காமெடியில் முத்திரை பதித்த கதாநாயகர்கள்
எல்லாம், தங்களை ஆதிக்க சக்தியாக மாற்றும் முனைப்புடன் ஆக்சன் திரைப்படங்களின் பக்கம்
தங்கள் பார்வையை திருப்பத் தொடங்கி இருக்கிறார்கள் போலும்.. கதாநாயகனாக சந்தானம், இயக்குநராக
மற்றொரு காமெடி நடிகர் ஸ்ரீநாத், கதையோ தெலுங்கின் வெற்றிப்பட இயக்குநர் இராஜமெளலி
இயக்கத்தில் வெளிவந்த மரியாதை ராமன் திரைப்படத்தின் ரீமேக்… இப்படி ஒவ்வொரு விசயமுமே
ஒவ்வாத விசயமாகவே இருந்தது… இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஓரளவுக்கு “இதற்குத் தானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்தில் பாடல்களில் ஈர்த்தவர் என்பதால், வபுஆ பாடலைக்
கேட்கப் போய் அதுவும் ஆபத்தாகவே முடிந்தது… இதில் ஹீரோ சந்தானத்துக்கு ஓபனிங்க் ஷாங்க்
வேறு இருக்கிறது என்று தெரிந்தவுடன் ஒரேயடியாக இந்தப் படத்துக்கு முழுக்கு போட்டுவிடலாம்
என்றே நினைத்து இருந்தேன்.
ஆனால், படத்தின் கதையைப் பற்றி தெரிந்தவுடன்
அதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன ஈர்ப்பு வந்தது.. மேலும் இயக்குநர் இராஜமெளலியின்
திரைக்கதை மீது எனக்கு ஒரு சின்ன எதிர்பார்ப்பும் உண்டு.. இதனால் என் முடிவை மாற்றிக்
கொள்ள துணிந்தேன்.. எதிர்பார்த்தது போலவே படத்தின் கதைக்கரு கமர்ஷியல் சினிமாவுக்கு
மிகவும் பொருந்தக்கூடிய சுவாரஷ்யமான ஒன் லைன் தான்… “ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள வேண்டுமென்றால், ஒரு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.. அந்த வீட்டில் இருப்பவர்கள்
யார் என்றால், அந்த வீட்டை விட்டு வெளியே வந்தால் இவனை யார் கொல்ல காத்திருக்கிறார்களோ…?
அதே நபர்கள் தான்” இப்படி சுவாரஸ்யமான ஒரு நகைமுரண் உள்ள ஒன்லைன்… ஆனால் இந்த ஒன்லைனரை
பயன்படுத்தி படக்குழுவினர் உண்டாக்கி இருக்கின்ற திரைக்கதையில் தான் நகைப்பும் இல்லாமல்,
திரைக்கதையில் நல்ல முரணும் இல்லாமல் தேமே என்று நிற்கிறது திரைப்படம்..
இத்திரைப்படத்தின் ஒரிஜினல் வடிவமான தெலுங்கு
திரைப்படம் “மரியாதை இராமன் (2010)னை நான் இன்னும் பார்க்கவில்லை.. அதிலும் இதே மாதிரி
காட்சியமைப்புகளில் சொதப்பி இருந்தார்களா என்று தெரியவில்லை… ஆனால் தமிழில் தான் கொஞ்சம்
சொதப்பி எடுத்திருக்கிறார்கள்… சந்தானத்தின் வழக்கமான எதுகை மோனை வகையறா காமெடியை வைத்து
முதல்பாதியில் ஓரளவுக்கு ஒப்பேத்தி இருக்கிறார்கள்… ஆனால் அந்தக் காமெடிக்கே ஓரிரு
இடங்களில் அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பு வருவதும் உண்மை… ஆனால் அந்தக் காமெடிகள்
என்னென்ன என்று உங்களுக்கு விலாவாரியாக விளக்க முனைவதற்கு முன்பே, அதன் ஆயுள் வழக்கம்
போல் குறைந்து, வழக்கம் போல் மறந்தும் போய்விடுகின்றன..
சக்தி என்னும் இளைஞராக சந்தானம்…. சரக்கைப்
பற்றிப் பேசாத, சரக்கடிக்காத இந்த சக்தி கதாபாத்திரத்திற்காகவே சத்தியமாக சந்தானத்துக்கு
ஒரு சல்யூட் வைக்கலாம்… அரவங்காடு என்னும் சிறு கிராமத்துக்கு அந்த ரயிலில் பயணிக்கும்
போது சித்தார்த் விபின் கேங்குடன் சேர்ந்து கொண்டு இவர் அடிக்கும் லூட்டிகள் மட்டும்
தான் படத்தில் மொத்தத்துக்கும் உயிர்ப்பான நொடிகள்.. இது தவிர்த்து அந்த சமையல்காரனிடம்
இவர் அடிக்கும் சில நையாண்டி கேலிகளும் ரசிக்க வைக்கின்றன… பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட
விடிவி கணேஷ் சந்தானம் கூட்டணியின் காமெடி க்ளிக் ஆகாமல் போனதும் ஒரு பெரும் குறை..
ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்லும் பவர் ஸ்டார் கதாபாத்திரத்துக்கு கொடுக்கப்பட்ட
அந்த ஒரு வரி டயலாக்கின் பஞ்ச் ரொம்பவே அதிகம்…
நாயகி வானதியாக அஸ்னா சவேரி… இவரது கதாபாத்திரம்
ஒரு குழப்பமான கதாபாத்திரம்.. தன் மாமனாக வரும் அந்த இராஜா கதாபாத்திரத்துடனும் வழிந்து,
சந்தானம் அவளை காதலிக்கிறார் என்று அந்த இராஜா கதாபாத்திரம் சொல்லும் இடத்திலும் வழிந்து,
தனக்கும் வானதிக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தச் சொல்லி இராஜா கேட்கும்
போதும் வழிந்து, க்ளைமாக்ஸ் நெறுங்கும் கட்டத்தில் சந்தானத்தை காதலிப்பதாக இவர் வந்து
நிற்கும் போது, அந்தக் காதலின் மீது நமக்கு வர வேண்டிய உணர்வுக்கு பதிலாக இப்படி ஒரு
திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று நமக்குத் தான் அசடு வழிகிறது…
அந்த வீட்டுக்குள் தெரியாத்தனமாக போய் சந்தானம்
மாட்டிக் கொள்ளும் இடம் வரை இருந்த சுவாரஸ்யம் அதற்குப் பின்னர் டமால்…. அந்த வீட்டிலேயே
தன்னை வெளியேறாமல் இருத்திக் கொள்வதற்காக சந்தானம் எடுக்கின்ற முயற்சிகளில் எல்லாம்
எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாமல் நகைச்சுவையும் இல்லாமல் பெயருக்கு ஏதோ ஒப்பேத்தியதைப்
போல் இருக்கிறது… இரண்டு குடும்பத்துக்கும் இடையேயான பகை எதனால் என்பதை சொல்லாமலே விட்டிருப்பது
புதுமையாக இருந்தாலும், அந்த பகைக்கான பிண்ணனி நமக்குள் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை
அது ஏற்படுத்த தவறுவதும் உண்மை… மேலும் இப்படிப்பட்ட ஒரு பகையை இவர் எப்படி சமாளிக்கப்
போகிறார் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்க… அதை இவர்கள் தீர்த்திருக்கும் விதம் மிகமிக
மோசம்…. சமீபமாக வந்த படங்களில் மிக மோசமான ஒரு க்ளைமாக்ஸ் கொண்ட படம் கண்டிப்பாக இதுவாகத்
தான் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும்… இது தவிர்த்து அந்த சைக்கிளின் பிண்ணனியில்
வரக்கூடிய அந்த சுயசரிதை புலம்பல்கள் எல்லாம் மீளாத சலிப்பையும் எரிச்சலையும் கொடுக்கின்றன…
சித்தார்த் விபினின் இசையில் பெரிதாக பாடல்கள்
ஒன்றுகூட தேறவில்லை என்றே தோன்றுகிறது… பிண்ணனி இசையில் ஒரு ஆக்சன் திரைப்படத்துக்கு
தேவையான டெம்போவை வசப்படுத்தியிருக்கிறார்… அதற்காக மட்டும் பாராட்டுக்கள்… சிங்கராயராக
வரும் நாகிநீடு பீமாவாக வரும் ரவிப்பிரகாஷ் இருவரது நடிப்பும் ஈர்க்கிறது…. ஒளிப்பதிவாளர்
சக்தியின் ஒளிவண்ணத்தில் அரவங்காடு அழகு… நகைச்சுவையில் கோலோச்சும் நடிகராக இருக்கும்
சந்தானத்துக்கு இயல்பான நடிப்பு என்பது இயலாமையான ஒன்றாக இருக்கிறதோ என்று பல காட்சிகளில்
ஐயுறத் தோன்றுகிறது… உயிர் போய்விடுமோ என்று பயந்து நடுங்க வேண்டிய காட்சிகளில் எல்லாம்
இவர் பயப்படுவதைப் பார்க்கும் போது நமக்குத்தான் பயமாக இருக்கிறது…
படத்தின் கதைக்கு இந்த தலைப்பு ஓகே தான்…
ஆனால் இவர்கள் திரைக்கதையில் வச்சிருக்கும் காட்சியமைப்புக்கும் தலைப்புக்கும் தான்
எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை… இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்
இதைவிட ஒரு சிறப்பான திரைப்படத்தைக் கொடுத்து இருக்கலாம்…. மொத்தத்தில் முதல் பாதி
ஆங்காங்கே வரும் சந்தானத்தின் காமெடியால் உங்கள் மனதை கொஞ்சம் இலகுவாக்கும்… இரண்டாம்
பாதி நம்மை முட்டாளாக நினைத்து ஒருவன் இஷ்டத்துகு கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்..
நாமும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே என்று உங்கள் மேல் உங்களையே கோபம் கொள்ளச்
செய்து உங்கள் மனதை கரடு முரடாக மாற்றிவிடும்…
தங்கள் தள செய்திகள் அனைத்தும் அருமை tamilcinemafire.com
ReplyDeleteமிக்க நன்றி ஷாலினி...
Delete