Tuesday 11 March 2014

நிமிர்ந்து நில்:

சமுத்திரக்கனியை எனக்கு ஒரு இயக்குநராக பிடிப்பதைவிட, நடிகராக அதிகம் பிடிக்கும்.. மிகவும் உணர்ச்சிவசப்படுபவனாக நான் இருந்த காலகட்டத்தில் எனக்கு நாடோடிகள் திரைப்படத்தையும் மிகவும் பிடித்திருந்தது… இப்பொழுது பிடிக்கும் அவ்வளவே… மேலும் தனிப்பட்ட மனிதராகவும் நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களை வைத்தும் அவரை எனக்குப் பிடிக்கும்.. அதுபோலத்தான் சில கொள்கை ரீதியிலான அவரது கருத்துக்களும்… எனக்கு உவப்பானதே… இது சமுத்திரக்கனி தொடர்பான விமர்சனமா.. இல்லை சமுத்திரக்கனியின் “நிமிர்ந்து நில்” தொடர்பான விமர்சனமா என்று நீங்கள் குழம்பவேண்டாம்.. ஒரு நல்ல நடிகராகவும், ஒரு நல்ல சகமனிதராகவும் என்னை ஈர்த்திருக்கும் சமுத்திரக்கனி அவர்கள் ஒரு நல்ல இயக்குநராக என்னை நிமிர்ந்து நில் பார்ப்பதற்கு முன்பும் ஈர்க்கவில்லை… நிமிர்ந்து நில் பார்த்தப் பின்னரும் ஈர்க்கவில்லை..


நிமிர்ந்து நில் திரைப்படத்தின் கதையை நான் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே யோசித்திருந்தேன்… ஒரே ஒரு சின்ன மாற்றம்… என் கதையில் நீயா நானா கோபிக்கு பதிலாக அரட்டை அரங்கம் விசு அவர்கள் இருந்தார்கள்… பின்பு சில ஆண்டுகள் கழித்து அந்நியன் வந்ததர்க்குப் பிறகு லஞ்சம் வளர்வதற்கு முக்கியமான காரணம் நாமும் தான் என்பதில் ஓரளவுக்கு சமாதானம் ஆகி, இனி இந்தக் கதைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று பரணில் தூக்கிப் போட்டதாக ஞாபகம்… அப்போதே நான் தூக்கிப் போட்ட கதையை, இவர் இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், எப்படித்தான் இவர் இயக்குநராக என்னை ஈர்ப்பார்….

நிமிர்ந்து நில்லின் கதையென்னவென்றால், ஒரு வரியில் சொல்லக்கூடிய ஆனால் ஒரு யுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய லஞ்சம் தான் கதை… ஆகம விதிகளையும் ஒழுக்கத்தையும் அறத்தையும் கூடவே கல்வியையும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு குருகுலத்தில் இருந்து கல்வி கற்று பட்டமும் பெற்று வெளிவருகிறார் நாயகன்… இங்கு வந்து பார்த்தால் அவர் நினைத்தது போல் எதுவுமே இல்லை…. யாரும் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை… யாருக்கும் ஒழுக்கம் இல்லை… எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஸ்டேசனுக்குள்ளயே கைதிகளுக்கு வார்டனே கஞ்சா கொடுக்கிறார்.. ட்ராபிக் போலீஸ் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி லஞ்சம் வாங்குகிறார்… பஸ்சுக்குள் ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான்… அவனைத் துரத்திப் பிடிக்கும் நாயகனை போலீஸ் பிடித்துவிட்டு, திருடனை தப்பவிடுகிறது… அவன் நா அடிக்கிற காசுல பாதி அவுங்களுக்குத்தான் என்று ஊருக்கே கேப்பது போல செய்தி ஒளிபரப்பு செய்துவிட்டுப் போகிறான்… இது போதாதென்று நீதிபதியை கரெக்ட் செய்து கேஸில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்துக்குள்ளே ஒரு புரோக்கர் இருக்கிறான்… இதெல்லாம் கண்டு கொதிக்கும் நாயகன் மேலிடத்துக்கு ஒரு மெய்ல் தட்ட… அவர்கள் அத்தனை பேருக்கும் மெமோ கிடைக்கிறது… அவர்கள் அந்தக் கடுப்பில் ஹீரோவை மொத்தி எடுக்க… நாயகியும் நண்பனும் ஊருக்குள் இருக்கும் ஒரே ஒரு நல்ல வக்கீலும் அவனுக்கு ஊரின் இன்றைய நடப்பைப் பற்றி வகுப்பெடுக்க…. அதை நன்றாக காது கொடுத்துக்கேட்கும் கதாநாயகன், இப்போது என்ன செய்கிறேன் பாருங்கள் என்று அவர்களின் காதுக்குள் கிசுகிசுக்க…. பயந்து, மிரண்டு, கலங்கிப் போகும் நாயகி நான் இதுக்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்.. நீ அப்படி செய்யக்கூடாது என நாயகனிடம் கெஞ்ச… நாயகனோ கோபமாக நாயகிக்கு டாடா காட்டிவிடுகிறார்….


