Monday 12 August 2013

ஐந்து ஐந்து ஐந்து:

வெகுநாட்களுக்குப் பிறகு பூ சசியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். தலைவாவின் ரீலிஸ் தள்ளிப் போனதன் புண்ணியத்தில், சில குறைந்த முதலீட்டுப் படங்களை சீக்கிரம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து கொண்டு இருக்க, அந்த சூட்டோடு அவசரமாக களமிறக்கப்பட்டிருக்கிறது இந்த 555. ட்ரெய்லரைப் பார்த்த போது சசி வழக்கத்திற்கு மாறாக தன் மென்மையான “பூ”ப்போன்ற கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி ஆக்சன் டைப்பை கையில் எடுத்து மிரட்டி இருந்ததால் சற்று மிரண்டு போயிருந்தேன். ஆனால் படம் பார்த்தவுடன் சசி அவர் மீது இருந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டார் என்று உள்ளூர சந்தோசமாகவே இருந்தது.


படத்தின் ஆரம்பத்தில் விபத்துக்குள்ளாகும் காரில் இருந்து ரத்தமும் சதையுமாக மீட்கப்படுகிறார் பரத். ஆறு மாதங்களுக்குப் பிறகு எழுந்து நடமாடத் தொடங்கும் பரத், தனிமையிலேயே தன் பொழுதைக் கழிக்கிறார். தனிமை போரடிக்கும் சமயங்களில் தானும் தன் காதலியும் சேர்ந்து எடுத்த போட்டோவையும், வீடியோவையும் தேய்ந்து போகும் அளவுக்கு பார்த்துக் கொண்டிருக்க… ஒருநாள் அந்த போட்டோவில் தன் காதலிக்கு பதில் தன் அண்ணன் கோபி(சந்தானம்)யும், வீடியோ எந்த பதிவும் இன்றி எம்டியாகவும் இருப்பதைக் கண்டு அண்ணனை தாக்க, அவரது அண்ணன் சந்தானமும் மனோதத்துவ நிபுணரும், பரத்தை “இல்லாத ஒரு காதலியை இருப்பதாக நீ எண்ணிக் கொண்டு இருக்கிறாய்...” என்று குற்றம் சாட்ட, மேலும் குழம்பிப் போகும் பரத்தின் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது என்ன…? என்பது 555யின் பரபரப்பான மீதிக் கதை.

அரவிந்தாக பரத். வெகு நாட்களுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம். உணர்ந்து நடித்திருக்கிறார். தனக்கு மனோநிலை பாதிக்கப்பட்டதாக எண்ணிக் கலங்கும் போதும், தன்னைச் சுற்றி ஏதோ சூழ்ச்சி நடக்கிறதோ என்று சந்தேகம் கொள்ளும் போதும் இயல்பான நடிப்பு. இது போக அந்த ”எய்ட் பேக்ஸ்” உடம்பை முறுக்கிக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் போது ஆக்ரோசமான நடிப்பு. உடம்பில் ஆங்காங்கே தெரியும் சில கட்ஸ்களை பார்க்கும் போதே அந்த உடலமைப்பைக் கொண்டு வர அவர் பட்ட அரும்பாடு தெரிகிறது.. ஆனால் இந்த திரைக்கதைக்கு அந்த உடலமைப்பு தேவையா என்று கேட்டால்…? பதில் இல்லைதான்.. அதுசரி கஜினியில் சிக்ஸ் பேக்ஸ்க்கு என்ன தேவை இருந்தது…? அதனால் அதை டீலில் விடுவது ஒன்றும் பெருத்த குற்றமில்லை..


லியானாவாக மிர்த்திகா. மற்றொரு கேரள வரவு. ஆனால் வந்ததென்னவோ யு.எஸ் ரிட்டனாக. க்யூட்டாக இருக்கிறார். பல இடங்களில் இவர் வெளிப்படுத்தும் முகபாவனைகள் வசீகரிக்கின்றன. பல தமிழ் திரைப்படங்களில் பார்த்த ஜெனிலியா கதாபாத்திரம் தான் என்றாலும், இந்த லியானா என்ற கேரக்டர் உண்மையா..? இல்லை கற்பனையா..? என்ற மையகதையோடு ஒட்டிய கதாநாயகி பாத்திரம் என்பதால் நடிப்பை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்பு. அதை அவர் தவறவிடவில்லை என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக தன் காதலன் பரத்திடம் ஏதோ ஒரு அதிசய சக்தி உள்ளது என்று கடைசி வரை நம்புவதும், டிவியைப் பார்த்து ஆன், ஆப் சொல்லி குழந்தைத்தனமாக மகிழ்வதும், தான் பல்பம் தின்பதை தன் காதலன் கண்டுபிடித்தவுடன் வேறு யார்ட்டயும் சொல்லாதே என்று கெஞ்சும் போதும் கவனிக்கத்தக்க நடிப்பு. ஆனாலும் ஒரு ரவுண்ட் வருவாரா என்று சொல்வது சந்தேகமே.. ஏனென்றால் பிற நாயகர்கள் எதிர்பார்க்கும் சில அம்சங்கள் இல்லையோ என்றே எண்ண தோன்றுகிறது….


