Saturday 20 April 2013

உதயம் NH-4:


வெற்றிமாறனின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் வந்திருக்கும் படம். வெற்றிமாறன் என்ற ப்ராண்ட் நேம் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஆனால் இந்தப் படம் வெற்றிமாறனுக்கு ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும். வெற்றிமாறனால் முதன்முதலில் எழுதப்பட்ட கதை. ”தேசிய நெடுஞ்சாலை” என்ற பெயரில் சூட்டிங் தொடங்கப்பட்டு, இரண்டொரு நாட்களில் கைவிடப்பட்டதாகக் கேள்வி. அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களான பொல்லாதவன், ஆடுகளம் இரண்டும் தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளமாக மாறிப் போனதால், முதலாவது செய்த கதையை தன் உதவியாளரை இயக்கச் சொல்லி பக்கபலமாய் இருந்திருக்கிறார். இது பாராட்டுக்குரிய விசயம்தான் என்றாலும் படம் பாராட்டுக்குரிய படமாக அமையாது போனது தான் வருத்தம். இதன் இயக்குநர் மணிமாறன்.

மேற்சொன்னது போல வெற்றிமாறன் என்ற பெயர் படத்தின் ப்ரோமோவுக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது முதல் இரண்டு நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளைக் கண்டாலே தெரியும். அதே வேளையில் வெற்றிமாறன் கூட்டணி என்பதால் என் போன்ற நபர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு இருந்தது. ஏனென்றால் அவருடைய முந்தைய படங்களை எடுத்துப் பார்த்தோமானால், உதாரணமாக பொல்லாதவன், ஆடுகளம் இரண்டுமே மனித மனங்களில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை மைய இலையாகக் கொண்டு இளைக்கப்பட்ட திரைப்படங்களாக இருக்கும். அதுதான் அவரது செய்நேர்த்தி. ஆனால் உதயம் NH-4ன் மைய இலையோ, தமிழ் சினிமா பல நூற்றாண்டுகளாக கிழித்து, தோரணம் கட்டி, தொங்கவிட்டு அலங்கோலமாக்கிய ஒரு சாதாரண காதல் கதை என்பது தான் இங்கு வன்சோகம்.

இதை வெற்றிமாறன் என்ற பெயரை மறந்துவிட்டு மணிமாறனின் முதல் படமாக அணுகினால் இந்தளவுக்கு நமக்கு ஏமாற்றம் தோன்றாது என்பது என் அனுமானம். கதை இதுதான். ஆரம்பத்தில் பெங்களூரில் முக்கியமான ஒரு அரசியல்வாதியின் மகள் கடத்தப்படுகிறாள், அவள் ஹீரோயின். கடத்தியவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் ஹீரோ இமேஜில் வளைய வரும் சித்தார்த். போலீஸ் அரசியல் வாதியின் வேண்டுகோளின் படி மறைமுக தேடுதல் வேட்டையை தொடங்க.. வேட்டையை தொடங்கும் போலீஸோ ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். சித்தார்த் ஏன் ஹீரோயினைக் கடத்தினார் என்பதை ப்ளாஸ்பேக் யுத்தியை வைத்து, ஹீரோவின் நண்பன் மற்றும் கடத்தப்பட்ட ஹீரோயின் இருவரும் விவரித்து கூறுவது போல் கதையமைத்து இருக்கிறார்கள். இதில் ஹீரோயினை ஹீரோ ஏன் கடத்தினார் என்பதை நீங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கதை முடிந்தது.

கடத்தியது சித்தார்த் என்னும் போதே அங்கு பாதி சஸ்பென்ஸ் முடிந்து விடுகிறதே… கடத்திய ஹீரோயினை அவர் கற்பழிக்கப் போகிறாரா..? இல்லை விபச்சாரத்தில் தள்ளப் போகிறாரா..? இல்லை மிரட்டி பணம் பறிக்கப் பார்க்கிறாரா..? அல்லது கொல்லத்தான் முனைகிறாரா…? அல்லது துரத்துகிற போலீஸ் தான் சித்தார்த்தை கொன்றுவிடுமா..? இது எதாகவும் கண்டிப்பாக இருக்காது. இருக்கவும் முடியாது. ஏனென்றால் இது தமிழ் ஹீரோயிச சினிமா.