நாமும் பலேபலே…. மிக அற்புதமாக ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள்… இனிதான் படம் சூடுபிடிக்கப் போகிறது… என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், சம்மட்டியைக் கொண்டு இவர்கள் அடிக்கின்ற அடியில் மண்டையில் தான் சூடுபிடிக்கிறது…. இதில் வரும் நாயகனின் கதாபாத்திரம் அந்நியன் அம்பியின் கதாபாத்திரத்தின் தழுவல் போல் தெரிகிறது… அது போல மையக்கதையும், அந்த மையத்தை இவர்கள் தொடுவதற்கு அமைத்திருக்கும் திரைக்கதையும் முறையே அந்நியன், ரமணா மற்றும் சிட்டிசன் ஆகியவற்றின் தழுவல்கள்… இதைப் பற்றியெல்லாம் அவர்கள் விவாதித்திருக்கவே மாட்டார்களா…? மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. அல்லது அவர்கள் அப்படங்களில் சொன்னதை தாண்டி ஏதேனும் ஒரு விசயமாவது சொல்ல வேண்டும்.. அதுவும் இல்லை….


இதுபோக நாயகன் படிக்கும் அந்த குருகுலம் என்ன விண்வெளியில் இருக்கிறதா…? அல்லது வியாழன் கிரகத்தில் இருக்கிறதா…? பட்டப் படிப்பு வரை படித்திருக்கும் அவன் ஊருக்குள் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு ஒரு பத்திரிக்கை கூட படிப்பதில்லையா…? அல்லது ஒரு டிவி செய்தியைக் கூடப் பார்த்ததில்லையா…? அதில் ஏதேனும் ஒன்றைப் பார்த்திருந்தாலே உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்திருக்குமே..!! மேலும் நாயகன் குருகுலத்தில் இருந்து வெளியில் வந்து சில நாட்களிலேயே நடப்பு நிகழ்வை ஜீரணிக்க முடியாமல் திகைக்கிறானா..? அல்லது ஆற அமர ஆறுமாத காலங்கள் கழிந்தப் பின்னர் திடீரென பொங்குகிறானா..? ஏனென்றால் நாயகி நாயகனை ஆறுமாதமாக பின்தொடர்பவள்.. அல்லது ஒரு மூன்று ரூபாய் தினசரி பேப்பர் கூட நுழைய முடியாத குருகுலத்தில், நாயகி நுழைந்து அங்கிருந்தே பின் தொடர்வதை தொடங்கிவிட்டாளா…?

இதுபோக நடுரோட்டில் சட்டை கிழிந்த நிலையில் நாயகன் தன் குரு நாசர் அவர்களிடம் போன் செய்து ஒரு கேள்வி கேட்பாரே…? ”அப்ப என்ன விபச்சாரம் பண்ணச் சொல்றீங்களா…? சார்….” இந்த இடத்தில் இயக்குநர் அவர்களே நீங்கள் விபச்சாரத்தை கேவலப்படுத்துகிறீர்களா…? அல்லது உங்களது நாயக பிம்பத்தைப் போல் கற்பனையில் வாழாமல், ஹீரோயிசம் செய்துகாட்டி ஜெயிக்க திராணி இல்லாமல், மிகச் சாதாரணமான யதார்த்த வாழ்க்கை வாழும் சாமானிய மக்களை கேவலப்படுத்துகிறீர்களா…? மிகுந்த எரிச்சலை ஏற்படுத்திய காட்சி அது….

