Sunday 23 November 2014

வன்மம் :


படத்தின் ட்ரைலரை பார்த்த எல்லோருமே கதையை ஓரளவுக்காவது ஊகித்திருப்பீர்கள்.. இரண்டே இரண்டு காட்சிகளில் உங்களுக்கு ட்ரைலரையும் அதனோடு சேர்ந்து, படத்தின் கதையையும் விளக்க முயற்சிக்கிறேன்… முதல் காட்சி பைக்கிள் ஜாலியாக ஆடல் பாடலுடன் இறுக கட்டிக்கொண்டு செல்லும் இரண்டு நண்பர்கள்… அடுத்த காட்சி இரண்டு நண்பர்களும் எதிரும் புதிருமாக நடந்து வர இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடியே கடந்து செல்லும் காட்சி.. கதை புரிந்ததா…?? இல்லையா..?? என்ன மக்களே..!!?? சரி உங்களுக்காக இன்னும் இரண்டு க்ளு.. மூன்றாவது காட்சி.. இரண்டு நண்பர்களும் எதிரெதிர் திசையில் நிற்க.. அவர்கள் இருவரையும் ஆளுக்கு ஐந்து பேர் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்க.. கையில் சாணம் புடித்து பொலிவேற்றப்பட்ட அரிவாளை வைத்திருக்கும் ஒரு நண்பன் மூன்றாவது நண்பனைப் பார்த்து “ டே உன்ன வெட்டாம விடமாட்டேண்டா..” என்கிறான்.. கட்ட கடைசியாக ஒரே ஒரு க்ளு.. படத்தின் பெயர் “வன்மம்” கதை புரிந்ததா மக்களே…!!!!????


சரி.. வன்மம். அருஞ்சொற்பொருள் கூறுக.. ஒருவரால் பாதிக்கப்பட்ட அல்லது அசிங்கப்படுத்தப்பட்ட அல்லது காயப்படுத்தப்பட்ட அல்லது தோற்கடிக்கப்பட்ட மற்றொருவர் அந்த நபருக்கு தெரிந்தபடியோ அல்லது தெரியாதபடியோ மனதிற்குள்ளாகவோ அல்லது வெளிப்படையாகவோ பகைமையை கொண்டிருப்பது வன்மம்.. மிக நீண்ட அருஞ்சொற்பொருள் தான்… இருந்தாலும் மறந்துவிடாதீர்கள்.. இப்படி ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் வன்மத்தை அவர் எதிர்பாராத தருணத்தில் தக்க சமயம் பார்த்து வெளிப்படுத்தி தன் பகைமையை தீர்த்து கொள்வது நம் பண்பாட்டு வழக்கப்படி வன்மம். அப்படித்தானே.. சரி இப்போது இந்த வன்மம் என்ற தலைப்பின் பொருளுக்கும் திரைப்படத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்..

முதல் பாராவின் விதிப்படி, இரண்டு நண்பர்கள்… அவர்கள் இருவரும் விரோதிகளாக மாறிவிடுகிறார்கள்.. இந்த வளர்சிதை மாற்றத்துக்கு ஊடாக ஏதோ நடந்திருக்க வேண்டும்.. ஆக நடந்தது என்ன..?? கட்டி வைக்கப்பட்ட உங்கள் கற்பனை குதிரையின் கயிற்றை அவிழ்த்து அதை கொஞ்சம் ஓடவிடுங்கள்…. ரொம்ப தூரம் ஓடிவிடப் போகிறது.. இந்த பாராவின் முடிவில் மறக்காமல் மீண்டும் கட்டிப்போட்டுவிடுங்கள்.. ஓகே… ஓடவிடலாமா…?? சரி என்ன நடந்திருக்கும்.. நண்பர்கள் எதிரிகளாக ஆகியிருக்கிறார்கள்.. அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்திருக்கலாம்.. தனக்கு கிடைக்க வேண்டிய வேலை அவனுக்கு கிடைத்துவிட்டதால் பிரச்சனை, தன் வீட்டு நிலத்தை அவன் அபகரித்துக் கொண்டதால் பிரச்சனை, பொய் சொல்லியதால் பிரச்சனை, பொய் சொல்லாததால் பிரச்சனை, நம்பியதால் பிரச்சனை, நம்பாததால் பிரச்சனை, நம்பிக்கை துரோகத்தால் பிரச்சனை, பன்னாட்டு கம்பெனிகளை ஆதரித்ததால் பிரச்சனை, ஈழத்தை ஆதரிக்காததால் பிரச்சனை, மின்வெட்டால் பிரச்சனை, காவிரி, முல்லைக்கு ஆதரவாக பேசாததால் பிரச்சனை, விஜய் அஜித் ரசிகர்களாக இருந்ததால் பிரச்சனை, காதல் பிரச்சனை, காம பிரச்சனை, கலர் பிரச்சனை, பணப் பிரச்சனை, பதவி பிரச்சனை, படப் பிரச்சனை, பரிசு பிரச்சனை, பணிவு பிரச்சனை, பயம் பிரச்சனை, சாதிப் பிரச்சனை, சமயப் பிரச்சனை, சாமியார் பிரச்சனை, சாவதில் பிரச்சனை, வாழ்வதில் பிரச்சனை, வயிற்றுப் பிரச்சனை, வசதி பிரச்சனை, ஸ்டேட்டஸ் பார்த்ததில் பிரச்சனை, ஸ்டேட்டஸ் போட்டதில் பிரச்சனை… லைக்ஸ் பிரச்சனை, லைப் பிரச்சனை, அம்மாடி.. போதும் போதும் போதும்…… களைப்பாக இறுக்கிறது… கட்டிப் போடுங்கள் நம் கற்பனை குதிரைகளை…

