என் நண்பன் ஒருவன் அவனது ஆறு வயது குழந்தைக்கு
இரவு நேரங்களில் தூங்க வைக்க கதை சொல்வதில் இருக்கின்ற சிக்கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்..
அவன் சொல்கின்ற சில அசுவாரஸ்யமான கதைகள் பெரும்பாலும் அவனது குழந்தைக்கு பிடிப்பதில்லையாம்..
தினமொரு கதை என்கின்ற ரீதியில் புதிதுபுதிதாக சொல்வதற்கு இவனது கற்பனை கங்கையும் கைகொடுக்க
வில்லையாம்… அதனால் தான் இப்போது தீவிரமாக குழந்தைக் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறான்…
அவனிடம் நான் ஒரு கதையை சிபாரிசு செய்து, அவனது குழந்தைக்கு கூறச் சொன்னேன்.. அவனும்
கதையைத் தொடங்கினான்… இப்படி
“அப்பாவ மாதிரியே கம்ப்யூட்டர் இஞ்சினியராக
இருக்குற நாலு ப்ரெண்ட்ஸ் இந்தியால இருக்கிற ஒரு காட்டுக்கு பிக்னிக் போறாங்க… அங்கு
ஒரு சித்தர் இருக்க, அவர்ட்ட வரம் கேக்குறாங்க… யாராவது ஒருத்தரோட வரத்த மட்டுந்தா
நிறைவேத்துவேன்னு அவரு சொல்றாரு.. அப்ப அந்த நாலு ப்ரெண்ட்ஸ்ல இருக்குற ஒரு சேட்டைக்காரப்
பையனுக்கு சித்தர் மேல நம்பிக்க இல்ல… அவர சோதிக்கிறதுக்காக நாலு மாசத்துக்கு அப்புறம்
வர்ற ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் வரக்கூடிய தினத்தந்தி பேப்பர் வேணும்னு கேக்குகிறான்…?”
”பேப்பர்தானப்பா கேக்குறாங்க..? இதுல என்ன
சோதிக்கிறாங்க…?”
”இல்லம்மா.. ஆயூதபூஜைக்கு லீவு விடுறதால,
அடுத்த நா தினத்தந்தி பேப்பர் வராதும்மா…”
”அப்ப பேப்பர சித்தர் குடுக்கலையாப்பா…?”
”இல்லம்மா… அவருதா.. சித்தர்ல.. அதனால பேப்பர
வரவச்சிக்குடுத்துட்டு மறைஞ்சிடுறாரு… ஆனா அந்த பேப்பர்ல.. அவுங்க வேல பாக்குற கம்பெனிய
மூடப் போறதா நீயூஸ் வந்திருக்கு… அதனால எல்லாருக்கும் வேல போயிடுமேன்னு பயப்படுறாங்க…”
”அச்சச்சோ…!! நீயும் கம்ப்யூட்டர் இஞ்சினியர்தான…
உன் கம்பெனியவும் மூடிட்டா..? உனக்கும் அதுமாதிரி வேல போயிடுமாப்பா…?”
”குறுக்க கேள்வி கேக்கக்கூடாதும்மா…? கதைய
கேளு… “ஆனா அவுங்க அத நம்பள… காட்டுல இருந்து கிளம்பி ஊருக்கு போய்டுறாங்க… அங்க போனா
உண்மைலயே அவுங்களுக்கு வேல போயிடுது.. அதுமட்டுமில்லாம அந்த பேப்பர்ல சொன்ன தேதிலலெல்லா,
மழை பெய்யுற அறிகுறியே இல்லாம இருந்தாலும், பேப்பர்ல சொன்னமாதிரியே ஆலங்கட்டி மழையெல்லா
பெய்யுது…. இன்னொரு நீயூஸ்ல இவுங்க நாலு பேரோட பேரும் வந்திருக்கு… அதுல இந்த நாலு
பேரோட உதவியால பீட்டர்ங்கிற ஆள் குத்துச்சண்ட போட்டியில பட்டம் ஜெயிச்சதோட, இரண்டு
கோடி ரூபா பரிசும் வின் பண்றதா போட்டுருக்கு…? இவுங்களுக்கு பயங்கர ஷாக்… பீட்டர் யாருன்னே
இவுங்களுக்கு தெரியாது… பீட்டர் யாருன்னு பாக்கப் போனா அவன் குத்துச்சண்டைனா என்னென்னே..
தெரியாத ஒரு ஆளு…!!!!”