நல்ல விசயங்களும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன… சில அற்புதமான வசனங்கள், இது தவிர்த்து ஒரு போலி பத்திரத்தை தயாரிப்பு செய்வதற்கு காட்டப்படும் தத்ரூபமான முஸ்தீபு வேலைகள்… நீதிமன்றத்தில் ஜெயம் ரவி, சூரியையும், அமலா பாலையும் மாட்டிவிடுவது, முதல் பாதியில் சூரி அமலா பால் இருவரும் பேசிக் கொள்ளும் தொணி, முதல் பாதியில் அமலாவின் துறுதுறுப்பான நடிப்பு, இப்படி ஈர்ப்புக்கான விசயங்களும் இருக்கத்தான் செய்கின்றன… இருந்தாலும் ஏகப்பட்ட எதிர்மறையான கருத்துக்கு இடையில் இவை புதைந்துகிடப்பதால் வெளியே தெரியாமல் போய்விடுகின்றன… பாவம் ஜெயம் ரவி… இயக்குநரிடம் தன்னை அப்படியே ஒப்படைத்துவிடும் ஒரு நடிகர்… இருப்பினும் அவருக்கு வரிசையாக திரைப்படங்கள் தோல்வி அடைவது காலக்கொடுமை… இவர் தவிற கோபிநாத், சரத்குமார், ராகினி திரிவேதி, ஞானசம்பந்தன், படவா கோபி என்று ஒர் பெரிய பட்டாளமே படத்தில் இருக்கிறது…. ஆனால் அவர்களுக்கான தேவையென்ன என்பது தான் புரியவில்லை..

சில தவறான கருத்துக்களைக் உள்ளடக்கமாகக் கொண்டு, கேளிக்கை நோக்கோடு எடுக்கப்படும் திரைப்படங்களான கோலி சோடா, சூதுகவ்வும் மாதிரியான திரைப்படங்கள் கூட கேள்வி கேட்பதற்கும், குற்றம் சாட்டுவதற்கும் கொஞ்சம் கூட இடம்கொடுக்காமல் திரைக்கலைக்கான ஆளுமையோடு எடுக்கப்படும் போது, நல்ல கருத்துள்ள, மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையையும், நாட்டின் நடப்பியல் பிரச்சனைகளையும் பற்றி பேசக்கூடிய நிமிர்ந்து நில் மாதிரியான திரைப்படங்கள் பொத்தாம் பொதுவாகவும், ஏகப்பட்ட குறைகளோடும், எந்தவிதமான திரைக்கலை ஆளுமையும் இல்லாமல் எடுக்கப்படுவதை பார்க்கும் போது கொஞ்சம் எரிச்சலாகவும், மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது…. இயக்குநர் சொல்ல வரும் விசயத்தில் எனக்கு ஒத்திசைவும் உடன்பாடும் இருந்தாலும், அதை சொல்லிய விதத்தில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை….


நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அவர்கள் சொல்ல வருகின்ற கரு… நாம் நம் வாழ்நாளில் பலமுறை கண்டும் கடந்தும் வந்து கொண்டிருக்கின்ற யதார்த்தமான, உண்மையான பிரச்சனை…. ஆனால் அந்தப் பிரச்சனையையும் அதற்கான தீர்வையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையோடு பிணைத்துச் சொல்லாமல், புனைவு கலந்து, ஹீரோயிசம் கலந்து காதல் கலந்து, வலிய திணிக்கப்பட்ட சோகம் கலந்து கொடுத்திருக்கிறார்கள்…. அதனால் தான் இத்திரைப்படத்தை ஒரு பேண்டஸி வகை சினிமாவாகவும் அணுக முடியவில்லை.. ஒரு யதார்த்த சினிமாவாகவும் அணுக முடியவில்லை…

ஆனாலும் மக்களே ஈசாப்பின் நீதிக்கதைகளை நாம் படித்திருக்கிறோம் தானே… ஆரம்பிக்கும் போதே அதன் முடிவு நமக்குத் தெரிந்திருக்கும் தானே… இருப்பினும் அது போன்ற நீதிக்கதைகளை நாம் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது மட்டுமில்லாமல், நம் வருங்கால சந்ததிக்கும் அந்த நீதி போதனைகளை கடத்த வேண்டியதன் அவசியத்தையும் தேவையையும் நாம் உணர்ந்து தானே இருக்கிறோம்; அது போலத் தான் இந்த ”நிமிர்ந்து நில்” ஒரு நீதிக் கதை போல… ஆரம்பத்திலேயே அதன் முடிவு தெரிந்தும் விடுகிறது… திரைப்படமாக பல குறைகளும் இருக்கிறது… இருப்பினும் சில விசயங்களை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்க்கும், அதை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்குமான வெளி இத்திரைப்படத்தில் இருக்கிறது…. அவர்களது எண்ணம் தூய்மையானது… அதற்காக நாம் ஒரு நூறு ரூபாய் செலவளித்து கண்டிப்பாக கொஞ்சம் பொறுமைகாத்து இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்… தப்பே இல்லை….

No comments:

Post a Comment