Showing posts with label ராஜா ராணி விமர்சனம். Show all posts
Showing posts with label ராஜா ராணி விமர்சனம். Show all posts

Friday, 27 September 2013

ராஜா ராணி:

இயக்குநர் சங்கர் அவர்களின் அபிமான உதவி இயக்குநராக இருந்த அட்லியிடம் இருந்து வந்திருக்கும் முதல் திரைப்படம் இந்த ராஜா ராணி. டீசரிலேயே பக்காவாக முழுக்கதையையும் இயக்குநர் சொல்லிவிட்டார் என்றாலும் உங்களுக்காக ஒருமுறை.. காதல் தோல்வியின் முடிவில் விருப்பமில்லாத இரண்டு பேர், திருமணம் செய்து சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் வருகிறது. கல்யாணம் முடிந்த முதல்நாளே அவர்களுக்குள் முட்டிக் கொள்ள.. அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை..


மொத்தப்படத்திலேயே சுவாரஸ்யமான பகுதி என்றால் அது ஜெய்- நயன் காதல் எபிசோட் பகுதி தான். முருகதாஸ் புரொடக்‌ஷனிலும் ஏனோ ஏர்வாய்ஸ் கம்பெனியை விட மாட்டேன் என்கிறார்கள். ஏர்வாய்ஸ் கம்பெனி ஓனர் சூர்யாவுக்கும் அசினுக்குமான காதல் நினைவிருக்கிறதா..? அதை நினைவுபடுத்துவது போன்ற அதே சூட்டிகைத்தனம் நிறைந்த காதல் பகுதி.. கஸ்டமர் கேர் சர்வீசில் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் சூர்யாவான ஜெய் ஒரு பிரச்சனையின் முடிவில் நயனை நீ ஆம்பிளையா இருந்தா நேர்ல வா..? என்று பயந்தவாறே கேட்டுவிட்டு போனைக் கட் செய்யும் இடத்தில் ஜெய்யின் நடிப்பு உண்மையாகவே அட்டகாசம்… ”இந்த சேவைக்கு உங்களது மதிப்பெண்..” என்று அவரிடமே கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் போதும் அநாயசமாக சிரிக்க வைக்கிறார். அவருடைய ஹஸ்கி வாய்ஸ் அந்த கேரக்டரையே உயிர்ப்பிக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த காட்சிக்கே முத்தாரம் இட்டது போல் CEO வாக வரும் மனோபாலாவிடம் கஸ்டமர் சர்வீஸ் கேட்டு அவரது வாயை அடைக்கும் இடம் படு காமெடி. ஜெய் எனக்குத் தெரிந்து நன்றாக நடித்திருக்கும் படம் இதுதான். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் “போடா…” என்று ஆர்யாவை திட்டிவிட்டு செல்லும் போது காட்டும் பாடிலாங்க்வேஸ் ஆவ்சம். ஆனால் அவரது நடிப்பைத் தூக்கி சாப்பிடுவது போல் நயனின் நடிப்பு.. பிக்ஸ் வந்து தரையில் விழுந்து கண்கள் மேல் நோக்கி குத்திட்ட நிலையில் கைகளைப் போட்டு தரையில் அடிக்கின்ற இடத்தில் க்ளாஸ் ஆக்டிங். அது தவிர்த்து காருக்குள் இருந்து கொண்டே அழுத நிலையில் தன் தகப்பனிடம் மன்னிப்பு கேட்கும் இடம், ஆர்யாவை வெறுப்பேற்றும் இடத்தில் அவரது மேனரிசம், தன் தந்தையை அழைத்து “நீ சேவ் பண்ணிக்க.. நான் கல்யாணம் பண்ணிக்கிறே…” என்று கண்கலங்கும் இடம் என எல்லா இடங்களிலும் ஏ ஒன் ஆக்டிங்க்.. கங்க்ராட்ஸ்… நடிப்பைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காகவே அவரை பயன்படுத்தும் தமிழ்சினிமா கண்டிக்கத்தக்கது…