”அவரு என்ன டாடி பண்ணிட்டு இருக்காரு….?”
”அவரு.. அவரு… டான்ஸ் ஆடிட்டு இருக்காரும்மா….”
”இல்லப்பா… அவுங்கெல்லா இஞ்சினியர்ல…. இவரு
அதுமாதிரி என்ன வேல பாக்குறாரு….?”
”இரும்மா.. குறுக்க குறுக்க பேசக்கூடாது…
அப்பாக்கு கத மறந்துரும்…. எங்க வுட்டே…”
”டான்ஸ் ஆடிட்டு இருந்தாரு…”
”ம்ம்ம்.. இருந்தாரா… அவரப் புடிச்சி எப்புடியாது
பாக்ஸரா மாத்த முயற்சி பண்றாங்க….”
”ஏன்ப்பா…?”
”அப்பத்தான அவரு ஜெயிப்பாரு…”
”பேப்பர்லதா வந்திருக்குல… அப்ப அவரு கண்டிப்பா
ஜெயிப்பாருல்ல…”
”ஆனா அவருதா பாக்ஸர் இல்லயே… அவர பாக்ஸர்
ஆக்குனா தான அவரு ஜெயிப்பாரு… இரண்டு கோடி ரூபா கிடைக்கும்…”
”இவுங்க எதுவும் செய்யாம, மழ மட்டும் அதுவா
பெஞ்சதுல்ல.. அப்ப இதுவும் அதுவா நடக்குமுல்ல.. அவுங்க ஏ கஷ்டப்படுறாங்க…”
”சீ… சும்மா… நொய்நொய்ன்னு….. அமைதியா கேளு…
அப்பா கதைய மறந்துருவே…”
”சரி… அப்புறம்…”.
”அப்புறம்…. ஆ… அவரு லவ் பண்ணாரு….”
”லவ் பண்ணாரா…? ஏன் பாக்ஸர் ஆகாம லவ் பண்றாரு….?”
”ஏன்…. ம்ம்ம்.. ஆஆஆ.. ஏன்னா அந்த பீட்டர்
அவரு லவ் பண்ற அக்கா இருக்காங்கல்ல… அவுங்க நல்லா வெள்ள வெளேர்ன்னு இருக்காங்களா… அதனால
லவ் பண்றாரு… லவ் பண்ணா… அந்த அக்காவுக்கு இந்த பீட்டர பிடிக்கவே இல்ல… பீட்டரு அந்த
அக்கா பின்னாடியே சுத்திட்டு இருக்காரு.. ”
”அவருக்கு வேற வேலயே கிடையாதா.. டாடி…?”
”இருக்கும்மா.. அதெல்லா பண்ணிட்டே… இதயும்
பண்ணிட்டு இருக்காரு.. ஆனா பாக்ஸர் ஆகுறதுக்கு ப்ராக்டீஸ்க்கு மட்டும் போல… இதப்பாத்த
அந்த நாலு ப்ரெண்ட்ஸும் இவனுக்கு லவ் சக்சஸ் ஆனாதா இவன் ப்ராக்டீஸ்க்கு வருவான்னுட்டு…
அவனுக்கு ஹெல்ப் பண்ண… அந்த அக்காவுக்கும் பீட்டர் மேல லவ் வந்துருது….”
”பாக்ஸிங்க் மேட்ச் எப்பப்பா வரும்…?”
”வரும்மா… பொறுமையா கதைய கேளு…”
”சரி… அந்த அக்காவுக்கு ஏன் லவ் வந்துச்சி….”
”ம்ம்ம்… அதுவந்து அந்த அக்கா பைக் ரிப்பேராகி
இருந்தப்ப… பீட்டருதா மெக்கானிக்கு கூட்டு வந்து சரி பண்ணி குடுத்தாரா… அதான்…. லவ்
வந்திருச்சி…”
”அப்ப.. ஹெல்ப் பண்ணா லவ் வருமாப்பா…..”
”அது எப்டிம்மா வரும்.. இது கதை.. சரியா…
லவ் வந்துருச்சா… அந்த அக்காவோட அப்பா என்ன சொன்னாரு… தெரியுமா…? பத்து திருக்குறள்
சொன்னாத்தா என் பொண்ண கல்யாணம் பண்ணிக்குடுப்பேன்னு சொன்னாரு…”
”எங்க க்ளாஸ்ல எல்லாருக்கும் பத்து திருக்குறள்
தெரியும்ப்பா…. ஆனா அந்த அக்காவோட அப்பா ஏன் இவ்ளோ ஈஸியா கொஸ்டீன் கேக்காரு….”
