Sunday 22 September 2013

6 மெழுகுவர்த்திகள்:

குழந்தைக் கடத்தலின் பிண்ணனியில் சென்னை, நகரி, வாராங்கல், மும்பை, புனே, கல்கத்தா என வலை போல விரியும் நெட்வொர்க்கை பறவை கோணத்தில் இருந்து காட்ட முயற்சித்து இருக்கிறது இந்த 6 மெழுகுவர்த்திகள். மகிழ்ச்சியான தன் வாழ்நாளின் ஒரு ரம்மியமான மாலை பொழுதில் சென்னை கடற்கரையில் தங்கள் மகனைத் தொலைக்கிறார்கள் ஷியாம் – பூனம் கவுர் தம்பதியினர். ஒரு குறிப்பிட்ட மணி நேர தேடலுக்குப் பின்பு அவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு வரும் போலீஸ்துறை, தாங்கள் குழந்தையை தேடுவதை நிறுத்திக் கொண்டு, பெற்ற தகப்பனையே குழந்தையை தேட அனுப்பும் அவலத்தில் சூடு பிடித்து சென்னை, நகரி எனப் பயணிக்கிறது திரைக்கதை… தேடிச் செல்லும் தகப்பனுக்கு தன் மகன் கிடைத்தானா…? என்பது அதிரவைக்கும் க்ளைமாக்ஸ்..


ராம்-லிசி தம்பதிகளாக ஷியாம் மற்றும் பூனம்கவுர். ராம் தன் தொழிலுக்காக தன் உடலை எந்த அளவுக்கு வருத்திக்கொள்வார் என்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று. தன் ஆறுவயது மகன் விருப்பப்படும் எல்லாவற்றையும் செய்துதர விரும்பும் ஒரு பாசமுள்ள தந்தையாக ஷியாமின் கதாபாத்திரம். தன் மகனைத் தேடி அலையும் போதும், 6 மாத தேடலின் முடிவிலும் மகன் கிடைக்காத போது, தன் மனைவியே தேடுவதை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வா என்று அழைப்பதை பிடிவாதமாக மறுக்கும் இடத்தில் அந்த கேரக்டர் மிளிர்கிறது. ”நீங்க சொல்ற சாமி, கடவுள், சட்டம், போலீஸ் இது எதுவுமே என் மகனுக்குத் தெரியாது… அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த அப்பாதா…” என்று மகனைத் தேடிச் செல்லும் முன்பு அவர் வைக்கின்ற ஜஸ்டிபிகேசன் டச் பெர்ஃபெக்ட்..

அழகான ஓரளவுக்காவது நடிக்கத் தெரிந்த நடிகையாக இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகளில் பூனம்-கவுர் குறிப்பிடத்தகுந்தவர். 6 வயது சிறுவனுக்கு அம்மாவாக, அவனைத் தொலைத்து விட்டு பிச்சைக்காரனின் காலில் விழுந்து கதறும் இடத்தைவிட.. கணவனையும் தான் இழந்து விடுவேனோ என்ற பதட்டத்தில், “உனக்குக் குழந்தைதான வேணும் ராம்… இன்னொன்னு பெத்துனாலும் தாரேன்.. வீட்டுக்கு வந்துரு ராம்..” என்று வெடித்து கதறும் போது மிகையில்லாத அற்புதமான நடிப்பு.. குடும்பபாங்காக நடித்த நடிகையை திரைக்கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை தொடரும் அபரிமிதமான இறுக்கம் காரணமாகவோ என்னவோ, அரை குறை ஆடைகளில், லோ ஆங்கிளில் பல இடங்களில் அலையவிட்டிருக்கிறார் இயக்குநர்..


திவாகரை மீண்டும் தேடிச் செல்லும் போது அவன் இருக்கின்ற இடத்தைக் கண்டுபிடிக்க, ஷியாம் பயன்படுத்தும் டெக்னிக், சிறுவனின் பிறந்தநாளின் போது காட்டப்படும் வீடியோ கிளிப்ங்கிஸ், நகரியில் அவன் தன் குழந்தையை கடத்தியவன் என்பதைக் கண்டுகொள்ளும் இடம், மனைவியை சாந்தப்படுத்த போனில் பேசுவதை விடுத்து, அவளுக்கு கடிதம் எழுதும் இடம், இவைகளை தவிர்த்து தலைப்புக்கான ஜஸ்டிபிகேசன் என பல விசயங்கள் எக்ஸலண்ட்..

