு குணாதிசய குறைபாடும் உண்டு.. அது தான் ஒரு கொள்கை வைத்திருந்தால், அது தவறு என்று தெரிந்தாலும் அந்தக் கொள்கையை மாற்றிக் கொள்வதை இழுக்காக நினைக்கக் கூடியவர் என்பது.. இப்படி ஒரு குணாதிசயம் இருப்பதே க்ளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சியில்தான் நமக்குத் தெரியவருகிறது… இது தவிர்த்து மருத்துவமனையில் நாசர், தன் மகனிடம் தனக்கு கேன்சர் இருப்பதை சொல்லக்கூடாது என்று சொல்லும் காட்சியெல்லாம் காமெடியின் உச்சம்… ஏற்கனவே ஜீவா, அப்பாவின் மீது வெறுப்பில் இருப்பவர்தான்… அப்பாவுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது தெரிந்தாலாவது அவர் தன் அப்பாவிடம் பேசுவதற்கான வாய்ப்பு உண்டு… இப்படியிருக்கின்ற பட்சத்தில் நாசர் அதை ஜீவாவிடம் இருந்து மறைத்துவிடுவதற்கான முகாந்திரம் என்ன என்பதும் நெருடுகிறது….

இப்படி கதையிலும் காட்சி அமைப்பிலும் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும், இவை அனைத்தையும் பெரிதாக வெளியே தெரியாமல் நீர்த்துப் போகச் செய்வது என்னவோ….? சந்தானத்தின் இயல்பான எதுகை மோனை நயத்துடன் கூடிய அந்த ட்ரேட் மார்க் காமெடிதான்… ட்ரெஸிங்க் ரூமில் ஒரு ப்ராவை எடுத்து அணிந்து கொண்டு அவர் தரும் விளம்பர அறிமுகத்தில் இருந்து எல்லாமே சூப்பர்… அதிலும், கல்யாணமானப் பின்பு, தன் மனைவி கடுமையான கோபத்தில் இரவு டிபனுக்கு ஒரு டம்ளர் விஷம் இருப்பதாகச் சொல்லும் இடத்தில் அவர் அடிக்கும் கவுண்டர் டயலாக் இருக்கின்றதே….!!!! க்ளாஸ்…!! இப்படி ஆங்காங்கே வசன நடையில் நம்மை வயப்படுத்தும் சந்தானம் மட்டுமே படத்தில் ஆறுதல்..

ஜீவாவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் தான்… ஆண்ட்ரியாவுடன் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கு நிற்கும் ஜீவாவை ரசிக்க முடிகிறது… தந்தையை எப்போதும் முறைத்தவாறு செல்வதும், கண்ணில் நீர் கோர்க்க.. அவரது கையைப் பற்றுவதுமாக நடிப்பில் வழக்கம் போல் ஜீவா குறை வைக்கவில்லை… சில காட்சிகள் மட்டுமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும், அப்படியே ஒரு மாடலின் எதிர்வினைகளை நிறுவும் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார்… ஆன்ட்ரியா த்ரிஷாவிற்கு பெரிதாக வேலை இல்லை… அழகாக இருக்கிறார்… க்ளைமாக்ஸ் நெருங்குகின்ற நேரத்தில் கிடைக்கின்ற கேப்பில் கச்சிதமாக நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்… வினய்….? என்ன சொல்வது..? சில இடங்களில் நடிப்பு பரவாயில்லை என்று சொல்லலாம்.. ஆனால் ஜீவாவின் முன்னால் அழுது கொண்டே “அப்பாட்ட பேசுடா…” என்று சொல்லும் இடத்தில் எல்லாம் இவரது நடிப்பை ஜீரணிக்கவே முடியவில்லை… உடம்பைக் குறைப்பதும் அவருக்கு நல்லது. நாசருக்கு மிக முக்கியமான ஆனால் வழக்கமான கதாபாத்திரம்.. ஃபாரின் செல்லும் மகனின் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்று த்ரிஷாவிடம் சொல்லி போன் பண்ணச் சொல்லி கெஞ்சும் இடத்தில் கலங்க வைக்கிறார்….



