Wednesday 12 November 2014

பூஜை:

இன்றைய மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு இயந்திரத்தனமாக, வேகமாக மாறிவிட்டது என்பதை ஒப்புமைப்படுத்திக் கூறுவதற்கு இயக்குநர் ஹரியின் திரைப்படங்கள் நல்ல எ.கா.வாக இருக்கும் என்று நம்புகிறேன்… ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசிப்பதற்கோ, ஒரு அழகான விசயத்தை ரசிப்பதற்கோ, மனம் உருகுவதற்கோ, மனம் விட்டு அழுவதற்கோ, நம் கோபங்களை தணித்து நம்மை சாந்தப்படுத்திக் கொள்வதற்கோ எதற்குமே இங்கு நேரம் இல்லாமல் பரபரவென்று ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய மனிதனின் வாழ்க்கை.. ஹரியின் திரைப்படங்களும் அப்படித்தான்… திரைப்படத்தின் காட்சிக் கோர்வைகளுக்குள் எதற்குமே நேரம் இருக்காது.. கதைமாந்தர்களும் யோசிக்க முடியாது, பார்வையாளனும் யோசிக்க முடியாது.. காதல் கனிந்து விட்டதா…?? உடனே கையை பிடித்துக் கொண்டு ஓடு, டூயட் பாட…. காதல் கசந்து விட்டதா…?? உடனே கையை உதறிக் கொண்டு ஓடு சோக கீதம் இசைக்க…?? அம்மா வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டாளா…?? உடனே வெளியேறு வீட்டை விட்டு, உன்னை ஒருவன் அடித்துவிட்டு அவமானப்படுத்திவிட்டு செல்கிறானா…?? யோசிக்காதே உடனே ஓடிச் சென்று அவன் கையை வெட்டு….. இப்படி எதைப்பற்றியும் யோசிக்காமல், நீயூட்டனின் மூன்றாம் விதியின்படி உடனுக்குடன் எதிர்வினை இருந்து கொண்டே இருந்தால் அந்த திரைப்படம் ஹரியின் திரைப்படம் என்று கண்களை மூடிக் கொண்டு சொல்லலாம்…


ஹரியின் திரைப்பட வரலாற்றில் பெரும்பாலும் ஒரே பார்முலா தான்…. அவரது திரைப்படங்களில் தமிழ், கோவில் என்ற இரண்டு திரைப்படங்களைத் தவிர்த்து பிற திரைப்படங்களான சாமி, அருள், சிங்கம், தாமிரபரணி, வேல், ஆறு, சேவல், பூஜை என எல்லாவற்றிலும் ஒரே கதைதான்…. நாயகனுக்கு வேலை வில்லனை ஜெயிப்பது, நாயகிக்கு வேலை நாயகனை காதலிப்பது, நாயகன் ரவுடியாக இருப்பான், சில படங்களில் போலீஸாக இருப்பான், சில படங்களில் பெரிய இடத்துப் பிள்ளையாக இருப்பான்… பெரும்பாலும் கதாநாயகனின் கதாபாத்திரத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் சுற்றி சுற்றி இவைகளுக்கு உள்ளாகவேதான் இருக்கும்… பெரும்பாலும் உச்சகட்ட காட்சியான க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஒன்று வில்லனை நாயகன் கொன்றுவிடுவான்… அல்லது வில்லன் திருந்திவிடுவான்…. அதுபோலத்தான் முதல் பத்தியில் சொல்லியபடி காதல் சக்சஸா… அப்ப டூயட், காதல் தோல்வியா அப்ப சோலோ சாங்க், அம்மா திட்டிவிட்டாளா..?? வீட்டை விட்டு வெளியேறு… பிறகு அவர்கள் ஒரே அழுகாச்சி வடித்து வீட்டுக்கு கூப்பிடுகிறார்களா..?? வந்து சேர்ந்துகொள் என்பதும் கூட அச்சரம் பிசகாமல் அப்படியே இவரது படங்களில் இருக்கும்…. இவரது இந்தப் படத்தின் ஒருவரிக் கதை அல்ல.. எல்லாப் படத்து ஒருவரிக் கதையும் இதுதான்….. “ நல்லது ஜெயிக்கும், கெட்டது தோற்கும்..”

