Friday 4 July 2014

அரிமா நம்பி:

ஏ.ஆர்.முருகதாஸின் பள்ளிப் பட்டறையில் இருந்து பாலபாடங்களைக் கற்றுக் கொண்டு வந்திருக்கும் உதவி இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல்படம் அரிமா நம்பி.. இதன் ட்ரைலர் அழுத்தமில்லாத காட்சிகளைக் கொண்ட கோர்வையாய் இருந்ததும், பொண்ணு கண்ணு, கத்தி என்று மூன்றுக்கும் ஒரே மாதிரியான உணர்ச்சிகளைக் கொட்டி நடித்துச் சென்ற விக்ரம் பிரபுவை பார்க்க நேர்ந்ததும், படத்தின் மீது மிகப்பெரிய அபிப்பிராயம் ஏற்படவிடாமல் தடுத்துவிட்டது…. இருப்பினும் வேறொரு காரணத்துக்காக இத்திரைப்படத்தை முதல் நாளே பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.. ஆனால் ட்ரைலரில் இல்லாத ஒரு வேகத்தைக் திரைப்படத்தில் கொடுத்து அரிமா நம்பி அதன் மீதான நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டது..


கதையென்று பார்த்தால் மிக ஸ்பெசலான கதை என்றெல்லாம் ஒன்றும் இல்லை.. வழக்கம் போல ஒரு சாதாரணனாக அல்லது நாயகியின் காதலனாக வலம் வரும் நாயகன், ஒரு அசாதாரணமான அதிகாரம் படைத்த ஒரு மனிதனை எதிர்த்து தன் காதலியை எப்படி மீட்டுக் கொண்டான் என்பது தான் கதை.. இங்கு ஸ்பெசலாக இருப்பது திரைக்கதை ட்ரீட்மெண்ட் தான்… பழக்கப்பட்ட பாதையிலேயே திரைக்கதை பயணித்தாலும், அதை சுவாரஸ்யமான நிமிடங்களாக மாற்றுவது, ஆங்காங்கே நாயகன் எடுக்கும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் தான்… ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இருக்கலாமோ என்ற தோற்றத்துடன் ஆரம்ப நிமிடங்களில் பரிமளிக்கும் திரைப்படம் சில நிமிடங்கள் கழித்து தன்னை ஒரு ஆக்சன் த்ரில்லராக நிறுவிக் கொள்கிறது..

அர்ஜூனாக விக்ரம் பிரபு, அனாமிகாவாக ப்ரியா ஆனந்த்… இருவருக்கும் இடையேயான ஆரம்ப நிமிடங்களிலேயே இருவரும் ஈர்க்கப்பட்டு, தத்தம் செல்போன் நம்பர்களை மாற்றிக் கொள்ளும் பக்கா சினிமா க்ளிசேக்களை அதிக நேரங்களுக்கு கடத்தாமல், அதற்கு டைட்டில் கார்டிலேயே ஒரு எண்டிங்க் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, தேவையற்ற அலுப்பு தோன்றுவதை ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கிறது… அது தவிர்த்து அர்ஜூனாக வரும் விக்ரம் பிரபு, அருள்தாஸ் அண்ட் கோ-வை தொடர்ந்து சென்று அந்த வங்கியில் புரியும் எதிர்பாராத நடவடிக்கைகள், க்ளைமாக்ஸ் காட்சியின் போது போலீஸின் கவனத்தை திசை திருப்ப விக்ரம் பிரபு செய்கின்ற சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் என இவைதான் படத்தின் ஒட்டு மொத்தமான பலம் என்று நான் கருதுகிறேன்…

மேலும் சில நேரங்களே வந்து சென்றாலும், கான்ஸ்டேபிள் ஆறுமுகமாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் அந்தக் கேரக்டர் பேக்கேஜ் ஆச்சரியம் அளிக்கக் கூடிய பேக்கேஜ்… தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயன்பாடுகளை ஒரு குற்றவாளியின் தேடலின் போது, போலீஸாரும் அரசியல்வாதிகளும் எப்படி எல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள் என்பது தொடர்பான டீடெய்லிங்க் எல்லாம் திரைப்படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றது.. ப்ரியா ஆனந்தின் அரைகுறை ஆடைகளில் தெரியும் அப்பழுக்கற்ற அழகும், அவரது கொஞ்சலான சிணுங்கல்களும் அவ்வபோது வந்து செல்லும் ரிலாக்சேஷன் பீரியட்ஸ்… அதிலும் ஒரு டின்னரிலேயே ஒரு பையனை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கு அவர் சொல்லும் விளக்கவுரையை பல இளைஞர்கள் இனி கடைபிடிக்கக் கூடும்…