”ம்ம்ம்.. ஏன்னா அவரு தமிழ் வாத்தியாரு…”
”தமிழ் வாத்தியாருன்னா.. ஈஸியாத்தா கேள்வி
கேப்பாங்களாப்பா….”
”ஆமாம்மா… அப்புறம் பீட்டருக்கு திருக்குறள்
தெரியாதா… அதனால அந்த நாலு ப்ரெண்ட்ஸும் ஹெல்ப் பண்றாங்க….”
”அய்யய்யோ…!!! அவருக்கு திருக்குறளே தெரியாதாப்பா…
அவருக்கு என்ன தெரியும்ணு அந்த அக்கா லவ் பண்றாங்க…?”
”அதெல்லா…. எனக்குத் தெரியாதுமா… லவ் பண்றாங்க
அவ்ளோதா…”
”நீயும் பத்து திருக்குறள் சொன்னா என்ன கல்யாணம்
பண்ணிக் குடுத்திருவியாப்பா…?”
”இது கதம்மா….”
”போப்பா.. அன்னைக்கி மட்டும் கதைல வந்தது
மாதிரி பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்ன… இப்ப மட்டும் இது கதைங்கிற… அப்ப கதல உள்ளபடி
நா பண்ணவா… வேணாமா…”
”போனவாரம் சொன்ன கதப்படி பண்ணனும்… இந்த
கதப்படி கூடாது… சரியா… சரி.. இப்ப இவரு மேட்ச்ல கலந்துக்கப் போறாரு…. அங்க இன்னொரு
பீட்டர் இருக்காரு…. அவரு பெரிய பாக்சரு…. ஏகப்பட்ட சாம்பியன்சிப் ஜெயிச்சவரு… இப்ப
இந்த நாலு ப்ரெண்ட்சுக்கும் குழப்பம்… பேப்பர்ல போட்டுருந்த பீட்டரு… இந்த பீட்டரா…
அந்தப் பீட்டரான்னு….”
”முத சொன்ன பீட்டர்தாம்ப்பா…”
”எப்டி…?”
”ஆமா அவருக்கு தா பாக்ஸிங்னா என்னென்னே தெரியாது….
அவரு ஜெயிக்கதா ஹெல்ப் வேணும்…. இவருதா ஏற்கனவே நிறைய ஜெயிச்சார்ல.. இவருக்கு எதுக்கு
அவுங்களோட ஹெல்ப்….”
”ஆமால்ல… சரி… ஆனா அவுங்களுக்கு குழப்பம்…
ஏன்னா… அவுங்க உன்ன மாதிரி பிரில்லியண்ட் கிடையாது பாரு…. இவுங்களுக்கு இப்டி குழப்பம்
இருக்கும் போதே… இவுங்களோட பீட்டரு…. லீக் போட்டிலெல்லா ஜெயிச்சி பைனல் வந்திருறாரு….”
”அவருக்குதா பாக்ஸிங் தெரியாதே…? அவரு ப்ராக்டீசும்
போல… பின்ன எப்டி…?”
”அது அப்டிதாம்மா… பைனல் வந்திருறாரு…. வந்தா
எதுக்க மோத வேண்டிய இன்னொரு ஆளு அந்த பீட்டரு…. அந்த பீட்டரு… நம்ம பீட்டர்ட்ட போட்டிக்கு
முன்னாடியே என்ன சொல்றாரு தெரியுமா…? போட்டி நடக்குற ரிங்குல உன்ன அடிச்சே நா கொன்னுடுறேங்கிறாரு…
பயந்து போன நம்ம பீட்டரு.. நா பாக்ஸர் கிடையாது…. என் லவ்வர்ட்ட நல்ல பேரு வாங்கிறதுக்கா…
அப்டி நடிச்சே… இந்த ஒரு போட்டில என்ன ஜெயிக்கவிடுங்கன்னு கேக்குறாரு…. அவரு முடியாதுன்னு
சொல்லிடுறாரு… பைனல் மேட்ச்ல அந்தப் பீட்டர நம்ம பீட்டரு அடிஅடின்னு அடிச்சிட்டு நா
உனக்கு விட்டுத்தாரே… நீ உன் லவ்வர எனக்கு விட்டுத்தாரீயான்னு கேக்குறாரு… உடனே நம்ம
பீட்டருக்கு கோபம் வந்து அடிஅடின்னு அந்த பீட்டர அடிச்சி ஜெயிச்சிடுறாரு…. எப்டி கத….”