இதற்கு திருஷ்டி வைத்தாற் போல் உப்பு சப்பு இல்லாத, அதே குடி, கும்மாளம் கூத்தடங்கிய ஆர்யா சந்தானம் போர்ஷன். காற்றடைத்த பலூன் போல ஒன்றுமில்லாத காட்சிகளை அடுக்கி, ஜஸ்ட் லைக் தெட் திரைக்கதையை நகர்த்தி இருக்கும் அந்த இடம் பலவீனம். அதைக் கொஞ்சமேனும் உயிர்போடு வைத்திருப்பது நஸ்ரியாவின் சின்ன சின்ன க்யூட் எக்ஸ்பிரசனும் முக வசீகரமும்தான்… தெலுங்கின் ஆரவாரமான குத்துப்பாடலுக்கு அம்சமாக ஆடிக் கொண்டே அறிமுகம் ஆகும் அவர், ஹலோ பிரதர் என்று ஆர்யாவை அழைத்து வெறுப்பேற்றி, “பொறுக்கியாடா…? நீ என்று வெடித்து சிதறி, “எங்க அம்மா மடில நான் படுத்ததே கிடையாது.. படுத்துக்கவா…”என்று மடியில் படுத்து மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார் இந்த அழகி. ஆர்யா நடிப்பில் இன்னும் பல படிநிலைகளை கடந்து வர வேண்டுமோ என்று தோன்றுகிறது… பல இடங்களில் முகத்திலும் சரி குரலிலும் சரி ஒரே மாதிரியான எக்ஸ்பிரசன்.. ஒரே மாதிரியான டயலாக் டெலிவரி… மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவரது இடம் பறிபோவது உறுதி..


சந்தானத்தின் அதே ட்ரேட் மார்க் டைமிங் காமெடி சில இடங்களில் கை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த ப்ளாஸ்பேக் காட்சிகளில் சற்று அதிகமாகவே சிரிக்க வைக்கிறார்.. நான் கடவுள் ராஜேந்திரனுக்கு உண்மையாகவே ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்.. நிறைவாக செய்திருக்கிறார்.. இது தவிர்த்து வழக்கத்துக்கு மாறாக மிக அமைதியான அற்புதமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் சத்தியராஜ். தன் மகளை டார்லிங் என்று அவர் அழைப்பதும், நயன் அவரைப் பதிலுக்கு டார்லிங்க் என அழைப்பதும் தங்கள் சோகத்தை மறைத்துக் கொண்டு அவர்களை சந்தோசப்படுத்த நினைப்பதுமாக அந்த தகப்பன் – மகள் உறவு ஸ்கெட்சே செம்ம சார்ப்…


ஜி.வி பிரகாஷின் இசை பாடல்களைவிட பிண்ணனியில் சிறப்பாக இருந்ததாக உணர்கிறேன்.. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ஆரம்பத்தில் அந்த சர்ச் திருமணத்தில் தொடங்கி, SHOPPER STOP, CITY CENTER டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் என எல்லா இடங்களையும் துடைத்து வைத்த பளிங்கு போல் காட்டி ஒரு காஸ்ட்லியான லுக்கை எல்லாவிதமான ப்ரேமுக்கும் கொடுத்திருக்கிறது… சில இடங்களில் அந்த பளீச்னஸ் குறையாகத் தெரிந்தாலும் நைஸ் வொர்க்… ஆண்டனியின் ஒளிப்பதிவு வழக்கம் போல் துல்லியம்.. அதிலும் குறிப்பாக அந்த ஆக்சிடெண்ட் சீனைச் சொல்லலாம்… ஸ்மார்ட் வொர்க்… வாழ்த்துக்கள்..

