Tuesday 24 September 2013

We bought a zoo

ஒரு உண்மைச் சம்பவம் நாவலாக எழுதப்பட்டு, அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் WE BOUGHT A ZOO. தங்களது நிம்மதிக்காக, சந்தோசத்திற்காக மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி, ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கச் செல்லும் ஒரு குடும்பத்தின் தலைவனும், அதன் உறுப்பினர்களும் எப்படி அந்த ஊரின் ஒட்டுமொத்த மக்களையும் சந்தோசப்படுத்தும் காரணிகளாக மாறி நிற்கின்றனர் என்பதை இத்திரைப்படம் அற்புதமாகப் பேசுகிறது..


Benjamin Mee ஆக நடித்திருக்கும் Matt Damon அந்த குடும்பத்தின் தலைவன். 6 மாத காலத்துக்கு முன் நிகழ்ந்த தன் மனைவியின் மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறான் Benjamin. அவன் மட்டுமல்ல அவனது 14 வயது மகனும், 7 வயது மகளும் கூட அந்த ஈடுசெய்ய இயலாத இழப்பால் கவலை கொண்டு இருக்கின்றனர்.. அதிலும் குறிப்பாக அவனது மகன் Dylon மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறான்… அவனது ஓவியங்கள் அனைத்தும், தலையறுந்து தொங்கும் ஒரு மனிதனின் ஓலமாகவும், முகம் புதைத்து அழும் ஒரு மனிதனின் கதறலாகவும், சூரிய ஒளி இல்லாத இருண்ட உலகில் அவலநிலையில் வாழும் ஒரு மனிதனாகவும் அவனது மனநிலையை விளக்கும் பிரதிநிதிகளாகவே விளங்குகின்றன.. Benjamin Meeக்கோ சுற்றி இருப்பவர்கள் அவன் மீது காட்டும் கழிவிரக்கமே மிகப்பெரும் துயரமாக இருக்கிறது.. அவனது மகள் Rosieக்கோ வேறுமாதிரியான பிரச்சனை.. அண்டை வீட்டாரின் சந்தோசமான கூச்சல்கள் அவளையும் பாதிக்கிறது… Dylon சில ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையால் பள்ளியிலிருந்து விலக்கப்படுகிறான்.. வேறு வழி இல்லாமல் அந்தக் குடும்பம் அந்த ஊரைவிட்டு மக்களை விட்டு வெகு தொலைவு செல்ல முடிவு செய்கிறது… அவர்களது வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி எப்படி திரும்புகிறது என்பதை மிகமிக அழகாக விளக்குகிறது இத்திரைப்படம்.

இப்படி புதுவீடு தேடிச் செல்லும் பென்ஞமினும் ரோஸியும் பார்வையிடும் எல்லா வீடுகளிலும் சலிப்புற்று இருக்கும் போது, ரோஸி பத்திரிக்கையில் வந்த மற்றொரு வீட்டைக் காட்டுகிறாள். அந்த வீட்டைப் பார்வையிட்ட இருவருக்கும் வீடு மிகவும் பிடித்துப் போக, அப்பொழுதுதான் அந்த வீட்டை வாங்குவதில் உள்ள சிக்கல் புரிய வருகிறது. அந்த வீட்டை வாங்க முனைபவர்கள் அதை ஒட்டி இரண்டாட்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்து, தற்பொழுது பணநெருக்கடியால் மூடப்பட்டு இருக்கும் மிருகக்காட்சி சாலையையும், அதில் உள்ள மிருகங்களையும், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் சேர்த்துப் பராமரிக்க வேண்டும் என்பதே அது. அந்த நிபந்தனையை எண்ணி பெஞ்சமின் பின்வாங்க நினைக்கும் சூழலில், ரோஸியோ அங்கிருக்கும் மயிலுக்கு உணவு கொடுக்கத் தொடங்கி உறவு கொண்டாடத் துவங்குகிறாள்… அவளது சந்தோசத்துக்கு விலையாக அந்த வீட்டை வாங்கத் துணிகிறான் பெஞ்சமின்.. அதில் Dylonக்கோ விருப்பமில்லை. தன் நண்பர்களையும், தன் அன்னை இருந்த வீட்டையும் விட்டுப் பிரிய மனமின்றி வெறுப்பை உமிழ்கிறான். இருப்பினும் அந்த வீட்டையும் சூவையும் விலைக்கு வாங்கும் பெஞ்சமின், மிருககாட்சி சாலையை பராமரிக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டான் என்பதை மீதிக் கதை விளக்குகிறது…


இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசங்களை விளக்கி இருக்கின்ற விதம் மிக அருமை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு மனிதன் எப்படி ZOOவை வாங்கத் துணிவான் என்ற கேள்வி எழும்… ஆனால் படத்தின் துவக்கத்தில் Dylon தன் தந்தையைப் பற்றி கூறும் காட்சிகள் அதற்கான பதிலாக அமைகின்றன… இப்படித் தொடங்குகிறது தந்தையைப் பற்றிய அவனது அறிமுகம்.. என் தந்தை ஒரு எழுத்தாளர், அதையும் மீறி அவர் ஒரு சாகசவிரும்பி… அதற்கு ஏற்றார் போல் பெஞ்சமின் தேனீக்கள் தன்னைக் கடிக்காமல் இருக்க ஒரு ஆடையை அணிந்து கொண்டு நிற்க.. அவனைச் சுற்றி பத்தாயிரத்துக்கும் அதிகமான தேனீக்கள் கொத்திக் கொண்டிருக்கும். அடுத்த காட்சியில் தீவிரவாதிகளை பேட்டி எடுத்துக் கொண்டு இருப்பான். அடுத்த காட்சியில் மிக மோசமான புயலில் மினி ப்ளைட்டை ஓட்டி அந்த தருணங்களை ரசித்துக் கொண்டு இருப்பான்…. Dylonனின் வார்த்தைகள் இப்படி முடியும்… “But he never preper for this..” தன் மனைவி இறந்த காரணத்தால் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பும் பணியைச் செய்து கொண்டிருப்பான்… இப்படிப்பட்ட ஒரு மனிதன் ZOOவை வாங்குவதில் ஆச்சரியம் இல்லைதானே..


அதுபோல படத்தின் டைட்டில் வரும்போது அதற்கு ஏற்றார் போல் சிறுமி ரோஸி தன் காலில் கலைமான் உருவம் தாங்கிய ஒரு காலணி (சூ-zoo)யை அணிந்தவாறு ஓடிவருவாள்… அவள் காலணிகளுக்கு அருகிலேயே டைட்டில் இடம் பெறும் “WE BOUGHT A ZOO” என்று. அந்த இடத்திலேயே அவளுக்கு விலங்குகளிடம் உள்ள நாட்டம் புரிந்துவிடும்… மேலும் தன் தாயின் இழப்பை படத்தில் முதன் முதலாக பேசுபவனாக இருப்பது Dylon தான்… ஏனென்றால் அதிகமாக பாதிக்கப்பட்டவன் என்கின்ற ரீதியில் அதை இயக்குநர் அமைத்திருப்பார். மேலும் Dylon தன் தாயின் போட்டோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுகின்ற இடமும், பெஞ்சமின் தன் லேப்டாப்பில் தன் மனைவியின் படத்தைப் பார்த்து கண்ணீர் விடும் இடமும், ஓர் ஒருமைத்தன்மை கொண்டு இருக்கும், இருவருமே ஒரேமாதிரியான குணநலன் கொண்டவர்கள் என்பதை சொல்லாமல் சொல்வது போல்… மேலும் இதற்கு இன்னுமொரு உதாரணமாக இருவரது காதலும் வெற்றியடையும் இடங்களையும் மேற்கோடிடலாம்.. இருவருமே அந்த இருபது விநாடி தைரியத்தை நம்பியே தங்களது காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள்…


