Saturday 2 August 2014

சரபம்:


ஒரு திரைப்படம் குறைந்தபட்சம் முதல் பத்து நிமிடங்களிலோ அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவோ பார்வையாளர்களை கதையம்சம் சார்ந்தோ அல்லது அதன் நம்பகத்தன்மை சார்ந்தோ அல்லது காமெடி சார்ந்தோ ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக ஈர்த்துவிட வேண்டும்…. அப்படி முதல் பாதி முழுக்கவே பார்வையாளர்களை கவர எந்தவிதமான முயற்சியும் செய்யாமல், இரண்டாம் பாதியில் இருக்கும் இரண்டும் மூன்று திருப்பங்களை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்கப்பட்டால், அந்தப் படம் தோல்வியடையும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை இளம் இயக்குநரான அருண் மோகன் புரிந்திருக்கிறாரா..? என்று தெரியவில்லை.. தயாரிப்பாளர்  சி.வி.குமாரின் பேனரில் வந்த படம் என்பதால் கண்டிப்பாக இயக்குநர் அருண் மோகன் அவர்களும் குறும்பட பட்டறையில் இருந்து வந்தவராகத்தான் இருப்பார் என்று நம்பலாம்…

 
தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு சூது, கடத்தல், ஏமாற்றுதல், கொள்ளையடித்தல் மற்றும் பணம் சம்பாதித்தல் இவற்றின் மீது தீராத காதல் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது… இவரது தயாரிப்பில் வந்த படங்களில் பாதிக்கு பாதி நாயகனின் நோக்கம் எப்படியாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கும்… அதற்கு இந்த சரபம் படமும் விதிவிலக்கல்ல…  இதிலும் நாயகனின் தாரக மந்திரம் ” மாட்டிக்காம தப்பு பண்றதால, நிறைய பணம் கிடைக்கும்னா… அந்தத் தப்ப தைரியமா பண்ணலாங்கிறது தான்…” இந்த தாரக மந்திரத்துக்கு சொந்தக்காரனான நாயகன் குறைந்தபட்சம் மாதம் நாற்பது அல்லது அம்பதாயிரம் சம்பளம் வாங்கும் மனிதன்… நிறைய பணம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா என்று கடைசி வரை கேட்டுக் கொண்டே இருக்கும் நாயகன், என்னவெல்லாம் செய்வதற்காக பணம் வேண்டும் என்பதை மட்டும் சொல்வதே இல்லை… அல்லது சொல்லத் தெரியவில்லை… இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு பணம் வேண்டும்…

இன்னொன்று நாயகியின் கதாபாத்திரம்… மிகப்பெரிய தொழிலதிபரின் மகள்… போதை பழக்கம் உடையவள்… அடிக்கடி பணம் தர இவளது தந்தை மறுப்பதால், இவளுக்கும் பணம் தேவை… இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க இவர்களுக்குள் ஒரு திட்டம்… அது வேறு என்னவாக இருக்கும்… இந்தப் பெண்ணை கடத்தியது போல் நாடகமாடி, அவளது தந்தையிடம் இருந்து பணம் பறித்து அதை இருவரும் பிரித்துக் கொள்ளும் அதி அற்புதமான புதுவிதமான கண்டுபிடிப்பு தான் அது… இப்படி ஒரு கதை தொடங்கினால், அதில் எந்த விசயம் நம்மை ஈர்க்கும்… அல்லது அந்தக் கடத்தலை அரங்கேற்றும் செயல்களிலாவது குறைந்தபட்ச சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கலாம்… தொழிலதிபரின் மகளை அல்ல… ஒரு தொழிலாளியின் மகளைக் கூட இவ்வளவு எளிதாக கடத்த முடியாதே…!!!! என்று தோன்றுவது போன்ற காட்சியமைப்புகள்… அதற்குத்தான் நாங்கள் இரண்டாம் பாதியில் சரியான விளக்கம் கொடுக்கிறோமே என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால், வீ ஆர் வெரி வெரி ஸாரி இயக்குநர் ஸார்… எங்களது கேள்வி எல்லாம், இந்தக் கடத்தலை நிகழ்த்தும் நாயகன் ஏன் கொஞ்சமும் தன் திட்டத்தில் இருக்கும் அதல பாதாள ஓட்டைகளை கண்டுகொள்வதில்ல என்பதே..

