ஒரு மக்கள் கூட்டமே ஒருவனைப் பார்த்தோ அல்லது
ஏதோ ஒன்றைப் பார்த்தோ பயப்படுவது என்பது எவ்வளவு அவமானகரமான காரியம்…. ஆனால் இப்படி
பயப்படுவதையே ஒரு ரசனையாக மாற்றிக் காட்ட பேய் படங்களால் மட்டுமே முடியும்…. இது தவிர்த்து
சில ஆபத்தான அபாயகரமான விளையாட்டுகளிலும் இந்த பயத்தின் ரசனைகளை உணர முடியும்… எனக்கு
விவரம் தெரிந்து, அம்மாவின் மடியில் முகம் புதைத்துக் கொண்டு, கண்களை அரை இருட்டில்
அரை வட்டமாக திறந்து “அதே கண்கள்” திரைப்படம் பார்த்து பயத்தின் ரசனையை உணர்ந்த கணங்களும்,
ஜெயிண்ட் வீல் ராட்டினத்தில் உயரப் பறந்தபடி ஊருக்கே கேட்கும் படி எழுப்பிய மரணத்தின்
பயம் சார்ந்த ஓலங்களும் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றது… பொதுவாக அதீத சத்தங்கள்
மற்றும் கூச்சலுடன் படம் பார்ப்பதென்பது எனக்கு பிடிக்காத ஒன்று.. அதற்கு இந்த பேய்
படங்கள் மட்டும் விதிவிலக்கு.. அருகில் அமர்ந்திருக்கும் மக்களின் அற்புதமான ஒப்பனை
இல்லாத உணர்வுகளையும் உடல்மொழிகளையும் உள்வாங்கிக் கொண்டு இது போன்ற பேய் படங்களை பார்ப்பதென்பது
ஒரு சுகானுபவம் தான்…. இது போன்ற படங்கள் பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது….. ஒரு
கேள்வி…? மகிழ்வான பயம் என்று ஒன்று உண்டா… என்ன..? ஆனால் படம் பார்க்கும் போது இருந்த
அந்த மகிழ்வான பயம்…. யாரும் இல்லாத அறையில் நடுநிசியில் நாய்களின் ஓலங்களுக்கு இடையில்
இந்தப் பதிவை எழுதும் போது ஏனோ இல்லை…. அடிவயிற்றில் ஒரு அச்சப்பந்து உருண்டு கொண்டிருப்பதால்
அந்த மகிழ்வான பயத்தில் மகிழ்வு மட்டும் தற்சமயம் இல்லை…
கதையென்ன….”? திரைக்கதையென்ன…? கதாபாத்திரங்களில்
என்ன வித்தியாசம் செய்திருக்கிறார்கள் இது போன்ற கேள்விகளுடன் அணுக வேண்டிய தேவை இத்திரைப்படங்களுக்கு
இல்லை… ஏனென்றால் இவர்கள் இதில் எல்லாமே கோட்டை விட்டாலும் கூட படத்தை வெற்றிப்படமாக
மாற்றுவதற்கான வேறொரு அம்சத்தை இத்திரைப்படங்கள் கொண்டிருக்கின்றன…. அந்த அம்சம் என்ன
என்கிறீர்களா…?
சரி… கதைக்கு வருவோம்…. ஒரு பேய் படத்தில் கதையை விட ஏன்..? பேயை விட எது மிகமிக முக்கியமானது
என்று இந்த யாமிருக்க பயமே குழுவினருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.. எது என்று கேட்கிறீர்களா…?
இசை தான்…. ஏனென்றால் இந்த இசை தான் பேய் இல்லாத இடங்களில் கூட பேய் இருக்குமோ என்பது
போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது…. அதுதான் படத்துக்கான மிக முக்கிய வெற்றி….
படம் தொடங்கி முதல் ஒரு இருபது நிமிடங்களுக்கு
படத்தின் கதை தொய்வாக சோம்பிப் போய் தெரிந்தாலும், எப்போது கிருஷ்ணாவும் ரூபா மஞ்சரியும்
சேர்ந்து கொள்ளிமலையில் இருக்கும் அந்த இடத்தை புதுப்பித்து ஹோட்டல் தொடங்குகிறார்களே
அந்த இடத்திலேயே படம் பரபரக்கத் தொடங்கிவிடுகிறது… படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய
ப்ளஸ்ஸாக அமைந்திருப்பது கருணாவின் கதாபாத்திரத்தின் ஸ்கெட்ச்…. இந்த திரைப்படத்தை
எப்படி முடிக்கப் போகிறார்கள் என்று யோசித்துக்
கொண்டிருக்க… மந்திரங்கள், மாந்திரீகங்கள், மந்திரவாதி இப்படி யாருமே இல்லாமல் பழைய
பார்முலாவில் இருந்து விலகி, திரைப்படத்தை முடித்திருக்கும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி
எனக்கு மிகவும் பிடித்திருந்தது…..
யாரோ ஒருவர் ஓவியா படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்
என்று கொளுத்திப் போட்டுவிட்டார்….. பாவம் அவருக்கு படுகவர்ச்சி என்பதற்கு அர்த்தமே
தெரியவில்லை போலும் என்று படம் பார்க்கும் போது எண்ணிக் கொண்டேன்.. ஆங்காங்கே வயது
வந்தோருக்கான வசனங்களும் வந்து போகின்றன…. ஆனால் அவையெல்லாம் வயது வந்தோருக்கு மட்டும்
தான் புரியும் என்பதால் அதிகமாக கலங்கத் தேவையில்லை…. , சில பதிவுகளில் மயில்சாமி வந்து
செல்லும் காட்சிகள் படு அமர்களமாக இருப்பதாக சொல்லிக் கொண்டார்கள்…. எனக்கு ஏனோ அது
சராசரியான காட்சியாகவே தென்பட்டது….
