Wednesday 10 April 2013

சென்னையில் ஒரு நாள்:


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயந்திரகதியான வாழ்க்கையை வெளிப்புறம் இருந்து தீர்மானிக்கும் சக்தியாக பல விசயங்கள் செயல்படுகின்றன. அதில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக மாறி இருப்பது சாலைகளும், அதில் நாம் நாள்தோறும் செய்யும் பயணங்களும். இரு வாகனங்களுக்கு இடையேயான சிறு மோதல், சிக்னல் இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு குழப்பம், தவிர்க்கமுடியாமல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், நமக்கு சம்பந்தமே இல்லாமல் யாருக்கோ ஏற்பட்ட ஒரு விபத்து இப்படி சாலைகளில் ஏற்படும் எந்தவொரு அசாத்தியமான சம்பவங்களும் நம்முடைய வாழ்க்கையை ஏதோவொரு விதத்தில் நம்மையும் அறியாமல் மாற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு விபத்தால் மாறிப் போகும் சிலரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது இந்த “சென்னையில் ஒரு நாள்”

சென்னையில்  2008 செப்டம்பர் 20ல் ஒரு விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த சிறுவன் ஹிதேந்திரனின் இதயம் அவரது மருத்துவ பெற்றோர்களின் அனுமதியுடன் பெங்களூரைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்கு மாற்றிப் பொருத்தப்பட்டது. இது இந்திய அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் இருதய மாற்று அறுவைசிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்ட ஹிதேந்திரனின் இருதயத்தை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முகப்பேரு மருத்துவமனைக்கு எப்படி விரைவில் கொண்டு செல்வது என்ற தயக்கத்தில் மருத்துவக்குழு போலீசை நாடியது. போலீசின் உத்தரவின்படி ஆயிரம்விளக்கு பகுதியிலிருந்து முகப்பேறு செல்லும் பகுதியில் மொத்த டிராபிக்கும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஹிதேந்திரனின் இருதயம் 14கீமி தொலைவை வெறும் பத்து நிமிடத்தில் போலீஸ் துணையுடன் கடந்து முகப்பேறு மருத்துவமனையை அடைந்தது. இது வரலாறு.

இதனை 2010ல் மலையாளத்தில் ட்ராபிக் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். அதே திரைப்படத்தை இப்போது ”சென்னையில் ஒரு நாள்” என்ற பெயரில் தமிழ்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு பொறுக்கி கும்பல் காரில் செல்லும் ஒரு பெண்ணை டீஸ் செய்து கொண்டே பைக்கில் துரத்துகின்றனர். அந்தப் பெண் பதற்றத்தில் எதிரே வந்த ஒரு பைக்கில் மோதிவிடுகிறாள். இது ஒரு எபிசோட்.

லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு டிராபிக் கான்ஸ்டேபிள் பல அவமானங்களுக்குப் பின்னர் ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் மீண்டும் வேலையில் சேருவதற்காகச் சென்று கொண்டிருக்கிறார். (சேரன்) இது ஒரு எபிசோட்.

தமிழகத்தின் மிக முக்கியமான ஸ்டார். அவரது மகளோ தான் செஸ் போட்டியில் வென்ற பதக்கங்களைக் காட்ட ஆவலோடு இருக்கிறாள். அவர் அதற்கென்று நேரம் ஒதுக்காமல் விழாக்களிலும், மீட்டிங்கிலும், சூட்டிங்கிலும் மூழ்கிக் கிடக்க.. தன் மகளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள் ஒரு தாய். இது ஒரு எபிசோட்.(பிரகாஷ்ராஜ், ராதிகா)

தன் காதலியைப் பார்த்து டூயட் பாடிய வாயோடு, தான் புதிதாக சேர்ந்த வேலையில் இன்றைக்கு ஒரு பிரபலமான மனிதரை எடுக்கப் போகும் நேர்காணலுக்கு, தன் நண்பன் மற்றும் அம்மாவோடு அமர்ந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கிறான் கார்த்திக் என்ற இளைஞன். இது ஒரு எபிசோட்.

தன் மனைவிக்கு கல்யாண நாள் பரிசாகக் கொடுக்க ஒரு புதியகாரை ட்ரையல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராபின் என்னும் ஒரு மருத்துவர் அவரோடு வரும் அவரது நண்பன் தன் போனில் பீச்சில் பழக்கமான ஒரு பெண்ணுடன் வரம்புமீறி பேசிக் கொண்டிருக்கிறான். இது ஒரு எபிசோட் (பிரசன்னா, இனியா).

இந்த நெருக்கடியான சூழலில் கார்த்திக் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைய, அவரது இருதயத்தை பிரபல நடிகரான பிரகாஷ்ராஜின் மகளுக்கு பொருத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முதலில் மறுக்கும் கார்த்திக்கின் பெற்றோரான லஸ்மி ராமகிருஷ்ணனும், ஜெயப்பிரகாஷும், பின்னர் சம்மதம் தெரிவிக்க, எல்லாம் தயாராகும் நேரத்தில் க்ளைமேட் சரியில்லாத காரணத்தால் இருதயத்தை சாலைவழியாக கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவும் சென்னையில் இருந்து வேலூருக்கு. மொத்தம் 170கீமி தூரம். வெறும் 11/2 மணி நேரத்தில் கடக்க வேண்டிய கட்டாயம்.