க்க்க்க்குர்… குர்கொர்…கொர்….கொர்…..க்க்கொர்…..
”ஓ… தூங்கிட்டியாடா… செல்லம்….”
இப்படி, குழந்தைகளிடம் சொல்வதற்குக்கூட கதைகள்
இல்லாத அளவுக்கு நம் வாழ்க்கை நம்மிடம் கற்பனை வறட்சியை உண்டாக்கி இருக்கிறது… ஏன்
என்று யோசித்தால், ஒருவேளை குழந்தைகளுக்கு சொல்லவேண்டிய கதைகள் எல்லாம் பெரியவர்களுக்கான
கதைகளாக மாறி பிறழ்சுழற்சி அடைந்துவிட்டது தான் காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது..
மேற்சொன்னபடி குழந்தையை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட இல்லாத ஒரு கதையாடல், மூத்தகுடிகளின்
களிப்பிற்கான கதைக்களனாக மாறிநிற்கும் முரண்நகை காலத்தின் கொடுமை…
அதுசரி… இந்த மான் கராத்தேக்கும் முந்தைய
பத்திகளுக்கும் என்ன சம்பந்தம்…? இருக்கிறது… முன்பே சொன்னேன் அல்லவா… குழந்தைகளுக்கான
இரவுநேர தூக்க கதைகள் எல்லாம் பெரியவர்களுக்கான கதைகளாக மாறிவிட்டது என்று, அதற்கான
சமீபத்திய உதாரணம் தான் இந்த மான் கராத்தே.. தமிழ் பேரினத்தின் ஆறிலிருந்து அறுபது
வரையுள்ள பெருங்குழந்தைகளை எல்லாம் அற்ப தூக்கத்திலேயே ஆழ்ந்திருக்கச் செய்யும் அற்புதமான
ஆவணப் படைப்பு தான் இந்த ”மான் கராத்தே..” ஏன் இவ்வளவு காட்டமான வார்த்தை ஜோடைனைகள்…?
என்றால், என்ன செய்ய, காட்டத்தை காட்டாமல் இருக்க முடியவில்லை… திரைப்படங்கள் கேளிக்கையின்,
நகைச்சுவையின் பொழுதுபோக்கின் ஒரு வடிகாலாக இருப்பது பெரும்பிழையா என்று கேட்டால்…?
இல்லை கண்டிப்பாக இல்லை என்பதே என் பதில்.. ஆனால் நம் வாழ்க்கையின் கேளிக்கை மற்றும்
நகைச்சுவையின் வடிகாலாக திரைப்படம் மட்டுமே இருக்கின்றது என்பது தான் பெரும் பிழை..
திரைப்படம், அரசியல் இந்த இரண்டுமே நம் சமூகத்தின் சமகால மக்களின் அறியாமையை பயன்படுத்தி
காசு பார்க்கும் பொருளாக மாறிவிட்டது.. என்ன செய்ய..?
மேலே என் நண்பன் தன் மகளுக்கு சொன்ன கதைதான்…
இம்மிகூட பிசகாமல் மான் கராத்தேவின் கதை… என்ன நடந்தாலும் “ஏன்” என்று கேட்டுப் பழகு…
என்று சொன்ன பெரியாரின் வழி வந்த நம் தமிழ் சமூகம் தான் இன்று “அது இது எது” என்று
எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் சிவகார்த்திகேயனின் சிரிப்பலைகளில் சிக்கி சீரழிந்து
போக தயாராக காத்துக் கொண்டிருக்கிறது… 24 மணி நேரமும் திறந்திருக்கும் படி ஒரு டாஸ்மாக்
கடை கேட்கும் அவரது விண்ணப்ப பாடலுக்கு விண்ணதிர கரகோஷம் கொடுக்கிறது…. பெண்களை ஆண்களுக்கேயான
தனியுடைமை சொத்துக்கள்… அவர்களை இன்னொருவன் உன்னிடம் இருந்து கவர்ந்து கொள்ள முயன்றால்,
மட்டும் உன் கண்ணியம் தளர்த்தி, நீ கோபம் காட்டு, கொலை செய்… இளைஞனான உனக்கு காதலில்
ஜெயிப்பதை தவிர வேறு எண்ணம் இருக்கவே கூடாது, பெண்கள் காதலை கலட்டிவிட பொய் சொல்பவர்கள்,
ஆண்கள் பொய் சொல்லியாவது காதல் கைகூட முயற்சிப்பவர்கள் என்கின்ற ரீதியில் இவர்கள் தொன்றுதொட்டு
தூவி வரும் நஞ்சுக்கு மான் கராத்தே மயிலிறகு வீசுகிறது…. முதல்பாதியாவது ஏதாவது ஒப்பேத்துகிறார்கள்….