இந்த ஆரம்பகால அடிப்படை ஆகம விதிகளைத்தான் பெரும்பாலும் இவரது படங்கள் எடுத்து இயம்பும்…. அதற்கு அடுத்த வகையறாக்களான எது நல்லது எது கெட்டது என்கின்ற நுட்பமான கேள்விகளுக்கெல்லாம் இவரது திரைப்படங்களில் எந்த வேலையுமே இல்லை… இந்த ஆகம விதிகளுக்கும், ஒருவரிக் கதைக்கும் எந்தவித சேதாரமும் இல்லாமல் மீண்டும் ஒருமுறை வார்க்கப்பட்டிருக்கும் அச்சுரு தான் இந்த பூஜை… வழக்கம் போல பெரிய வீட்டுப் பிள்ளைதான் நாயகன்… தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார்.. வீட்டை விட்டு வெளியே வந்தவர், காதலியுடன் டூயட் பாடிக் கொண்டே தவறுகளை தட்டிக் கேட்டுக் கொண்டு இருக்க, இவர் குடும்பத்தில் ஒரு பிரச்சனை… அதே நேரம் நாயகன் மேல் தவறு இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும் குடும்பம் அவரை வீட்டுக்கு அழைக்க…. வீட்டுக்குள் நுழையும் விஷால் பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பதே மிச்சம் மீதிக் கதை…

ஹரியின் திரைப்படங்களை என்னைப் பொறுத்தவரையில் இரண்டு வகையாக வகைப்படுத்துவேன்… ஒன்று, அது சூதாட்ட வகை திரைப்படங்கள் என்று சொல்லலாம்… ஏனென்றால் சூதாட்டத்தின் இறுதியில் ஒன்றுமே கிடைக்காது என்பதைப் போல், இவரின் திரைப்படங்களை பார்த்து முடித்தப் பின்னர் நமக்கு என்ன கிடைத்தது என்று கேட்டால், ஒன்றுமேயில்லை என்பது தான் நம் பதிலாக இருக்கும்.. ஆனால் அந்த சூதாட்டம் ஆடப்படும் சூது நிமிடங்களின் போது இருக்கும் ஒரு பரபரப்பும், சுவாரஸ்யமும் பெரும்பாலும் இவரது திரைப்படங்களில் இருந்து கொண்டே இருக்கும்… பலவீனமான இருதயம் இருப்பவர்களுக்கெல்லாம் இவரது படங்கள் உகந்தவையல்ல என்றே எண்ணுகிறேன்… இவரது படங்களை சூதாட்டத்தோடு ஒப்பிட்டதால், இவரது படங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை கொண்டிருப்பதாக நான் சொல்லவருகிறேன் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்… அப்படி என்றால் இவரது திரைப்படங்களை எப்படி எடுத்துக் கொள்வது என்பதனை எனது இரண்டாவது வகைமை இன்னும் தெளிவாக உணர்த்தும் என்று நம்புகிறேன்..