இது சாத்தியமில்லாத முயற்சி என்று முட்டுக்கட்டைப் போடுகிறார் சிட்டி கமிஷ்னர் சரத்குமார். இறுதியில் அவரும் சம்மதிக்க யார் இந்த தூரத்தை அசுர வேகத்தில் கடப்பது என்ற சிக்கல் வருகிறது. தன் களங்கத்தை துடைக்கும் வாய்ப்பாக இதை எடுத்துக் கொண்டு முன் வருகிறார் சஸ்பெண்டு செய்யப்பட்டு மீண்டும் ட்யூட்டியில் சேர்ந்த சேரன். போலீஸ் தரப்பில் சேரன், டாக்டர் தரப்பில் பிரசன்னா, இறந்த கார்த்திக்கின் நண்பன் இவர்கள்டன் பயணம் தொடங்குகிறது. உச்சக்கட்டத்தில் பயணம் சென்று கொண்டிருக்கும் போதே வண்டியுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் கடக்க வேண்டிய இடத்திற்கும் வண்டி வந்து சேரவில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் போலீஸ் முழிக்க.. நிறுத்தி வைக்கப்பட்ட ட்ராபிக்கால் மக்கள் கொதித்தெழ.. என்ன செய்வது என்று தெரியாமல் திட்டத்தை கைவிடும் நிலைக்கு சரத்தின் டீம் தள்ளப்பட… அடுத்து என்ன ஆனது என்பது சினிமாத்தனம் கலந்த திக்திக் நிமிடங்கள்.

பலர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக ஜெயப்பிரகாஷ், பிரகாஷ்ராஜ், லஷ்மி ராமகிருஸ்ணா ஆகியோரைச் சொல்லலாம். தன் மகனின் இருதயம் போலீஸ் வேனில் வைத்து கொண்டு செல்லப்படுவதை தூரத்தில் ஒரு பிரிட்ஜ் மீது நின்று கொண்டிருக்கும் தங்கள் காரில் இருந்து பார்த்துக் கொண்டே உடைந்து போய் அழும் இடத்தில் இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அதுபோல ஐசியூவில் இருக்கும் கார்த்திக்கை ஒருவர் மட்டும் பார்க்கலாம் என்று சொல்லும் போது கார்த்தியின் நண்பன் கார்த்தியின் காதலியை உள்ளே போகச் சொல்ல.. அவள் யார் என்றே தெரியாமல் கார்த்திக்கின் பெற்றோர் பார்க்கும் காட்சியும், அவள் ஏதும் சொல்லாமல் கடந்து சென்று உள்ளே நுழைவதற்கு முன் கார்த்திக்கின் பெற்றோரை திரும்பிப் பார்க்கும் காட்சியும் கவித்துவமானது. பிரகாஷ்ராஜின் நடிப்பை சொல்ல வேண்டுமென்றால் தன் மகளின் டீச்சர் யார் என்பதை அவளிடம் கேட்டே தெரிந்து கொண்டு, கேமராவைப் பார்த்து பேசும் காட்சியில் அட்டகாசமான நடிப்பு….


உடல் உறுப்பு தானம் என்று சொல்லப்படும் ஒரு முக்கியமான விசயத்தை பேசு பொருளாக கொண்டு வந்திருப்பதாலேயே இந்த திரைப்படம் ஒரு தவிர்க்கமுடியாத திரைப்படம் ஆகிறது. முதலில் கூறியபடி வரும் எபிசோடுகள் ஒரே சீராக இல்லாமல் இடைத்தாவல்கள் இருப்பதால் அதன் வீரியத்தை முழுவதுமாக அவை பிரதிபலிப்பது இல்லை. அந்த நான் லீனியர் கதை சொல்லும் முறையை தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினர் உடல் உறுப்பு தானம் என்னும் விசயத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்ததாலோ என்னவோ, விபத்து நடப்பதற்கு முக்கியக் காரணமான செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுவதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள் போலும். வாகனத்தை அசுர வேகத்தில் ஒட்டிச் செல்லும் சேரன் கூட கமிஸ்னருடன் மொபைல் போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுகிறார். தவிர்த்திருக்கலாம்.

கடைசி இருபது நிமிடத்தில் காட்டப்படும் சூர்யா சம்பந்தப்பட்ட ஜிந்தா பகுதி காட்சிகள் எல்லாம் பக்கா சினிமாத்தனம். இவர்கள் பாய்ந்து பாய்ந்து வண்டியில் ஏறுவதையும் இறங்குவதையும் பார்க்கும் போது இவர்கள் யாருக்காவது ஆக்சிடெண்ட் ஆகிவிடுமா என்ற பயம் கவ்விக் கொள்கிறது. இருப்பினும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சீரியஸான சோகமான கதைக்களனைக் கொண்ட இது போன்ற திரைப்படத்துக்கு கொஞ்சமேனும் சினிமாத்தனம் தேவை என்பதால் அவைகளைப் பொறுத்துக் கொள்ளலாம். இது போன்ற சீரியஸான படத்துக்கும் கூட்டம் வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

No comments:

Post a Comment