Sunday 25 August 2013

ஆதலால் காதல் செய்வீர்:

எல்லோரது கவனத்தையும் பரவலாக ஈர்த்திருக்கும் படம். ராஜபாட்டையின் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் தன்னை நிருபித்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். இதிலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால் இதன் மூலக்கதை லெனின் பாரதி என்பவரது. அதனை வெற்றிக்கான திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.. இவரது ராஜபாட்டைக்கு முந்தையபடமான “அழகர்சாமியின் குதிரை” யும் பாஸ்கர்சக்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது.. இதுபோன்று நாவலில் இருந்தும், பிறரது கதைகளிலிருந்தும் திரைப்படம் எடுக்க இயக்குநர்கள் முன்வருவது இன்றைய திரைச்சூழலுக்கு ஆரோக்கியமான விசயம். அதற்காக தனிப்பட்ட முறையிலும் இயக்குநருக்கு சில பாராட்டுக்கள்…



கதையின் களம், இன்றைய நவநாகரீக காதலை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் தலைப்பே ஒரு சின்ன எரிச்சலை ஏற்படுத்தியதால், “காதலும் காதல் சார்ந்த இடத்திற்காகவும் தாரைவார்க்கப்பட்டு இருக்கும் தமிழ்சினிமாவில் காதலிக்க கற்றுக் கொடுக்க வந்திருக்கும் இன்னொரு படம் என்ற எண்ணத்துடன் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி ஒருவித எரிச்சல் கலந்த மனநிலையுடன் தான் படத்தை அணுகினேன்.. எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல முதல்பாதி முழுவதும் காதலும், அந்தக் காதலை தன் காதலியிடம் இருந்து பிடுங்குவதற்கு பிரயத்தனப்படும் காதலனின் அமெச்சூர்தனமான நடவடிக்கைகளும், நாயகனுக்கு காதல் டிப்ஸ்களை இனாமாக அள்ளிக் கொடுப்பதற்கு என்றே அவதாரம் எடுக்கும் தமிழ்சினிமா நாயக நண்பர்களையும் தவிர.. சொல்லிக் கொள்ளும்படி முதல்பாதி முழுவதும் எதுவுமே இல்லை… இயல்பான இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை என்று பலரும் மெச்சிக் கொண்டாலும், அது வணிகத்திற்கான மொண்ணையான கச்சாப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறதே ஒழிய, வாழ்க்கையென்பது அதில் அறவே இல்லை என்பதே என் எண்ணம்..மொத்தத்தில் முதல்பாதியில் என்னைக் கவர்ந்த காட்சிகள் இரண்டே இரண்டுதான்… “நெட்டில் எத்தன ஓட்ட இருக்கும்…” என்று கேள்வி கேட்டு தன் நண்பனை வெறுப்பேத்தும் காட்சி, காதலியின் வீட்டில் தனித்திருக்கும் காதலர்கள் மாட்டிக் கொள்ளும் சூழல் வந்தவுடன், தன்னை கொரியர் பாயாக நாயகன் காட்டிக் கொண்டு, அந்த சூழலின் அபாயத்தைத் தவிர்க்கும் காட்சி..” இந்த இரண்டு மட்டுமே தான்…

ஆனால் இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கதை இயல்பாக யதார்த்தத்தின் பாதையில் தன்னை நகர்த்தத் தொடங்கியவுடன் தான் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது… அதிலும் படத்திற்கு அந்த க்ளைமாக்ஸ் மிகப்பெரிய பலம்.. அந்த முடிவுக்கு பதிலாக வேறு எந்த கோணத்திலாவது க்ளைமாக்ஸை யோசித்து வேறுவிதமான முடிவை கொடுத்திருந்தால், கண்டிப்பாக அது ராஜபாட்டையைவிட மிகப்பெரிய தோல்வியை தழுவியிருக்கும் என்பது உறுதி. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் பாடலும், அதன் பிண்ணனி இசையும், காட்சிகளின் கோர்ப்பும், அதில் நடித்திருக்கும் அந்த குட்டிச் சிறுவனின் ஆகச்சிறந்த நடிப்பும் படத்தைப் பற்றிய கணிப்பை அப்படியே மாற்றிவிடுகிறது..


