Monday 25 March 2013

வாடிவாசல்



      

ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
பதிப்பகம்: காலச்சுவடு, எழுத்துப் பிரசுரம்
வரிசை: குறுநாவல்.

இலக்கியப் பெருவெளியில் ஒரு முக்கியமான படைப்பாகக் கருதபடுவது இந்த வாடிவாசல் என்னும் குறுநாவல். செல்லாயி சல்லிக்கட்டில் நடக்கும் மாடணையும் போட்டியில் மாடணைய வந்த பிச்சு என்கின்ற இளைஞனுக்கும், அவன் கண்டிப்பாக அடக்க வேண்டும் என்னும் ஆதங்கத்துடன் வந்த வாடிபுரம் ”காரி” என்னும் காளைக்கும் இடையில் நடக்கும் ஜீவ-மரண போராட்டம் தான் இந்த வாடிவாசல்.

இந்த நாவல் எழுதப்பட்ட விதம் என்னை பெரிதும் ஈர்த்தது. ஒரு சிறப்பான திரைக்கதையின் அடிப்படை கூறுகளைக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டு இருக்குமோ என்று ஐயுறத் தோன்றுகிறது. மொத்தமே 76 பக்கங்களைக் கொண்ட இந்த குறுநாவலைப் எடுத்த எடுப்பில் படித்து விட முடியும். ஆனால் முடிக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா என்கின்ற ஒரு ஏக்கத்தை உண்டாக்குவதே இந்த நாவலின் வெற்றி.

உசிலனூரில் இருந்து மாடணைய வந்திருக்கும் பிச்சியும், அவனது மச்சான் மருதனும் செல்லாயி சல்லிக்கட்டு வாடிவாசலில் நிற்பதில் இருந்தே ஆரம்பமாகிறது நாவல். அதைத் தொடர்ந்து அறிமுகமாகும் அந்த வயதான கிழவனும், ஜமீந்தாரும், காரி காளையும், முருகுவும் ஒரு விறுவிறுப்பான ஜல்லிக்கட்டை விட இந்த நாவலை விறுவிறுப்பாக எடுத்துச் செல்கின்றனர். எந்த இடத்திலும் கொஞ்சம் கூட சுணக்கம் ஏற்படுத்தாத நாவல்.

இந்த நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துகின்ற இடம் மிகவும் நுட்பமானது. உதாரணமாக முருகு என்கின்ற அந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் இடத்தைச் சொல்லலாம். இது போன்ற விடயங்கள் தான் ஒரு சிறப்பான திரைக்கதைக்கான தோற்றத்தை நாவலுக்கு கொடுக்கிறது. அதுவரைக்கும் மாட்டுக்கும் மனிதனுக்குமான மோதலை, கெளரவம் என்ற பெயரில் மனிதனுக்கும் மனிதனுக்குமான போட்டியாக, ஒரு மனிதனின் சார்பாக போட்டியாளனாக அந்த இடத்தில் மாடு கலந்து கொள்கிறது என்னும் சேதியை சொல்லாமல் சொல்லும் நுட்பம் அலாதியானது. அது போக திட்டிவாசல் தொடர்பாண விவரணைகள், ஒவ்வொரு மாடை பற்றிய நுட்பங்கள், அதை அவர்கள் வெற்றி அடைய கையாளும் தந்திரங்கள், அங்கு மாடு அணைபவர்களுக்குள் ஏற்படும் போட்டி, பொறாமை, ஜமீந்தாரின் அடையாளமாக, மரியாதையாக கருதப்படும் “வாடிபுரம் காரி காளை” என அத்தனை விவரங்களும் துல்லியமானவை.

இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் பார்க்காதவர்கள் இந்த நாவலைப் படித்தாலே போதும். பல ஊர் ஜல்லிக்கட்டை சில பக்கங்களில் கடந்துவிட்ட திருப்தியை அடைவார்கள் என்பது உறுதி.

ஒத்தைக்கு ஒத்தையாகக் கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுசனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் இந்த வாடிவாசல். இதனை ஒரு வீர விளையாட்டு என்று ஏற்றுக் கொள்வதில் சில  சிக்கல் இருக்கிறது. ஒரு விளையாட்டு என்றால், அது ஒரு விளையாட்டு என்று இருதரப்பினருக்குமே தெரியும். ஆனால் இங்கு எதிராளியாக இறங்கும் காளைக்கு இது ஒரு விளையாட்டு என்பது தெரிவதற்கு வாய்ப்பேயில்லை.

ரோசம் ஊட்டப்பட்டு வாடிவாசலில் மூக்கணாங்கயிறை உருவி வெளியேற்றப்படும் காளைகள் என்னும் மிருகங்கள் இதை ஒரு விளையாட்டாகப் பார்ப்பதில்லை. ஆனால் தமிழ் சமூக வரலாற்றில் “ஏறு தழுவதல்” என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் ஆயர்கள் வாழும் முல்லை நிலத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காட்சிகள் வீரவிளையாட்டுகளாக வர்ணிக்கப்படுகின்றன..
எனினும் சற்று கூர்ந்து பார்த்தால், இந்த விளையாட்டில் யார் சற்று கவனக் குறைவாக இருக்கிறார்களோ அவர்களின் உயிர் பறிக்கப்படும்.. அது மாடாகவும் இருக்கும்.. மனிதனாகவும் இருக்கும்.. அப்படி இருக்கையில் இதனை விளையாட்டு என்று சொல்வதை விட வேட்டை என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும்.

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்ற காலக்கட்டத்தில் அதனை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ வழக்காட என் மனம் ஒப்பவில்லை. இருப்பினும் ஒரு விசயம் முரணாகத் தெரிகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவது பெரும்பாலும் ஜீவகாருண்ய நேசர்கள் தான் இதனை மிருகவதை என்று சொல்லி தடை கோருகிறார்கள். ஆனால் இந்த வாடிவாசலை படித்தால் தெரியும்.. இதில் மிருகவதையை விடவும் மனிதவதை அதிகம் என்பது…!

No comments:

Post a Comment