Sunday 31 March 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா:


வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக் கொண்டு இருக்கும் இரண்டு நண்பர்கள். இவர்களுக்கு அரசியலில் சாதிக்க வேண்டும் என்று உயர்ந்த….! லட்சியம். இவர்கள் இருவரையும் வழக்கம் போல எந்தக் காரணமும் இன்றி காதலிக்கும் இரண்டு நாயகிகள்., காதலிலும் சிக்கல், அரசியல் ஆசையிலும் சிக்கல். இரண்டும் கைகூடியதா என்பது மீதி கதை..

இதெல்லாம் ஒரு கதை என்று கேட்பவர்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன் இதுதான் கதை. அப்பா அம்மா பேச்சை மதிக்காமல் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் நண்பர்களாக விமலும் சிவகார்த்திகேயனும். இவர்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உடன் சுற்றித் திரிபவராக வரும் சூரி, வீட்டோடு மாப்பிள்ளை. மாமனாரிடம் பாக்கெட் மணியோடு பக்கெட் பக்கெட்டாக வசவுகளையும் வாங்கிக் கொண்டு எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் கதாபாத்திரம். இவர்களுக்கு இன்னும் இரண்டு அல்லக்கைகள் வேறு.

தேனீ என்ற செல்லப்பெயருடன் வளைய வருகிறார் விமல். பில்லா படம் வெளிவந்த காலத்தில் பிறந்ததால் இவருக்கு பில்லா என்று இன்னோரு செல்லப் பெயர் வேறு. உண்மையான பெயர் இன்னொன்று உண்டாம். அது கேசவனாம்…!? இதில் K7 என்று புதிய கண்டுபிடிப்பு வேறு. சிவகார்த்திகேயன் கதையை பார்த்தால் சிறுவயதில் சளி பிடிக்கிறது என்று அவரது தாய் திருநீறை நெற்றியில் பட்டையாக அடிக்க ஆரம்பித்து, அவர் பழநி மழை முருகன் போல் இருந்ததால் அவருக்கு பேர் முருகனாம்…. முருகா……!!!!!!!!!!!!  

விமலுக்கு ஜோடியாக பிந்துமாதவி. ஏன் விமலை காதலிக்கிறார் என்றே தெரியாமல் காதலித்துக் கொண்டு இருக்கிறார். இதில் ஆங்காங்கே விமலோடு மூன்றாந்தரத்திலான சண்டை காட்சிகள் வேறு. படு கேவலமாக இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா. இவரைக் காட்டும் போதெல்லாம் ஜெராக்ஸ் கடையை திறந்து வைத்து, தூசி தட்டிக் கொண்டே இருக்கிறார். கடை ஷட்டரை திறந்து வைத்து உதவி செய்த ஒரே காரணத்துக்காகத்தான் இவரும் சிவகார்த்திகேயனை காதலிக்கத் தொடங்குகிறார். இரண்டு கதாநாயகிகளுமே இரண்டாவது காட்சியிலேயே ஹீரோவை திரும்பித் திரும்பி பார்த்து சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பின்பு முறைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஏன் என்றுதான் கடைசி வரை தெரிவதில்லை. அப்படி ஒரு அசத்தலான கதாபாத்திரம். இது பசங்க படம் தந்த பாண்டியராஜ் தானா என்று சந்தேகம் வருகிறது.

ஆனாலும் படத்தை காப்பாற்றுவது ஆங்காங்கே டைமிங்கில் வரும் காமெடி மட்டுமே. அதற்கு பல இடங்களில் சிவகார்த்திகேயனும் சூரியும் கேரண்டி தருகிறார்கள். ஒன்றிரண்டு காமெடிப் படங்கள் வெற்றி பெற்றதால் எல்லாரும் காமெடி ஸ்கிரிப்டை நோக்கி திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கதை என்ற  வஸ்து பெயரளவில் கூட இல்லாமல் கதை செய்வது தான் நம்மை நெளிய வைக்கிறது. நானும் கூட படம் பார்க்கும் போது குறைந்தது பத்து இடங்களிலாவது சிரித்து இருப்பேன். ஆனால் அது எந்த இடங்கள் என்று எழுதும் வரைக்கும் கூட அவை மனதில் நிற்காமல் போனது தான் சோகம்…

கதை வேண்டாம். சோகம் வேண்டாம். சுவாரஸ்யம் வேண்டாம். லாஜிக் வேண்டாம். எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆங்காங்கே சிரிக்க மட்டும் வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு உடையவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான சரியான சாய்ஸ் இந்த ”கேடி பில்லா கில்லாடி ரங்கா”

கலகலப்பு> கேடி பில்லா கில்லாடி ரங்கா > கண்ணா லட்டு தின்ன ஆசையா

No comments:

Post a Comment