ஸ்வேதாவாக நடித்திருக்கும் மனீஷா யாதவுக்கு வழக்கு எண் திரைப்படத்திற்க்கு பிறகும் கனமான கதைக்களம் கொண்ட கதாபாத்திரம் அமைந்தது அவருக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.. தன் நண்பியிடம் இருந்து தன் காதலை மறைக்கும் போதும், காதலால் ஏற்பட்ட களங்கத்தை தன் தாயிடம் இருந்து மறைக்க முயலும் போதும் சிறப்பான நடிப்பு… கார்த்திக்காக வரும் சந்தோஷ் ரமேஷ்க்கு கனமான கேரக்டர்தான் என்றாலும் நடிப்புக்கான போட்டியில் மனீஷாவிடம் பிந்தங்குகிறார். மனீஷாவின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல் தன் நடிப்புத் திறனை நிருபிக்கிறார். தன் மகளின் நிலையை எண்ணி, எதுவுமே பேசமுடியாத நிலையில் குலுங்கி குலுங்கி அழுது கொண்டே அந்த இடத்தைவிட்டு வெளியேறும் காட்சியில் அசத்தலான நடிப்பு.

யுவனின் இசையைவிட பிண்ணனி இசை அட்டகாசம்.. ஆண்டனியின் துல்லியமான எடிட்டிங்கும், சூர்யாவின் உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம்.. ஒரு சிறுகதைக்கான ஆழமான முடிவைக் கொண்டு இருக்கும் “ஆதலால் காதல் செய்வீர்” அதே சிறுகதையின் நடையியல் அழகைக் கொண்டு இராமல், முதல்பாதியில் சம்பிரதாய தமிழ்சினிமாவைப் போல் பத்தில் பதினொன்றாக பரிதாபமாக காட்சி அளிப்பது அதன் மிகப்பெரிய குறை.. மேலும் எனது அனுபவத்தில் எனக்கு முதல் பாதி கொஞ்சம்கூட பிடிக்காமல் இருந்து, இரண்டாம் பாதி சொல்லிக் கொள்ளும்படி அமைந்த ஒரே திரைப்படம் ஆதலால் காதல் செய்வீர் மட்டுமே..



ஆதலால் காதல் செய்வீர் முன் வைக்கும் ஒரு முக்கியமான விசயம்.. பால்ய பருவத்தில் நடக்கும் உடலுறவு சார்ந்தது… அதை தவறான முறையில் அணுகும் இரு பாலினருக்கும் அதை பரீட்சார்த்த முறையில் ஆய்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.. அதனால் எதிர்படும் விளைவுகளை எதிர்நோக்கும் திராணி இல்லாமலும், அது தொடர்பான புரிதல் இல்லாமலும், எதிர்பாலின இச்சைகளை காதல் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டும் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர் என்பதை திண்மையாக உணர்த்துகிறது.. பெரும்பாலான ஊடகங்களும், வலைதளங்களும், பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது அவசியமான படம் என்பதை வலியுறுத்துகின்றன.. உண்மைதான்.. ஆனால் நான் சொல்ல விளைவது என்னவென்றால், இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு சூரியனையே மறைத்துவிட்டதாக கற்பிதம் கொண்டு ஏமாறாமல், பிள்ளைகளின் கண்களில் இருந்து இதுசார்ந்த விசயங்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படும் முட்டாள்தனத்தைவிட.. அவர்களுக்கு இந்த விசயங்களை பக்குவமாக உணர்த்தி அவர்கள் பால்யவயது பருவத்தை பாதுகாப்பாக கடந்துவர துணைபுரிவதே பெற்றோரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்பதே…

3 comments:

  1. last day i saw movie in Bangalore. movie is good and they created most of the character and scenes based on truth. My point is if they used condoms they can skip many pain for them and their family and cute child. still many people are shy to buy condoms in india.

    ReplyDelete
  2. one incident happened in theater at climax.
    the stranger who is sitting next to me in the theater passed one comment after movie finished.
    that is - they will make sequel of this movie and that child will do revenge of his parents. i am just wondering how people intercept differently.

    ReplyDelete
  3. we have to appreciate that girl parents at-least they put them in hostel instead of throwing into drainage or dustbin. i read one article in Tamil daily some mother throw-ed new born infant int drainage and that infant half eaten by big rat. pathetic.

    ReplyDelete