நான் படித்த பள்ளி ஒரு கிறிஸ்துவ மிஷினரியின் ஆளுமையின் கீழ் இயங்கும் பள்ளி.. அங்கு கிறிஸ்துவ திருநாள் தோறும் ஆலயங்களில் தேவதுதி பாடல்கள் பாடச் சொல்லி நாங்கள் பணிக்கப்படுவோம்.. அதில் எனக்கு எப்போதும் பிடித்தமான ஒரு பாடல் உண்டு… “ பிரியமானவனே..” என்று தொடங்கும் அந்தப் பாடலில் ஒரு வரி வரும்…. “ ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்…. ஒழுங்கின்படி ஓடு மகனே…” என்று… இயக்குநர் ஹரியின் படங்கள் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த வரிகள் நினைவுக்கு வரும்… ஆம்… என்னைப் பொறுத்தவரை ஹரியின் திரைப்படங்களுக்கான இரண்டாவது வகைப்பாடு அவை “ ஒழுங்கின்படி ஓடப்படும் ஓட்டப்பந்தயம்..” என்பதே…. ஓட்டப்பந்தயத்தின் சிறப்பே யார் முந்துகிறார்கள் என்பது தானே… இவரது ஓட்டப்பந்தயத்தில் ஒரு கட்டத்தில் நாயகன் முந்துவான், மறுகட்டத்தில் வில்லன் முந்துவார்…. இப்படி மாறி மாறி நடக்க இறுதியில் நாயகன் ஜெயித்திடுவான்…. அந்த ஒழுங்கின்படி என்கின்ற வார்த்தைக்கும் இவரது படங்களில் அர்த்தம் இருக்கும்… தவறான விசயங்கள் போதிக்கப்படாது.. தண்ணியடிப்பது, தம் அடிப்பது, பெரியவர்களை கிண்டல் செய்வது, பெண்களை கேலி செய்வது, ஓடிப் போய் திருமணம் செய்வது, பெற்றோர்களை மரியாதை இல்லாமல் பேசுவது இப்படி வேல்யூ எஜுகேசனில் நாம் படித்த எல்லா வேல்யூஸையும் மதிப்பதைப் போல் தான் படக்காட்சிகள் இருக்கும்… ஆனால் அதீத அடிதடி வன்முறை இருப்பது போல் தோற்றம் இருக்கும்…. ஆனால் அந்த அதீத வன்முறை, அடிதடி இரண்டுமே ”தர்மத்தின் தலை காக்கத்தான்” என்பதே இயக்குநரின் தெளிவுரையாக இருக்கும்…. ( ஏற்கனவே சொல்லியது போல் எது தர்மம் எது அதர்மம் என்கின்ற நுண்ணிய கேள்விக்கெல்லாம் இங்கு இடமில்லை என்பதையும் நினைவில் கொள்க…)

ஆக இதுவும் வழக்கமான ஹரியின் மசாலா ஓட்டப்பந்தயம் தான்… ஓட்டப்பந்தயத்தின் ஓடும் நேர திக்திக் பரபரப்பு உண்டு, உணர்ச்சி வேகத்தில் ஆர்பரிக்கும் ஆரவாரம் உண்டு, ஆள் உயர பனைமரம் உண்டு, அது வழக்கம் போல் சாய்வதும் உண்டு, செல்போன், சிம்கார்டு சர்ச்சிங்க், டாட்டா சுமோ சேசிங், வீச்சரிவாள் விரட்டு, கோயில் திருவிழா, கூட்டம் கூட்டமாக சொந்த பந்தங்கள் என எல்லாமே உண்டு.. விஷாலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான படமா என்று சொல்லத் தெரியவில்லை… அழகாக இருக்கிறார் ஸ்ருதி என்று வேண்டுமானால் சொல்லலாம்… அழகாக நடிக்கிறார் என்றோ, அழகாக பேசுகிறார் என்றோ சொல்ல ஆசையாக இருக்கிறது…. ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா என்றுதான் தெரியவில்லை… சூரியும் பாண்டியும் சேர்ந்து அடிக்கும் இரண்டாம் பாதி காமெடியெல்லாம் சகிக்கவே முடியவில்லை… யுவனின் இசையில் எந்தப் பாடலுமே தேறவில்லை.. இயக்குநரின் ஆஸ்தான கேமராமேனின் ப்ரியனின் ஒளிப்பதிவில் ஆயிரத்துக்கும் அதிகமான ஷாட்களை அடுக்கி இருப்பார்களோ என்று அஞ்சப்படுகிறது… எடிட்டர் வி.டி விஜயனின் கத்தரிக்கு ஏகப்பட்ட வெட்டு வேலைகள் இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது…


ஆக பூஜை இயக்குநர் ஹரியின் பரபர திரைக்கதையில் எங்குமே நிற்காமல் வழக்கம் போல ஒழுங்கின்படி ஓடும் ஒரு ஓட்டப்பந்தயம் தான்….. ஓட்டப்பந்தயத்தின் பரபர நிமிடங்கள் ஆங்காங்கே உண்டு… ஆனாலும் ஒரு சந்தேகம்…!!?? ஓட்டப்பந்தயம் ஓடுபவர்களுக்கு நல்லது….. அதனைப் பார்ப்பவர்களுக்கு….??????

No comments:

Post a Comment