முதல்பாதியாவது நண்பனின் டாவு, திசை திரும்பி சித்தார்த்தை வளைய வரும் இடங்களிலும், சித்தார்த்தின் நண்பனாக வரும் இரண்டு நபர்களின் இயல்பான நடிப்பினாலும் ஆங்காங்கே சற்று கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதிதான் முழுக்க முழுக்க தமிழ் ஹீரோயிச சினிமாவாகப் போய் நம்மை மிகவும் படுத்தி எடுக்கிறது. இருப்பினும் கமிஷ்னரிடம் நன்னடத்தை போலீஸ் அவார்ட்டு வாங்கிய கான்ஸ்டேபிள் கேரக்டர் சற்றே சுவாரஸ்யம்.

இவை தவிர்த்துப் பார்த்தால், பெங்களூரு பப்களில் புகுந்து அட்டுழியம் செய்த கன்னட ரட்சண வேதிகே அமைப்பினரை மறைமுகமாக சாடி இருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம். ஆனால் அந்த அடாவடி காட்சியிலும் ஹீரோ அனைவரையும் அடித்து துரத்திவிட்டு, ஹீரோயினையும் அவள் நண்பியையும் காப்பாற்றி, அதுவே ஹீரோயினுக்கு மீண்டும் ஹீரோ மேல் காதல் வருவதற்கான காரணமாக வைத்ததெல்லாம் பட்டினத்தார் கால பழசே…..!

காதலில் சேர்ந்துவிட துடிக்கும் ஜோடி, அவர்களைத் துரத்தும் ஒரு போலீஸ் ஆபிஸர், அவருக்கு வீட்டுக்குப் போக வேண்டிய நெருக்கடி, அதை நினைவு படுத்துவது போல் அடிக்கடி வரும் போன்கால்… இதையெல்லாம் பார்த்த போது சற்று மைனாவின் சாயல் தெரிந்தது.. அது காட்டோர மைனா, இது ரோட்டோர மைனா போலும்… விதிவிலக்காக இங்கு மகளுக்கு ஒரு பணக்கார அரசியல்வாதி அப்பா, கடத்தப்பட்ட பொண்ணு மைனர், ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ண மாமனும், நண்பர்கள் பட்டாளமும்..  இந்த இத்யாதிகள் புதுசு.

இது போக ”கதவை தட்டிட்டு வரச் சொன்னான் பாருங்க சார்…” என்பதும் “நான் பேசுறதுக்கு மட்டும் வரல…” என்று சொல்லி ஹீரோயின் சித்தார்த்தை நெருங்கும் காட்சியும், அதற்கு சித்தார்த் கைலியை ஏத்திக் கட்டிக் கொண்டு பின்னால் திரும்பி கொடுக்கும் ரியாக்சனும், கடைசி க்ளைமாக்ஸில் கே.கே. மேனன் சீரியஸாக க்ளாஸ் எடுக்கும் போது, அதை அலட்சியமாகப் புறக்கணித்து ஹீரோவுக்கு லிப் லாக் கிஸ் அடிக்கும் காட்சிகளும் அப்ளாஸ் அள்ளுகின்றது. ஆங்காங்கே வரும் மொபைல் சேசிங், மற்றும் பெங்களூரு தொடர்பான டீடையிலிங் வசீகரிக்கிறது.

கே.கே. மேனன் சர்வசாதாரணமாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தூக்கி சுமந்து இருக்கிறார். யானைப் பசிக்கு சோளப் பொறி. ஜி.வி இசையில் கானா பாலா பாடும் பாடலும், யாரோ இவன் பாடலும் ஓகே ரகம்.. பிண்ணனி இசை பெரிதாக ஒன்றும் இல்லை. வேல்ராஜின் கேமரா வழக்கம் போல் நேர்த்தியான பணியை செய்திருக்க… கூடுதல் பணியாக நடிக்கவும் செய்திருக்கிறார். மொத்தத்தில் படம் ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய வெற்றிமாறனின் படம் இல்லை… அவரது உதவியாளர் மணிமாறனின் ஒரு ”தேசிய நெடுஞ்சாலை காதல் கதை…” அவ்வளவே.

No comments:

Post a Comment