 
கடத்திய நாயகன், தன் மொபைலில் வேறொரு சிம் கார்டை போட்டு பேசுகிறான்… அந்த செல்போனின் ஐஎம்-இஐ நம்பரைக் கொண்டு, அந்த செல்போனில் பயன்படுத்தப்பட்ட பிற நம்பர்களை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என்கின்ற தொழில்நுட்ப விவரம் கூடவா தெரியாத ஆர்க்கிடெக் அந்த நாயகன்… அதுமட்டுமின்றி அவ்வளவு பெரிய தொழிலதிபருக்கு ஒரு மரணத்தை மறைப்பது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லையே.. இப்படி லாஜிக்கான கேள்விகளை கேட்கத் தொடங்கினால் படம் முழுக்க ஏகப்பட்ட ஓட்டைகள்… இரண்டாம் பாதியில் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் இருந்தாலும்… முதல் பாதியில் ஏற்பட்ட களைப்பால், இதுவும் நமக்குள் எந்தப் படபடப்பையும் ஏற்படுத்தாமல் வெகு சாதாரணமாக.. “ஓ… அப்டியா…” என்று கடக்க வைக்கிறது… மேலும் அந்த திரைக்கதை திருப்பங்கள் எல்லாம் பழைய பதிவுகளில் சொன்னதைப் போல் ஏமாற்றும் வகை திரைக்கதைகள்… அதனை மிகச்சிறப்பான திரைக்கதை என்று கூற முடியாது..

கதையே இல்லாத ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை இப்போது தான் பார்க்கிறேன்…படத்தின் பொருட்செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக மிகக்குறுகிய நாட்களில், மிகச் சில இடங்களை மட்டுமே பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதும் படத்தின் பல காட்சிகளில் தெரிகிறது… இசை கேமரா நடிப்பு என்று எல்லாமே சுமார் ரகம் தான்… லியோ ஜான் பாலின் நறுக்குகள் தான் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட துடித்திருப்பது தெரிகிறது. ஆனால் அதற்கு எந்த பலனுமே கிடைக்காததற்கு காரணம்…. சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் தான்…

நாயகனாக நவீன் சந்திரா நடித்திருக்கிறார்…. ஓரிரு இடங்களில் வசனமும் வசன உச்சரிப்பும் சிறப்பாக இருந்தது… அவ்வளவே… நடிப்பில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லை.. விரக்தியோடு மேசை சுவர் என்று மாறி மாறி குத்திக் கொண்டே திரிகிறார்… நாயகியாக சலோனி லுத்ரா… அழகாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது…. ஆனால் கவனிக்க வைக்கும் கவர்ச்சியோடு இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்… இசை பிரிட்டோ மைக்கேல்.. படமே தந்தியடித்துக் கொண்டிருக்கும் போது பாடல்கள் வேறு மிகப்பெரிய வேகத்தடையாக பொறுமையை சோதிக்கிறது.. தயாரிப்பாளர் சி.வி.குமார் எதிலோ சறுக்கத் தொடங்குகிறாரோ என்று தோன்றுகிறது…. அது உண்மையா இல்லை பிரமையா என்பதை இனி அவரது தயாரிப்பில் வரும் திரைப்படங்கள் சொல்லும்….

மொத்தத்தில் சரபம் பல இடங்களில் சர்பமாக மாறி உங்களை கொத்தி கொல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இது உங்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியாது…

 

No comments:

Post a Comment