படத்தி\ல் ஹீரோ கிருஷ்ணாவை மிஞ்சி அதிகமாக
ஜொலிப்பவர் கருணா தான்…. இவர் கண்ணாடியைப் பார்க்கமாட்டேன் என்பதற்கு சொல்லும் அந்த
காரணக்கதை ஒரு மொக்கைகதை என்றாலும்….. பெரும்பாலான இதுபோன்ற பயங்களுக்கு இது போன்ற
மொக்கைக் கதைகள் தான் காரணமாக இருக்கும் என்பதால் அதை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும்
இல்லை… ரூபா மஞ்சரி கருணாவை தானும் பார்த்தது போல் இருக்கிறது என்று சொல்லி மாட்டிக்
கொள்ளும் இடம் தமிழ் சினிமாவுக்கு புதிது…. இவரை கவர்ச்சியில் மட்டுமே முந்த முயலுகிறார்
ஓவியா… இவர்கள் இருவரும் போடும் சக்களத்தி சண்டைகள் கதையை இழுக்க மட்டுமே பயன்பட்டிருக்கின்றன..
கிருஷ்ணாவுக்கு இது கண்டிப்பாக பேர் சொல்லிக் கொள்வது போன்ற படம் தான்… நடிப்பில் முந்தைக்கு
எவ்வளவோ தேறியிருக்கிறார்… தன் ஹோட்டலுக்கு வந்து தங்கிச் செல்பவர்களுக்கு எதுவுமே
ஆகிவிடக் கூடாது என்பதற்காக இரவு பகலாக காவல் இருப்பதும், தன் சட்டையில் வாந்தி எடுத்துச்
செல்லுவது ரூபா மஞ்சரி அவள் முகத்தை மிகவும் க்ளோசப்பில் காட்டியதால் தான் என்று அவரிடம்
முறைப்பதுமாக செம்மையாக ஸ்கோர் செய்கிறார்… அதே போலத்தான் ரூபாவும் காதலனிடம் இருந்து
கைகழுவிச் செல்ல முற்படுவது, அவன் ஜெயிலில் இருப்பதாக எண்ணிக் கொண்டு வீட்டை விற்றுவிட்டு
செட்டிலாக திட்டம் தீட்டுவது என்று கலகலக்க வைக்கிறார்…
படத்தின் தலைப்பில் ஏன் பயமேன் என்று முடிக்காமல்,
பயமே என்று முடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை… ஒரு வேளை பேய் நம்பிக்கையை போல்
இது வேறெதுவும் நம்பிக்கையாக இருக்குமா..? என்றும் தெரியவில்லை.. படத்தில் குறைகளே
இல்லை என்று சொல்ல முடியாது…. நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள். ஏகத்துக்கு இருக்கின்றன..
ஆனால் பேய் என்பதே முற்றிலும் நம்பகத்தன்மை கொள்ளமுடியாத ஒரு விசயம் தான் என்பதால்
அந்த தவறுகளை ஜீரணித்துக் கொள்ளலாம்… பிரசாத்தின் இசை வருடுகின்ற எல்லா இடங்களிலும்
பேய் நம்மை ஆட்கொள்ளும் உணர்வு தோன்றுவதே அவரது இசைக்கு கிடைத்த வெற்றி.… அதுபோல் ஸ்ரீகர்
பிரசாத்தின் எடிட்டிங் பயங்கர ஷார்ப்… இயக்குநர் டி.கேவுக்கு இது முதல் படமாம்… கதை
மற்றும் திரைக்கதையில் இருக்கின்ற பலவீனத்தை பேய் பலத்தைக் கொண்டு ஈடு செய்திருக்கிறார்…
ஆனால் மேக்கிங்கில் செமத்தியாக மிரட்டியிருக்கிறார்… அடுத்து வரும் இவரது படங்களை ஓரளவுக்காவது
எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.. மொத்தத்தில் ”யாமிருக்க பயமே” திரைப்படம்
ஒரு இரண்டு மணிநேர கலகலப்புக்கு கேரண்டி என்பதால் ஒரு முறை நிச்சயமாக தைரியமாக நம்பிப்
போகலாம்…
//# சந்திரமுகியில் ரஜினி யாமிருக்க பயமேன் என சொல்லி இண்டர்வெல் போடுவாங்க ,அதை வச்சு பரபரப்பா இருக்குமேனு ,யாமிருக்க பயமேன் என்ற பெயரில் 'பாக்யராஜ்" நடிப்பதாக முன்னர் ஒரு விளம்பரம் பார்த்தேன் ,படம் வந்துச்சா என்னானு தெரியலை, ஆனாலும் அந்த டைட்டில் இன்னும் பதிவில் இருக்கும் என நினைக்கிறேன் ,அதான் "யாமிருக்க பயமே" என வச்சிருக்காங்கனு நினைக்கிறேன் , பாக்யராஜிக்கு தான் இனிமே அவர் படம் வந்தாலும் அடி தான் அவ்வ்!
ReplyDeleteபடத்தோட டைட்டிலுக்கு கதை ஜஸ்டிபை செய்தாலும் ,இன்னொருப்படத்தின் டைட்டில் சாயலை அப்படியே வெளிப்படுத்திவிடுவதால்,இனிமேல் அந்த டைட்டில் எடுபடாது தானே.//
http://www.philosophyprabhakaran.com/2014/05/blog-post.html