இரண்டாம் பாதியின் இழுவை இந்தியன் ரயில்வே தண்டவாளத்தை விட நீள…ம்.
கதையின் கரு என்று பார்த்தால், மிகவும் சுவாரஸ்யமான
ஒரு கதைக்கரு… ஆனால் அதையும் வழக்கமான காதல் சாயம் பூசி, ஹீரோயிச வேசம் இட்டு கருக்கலைப்பு
செய்துவிட்டார்கள்… நான் கூட முதல் பத்து நிமிடங்களில், கதைவேறு ஏ.ஆர்.முருகதாஸின்
கதை என்பதாலும், ஐடி நிறுவனங்கள் மூடப்படுவதால் வேலை இழக்கும் இளைஞர்களிடம் இருந்து
கதை தொடங்குவதாலும், உலகமயமாக்களின் அழிவைச் சொல்லும் படமோ என்று அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு
விட்டேன்… உணர்ச்சிவசப்படுதல் குற்றத்தின் ஆரம்பம் தானே… அதற்கான தண்டனையையும் அனுபவித்தேன்…
தனிப்பட்ட நபர்களின் உழைப்பு என்று பார்த்தால்,
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார்
இவர்களின் உழைப்பைப் பற்றி நிச்சயம் சொல்லலாம்…. சிவகார்த்திகேயன் நடனங்களில் காட்டும்
அங்க அசைவுகளும், வேகமும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது… அதுபோலத்தான் அவரது
வழக்கமான பாடி லாங்க்வேஜ் மேனரிசங்களும், ஆனால் உருக்கமான நடிப்பு என்பது மனிதருக்குள்
இன்னும் உருப்பெறவே இல்லை என்பதற்கு இவர் வில்லனின் காலில் விழுந்து அழும் அந்த காட்சியே
சாட்சி… மனிதர் கதாபாத்திரத்துக்கு மட்டும் தேவையான பீட்டரிசங்களை கடைபிடித்து, தனிப்பட்ட
மனிதருக்கான பீட்டரிசங்களை கைவிடுவது அவரது வளர்ச்சிக்கு நலம் பயக்கும்…. ஐந்தாவது
படத்திலேயே ஓபனிங்க் சாங்க் என வேறு தளத்தை நோக்கி நகல முற்படுவது தெரிகிறது… ஹன்சிகாவின்
முகத்தில் ஏக தெளிச்சி… பாடல்களிலும் இந்த அம்மணி காட்டும் முக குறிப்புணர்ச்சிகள்
வசீகரிக்கின்றது… அனிருத்தின் இசையில் பாடல்கள் எல்லாமே தாளம் போடவைக்கின்றன…. இளைய
சமுதாயத்தின் இதயத்துடிப்பை அறிந்த இசையமைப்பாளர்.. ஆனால் பிண்ணனி இசையில் இரைச்சல்
தான் அதிகம்…. மைனா சுகுமாரின் கேமரா பிண்ணனியில் எல்லாமே கதையின் காட்சியை கெடுத்துவிடாத
அழகு.. அதுபோல் சதீசின் காமெடிகள் கொஞ்சம் புத்துணர்ச்சி தருகிறது…
மொத்தத்தில் இந்த மான் கராத்தே, கேள்வி கேட்கவோ
யோசிக்கவோ திராணியில்லாத, அல்லது அதுபோன்ற ஆபாசங்களை அடியோடு வெறுக்கின்ற ஆறிலிருந்து
அறுபது வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான கூத்து….
நல்ல விமர்சனம்...
ReplyDeleteமிக்க நன்றி...
DeleteVimarsanathil ungal karpanai valam migavum arumai. Nalla muyarchi.. Sir, english padangallaye romba logic miss aaguthu..Pona pogattum...entertainment aa irukulla... adhu podhum sir oru comedy padathhuku..
ReplyDeletesuperrrrrr
ReplyDelete