Thursday 15 May 2014

என்னமோ நடக்குது:

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து பரவலாக எல்லாரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம்.. சமீபத்தில் வெளிவந்த தெகிடியை போலவே வித்தியாசமான ஒரு கதைக்களன், மிக சின்ன சின்ன சுவாரஸ்யமான முடிச்சுகள், அயர்ச்சியை ஏற்படுத்தாத கதை சொல்லும் முறை, தனிப்பட்ட முறையில் எந்த கதாபாத்திரத்தின் மீதும் தனித்து பயணிக்காத திரைக்கதை, ஹீரோ தவிர்த்து பிற கதாபாத்திரங்களுக்கும் திரைக்கதையில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் என இது போன்ற  காரணிகள் தான் இப்படத்தை பிற வணிக மசாலா படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது..


இத்திரைப்படம் புளகாங்கிதம் அடைந்து பாராட்டும் அளவுக்கு ஒரு அற்புதமான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது.. ஆனால் கண்டிப்பாக சலிப்பை ஏற்படுத்தாத ஒரு வணிக சினிமாவுக்கு தேவையான சரக்குகளை உள்ளடக்கி இருக்கும் திரைப்படம் என்று சொல்லலாம்.. கதாநாயகனோடு ஒப்பிட்டு இதன் மையக்கதை என்னவென்று நாம் யோசிக்க முற்பட்டால், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் தோல்வி அடைந்த மரியான் திரைப்படத்தின் ஒன்லைன் நமக்குக் கிடைக்கும்.. இரண்டிலுமே காதலன் காதலிக்காக தான் செய்து கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, புதிய வேலைக்குச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்வது தான் கதை.. இதில் ஒரு படம் தோல்வி (மரியான்) மற்றொரு படமான “என்னமோ நடக்குது” தோல்வி என்று சொல்லமுடியாத ஒரு படம்… இத்தனைக்கும் தோல்வியடைந்த மரியான், தனுஷ், பார்வதி மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், பரத் பாலா என்று இந்தியா முழுக்க பிரபலமான ஆதர்ஷங்களை கொண்டு எடுக்கப்பட்ட படம்.. ஆனால் ”என்னமோ நடக்குது” படக் குழுவோ இதுவரை தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்தி வெற்றியே பெறாத விஜய் வசந்த், ஒரே ஒரு படத்தில் நடித்த மஹிமா என்ற சிறுபெண், இசைக்கு பிரேம்ஜி, இயக்குநர் ராஜபாண்டி புதியவர் என முற்றிலும் வேறு தளத்தில் இயங்கும் கலைஞர்களை உள்ளடக்கியது… இவர்களுக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதை நாம் யோசிக்க வேண்டும்..

மரியானை எடுத்துக் கொண்டால், தனுஷ் புறப்பட்டு செல்லும் புதிய வேலை களமான அந்தப் பணியைப் பற்றிய விவரணைகளோ அல்லது அவரைக் கடத்தி செல்லும் அந்நாட்டு தீவிரவாதிகளைப் பற்றிய பின்புலமோ பார்வையாளருக்கு விரிவாக விளக்கப்பட்டு இருக்காது… அது தவிர்த்து அந்தப் பின்புலம் ஆடியன்ஸ் அதை தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இடமளிக்காத ஒரு பகுதி. மேலும் இது தவிர்த்து தனுஷ் மற்றும் பார்வதி இருவருக்குமான காதலின் உணர்வலைகளும் நம்மை எந்த இடத்திலும் தீண்டவே செய்யாது… படம் தொடங்கியதில் இருந்து தனுஷின் காதலையும், அவர் அங்கே மாட்டிக் கொள்ளப் போகிறார் என்பதான சின்ன புரிதலையும் தவிர படத்தில் பெரிய எதிர்பார்ப்பு எதுவுமே இருக்காது… மேலும் மற்றொரு முக்கியமான விசயம் தனுஷ், பார்வதி இந்த இருவரைத் தவிர வேறு எந்தக் கதாபாத்திரத்திலும் மையக் கதை நகராமல், இவர்கள் இருவருக்குள்ளும் சுற்றி சுற்றி வந்து நம்மை சலிப்படையச் செய்யும்.. இப்படி ஒரேவிதமான ஒன்லைனை கொண்டு இருந்தாலும் மரியானில் மேற்சொன்ன பத்தியில் அமைந்திருக்கும் இது போன்ற குறைகளை கவனமாக தவிர்த்திருப்பதே ”என்னமோ நடக்குது” திரைப்படத்தின் வெற்றி என்று நான் கருதுகிறேன்…