இருப்பினும் குழந்தையை கடத்திச் செல்லும் கும்பல் இவர்கள்தான் என்பது தெரிந்தும் அவர்களுக்கு எதிராக செயலாற்றாமல் இருக்கும் போலீஸ்துறை, ஏன் செயலாற்றாமல் இருக்கிறது என்பதை இன்னும் ஆழமாக அலசி இருக்கலாம்.. குழந்தையை இழந்த பெற்றோர் போலீஸின் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பார்த்து கொஞ்சமேனும் அதிர்ச்சி காட்ட வேண்டுமே அதுவும் இல்லவே இல்லை.. திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்கு உதவும் என்ற எண்ணத்துடன் சேர்க்கப்பட்டு இருக்கும் ராம்-லிசி தம்பதிக்கு பீச்சில் உதவ வரும் மனிதன் கதாபாத்திரம் சுவாரஸ்யமானதாக இருந்தாலும் அது நம்பகத்தன்மை இழந்த ஒன்றாகவே காட்சியளிக்கிறது… இப்படி ஒரு அழுத்தமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, அதன் பிண்ணனியில் யார் இருக்கிறார்கள், அவர்களை தடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது..? என்பதை தெளிவாகச் சொல்லாததாலும், கல்கத்தாவில் அந்த கும்பலை ராம் எப்படி கண்டுகொள்கிறான் என்பதை ஜம்ப் காட்சிகளாக அமைத்திருக்கும் இடத்திலும் தான் திரைக்கதை தேங்கிவிடுகிறது..


முகவரி, தொட்டிஜெயா, நேபாளி போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் வி.இசட். துரை அவர்களின் படம் தான் இந்த 6 மெழுகுவர்த்திகள். தவறான கதாபாத்திர தேர்வு ஒரு படத்தின் வெற்றியை எப்படி பாதிக்கும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சான்று… ஷியாம் கடினமாக உழைத்திருக்கிறார்… தன் உடலை வருத்தி மெனக்கெட்டிருக்கிறார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றோ அவரது நடிப்பு மிக இயல்பாக இருந்தது என்றோ சொல்வதற்கு இது போன்ற திரைக்கதையில் கூட இடமில்லாமல் போனது மிகப்பெரிய குறை… மனிதர் வாழ்நாளில் ஒரு முறைகூட அழுதிருக்க மாட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது… ஆழமான அழுத்தமான பாதிப்புகளை பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய காட்சிகளில் கூட இவரது வெகு சுமாரான நடிப்பு, அந்த உணர்வை கடத்தாமல் தடுக்கும் பெரும் தடைக்கல்லாக மாறிவிடுகிறது….

இது ஷியாமின் குறையல்ல.. இயக்குநரின் குறை என்றே தோன்றுகிறது.. ஏனென்றால் ஷியாம் மட்டுமல்ல.. படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள், உதாரணமாக உதவ வரும் அந்நிய மனிதர், அந்த கார் டிரைவர், பாய் கதாபாத்திரம், தாதாக்கள், ராம்-லிசியின் நண்பர்களாக வரும் தம்பதியினர் என எல்லாருமே அப்படித்தான் நடித்திருக்கின்றனர்… விதிவிலக்கு பூனம்-கவுர் (அதுவும் சில இடங்களில்) மட்டுமே. அதிலும் கொல்லப்பட்டு கிடக்கும் சிறுவனைப் பார்த்து ஷியாம் அழும் போதும், ஒரு சிறுமியை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருந்து கதறும் போதும் மிகமிக சுமாரான நடிப்பு…. இதைவிட உள்ளம் கொள்ளை போகுமே மற்றும் 12 பி படத்தில் கூட இவரது நடிப்பு இதைவிட பெட்டராக இருந்ததாக நினைவு. நல்ல கதையை எழுதிவிட்டால் மட்டும் வெற்றி சாத்தியப்பட்டு விடாது… அதை நல்ல படைப்பாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்க்கும் போதுதான் அது சாத்தியப்படும் என்பதை இயக்குநர் உணர்ந்திருப்பார்… என்றே நம்புகிறேன்..


வசனன் ஜெயமோகன். ஆனால் அவருடைய எழுத்தின் வீச்சு ஓரிரு இடங்களைத் தவிர்த்து எந்த இடத்திலும் இல்லை. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் கூட சுமார் ரகங்களாகவே உள்ளது.. நம்மை ஆட்கொள்ளும் படியான ஒளிப்பதிவாகவோ பிண்ணனி இசையாகவோ அது இல்லை என்பதும் படத்திற்கான ஆகப்பெரிய குறை..

மொத்தத்தில் குழந்தையை பெற்ற பெற்றோர்களின் உள்ளத்தில் ஒரு பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாலும், நாம் எவ்வளவு பாதுகாப்பற்ற சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை கோடிட்டு காட்டுவதாலும், குழந்தை கடத்தலின் பிண்ணனியில் உள்ள வலை போன்ற நெட்வொர்க்கை நம் கண்களுக்கு பரிச்சயம் ஆக்கியதாலும், இயக்குநர் மற்றும் நடிகரின் கடின உழைப்பு மற்றும் தேடலாலும் மட்டுமே கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பதற்கான தகுதியைப் பெற்றுவிடுகிறது இந்த 6 மெழுகுவர்த்திகள்…


3 comments:

  1. my opinion about movie:-

    worst acting, some characters are not realistic,some dialogues are best some dialogue are worst. hero searching people in bus stand was irritating even some villain mentioned him what they will do with people. Sham is searching his child for 6 months ok. showing like beggar was not well suited here.

    ReplyDelete
    Replies
    1. i am not accept ur opinion,6 months without correct food and sleeping all peoples are like that shaam only.......

      Delete
    2. saranya i agree he can become like that. my question is what is the need to show him as beggar and lying and sleeping in street.

      Delete