இப்படி பாராட்ட பல விசயங்கள் இருந்தாலும் ஆங்காங்கே சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்றாக எனக்குப்படுவது காதல் தான் படத்தின் மைய ஆதாரம் என்று ஆனப்பின்னர் அதை இன்னும் சற்று உயிர்ப்போடு சொல்லி இருக்கலாம்… வழக்கமான காமெடி கலாட்டா வகை காதலாக இருப்பதால், அதற்குள் வலுவாக இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை என்னும் விசயம் இல்லாமல் போனது பெருங்குறை.. அதுபோல் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்வதென்பது யதேச்சையானதாக இல்லை.. அவர்கள் பட்டும் படாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது வெறுப்பு வருவதற்கான ஆரம்ப நிகழ்வாக ஏதேனும் ஒன்றை காட்டி இருக்கலாம்… அல்லது பெரும்பாலானோர் வாழ்க்கையில் நிகழும் காதலனை கணவனோடு ஒப்பிட்டு பார்க்கும் மனநிலையைக்கூட கையாண்டு இருக்கலாம்… அதைவிடுத்து படத்தில் வரும் அந்த முதல் 15 நிமிட காட்சிகள் வெறுப்பையே ஏற்படுத்துகின்றன.. மேலும் இரண்டு காதல் ஜோடிகளுமே காதலிக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் இடத்திலும், “நமக்கு பிடிச்சவுங்க போய்டாங்கங்கிறதால நாமளும் கூட போணும்னு இல்ல.. நம்ம வாழ்க்கை நமக்குப் பிடிச்ச மாதிரி மாறும்..” என்று சொல்கின்ற வசனம் நூல் பிடித்தாற் போல் எல்லா கதாபாத்திரமும் ஸ்ருதி மாறாமல் ஒப்பிக்கும் இடத்திலும் அங்கு கதாபாத்திரத்தை மீறி இயக்குநரே கண்ணுக்குத் தெரிகிறார்.. மேலும் ஆர்யாவின் குடும்பத்தை அவரது இரண்டாவது கல்யாணத்தின் போதாவது ஒப்புக்காக காட்டி இருக்கலாம்.. திருப்பங்கள் இல்லாத சுவாரஸ்யமில்லாத திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி, குடி கூத்து போன்றவற்றை நியாயப்படுத்துவது போல் வழுவாமல் பிடித்துக் கொண்டு வரும் பிடியை பல இடங்களில் தளர்த்தி இருக்கலாம். “காதல் தோல்விக்குப் பின்பும் காதலும் உண்டு வாழ்க்கையும் உண்டு..” என்னும் ராஜா ராணி திரைப்படம் சொல்ல வரும் இதே கருத்தை வெளிப்படையாக சொல்லாத இன்னொரு திரைப்படமான “விண்ணைத் தாண்டி வருவாயா..”வில் ஒரு யதார்த்தமான வாழ்க்கை அச்சு அசலாக இருக்கும்… ஒரு வாழ்வியல் இருக்கும்.. அதுவே அந்தப் படத்துக்கான கனத்தையும் கொடுக்கும்… ஆனால் அந்த யதார்த்தமான வாழ்க்கையும் வாழ்வியலும் இல்லாததால் படத்தில் வரும் பெரும்பாலான வளவளப்பான ப்ரேம்களைப் போல, திரைப்படமும் மனதில் எளிதில் வழுக்கிக் கொண்டு போகிறது…

இருப்பினும் இந்த காலகட்டத்தில் THERE IS A LOVE AFTER LOVE FAILURE, THERE IS A LIFE AFTER LOVE FAILURE என்னும் கனமான, யதார்த்தமான வரிகளை கதைக்களமாக எடுத்துக் கொண்டு அதை இன்றைய தலைமுறை மனதில் பதிய வைக்க முயன்ற அந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்… நயன் கூட சொல்லி இருந்தார் “எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகத்திறமையான இயக்குநர்… அட்லி” என்று… ஏனென்றால் அவரது வாழ்க்கைக்கும் அர்த்தம் கொடுக்கும் அற்புதமான வரிகளல்லவா… நம்மால் அந்த அளவுக்குப் பாராட்ட முடியாது என்றாலும், கண்டிப்பாக மறுதலிக்க முடியாத புறந்தள்ள முடியாத ஒரு நல்ல படைப்புதான் ராஜா ராணி என்றும், கவனிக்கத்தக்க, ஒரு முக்கியமான வரவுதான் இயக்குநர் அட்லி என்றும் பாராட்டலாம்….