Saturday 6 September 2014

இரும்பு குதிரை:


ஒரு வணிக வெற்றியை எதிர்நோக்கி எடுக்கப்படும் திரைப்படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சமீபத்திய மற்றுமொரு உதாரணம் தான் இந்த இரும்புக் குதிரை.. இந்த திரைப்படத்தை எந்த நம்பகத்தின் அடிப்படையில் ஓடும் என்று இயக்குநரும், இதன் நாயகனும், தயாரிப்பாளர் தரப்பும் நம்பி இருக்கும் என்றும், அந்த நம்பிக்கைகள் எல்லாம் எந்தெந்த ஓட்டைகளின் வழியாக சறுக்கியது என்பதையும் கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம் என்று இருக்கிறேன்…. இது எது தொடர்பான படம் என்பதை தனிப்பட்ட முறையில் விளக்கத் தேவையில்லை.. இதுவொரு மோட்டார் பந்தய வீரனைப் பற்றிய திரைப்படம் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு, படத்தின் தலைப்பின் மூலமும், படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர்கள் மூலமும் படம் பார்ப்பதற்கு முன்னரே தெரிந்திருக்கும்… இதை கொஞ்சம் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்…


இப்போது படத்தின் சுவாரஸ்ய முடிச்சுகள் என்று எதையெல்லாம் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளரும் நினைத்திருக்கக் கூடும் என்பதைப் பற்றி பார்க்கலாம்… ( இத்திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட ஒரு வாரம் ஆகப் போகிறது, பெரும்பாலான தியேட்டர்களில் தூக்கப்பட்டும் விட்டது, மேலும் ஓரிரு தியேட்டர்களில் ஓரிரு காட்சிகள் மட்டுமே ஓடிக் கொண்டு இருக்கிறது, எனவே இந்த திரைப்படத்தின் காட்சிகளின் சுவாரஸ்யத்தை கெடுக்கும்படி விமர்சன விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது, அதன் வணிகத்தை பாதிக்காது என்ற நம்பிக்கையுடன் தான் இதனை முன்னெடுக்கிறேன்…) அவர்கள் கீழ்கண்ட விசயங்களையெல்லாம் சுவாரஸ்யமான முடிச்சுகள், படத்தின் வெற்றிக்கு உதவக்கூடும் என்று நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.. அவையாவன முறையே… 1) நாயகன் ஒரு மோட்டார் பந்தய வீரன் என்பதை ஆடியன்ஸ்க்கு தாமதப்படுத்தி தெரிவிப்பது 2) நாயகன் புதிதாக வாங்கும் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் உள்ள பிண்ணனி 3) நாயகனுக்கும் வில்லனுக்கும் நேரடிப் பகை இல்லை என்பதைப் போல் காட்டி விட்டு, நேரடி பகை தான் என்பது போன்ற முடிச்சை அவிழ்ப்பது….

பெரும்பாலும் மேற்சொன்ன இந்த மூன்று சுவாரஸ்யங்கள் தான் மேற்சொன்ன அந்த மூவரையுமே மகிழ்விக்க செய்து கதையின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்திருக்கும்…. அதிலும் குறிப்பாக அந்த இரண்டாவது சுவாரஸ்யமான முடிச்சாக ஒரு விசயத்தை குறிப்பிட்டு இருக்கிறேனா… அது உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான புள்ளி தான்… ஏனென்றால் அது இன்னும் சில சுவாரஸ்யங்களையும் தனக்குள்ளே கொண்டுள்ளது… அவை என்ன வென்றால், அந்த பைக்கை இங்கு விட்டுச் சென்றவனும், நாயகன் தான், வாங்க வந்திருப்பதும் நாயகன் தான், அந்த பைக்கால் ஏற்கனவே ஒரு பிரச்சனை இவன் வாழ்க்கையில் நடந்திருக்கிறது… இப்பொழுது இந்த பைக்கால் மற்றொரு பிரச்சனை இவன் வாழ்க்கையில் நடக்கப் போகிறது, இந்த பைக்கை இவன் வாங்கியதால், இவனது வாழ்க்கையில் ஒரு உறவு இவனை விட்டு பிரிந்தது…. இவன் இந்த பைக்கை வாங்காவிட்டால், இன்னொரு உறவும், தன் உறவை முறித்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதாக பல உள்ளடுக்கு சுவாரஸ்யங்களை கொண்டது அந்த இரண்டாவது சுவாரஸ்ய முடிச்சி…. சரி… இவ்வளவு சுவாரஸ்யமான முடிச்சுகளை திரைப்படம் கொண்டிருந்தாலும் அது ஏன் நல்ல காண்பனுபவத்தைக் கொடுக்காமல், வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது…. என்பதையும் பார்க்கலாம்….