இப்படி படத்தில் பாராட்டுவதற்கு நல்ல நல்ல விசயங்கள் சில இருந்தாலும், குறைகளும் அதற்கு ஈடுகொடுப்பது போல் இருக்கின்றது… அதில் மிக முக்கியமான மைனஸாக நான் நினைப்பது லாஜிக் மிஸ்டேக்குகள்… விக்ரம் பிரபு ஹீரோ என்பதாலேயே மிகச் சுலபமாக பல விசயங்களை சாதித்துக் கொள்வதைப் போல் பல இடங்களில், சப்-இன்ஸ்பெக்டரின் மரணம், ஒரு டிவி உரிமையாளரின் மரணம், அவரது உதவியாளரின் தற்கொலை இப்படி கண்டுகொள்ளாமல் விடப்படும் சம்பவங்களும், துப்பாக்கி சண்டைக்கு நடுவே, எந்தவித பதட்டமும் இல்லாமல் பலூன் பறக்கவிட்டுக் கொண்டு செல்லும் சிறுவர்களும், அந்த முக்கியமான வீடியோ பதிவை ஏன் வெளிவிடாமல் டிவி நிறுவனத்தினர் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணம் இல்லாமல் இருப்பது, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருக்கும் டிவி அதிபர், பஞ்சாயத்து தலைவரைப் போல வெறும் நான்கைந்து அடியாட்களை மட்டும் வைத்துக் கொண்டு வலம் வரும் உள்துறை மந்திரி, ஊர் முழுவதும் போலீஸ் இவர்கள் இருவரை தேடிக் கொண்டிருக்க.. இவர்கள் இருவரும் வெகு இயல்பாக வெளியே வலம் வருவது என ஏகத்துக்கு லாஜிக்குகள் உதைக்கின்றன..

இதுதவிர்த்து முதல் பாதியில் இருந்த வேகம், இதுதான் கதை என்று இரண்டாம் பாதியில் தெரிந்தவுடன் பாதியளவுக்கு குறைந்து விடுகிறது…. இது தவிர்த்து அப்பா இறந்து விட்டார் என்று தெரிந்த இரண்டே மணி நேரத்தில் வரும் டூயட் பாடல் மற்றும் பிற பாடல்கள் என எல்லாமே படத்துக்கு மிகப் பெரிய வேகத்தடை… அதுபோல இரண்டாம் பாதியின் நீளமும் சற்றே அதிகம்… அந்தக் க்ளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்பது தெரிந்த பிறகும் படம் அடுத்தும் பத்து நிமிடங்களுக்கு நீடிப்பது எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தாததோடு, இது போன்ற பல ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான படங்கள் தமிழிலேயே டஜன் கணக்கில் இருப்பதால், இது புது விதமான ட்ரீட்மெண்ட் என்ற எண்ணத்தையும் அந்த காட்சியமைப்புகள் மாற்றிவிடுகிறது…


ஆர்.டி..ராஜசேகரின் கேமராவின் ஒளிச்சேர்க்கையில் ஒவ்வொரு ப்ரேமும் அத்தனை அழகு.. வெகு நாட்களுக்குப் பிறகு அவரது ஒளிவண்ணத்தை காண நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம்… இசை ட்ரம்ஸ் சிவமணி… இசையிலும் சரி, பிண்ணனியிலும் சரி ட்ரம்ஸ்களின் ஆதிக்கம் அதிகம்… அது சில இடங்களில் பொருந்திப் போனாலும், எல்லா இடங்களிலும் பொருந்தவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.. படத்தின் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை இவைகளை விடவும் அந்த தீம் மியூசிக் இசை ஆக்ரமிப்பு செய்கிறது என்பதே உண்மை..


இது இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு முதல் படம்… முதல் படத்திலேயே மேக்கிங் மற்றும் திரைக்கதை இவற்றின் மூலம் தன்னுடைய குருவின் சிஷ்ய பிள்ளைகள் எளிதாக சோடை போய்விடமாட்டார்கள் என்பதை நிருபித்திருக்கிறார்… இருப்பினும் மேற்சொன்ன சில குறைகளை இனி வரும் காலங்களில் அவர் தவிர்த்தால், அவருடைய படங்கள் இதைவிட தரத்தில் இன்னும் உயர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை…. மொத்தத்தில் அரிமா நம்பி மிக அற்புதமான காண்பனுபவத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், அந்த இரண்டே கால் மணிநேரங்களில் பெரும்பாலும் நம்மை ஏமாற்றுவதில்லை என்பதால் அரிமா நம்பியைப் பார்க்க.. கண்டிப்பாக ஒரு முறை நம்பிப் போகலாம்…

No comments:

Post a Comment