ஆக இத்தனை பிரச்சனைகள் இருக்கலாம்…  இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால், காதல் பிரச்சனை தான்.. ஒரு வேளை இவன் காதலித்த பெண்ணையே அவனும் காதலித்திருப்பானோ..?? ஏனென்றால் படத்தில் இரண்டு நாயகர்கள் ஒரே ஒரு நாயகி.. நாம் சந்தேகம் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.. ஆனால் படத்தின் இயக்குநர் செல்வராகவன் இல்லையே… வேறு ஏதோ பேர் சொன்னார்கள்.. ஒரு வேளை நண்பனின் தங்கையை காதலித்திருப்பானோ… படத்தில் சசிக்குமாரும் இல்லை… பிரசாந்த்தின் பீரியடும் முடிந்துவிட்டதே… ஆக அதுவும் இல்லை.. பின்பு என்ன..?? ரொம்ப யோசிக்க வேண்டாம்.. காதல் பிரச்சனைதான்… ஆனால் காதலால் வந்த பிரச்சனை அல்ல… காதலுக்கு காவலாக இருந்ததால் வந்த பிரச்சனை.. நண்பன் கிருஷ்ணா மற்றும் சுனைனாவின் காதலுக்கு நண்பன் விஜய் சேதுபதி துணை.. சுனைனாவின் அண்ணன் அரிவாளைத் தூக்கிக் கொண்டு கிருஷ்ணாவை வெட்ட வர… அதிலிருந்து நண்பனை காக்க வந்த விஜய் சேதுபதி, எதிர்பாராத விதமாக சுனைனாவின் அண்ணன் சாவிற்கு காரணமாகிறார்… இது ஊரில் யாருக்குமே தெரியாது…. இவர்கள் இருவர், அது தவிர்த்து இன்னும் மூவர்… இவர்களுக்கு மட்டுமே தெரியும்… ஆனால் யாருமே அதை வெளியே சொல்லப் போவதில்லை… ஆக தன் உயிரைக் காக்க கொலையே செய்த நண்பன் மீது பாசம் கூடதானே வேண்டும்.. அப்படி ஆகாமல் ஏன் நட்பு முறிந்தது… மீண்டும் நண்பர்கள் சேர்ந்தார்களா…?? விஜய் சேதுபதி கொலை செய்ததை மற்றவர்கள் அறிந்தார்களா..?? இதெல்லாம் மீதிக் கதை…

(எனக்கு மேற்சொன்ன வரிகளை எழுதும் போது, ஏனோ ஐயா திரைப்படமும் நினைவுக்கு வருகிறது…) இப்படி செல்லும் கதையோட்டத்தில் சேதுபதி கிருஷ்ணா மீது கோபம் கொள்வதற்கு இருக்கும் நியாய தர்மங்களில், ஒரு சதவீதம் கூட கிருஷ்ணா சேதுபதி மீது கோபம் கொள்வதில் இல்லை என்பதே படத்தின் மிகப்பெரிய குறை.. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும், என்பதற்க்கு ஏற்ப, அவர்கள் நட்பை கொல்லும் ஒரு வார்த்தையை செல்லத்துரையாக வரும் கிருஷ்ணாவே கூறிவிட்டு, ராதாகிருஷ்ணனாக வரும் விஜய் சேதுபதியை தன் எதிரியாக அவனே பாவித்துக் கொள்ளும் இடத்தில் தலைகுப்புற கவிழ்கிறது திரைக்கதை.. இந்த இடத்தில் மேற்சொன்ன அருஞ்சொற்பொருளின் படி, கிருஷ்ணா சேதுபதியின் மீது வன்மம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்க.. இருந்தாலும் படத்தின் பெயர் வன்மம் தான்.. தன் காதலியை கைப்பிடிக்க.. தன் காதலி குடும்பத்தின் எதிரி குடும்பத்துடன் கைகோர்ப்பது தான் நல்லது என்று கிருஷ்ணா நம்பலாம்… புத்தியுள்ள எந்தப் பார்வையாளனும் அதை நம்ப மாட்டான் என்பதை ஏனோ இயக்குநர் யோசிக்கவே இல்லை போலும்…

