Thursday 3 July 2014

அதிதி:

2007ல் ஆங்கிலத்தில் வெளியான Butterfly on a wheel என்ற திரைப்படத்தை மலையாளத்தில் “காக்டெய்ல்” என்ற பெயரில் அனுமதி பெற்றோ அல்லது அனுமதி பெறாமலோ படமாக எடுத்தார்கள்.. ஜெயசூர்யா, பகத் பாசில் நடிப்பில் வெளியான அந்தப் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.. அதே திரைப்படத்தை இப்போது தமிழ்படுத்தியிருக்கிறார்கள்.. தமிழில் ஜெயசூர்யாவுக்குப் பதில் நிகேஷ்ராம், பகத் பாசிலுக்கு பதிலாக நந்தா.. இயக்கி இருப்பவர் “அழகிய தமிழ் மகன்” இயக்குநர் பரதன்… இப்படி ஒவ்வொரு மொழியாக படமாக்கப்பட்டுக் கொண்டே வருவதால், கண்டிப்பாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தேன்… நம்பிக்கை வீண்போகவில்லை..


கதையின் கரு என்ன என்பது தான் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டாக இருப்பதால் அதைப் பற்றி பேசமுடியாத சூழ்நிலை.. ஆனால் அதைப் பற்றி பேசாமல் படத்தின் நிறை குறைகளைப் பற்றிப் பேசுவதும் கடினம்.. இப்படிப் பட்ட சூழ்நிலை சமீபத்தில் எந்தப்படத்துக்கும் வந்ததில்லை.. சரி இப்படி தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.. நந்தா அனன்யா மற்றும் அவர்களது ஐந்து வயது குழந்தை என சந்தோசமாக சென்று கொண்டிருக்கிறது அவர்களது குடும்பச்சூழல்.. குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு நந்தா அனன்யா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு பிரயாணத்தின் போது லிப்ட் கேட்டு அதே காரில் ஏறிய நிகேஷ்ராம், துப்பாக்கியை தலை மீது வைத்து உன் குழந்தை எங்களது கஸ்டடியில்.. இனி நான் சொல்வதை செய் என்கின்ற ரீதியில் நந்தா அனன்யா இருவரையும் அலைகழிக்க… அந்த அலைகழிப்பு எந்த எல்லை வரை சென்றது… அந்த அலைகழிப்புக்கு காரணம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

படத்தில் நல்லக் கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட கதை என்ற ஒன்று இருக்கிறது.. அது முதலாவது காட்சியிலேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதும் கூடுதல் சிறப்பு.. அது தவிர்த்து மிகச்சிறப்பான திரைக்கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை இருக்கிறது.. படம் தொடங்கியதில் இருந்து, ஏன்…? எதற்கு..? அடுத்து என்ன செய்யப் போகிறான் என்கின்ற ரீதியில் பார்வையாளர்களின் பல்ஸ் இறங்காமல் பார்த்துக் கொள்ளும் வகையிலான திரைக்கதை… ஆனால் இதை மிகச் சிறப்பான திரைக்கதை என்று சொல்ல முடியவில்லை.. ஏனென்றால் இது கதை போகின்ற போக்கில் கதாபாத்திரங்களை ஏமாற்றுவதோடு பார்வையாளர்களை சேர்ந்து ஏமாற்றும் திரைக்கதை… உங்களுக்கு இன்னும் புரியும்படி சொல்வது என்றால், ஒரு காட்சி முழுமையாக முடிவதற்கு முன்பே அதை கத்தரித்து விடுவார்கள்…. பின்பு அதே காட்சியை அங்கு என்ன நடந்தது தெரியுமா..? என்கின்ற ரீதியில் வேறொரு இடத்தில் வந்து ஒட்டுவார்கள்… இதனால் கதையில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.. ஆனால் பார்வையாளர்களான நாம் ஏமாற்றப்பட்டிருப்போம்… அந்தக் காட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று நாம் நம்பிவிட்டு அடுத்த காட்சிக்கு சென்றுவிடுவோம்… பின்னர் தான் நமக்குத் தெரியும் அங்கு நடந்தக் காட்சிகளை அவர்கள் நமக்குக் காட்டவில்லை என்று.. இந்த திரைக்கதை உத்தியை தவறான திரைக்கதை உத்தி என்று சொல்ல முடியாது… ஆனால் எனக்குப் பிடிக்காத ஒன்று…