சந்தானத்திற்கு வழக்கமான காமெடி நண்பன் கதாபாத்திரத்தில் இருந்து காமெடி அண்ணன் கதாபாத்திரம். தம்பி ஆக்ஸிடெண்ட் ஆகி மருத்துவமனையில் அட்மிட் ஆகி, மனநிலை சிதைந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றும் இறுக்கமான சூழலிலும் தலைவர் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லை.. அதே நக்கல் பாணி வசனங்கள் மட்டுமே ஆங்காங்கே கை கொடுக்கிறது.. “யார்டா இவன் வாலிபாலுக்கு வாய் வரைஞ்ச மாதிரி..” ”என்னது பல்பம் சாப்பிடுறாளா.. அய்யய்யோ நா ஜெனிலியான்னு நினைச்சே.. அது அஞ்சலி பாப்பாவா…” “நீ லவ்வ சொல்லவே வேணாம்.. கனடா போறேன்னு சொல்லு.. அவளே உன்ன லவ் பண்றேன்னு சொல்லிருவா…” என த்ரில்லர் வகை திரைக்கதையில் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டும் வழக்கமான வேலைதான்….


இசை சைமன் என்ற புதியவர். ஓரிரு பாடல்கள் கேட்க பரவாயில்லை.. ஆனால் பிண்ணனி இசையில் ஸ்கோர் செய்ய பல இடங்கள் இருந்தும் ஏனோ கோட்டை விட்டிருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் விழியிலே பாடலில் வரும் சில புதிரான ஷாட்டுகள் கவனம் ஈர்க்கின்றது. ஆங்காங்கே வரும் ஆக்சன் செக்கீயன்ஸ் காட்சிகள் பட்டவர்த்தனமாக அவை சிஜி செய்யப்பட்டவை என்பதை அங்கீகரிப்பதால், அந்தக் காட்சிக்கு கிடைக்க வேண்டிய பாதிப்புகள் எதுவுமே இல்லாமல் அவை வெகு சாதாரணமாகவே கடக்கிறது.. அதிலும் குறிப்பாக அந்த ஓபனிங் கார் ஆக்ஸ்டெண்ட் காட்சி…


இயக்குநர் சசி, பூ படத்தின் மூலம் கிடைக்காத வணிகரீதியிலான வெற்றியை இந்த 555 மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். காதல் எபிசோடுகள் ஒவ்வொன்றும் கவிதை.. பல்பம் சாப்பிடும் கதாநாயகி, செங்கல் போன்ற செல்போன், அபூர்வ சக்தி, கேபிள் டிவி ஆப்ரேட்டர் என சின்ன சின்ன ஒன்லைனரை வைத்துக் கொண்டு மிக அழகாக கதை பின்னியிருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த ரெஸ்டோரண்டில் வைத்து பரத் தன் எதிரி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் காட்சி அட்டகாசம்.. இதை தவிர்த்து குறை என்று பார்த்தால், படம் சில இடங்களில் கஜினியையும், சமரையும் நினைவுபடுத்துவதை தவிர்க்கமுடியவில்லை. முதல் பதினைந்து நிமிட படம் நம் பொறுமை சோதிக்கிறது. மேலும் படத்தில் வில்லன் கேரக்டர் மிகப்பெரிய மைனஸ்.. நன்கு பரிச்சயமான வேறொரு நபரை பயன்படுத்தி இருக்கலாம்.. இதுவரை சசி தன் திரைக்கதையில் வில்லனையே பயன்படுத்தியது இல்லை என்பதால் இந்தக் குறையையும் மன்னிக்கலாம்.. வில்லன் ஹீரோவை பழிவாங்கும் காரணத்திற்காக டிஸ்கஸனில் அதிக நாட்கள் விவாதித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. ஆனால் அந்தக் காரணம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்… போலீஸ் என்பது வழக்கமான தமிழ்சினிமா போலீசாகவே இதிலும் கையாளப்பட்டிருப்பது, கத்துவதில் மட்டுமே தன் வன்மத்தை வெளிப்படுத்தும் வில்லன், அவரது முகத்தைக் காட்டாமலே அவருக்கு கொடுக்கப்படும் பில்டப் என வழக்கமான பல காட்சிகளும் உண்டு. மேலும் முதல் காட்சியில் பரத் விபத்திலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இருக்கும் நிலையில் ஏன் காரணமே இல்லாமல் அவரை பழைய விஷயங்களை ஆக்ரோசத்துடன் தோண்டும் மனநிலைக்கு தள்ள வேண்டும்… வில்லன் எதிர்பார்த்த வெற்றி அப்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டதே…? இப்படி ஆங்காங்கே திரைக்கதையில் சின்ன சின்ன மிஸ்டேக்ஸ்…


இருப்பினும் வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு கவித்துவமான காதல் கதையை சற்று விறுவிறுப்பான திரைக்கதையுடன் பார்த்ததில் இந்த ஐந்து ஐந்து ஐந்து திருப்தி அளிக்கிறது…

No comments:

Post a Comment