சரி… முதல் சுவாரஸ்ய முடிச்சி சறுக்கி விழுந்த ஓட்டை எது என்று பார்ப்போமா…? இந்த முடிச்சி சறுக்கி விழுந்தது ஒரு ஓட்டையின் வழியாக அல்ல… ஓராயிரம் ஓட்டைகளின் வழியாக…. முதல் பத்தியில் சொல்லியது போல் படத்தின் தலைப்பே, டீசர், போஸ்டர் என பல விசயங்கள் சொல்லிவிட்டன… நாயகனொரு மோட்டார் பந்தய வீரன் என்று…. ஆடியன்ஸ்க்கு அப்பட்டமாக தெரிந்த இப்படிப்பட்ட ஒரு விசயத்தை பொத்தி பொத்தி வைத்து லேட்டாக ஓப்பன் செய்தால், ஆடியன்ஸ்க்கு காட்சிகளில் சுவாரஸ்யம் வராது.. வெறுப்பு தான் வரும்…. ஒரு வேளை திரைக்கதையை இப்படி அமைத்திருந்தால், அதாவது, நாயகனுக்கு உண்மையிலுமே பைக்கை பற்றி ஒன்றுமே தெரியாது…. அவன் கொஞ்சம் கொஞ்சமாக பைக்கை பற்றி தெரிந்து கொண்டு ஒரு சாம்பியனாக மாறுகிறான் என்பது போல் வைத்திருந்தால், ஒரு வேளை படம் ஓடி இருக்கலாம்… அதற்கான வாய்ப்பும் திரைக்கதையில் இருந்திருக்கிறது… ஹீரோ படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை மோட்டார் பந்தய வீரனாக இருந்தால் என்ன….?? க்ளைமாக்ஸில் மட்டும் அவன் மிகச்சிறந்த மோட்டார் பந்தய வீரனாக மாறினால் என்ன…?? இரண்டுக்குமே டைட்டிலும் டீசரும் பொருந்தத்தான் போகிறது…. இப்படி பார்வையாளர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு இரண்டு விதமான திரைக்கதை சரடு கதையிலேயே இருந்தாலும், நீங்கள் இரண்டு விதமாக கதை போவதற்கு சாத்தியங்கள் உண்டு என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்… கதை இப்படித் தான் போகிறது… மற்றொன்றை மறந்துவிடுங்கள் என்று சம்மட்டியால் அடித்துக் கூறுகிறது… அந்த முதல் காட்சி…. காட்சி விவரம் கீழே..

“ சிக்னல் கம்பத்தில் ஒரு கழுகு அமர்ந்திருக்க…. சில காக்கைகள் ரோட்டில் ஆங்காங்கே அமர்ந்திருக்க….. அமைதியாக இருக்கும் அந்த ரோட்டின் அமைதியை கிழித்துக் கொண்டு பறந்து வருகிறது ஒரு பைக்… அதில் இரண்டு பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள்… காக்கைகள் சிதறி பறக்கிறது….. இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கழுகு பறந்து வந்து டூவிலரின் ஹேன்பாரில் அமர.. பைக் சறுக்கி விழுக… டமால் என்று சத்தம்……. நாயகன் கனவில் இருந்து எழுகிறான்…. ‘ எங்கப்பா எங்கூடவே இருக்கிற மாதிரியே இருக்கு…’ என்று வேறு சொல்கிறான்…

இதுதான் முதல் காட்சி… இது போதாதென்று அடுத்த காட்சியில் அவனது அப்பா இறந்துவிட்டார் என்பதும், அவன் பைக் வேகமாக ஓட்ட பயப்படுகிறான் என்பதும் வேறு வருகிறது… இப்படி காட்சிகளின் பின்னல் இருக்கும் போது குழந்தை கூட சொல்லிவிடும் கதையில் என்ன நடக்கப் போகிறது என்று…. இதுதான் முதல் சுவாரஸ்யம் வழுக்கி விழுந்த ஓராயிரம் ஓட்டையின் பிண்ணனி... இரண்டாவது சுவாரஸ்யமும் இது போன்ற ஒரு காட்சியின் ஓட்டையில் தான் வலுக்குகிறது…. அந்தக் காட்சி…
நாயகனுக்கு பைக் தேர்வு செய்ய… நாயகியும் வருகிறாள்… எல்லா பைக்குகளையும் கடந்து சென்று ஒரு ஷட்டருக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ள துணி போட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பைக்கை அவளது கண்கள் கண்டுகொள்கிறது… அந்த பைக்குக்கு ஒரு க்ளோசப் வேறு… வித்தியாசமான மியூசிக் வேறு… இது போதாதென்று நாயகன் வேறு எனக்கு இந்த பைக் பிடிக்கவில்லை என்று மறுக்கிறான்… இது போதாததா..? இந்த பைக் எந்த பைக் என்று யூகிக்க… இந்தக் காட்சியால் தான் அந்த இரண்டாவது சுவாரஸ்யமும் வலுவிழக்கிறது… இந்த இரண்டு ஓட்டைகளில் ஏதேனும் ஒன்றை அடைத்திருந்தால் கூட படம் ஏதோ தேறி இருக்கும்…. அப்பொழுதும் கூட வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.. காரணம் முதல் பாதியில் கதை இம்மி கூட நகராதது…. முதல் பாதி கதை இதுதான்… “ நாயகன் கனவு காண்கிறான்.. பைக் ஓட்ட பயப்படுகிறான்… பைக் மெதுவாக ஓட்டி திட்டு வாங்குகிறான்.. ஹீரோயினை பார்க்கிறான்… காதலிக்கிறான்…. அவளை இம்ப்ரஷ் செய்ய அவள் ஆசைப்பட்ட ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்குகிறான்… இதில் என்ன கதை இருக்கிறது…?? அது நகருவதற்கு…