உதாரணத்துக்கு பீட்ஸா திரைப்படத்தில் வரும் காட்சி நினைவு இருக்கிறதா..? பேய் பிடித்த ஓனரின் மகளை நினைத்துக் கொண்டே விஜய் சேதுபதி ஒரு திருப்பத்தில் தன் டூவிலரை திருப்புவார்…. காட்சி முடிந்துவிட்டதாக நினைத்து நாம் அடுத்த காட்சிக்கு சென்றுவிடுவோம்…. அடுத்த காட்சியில் அடிபட்ட காயங்களுடன் ஏதோ பிதற்றிக் கொண்டு விஜய் சேதுபதி உட்கார்ந்து இருப்பார்.. பின்னர் படம் முடிவதற்கு சற்று நேரம் முன்பு நாம் முடிந்துவிட்டதாக நினைத்த அதே காட்சி திரும்ப வரும்… திருப்பத்தில் விஜய் சேதுபதி கீழே விழுந்திருப்பார்.. அதைத் தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்திருக்கும்… ஆனால் பிற கதாபாத்திரங்கள் எப்படி ஏமாந்தார்களோ…? அதே போல பார்வையாளனும் ஏமாந்திருப்பான்.. இது திரைக்கதையில் ஒரு வகையான கத்தரி ஒட்டு வேலை.. மீண்டும் சொல்கிறேன்.. இது தவறான உத்தி என்பதல்ல…. மிகச்சிறந்த உத்தியாக எனக்குப்படாத முறை அவ்வளவே… ஆனால் அதை பீட்ஸாவில் கார்த்திக் சுப்புராஜ் செவ்வனே செய்திருப்பார்… பார்வையாளர்கள் அதை முடிந்தால் யூகித்துக் கொள்ளட்டும் என்கின்ற நோக்கிலொரு க்ளுவும் கொடுத்திருப்பார்… முடிந்தால் யோசித்துப் பாருங்கள்.. அல்லது பீட்ஸா பதிவை படித்துப் பாருங்கள்…

இந்த மாதிரியான திரைக்கதை உத்தியை மிக மோசமாக பயன்படுத்தி ஓரளவுக்கு வெற்றி பெற்றப் படத்துக்கு சமீபத்திய உதாரணம் “என்னமோ நடக்குது…” மிகக் கேவலமான கத்திரி ஒட்டு வேலைகள் அதில் நடந்திருக்கும்… இது தமிழ்படங்கள் என்று மட்டும் அல்ல… வெளிநாட்டு மொழித்திரைப்படங்களில் கூட இது போன்ற உத்திகளை பல படங்களில் காணலாம்.. ஏன் மிகவும் சிலாகித்துப் பேசப்பட்ட A Separation திரைப்படத்தில் கூட அந்த உத்தி இருக்கும்… அந்த வேலைக்காரப் பெண்மணி ரோட்டைக் கடக்கின்ற அந்தக் காட்சி… அந்தக் காட்சியிலேயே அவர் கார் மோதி கீழே விழுவதைக் காட்டமாட்டார்கள்.. அதைப் பின்னர் தான் விளக்குவார்கள்.. அது போலத்தான்…. அதைப் போன்ற ஒரு உத்தி இந்தத் திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.. முடிந்தால் படம் பார்க்கும் போதே அதைக் கண்டுபிடித்துப் பாருங்கள்….

சரி அப்படியென்றால் மிகச்சிறந்த திரைக்கதை என்று நான் எதனைச் சொல்லுவேன் என்றால், எந்த இடத்திலும் பார்வையாளனை திட்டமிட்டு ஏமாற்றி, புதிதாக ஒரு விசயத்தை சொல்லாத திரைக்கதையை மிகச்சிறந்த திரைக்கதை என்பேன்… உதாரணத்துக்கு The Shawshang Redemption திரைப்படத்தின் திரைக்கதை… தமிழில் விருமாண்டியின் திரைக்கதை… பசுபதி சொல்லுவார்… “ஆளுக்கு முந்தி நைட்டோட நைட்டா அரிவாளத் தூக்கிட்டு வெட்டப் போனது அவன்ல..” என்று கமலை. அவர் சொன்னதும் உண்மை.. பசுபதியின் பார்வையில். ”நான் வெட்டுறதுக்குப் போல..” என்று கமல் சொல்லுவார்.. அதுவும் உண்மை.. கமலின் பார்வையில்.. என்னைப் பொறுத்தவரை திரைக்கதை இப்படித்தான் பார்வையாளனை ஏமாற்றாததாக இருக்க வேண்டும்… ஆனால் அப்படிப்பட்ட ஒரு திரைக்கதை இந்த திரைப்படத்தில் இல்லை என்பது ஒரு சிறிய குறை…