மேலும் திரைக்கதை உத்தி என்று பார்க்கும் போது பெஞ்சமின் மனைவி கேத்தரினின் அந்த வுல்லன் ஆடையின் பயணம் திரைக்கதையில் முக்கியமானது. அது போல் கேத்தரின் தொடர்பான நினைவுகளை, ப்ளாஸ்பேக்யை ஆடியன்ஸ்க்கு கன்வே செய்யும் இடமும் மிகமிக கவித்துவமானது.. அதுபோல் படத்தில் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று கேத்தரினின் மரணம்.. மற்றொன்று SCAR எனப்படும் அந்த புலியின் மரணம்.. இந்த இரண்டுமே நேரடியாகக் காட்டப்படுவதில்லை… ஏனென்றால் படத்தின் மையம் சந்தோசத்தை மீட்டெடுப்பதாக இருப்பதால், அதை காரணத்தோடே தவிர்த்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.. மேலும் கேத்தரின் இழப்பால் பாதிக்கப்படும் Dylon புலியின் மரணம் நெருங்குகின்ற தறுவாயில் தன்னையும் தன் சந்தோசத்தையும் மீட்டுக் கொள்கிறான்… மேலும் ஒரு கட்டத்தில் தன் சந்தோசத்தை மகிழ்ச்சியை அடுத்தவரிடம் தேடுபவராக, யாசிப்பவராக இருக்கின்ற கதாபாத்திரங்கள் எல்லாமே ஒரு கட்டத்தில் மற்றவருக்கு சந்தோசத்தைக் கொடுப்பவர்களாக மாறி நிற்கிறார்கள். அதிலும் குறிப்பாக Dylon தன் சந்தோசத்திற்காக தன் நண்பர்களை தேடுகிறான்.. இறுதியில் அவன் லில்லிக்கு சந்தோசத்தைக் கொடுப்பவனாகவும், தன் சந்தோசத்தை மீட்டெடுப்பவனாகவும் மாறி நிற்கிறான்.. அவன் தன் மகிழ்ச்சிக்காக தன் நண்பர்களைப் பின்னர் தேடுவதும் இல்லை… அதுபோல் பெஞ்சமினும் தான் மனைவியுடன் உலாவிய இடங்களுக்கே செல்ல தயங்கியவன், இறுதியில் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தன் மனைவியை முதன்முதலாக சந்தித்த இடத்துக்கே செல்லும் துணிவைப் பெறுகிறான். மேலும் அவனுக்கு கெல்லியுடனான புது உறவும் கிடைக்கிறது. இப்படி எத்தனையோ உண்மைகளை பூடகமாக பேசுகிறது…



பல இடங்களில் வசனங்கள் தத்துவார்த்தமானவை. அதிலும் சில இடங்கள் குறிப்பாக… சிறுமி ரோஸி தன் அண்டைவீட்டாரின் சந்தோசத்தைப் பற்றி குற்றம் சாட்டும் இடம்.. “THEIR HAPPY IS TOO LOUD” பெஞ்சமின் தன் மகன் Dylonயிடம் லில்லியைப் பற்றி விசாரித்துவிட்டு அவனுக்கு தைரியம் சொல்லும் இடம்.. “WE JUST NEED 20 SECONDS INSANE COURAGE MAN” மேலும் தந்தைக்கும் மகனுக்குமான வாக்குவாதத்தின் போது Dylon சொல்லுவான்… “DON’T BUSH YOUR DREAMS ON ME..” அதற்கு பெஞ்சமின் பதிலுரைப்பான்.. “I WILL… I WILL…, BECAUSE THE DREAM IS TOO GOOD MAN..”

நம் தமிழ் திரைப்படங்களில் சில பாராட்டு விழாக்களில் கூறுவார்கள்.. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று… ஆனால் அது பெரும்பாலும் மிகையான பாராட்டாகவே இருக்கும்.. ஆனால் இந்த திரைப்படத்தைக் காணும் போது அந்த வரிகளின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்.. ஏனென்றால் படத்தில் வரும் எந்த ஒரு கதாபாத்திரம் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது… உண்மையில் அவர்கள் வாழ்ந்திருந்தால் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்று சொல்வதிலும் எந்த மிகையும் இருக்காது… இது போன்ற திரைப்படங்களைப் பார்க்கும் போது நாம் நடிப்பில் கடந்து செல்ல வேண்டிய தூரம் மிகமிக அதிகம் என்னும் கசப்பான உண்மையை கடந்துவர வேண்டியிருக்கிறது…. அதிலும் குறிப்பாக அந்த சிறுமி ரோஸியின் நடிப்பு… ப்ரெட்டில் ஜாம் தடவிக் கொண்டே தன் தந்தையுடன் பேசும் போதும்.. காரில் வீடு தேடிச் செல்லும் போது தன் தந்தையின் கேள்விக்கு ரியாக்ட் செய்யும் இடங்களைப் பார்த்தாலே போதும் நடிப்பு என்பது என்ன என்று தெரிந்து கொள்ள….

மொத்தத்தில் சந்தோசமான தருணங்களையும், சந்தோசத்தையும் மீட்டெடுப்பதற்கும் அசை போடுவதற்கும், சந்தேகமேயின்றி நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் இந்த WE BOUGHT A ZOO என்னும் திரைப்படத்தை….



1 comment:

  1. i liked this movie very much.
    See it's feel good movie. simple knot and revolves around human relationship.
    Like brothers, Father & Daughter, Father & Song , Lover. it damn good.

    Then i like the dialogue it is what it is.

    ReplyDelete