Saturday 22 March 2014

கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம்:

நாளை (அதாவது இன்று 23.03.14) செங்கல்பட்டிலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் தண்டரை என்ற இடத்தில், பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒருங்கிணைக்கும் “கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம்” காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடக்க இருக்கிறது.. அதில் பார்வையாளனாக நானும் கலந்து கொள்ள இருக்கிறேன்.. ஐந்து சிறுகதைகள் தமிழ்மொழி இலக்கியத்தில் இருந்தும், ஆறு சிறுகதைகள் உலக இலக்கியத்தில் இருந்தும் விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவரது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்… அந்த சிறுகதைகளை எங்கு சென்று படிக்கலாம் என்பதற்கு ஏதுவாக.. அந்தக் கதைகள் பிரசுரமாகியிருக்கும் வலைதளத்தின் சுட்டிகளையும் இணைத்துள்ளார்…

அதில் சில சிறுகதைகளைப் படித்தேன்… மிக அற்புதமான சிறுகதைகள்.. அதிலும் குறிப்பாக தமிழில் திலீப்குமார் எழுதிய மூங்கில் குறுத்து, மற்றும் ஜி.நாகராஜனின் ”துக்க விசாரணை” இரண்டும் ரொம்பவே பிடித்தது.. புதுமைபித்தன் அவர்களின் “காஞ்சனை” இன்னும் படிக்கவில்லை.. அதுபோல் உலக இலக்கிய சிறுகதைகளில் ”லெனினை வாங்குதல்” சிறுகதையும் அரசியல் பகடி செய்யும் ”பழுப்புக் காலை” சிறுகதையும் மிகச்சிறப்பாக இருந்தன… பிற சிறுகதைகளின் அடர்த்தியையும் உள்ளீடுகளையும் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தது.. குறிப்பாக “யாருக்கும் வேண்டாத கண்” மற்றும் ”இருபதாவது பிறந்த நாளில் அவள்” ”நதியின் மூன்றாவது கரை” இந்த மூன்றையும் சொல்லலாம்… ஆனால் அவை மூன்றுமே முக்கியமான சிறுகதைகளாக தெரிகின்றன.. நாளை நடக்கவிருக்கும் அச்சிறுகதை பற்றிய விவாதங்கள் அவற்றை சரியாக புரிந்து கொள்ள வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது…

வாசகர்களும் முடிந்தால் கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்ற அந்த சிறுகதைகளை முதலிலேயே படித்துவிடுங்கள்… முகாம் முடிந்த பின்பு அங்கு அந்த குறிப்பிட்ட சிறுகதைகளை ஒட்டி நடைபெற்ற விவாதங்களை நான் பதிவிடும் போது அது உங்களுக்கும் சிறுகதைகளை புரிந்து கொள்ள இன்னும் அதிகமாக உதவும் என்று நம்புகிறேன்.. அதுமட்டுமின்றி அதில் இருக்கும் சில உரலிகளைக் கொண்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நீங்கள் தமிழ் மற்றும் பிற மொழியில் வெளியாகி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் நல்ல சிறுகதைகளையும் வாசித்து பயனடையலாம்…



No comments:

Post a Comment