இசை ஹாரிஸ் ஜெயராஜ்…. பாடல்கள் ஒன்றிரண்டு நன்றாக இருந்தது… பிண்ணனி இசையில் ஸ்கோர் செய்வதற்கான திரைக்கதை இல்லை… ஏதோ ஒப்புக்கு இருந்தது பிண்ணனி இசை… மதியின் கேமராவில் ஜீவாவின் வீடும்.. அந்த ஃபாரின் லொகேஷன்களும் ஜில்… இயக்குநர் அஹமத்துக்கு இது முதல் படம்… காமெடியை நம்பி களம் இறங்கி இருப்பவர் கதையில் சற்று கோட்டை விட்டிருந்தாலும்… காமெடி அவரை கைகொடுத்து தூக்கி இருக்கிறது… இரண்டாம் பாதியில் படத்தின் முக்கிய பலமான காமெடி இல்லாமல் இருப்பதும்… இதுதான் நடக்கப்போகின்றது என்பதை ஆடியன்ஸ் யூகித்தப் பின்னரும், கதையை இழுப்பதோடு ஆடியன்ஸ் யூகித்த அதே விசயத்தை எந்தவிதமான வித்தியாசமும் இன்றி காட்டியிருப்பதும் சற்று சோர்வை ஏற்படுத்துகிறது… இரண்டாம் பாதியில் நீளத்தை சற்று குறைத்து இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்… நல்ல முயற்சி என்று சொல்வதற்கு இல்லை.. இருப்பினும் ஒரு எண்டர்டெயினராக ஏமாற்றம் தராத ஒரு படமாகவே இருக்கும்… க்ரிடிட்ஸ் கோஸ் டூ சந்தானம்… மொத்தத்தில் என்றென்றும் புன்னகையில் வழக்கமான புன்னகையை தவிர பெரிதாக வேறொன்றும் இல்லை…

Wednesday, 26 December 2012

நீதானே என் பொன் வசந்தம்:


வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த படம். பெரும்பாலும் கெளதம் படங்கள் மிகப்பெரிய கலை பொக்கிச படங்களாக இல்லாமல் இருந்தாலும் அவை எப்போதுமே என் மனதுக்கு சற்று நெருக்கமானதாகவே இருந்திருக்கின்றன. உதாரணமாக மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு விண்ணை தாண்டி வருவாயா, போன்ற படங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் விடுபட்ட பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் கூட குறைபாடு உள்ள படங்களாக தெரிந்ததில்லை..

கதை, வசனங்கள், வித்தியாசமான கேமரா ஆங்கிள், புதிய முயற்சியிலான கலர் டோன் இப்படி நம்மை கட்டிப் போடும் விசயங்கள் இருந்தாலும், அதையும் மீறி பெரும்பாலும் ஒரு பெண்ணின் நுணுக்கமான மன உணர்வுகளை பிசகாமல் பிரதிபலிக்கும் இவரகு பாங்கு என்னை மற்ற எல்லா அம்சங்களையும் மீறி ஆக்ரமித்துக் கொள்ளும்… அவை ஒரே மாதிரியான பாணியிலான கதைகளாகவே இருந்தாலும் (ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளவா வேண்டாமா…? என்கின்ற ஒரு உச்சகட்ட குழப்ப நிலையில் அந்த பெண் கதாபாத்திரங்கள் புனையப்பட்டிருக்கும்…) அவை என்னை எப்போதும் சளிப்படையவோ அல்லது அயர்ச்சி அடையவோ செய்ததே இல்லை… சில நேரங்களில் இவரது படத்தை பார்த்துவிட்டு எனது நண்பர்களுடன் இதில் எதெல்லாம் இவரது வாழ்வில் நடந்திருக்கும் என்று மிகவும் காரசாரமாக விவாதித்து அதை நிருபிக்கும் முயற்சி வரைக்கும் நான் சென்றிருக்கிறேன்….

உதாரணமாக விண்ணை தாண்டி வருவாயாவில் ஹீரோ ஒரு உதவி இயக்குநர், அவனது காதலி ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவும், வீட்டில் சம்மதிக்காத காரணத்தாலும் பிரிந்து செல்கிறார். இந்த ஹீரோவான உதவி இயக்குநர், இயக்குநராகும் தனது முயற்சியில் தனது காதல்கதையையே தன் முதல் படமாக எடுக்கிறார். ஆனால் அதில் தன் காதலி பிரிந்து செல்லாமல் தன்னை திருமணம் செய்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பார். அதை பார்க்க தற்போது திருமணம் ஆகி இருக்கும் தன் பழைய காதலி ஜெஸியை அழைத்து வருவார். படம் பார்த்த ஜெஸி அழுது கொண்டே கூறுவார்…. “என்ன அழ வைக்காத கார்த்திக், நான் ஒண்ணும் அவ்வளோ நல்லவ இல்லியே…. நாந்தா உன்ன விட்டு போய்ட்டேனே” அதே திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் திருமண கோலத்தில் இருக்கும் ஜெஸி, தன் காதலன் கார்த்திக்கின் நினைவால் திருமணத்தையே நிறுத்திவிடுவார்.