மற்றொன்று இதுபோன்ற நண்பர்கள் நிமித்த கதைகளில், எங்கு நண்பர்கள் பிரிகிறார்கள் என்கின்ற காட்சிபடிவத்தை காட்டுகிறோமோ, அப்போதே பார்வையாளன் கடகடவென பல காட்சிபடிவங்களை கருத்தியல் ரீதியாக கடந்து, இறுதியில் அவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்கின்ற கடைசி காட்சிப்படிவத்தை அடைந்து அங்கு காத்திருக்கத் தொடங்கிவிடுவான்… அவன் கடகடவென கடந்து செல்லும் காட்சிப்படிவங்களை எல்லாம், இயக்குநர் கற்பனைநயத்துடனோ அல்லது கலைரசனையுடனோ கடந்துவந்து கடைசி காட்சியை அடைந்தால் மட்டுமே அவனது காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்ததாக அவன் ஆசுவாசம் அடைவான்… அப்படி இல்லாமல் இயக்குநர் அந்த காட்சிகளை எல்லாம் கரடுமுரடான கற்பனை வறட்சியுடன், கச்சடாக்களை கொண்டு கடந்துவந்தால், ஏற்கனவே அங்கு இயக்குநரின் வருகைக்காக காத்திருக்கும் பார்வையாளன் இயக்குநரையும் திரைப்படத்தையும் வரவேற்பது பரிகாசமான புன்னகையுடனும் கேலியுடனும் தான்…. கடைசிக் காட்சியில் சேதுபதியும், கிருஷ்ணாவும் சேர்ந்துவிட்டு சிரிக்கும் காட்சியில் பரிசாக கிடைப்பது அந்த பரிகாசமான புன்னகை தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்..

ஒரு திரைப்படம் ஒன்று கேளிக்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்… இல்லை கேள்வி ஞானத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும்… ஆனால் திரைப்படம் பெரும்பாலான இடங்களில் கேலிக்கு உகந்ததாக மட்டுமே இருக்கிறது.. அதுவும் இன்றி முரட்டுத்தனமான மூர்க்கத்தையும், கொலை வெறி கொண்டு அலையும் குருட்டுத்தன்மை கொண்ட பரிதவிக்கும் மனதையுமே பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த திரைப்படம் எதனைச் சொல்ல வருகிறது என்கின்ற கேள்விக்கு எதிர்மறை தன்மையான பதிலே கிடைக்கிறது… கதையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு ஏற்படும் உளச்சிக்கல் தான் பிரதானமான அம்சமாக இருந்தாலும், அதை முன்னிலை படுத்துவது போல் காட்சிகளை அமைக்காததால், அந்த அம்சமும் எந்தவிதமான கவன ஈர்ப்பையும் சேகரிக்காமல் கடந்து சென்றுவிடுகிறது… தான் கொலை செய்த நபரின் வீட்டில் உள்ள நபர்களை பாதுகாக்க நினைக்கும் ஒருவன் என்பதே அந்த அம்சம்… மேலோட்டமாக பார்த்தால் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்படமும் இதே உணர்வைதான் மிக அற்புதமாக திரைப்படுத்திக் காட்டியது.. ஆனால் வன்மம் அதில் சறுக்கி இருக்கிறது… சேதுபதியின் சிறப்பான நடிப்பு.. குமரி மாவட்டத்து பேச்சு வழக்கை சிறப்பாக கொண்டு வந்திருப்பது, குலம் சார்ந்த சம்பிரதாயங்கள் மற்றும் அதன் வாழ்விடம் சார்ந்த பதிவுகளை சிறப்பாக பட்டியலிட்டு இருப்பது போன்றவை பாராட்ட வேண்டிய அம்சங்கள்…..

மொத்தத்தில் இந்த வன்மம் ஒரு முட்டாள்தனமான, முரட்டுத்தனமான மூர்க்கத்தனமான மனங்களை வணிகத்திற்காக சந்தைப்படுத்தி இருக்கும் திரைப்படம்… மற்றபடி இதைப் பார்த்து புரியவோ தெளியவோ, மகிழவோ இந்த திரைப்படத்தில் எதுவுமே இல்லை என்பது உண்மை.. அதே நேரம் விஜய் சேதுபதியின் கதாபாத்திர அம்சத்திற்காக ஒரு முறை பார்க்கலாம் என்றாலும், இந்த வன்மத்தில் வறட்சி அதிகம்….







No comments:

Post a Comment