அதைத் தவிர்த்துப் பார்த்தால் படத்தின் கரு எதைப் பற்றியது என்பதை ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்களை முதலிலேயே தயார் படுத்தாமல் விட்டிருப்பதும் ஒரு குறை… நாம் ஏதேதோ காரணங்களை எண்ணிக் கொண்டு இருப்போம்.. இவர்கள் புதிதாக ஒரு காரணத்தை வந்து வைப்பது போல் ஒரு எண்ணம் ஏற்படுவதையும் படம் பார்க்கும் போது தவிர்க்க முடியவில்லை.. நான் சிவப்பு மனிதன் திரைப்படத்தைப் போல… இத்திரைப்படத்தின் ஒரிஜினல் வடிவங்களான ஆங்கில மற்றும் மலையாள வடிவங்களை நான் பார்த்ததில்லை என்பதால், இத்திரைப்படத்துக்கும் அவற்றுக்கும் என்னென்ன ஒற்றுமை வேற்றுமை என்பதை என்னால் கண்டு கொள்ளமுடியவில்லை… ஆனால் படத்தின் மையக்கருத்தின் மீது ஒரு சின்ன நாகரீக அல்லது பரிணாம வளர்ச்சி இருப்பது போல் தமிழில் தெரிவது கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும்.. கடைசிக் காட்சியில் அந்தப் பெண்ணின் நிலை என்னவானது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் இடத்தில் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசிக்கும் போது, இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு, முன்னர் ஏற்பட்ட சந்தோசத்தை அப்படியே அது காணாமல் ஆக்கிவிடுகிறது… மேலும் அந்தக் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனம் வரும்… “கேவலம் இந்த விசயத்துக்காகவா இப்படி நடந்து கொண்டீர்கள்…” என்று, இந்த வசனத்தை பேசுகின்ற அதே கதாபாத்திரம் தான், மேற்சொன்ன அதே சாதாரணமான, அவரது மொழியில் சொல்வதென்றால், கேவலமான ஒரு விசயம் நடந்துவிட்டது என்பதை தெரிந்து கொண்டு இவ்வளவு பெரிய பழி வாங்கும் படலத்தை நடத்தியிருப்பார்… அப்படி இருக்கும் போது அதுயெப்படி பொருட்படுத்த முடியாத மிகக்கேவலமான விசயமாக மாறும் என்பது இயக்குநருக்கும் அந்தக் கதாபாத்திரத்துக்கும் தான் வெளிச்சம்…

இப்படி கதையைப் பற்றி கொஞ்சம் கூட பேசாமல், அதன் திரைக்கதையில் இருக்கின்ற குறைகளைப் பற்றியும், மையச் சாரத்தின் குறைகளைப் பற்றியும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது…. இவை தவிர்த்து நடிப்பு என்று பார்த்தால் வில்லனாக வரும் நிகேஷ் ராம் மற்றும் அனன்யா இவர்கள் இருவர் மட்டுமே ஸ்கோர் செய்கிறார்கள்.. நந்தா ம்ஹீம்… இன்னும் ரொம்பவே மெனக்கெட வேண்டும்… தம்பி ராமையாவின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.. அவரின் சென்னை விசிட்டும் மெசெஜ்ஜும் பலரது அனுபவங்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அந்தப் பகுதி தான் கலகலப்புக்கும் கேரண்டி தருகிறது… படத்துக்கு கேமராவும் இசையும் மிகப்பெரிய பலவீனங்கள்… எதற்கெடுத்தாலும் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டே இருக்கும் எஸ்.ஜெய்யின் கேமரா எரிச்சலையே தருகிறது… அது போல பரத்வாஜ், ரதீஷ் வேகா கூட்டணி இசையில் அந்த முதல் டூயட் பாடலைத் தவிர்த்திருக்கலாம்.. பிண்ணனி இசையும் ஒரு த்ரில்லருக்கான பிண்ணனி இசையின் வரையறைக்கு உட்பட்டதாக இல்லை…


மொத்தத்தில் அதிதி க்ளைமாக்ஸ் தவிர்த்து பல பேருக்கு பிடித்த படமாக இருக்கும்… கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்…. ஏமாற்றம் தராத விருந்தாளி தான் இந்த அதிதி…

No comments:

Post a Comment