இதிலேயே நாம் சோர்ந்து போய் இருக்கும் போது, கதையின் சுவாரஸ்யத்து ஒரு வில்லன் வேண்டுமே என்று அவனை தேசம் விட்டு தேசம் கொண்டு வருகிறார்கள்…. வில்லன் வந்த பின்னர் அடுத்த என்ன…?? ஹீரோ ஜெயிப்பான்… என்பது தானே என்று நமக்கு வருகின்ற எரிச்சலில் படமே நமக்கு பெரிய வில்லனாக மாறிவிடுகிறது… “அடப்போங்கப்பா..” என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்…. படு கேவலமான ஒரு பைக் ரேஷ் வைத்து படத்தை முடித்தும் விடுகிறார்கள்…

மூன்றாவது சுவாரஸ்யத்தை பற்றி சொல்லவே இல்லையே என்கிறீர்களா…?? அவன் உண்மையாக தேடிக் கொண்டு இருப்பது ஹீரோவைத் தான்…. என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்…. அதற்கும் ஆப்படிப்பது அந்த பைக்கை நாயகி தேர்ந்தெடுக்கும் காட்சியும்…. நமக்கு ஏற்கனவே படம் தந்திருக்கும் வெறுப்புணர்ச்சியும் தான்… ஓரளவுக்கு அது அவன் பைக் தான்.. அவன் ரேஸர் தான் என்று யூகிப்பதால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை… ஆக படத்தில் சுவாரஸ்ய முடிச்சுகள் மட்டும் இருந்தால் போதாது… அதை சிதைக்காத அளவுக்கு படத்தில் காட்சிகளும் வைக்கப்பட வேண்டும்… என்பதற்கு இப்படம் ஒரு நல்ல எ.கா.

சரி… உங்கள் வீட்டில் யாருக்கோ இப்படி ஒரு விபத்து நடந்து அவர் உயிர் பிழைத்து வந்திருக்கிறார்… அடுத்த பைக்கை வேகமாக ஓட்டிச் செல்ல பயப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம்… அவருக்கு… “ ஏன் இப்டி பயப்படுற… பைக்க நல்லா வேகமா ஓட்ட வேண்டியதான…!! என்றா அறிவுரை கொடுப்பீர்கள்…” ஆனால், நாயகனின் அம்மா அதைத்தான் செய்கிறாள்… அந்த விபத்துக்கு பின்னர் நாயகன் மெதுவாகத்தான் பைக் ஓட்டுகிறான்… அவன் மாற வேண்டும் ( எதிலிருந்து என்று கேட்காதீர்கள்..) என்று அவனது அம்மா…. பைக்கில் வேகமாக சென்று பீட்ஸா டோர் டெலிவரி செய்யும்  வேலைக்கு சிபாரிசு செய்து சேர்த்து விடுகிறார்…. இதில் “நடக்கும் போது விழுந்து விட்டால் நடக்காமயேவா இருந்து விடுவோம் என்று தத்துவம் வேறு…”

இந்த இளம், இனை, துணை, உதவி, இமய, இன்றைய, நாளைய இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் ஒரு வேண்டுகோள்… ஒரு காலம் இருந்தது.. அதுவொரு இறந்த காலம்… பெண்களின் அங்கத்தை பார்க்க முடியவில்லை என்ற பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வாலிப, வயோதிக அன்பர்கள் எல்லாம், பெண்களை அரைகுறை ஆடைகளுடன் ஆடவிட்டு எடுக்கப்பட்ட குத்துப்பாடல்களிடம் தஞ்சம் புகுந்த காலம்…. அது கண்டிப்பாக இறந்த காலம் தான் எங்கள் இயக்குநர் பெருமக்களே… அப்படி ஒரு பஞ்சத்தில் இருந்து நாம் மீண்டு வந்தாயிற்று… இப்போதெல்லாம் இணையமும், வார மாத நாளிதழ்களிலின் அட்டைப் பக்கங்களும் நடுப்பக்கங்களும் அது போன்ற விசயங்களை நடு வீட்டுக்கே கொண்டு வந்து கொலுவேற்றிக் கொண்டிருக்கின்றன…. அதனால் இன்னும் நாங்கள் உங்கள் குத்துப்பாடல்களுக்காகவே தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று மலிவாக சிந்திக்க வேண்டாம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறோம்… “கதையே இல்லயேன்னு காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்கோம்.. இதில ரெண்டு குத்துப்பாட்டு….??!!”


ஆக மொத்தத்தில் இந்த இரும்புக்குதிரை…??? இவ்ளோ சொல்லியாச்சி.. இதுக்கு மேல என்னங்க சொல்றது….

No comments:

Post a Comment