இப்போது அப்படியே கெளதமின் முதல் படத்திற்கு வாருங்கள்… “மின்னலே” இதில் க்ளைமாக்ஸ் காட்சியில் தனது திருமணத்தை நிறுத்தி விட்டு மாதவனுக்காக திரும்பி வருவார் ரீமாசென்… காதல் கைகூடிவிடும். இந்த மின்னலே என்கின்ற கெளதமின் முதல் படத்தை அவர் தன் காதலி (ஜெஸி=………………………………)க்கு காட்டி இருக்கலாம். அப்போது அவர் ஜெஸி கூறிய அதே வசனங்களை கூறி இருக்கலாம்.. “என்ன அழ வைக்காத கெளதம்.. நான் ஒண்ணும் அவ்ளோ நல்லவ இல்லையே… நாந்தா உன்னவிட்டு போய்ட்டேனே…” இப்படியெல்லாம் நான் வாதிட்டு இருக்கிறேன்… ஏனென்றால் இது போல் குழப்ப நிலையில் முடிவெடுக்க முடியாமல், சிறு சிறு சண்டைகளை மனதில் வைத்துக் கொண்டு வீம்பு செய்து கொண்டு தங்களையே தண்டித்துக் கொள்ளும் பெண்கள் எனக்கும் ஓரளவுக்கு பரிச்சயம். அவர்களது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை இவரது படங்களை விட வேறு எந்த படங்களும் தெள்ள தெளிவாக காட்டியதே இல்லை….

சரி… உனக்கு என்னாயிற்று.. நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு விமர்சனம் எழுதுறதா சொல்லிட்டு வேற எல்லா பட டயலாக்கையும் சொல்றீயேன்னு கேக்குறீங்களா…. அவுங்க பேசுன டயலாக் எல்லாம் இருக்கட்டும்…. நீதானே என் பொன் வசந்தம் பார்த்துவிட்டு நான் பேசிய டயலாக் என்ன தெரியுமா…. கண்களில் நீர் கோர்க்க…. “என்ன அழ வைச்சிட்டீங்களே கெளதம், நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லயே…, படம் வேணான்னு சொல்லிட்டு என்னால தியேட்டர விட்டும் போக முடியாதே…”

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லை… அதே காதல், அதே ஈகோ, அதே குழப்பம், கல்யாணத்தை நிறுத்தி க்ளைமாக்ஸ்….. இதில் புதியதாக நான்கு பருவ காதல். குழந்தை பருவம், பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை பார்க்கும் பருவம்.

இது ஏறத்தாழ விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் வைத்த பதிவுதான்… ஆனால் VTVல் இருந்த அந்த 
அற்புதமான காதல், அழகான ஆழமான வசனங்கள், காதலின் வலி, மொத்தத்தில் அந்த திரைக்கதைக்கான உயிர், இவை எதுவுமே இல்லாத வெற்று எழும்புகூடாகவே காட்சியளிக்கிறது இந்த நீதானே என் பொன் வசந்தம்….

பல இடங்களில் எனக்கு சந்தேகமாகவே இருந்தது… இது கெளதம் படம்தானா என்று… கதை, காதல், விஸ்வல், வசனம் என எதிலுமே அவரது சாயல் தெரியவில்லையே என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.. நண்பன் தான் தெளிவு படுத்தினான்… இது கெளதம் படம்தான்… ”நன்றாக பார்.. தமிழ் வசனங்களுக்கு இணையாக ஆங்கில வசனங்களும் வருகிறதே..” என்று.. நான் ஆமோதிக்க வேண்டியதாயிற்று…. கெளதம் வாசுதேவ் மேனனின் படம் என்பதற்கான ஒரே ஒரு அறிகுறியுடன் வந்திருக்கும் இந்த படம்தான் ”நீதானே என் பொன் வசந்தம்…”