ஹீரோவாக வரும் விஜய் வசந்த், முதலில் செய்யும் பணி போஸ்டர் ஒட்டுவது, அடுத்து தன் காதலி மஹிமாவின் பணத் தேவையை பூர்த்தி செய்ய இவர் எடுக்கும் இரண்டாவது தொழில் வங்கியில் டெபாஷிட் ஆகும் பொதுமக்களின் பணத்தை ஒரே ஒரு நாள் குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் கையாடல் செய்து, வட்டிக்கு விட்டு பிழைக்கும் கும்பலுக்கு துணை போகும் தொழில். இந்த தொழில் சார்ந்த விவரணைகள் மற்றும் இந்த கும்பலின் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்பது போன்ற செய்திகள் ஓரளவுக்காவது பார்வையாளருக்கு விளக்கப்பட்டு இருக்கும்.. மேலும் எப்படிப் பார்த்தாலும் எல்லா பார்வையாளர்களும் ஏதோ ஒருவிதத்தில் வங்கியோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதால், இந்தப் பிரச்சனை அவர்களை கதைக்குள் வெகு எளிதாக இழுத்து விடும்.. மேலும் இது தவிர்த்து மையக் கதை நாயகன் நாயகி இருவர் மீது மட்டும் தனித்து இயங்காது. பணத்தை கையாடல் செய்யும் கும்பலின் தலைவனாக வரும் ரஹ்மான், ரஹ்மானுக்கு டார்ச்சர் கொடுக்கும் தலைவியாக வரும் சுகன்யா, ரஹ்மானின் பால்ய விரோதி பிரபு, இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் வக்கீல் தம்பி ராமையா, இவ்வளவு ஏன்..? விஜய் வசந்தின் அம்மாவாக வரும் சரண்யா என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரின் மீது சரிசமமாக திரைக்கதை பயணிக்கும்.. எல்லா கதாபாத்திரங்களுக்கும் திரைக்கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் பங்கு இருக்கும்.. அதுவே திரைக்கதையை சுவாரஸ்யமாக மாற்றிவிடுகிறது… இதுவே இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம்..


எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களில் வருவதைப் போல் சின்ன சின்ன சுவாரஸ்ய முடிச்சுகளுடன் படக்காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன.. உதாரணமாக பணத்தை விநியோகிக்க விஜய் வசந்த் கொண்டு செல்லும் போது அவரிடம் இருந்து மற்றொரு கும்பல் அந்தப் பணத்தை கொள்ளை அடித்துச் செல்லும் காட்சியையும், அந்தப் பெண்மணியை விஜய் வசந்த் மறுபடியும் மடக்கிப் பிடிக்கும் காட்சியையும் கூறலாம்.. இதுபோலத்தான் கடைசிக் காட்சியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அந்த துப்பாக்கி மேட்டரும்.. ஆனாலும் சில இடங்களில் திரைக்கதை வேண்டுமென்றே ஆடியன்ஸை ஏமாற்றும் நோக்கில் இஷ்டத்து வளைக்கப்பட்டு இருப்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.. குறிப்பாக முதலிலேயே அந்த ஆம்புலன்ஸ் வேனில் களவாடப்பட்ட பணம் இருப்பதை பார்த்துவிடும் விஜய் வசந்த், அதை தன் நண்பனிடம் தெரிவிக்காமல், க்ளைமாக்ஸ் காட்சியில் வந்து தெரிவிக்க வேண்டிய அவசியம் திரைக்கதையில் இல்லை.. இத்தனைக்கும் அந்த நண்பன் வேறு, ”கையில் பணமே இல்லாமல் ஏன் அவர்களை வரச் சொல்கிறாய்..?” என்று கேள்வி வேறு கேட்பான்.. அதற்கும் விஜய் வசந்த பொய் சொல்லுவார்… இதை ஆடியன்ஸை ஏமாற்றும் போக்கு என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும்… இதே போல் இரண்டு மூன்று இடங்களில் இதே பிரச்சனை இருக்கும்..


நடிப்பு என்று பார்த்தால் பர்ஸ்ட் மார்க் வழக்கம் போல் சரண்யாவுக்கு தான்.. விஜய் வசந்த் நன்றாகத்தான் நடிக்கிறார்… ஆனாலும் அந்த முகத்தில் ஏதோ ஒன்று மிஸ்சிங் என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. நாயகி மஹிமா கொஞ்ச காலமேனும் கண்டிப்பாக நிலைத்து நிற்பார் என்று நம்பலாம்… பிரபுவும் ரஹ்மானும் வழக்கம் போல் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள்… ஆனால் பிரபுவுக்கும் ஒரு பாட்டு வைத்து ஆடியன்ஸின் பல்ஸை பதம் பார்த்திருக்க வேண்டாம்..

இதனைத் தவிர்த்து குறைகள் என்று பார்த்தால், வழக்கம் போல் காதல் காட்சிகளில் இருக்கும் ரசனையற்ற உணர்வைச் சொல்லலாம்… அதுபோல் சரண்யா மற்றும் விஜய் வசந்த் இருவருக்கும் இடையே பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி கதாபாத்திரம் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்கின்ற குழப்பமும் ஏற்படுகிறது.. படத்திற்கு பிரேம்ஜி அமரனின் இசை ஒரு மிகப்பெரிய மைனஸ்… சம்பந்தமே இல்லாமல் அது ஏதேதோ சத்தங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.. அது போலத்தான் பாடல்களும்.. ஆனால் சமீபகாலமாக ஒரு மாற்றம் நிகழ்ந்து வருவதை கவனித்து வருகிறேன்… பாடல் வரும் இடங்களில் எல்லாம் பார்வையாளர்கள் அநியாயத்து கோபம் கொண்டு கத்தும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருப்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக தெரிகிறது.. மாற்றங்கள் வரட்டும்.. இயக்குநர் ராஜபாண்டிக்கு இது முதல் படம்.. முதல் படத்திலேயே பெரும்பாலான விசயங்களில் கவர்ந்திருக்கிறார்.. இவரது அடுத்த படைப்புகள் இதைவிட சிறப்பான அளவில் மெச்சும்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.. மொத்தத்தில் ”என்னமோ நடக்குது…” உங்களை பெரிதாக ஏமாற்றாது என்பதால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..

No comments:

Post a Comment