Thursday 2 May 2013

சூது கவ்வும்:


திரைப்பட உலகில் ”புதிய அலை” திரைப்படங்கள் என்று ப்ரான்ஸில் வெளியான சில குறிப்பிட்ட படங்களைக் கூறுவார்கள். ஏனென்றால் அவை உண்மையாகவே திரைப்படவரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்தது. அது போல இன்றைய தமிழ் திரைப்பட சூழலை குறும்பட அலை என்று அழைக்கலாம். குறும்படம் இயக்கி வெற்றி பெற்று, அதனையே மூலதனமாகக் கொண்டு படங்களை இயக்கும் இளம் இயக்குநர்களின் படை வெளிவர தொடங்கி இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இது போன்ற இளம் குறும்பட இயக்குநர்களின் பக்கமே தங்களது பார்வையை திருப்பத் தொடங்கி இருக்கின்றனர். இது திரைச்சூழலுக்கு நல்லதா..? கெட்டதா..? என்னும் விவாதம் ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற இளம் படைப்பாளிகளின் படங்களுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு அமோகமாகவே உள்ளது.


பீட்சா இயக்குநரின் நட்பு வட்டாரத்தில் ஒருவரான நலன் குமாரசாமியின் குறும்படங்கள் இணையத்தில் பிரபலம். இப்போது அதே நலன் குமாரசாமியின் முதல் திரைப்படம் சூது கவ்வும் என்ற பெயரில் பீட்சா தந்த தயாரிப்பாளர் C.V.குமாரின் தயாரிப்பில் வெளிவந்து இருக்கிறது. இனி படத்தைப் பற்றி…

இளைஞர்களை பொறுப்புள்ளவர்களாக காட்டுவது சமூக குற்றம் போல… அல்லது அப்படிப்பட்ட காட்சியமைப்புகள் இருந்தால் சென்சார் போர்ட்டு படத்துக்கு “A” சர்டிபிகேட் கொடுத்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்களா என்று தெரியவில்லை… எனவே தமிழ் சினிமா வழக்கப்படி…..

நயன்தாராவுக்கு கோவில் கட்டி பிரச்சனையானதால் ஊரைவிட்டு ஓடி வந்த சிம்ஹா, அலாரம் வைத்து காலையில் எழுந்து தண்ணியடிக்கும் ரமேஷ், சாப்ட்வேரில் வேலையில் இருக்கும் போது ஒரு பெண்ணோடு ஏற்பட்ட பிரச்சனையில் வேலையில் இருந்து நீக்கப்படும் அசோக். இவர்கள் மூவரும் ஒரு அறையில் ஒன்றாக தங்கி இருக்கும் நண்பர்கள்.


தங்கள் வாழ்வில் ஏற்பட்ட தீராத சோகத்தை தீர்க்க.. மதுபானக்கடையின் உதவியை நாட…

அங்கு ஏற்கனவே தான் முயற்சிசெய்த இரண்டு கிட்நேப்பிங்கும் சொதப்பிவிட்டதை எண்ணி நொந்து கொண்டே தன் கனவுக் காதலி ஷம்முவுடன் குடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை சந்திக்கிறார்கள். இவர்கள் ஐவரும் ஒரே ஜோதியில் ஐக்கியம் ஆகி, தங்கள் வாழ்க்கையில் முன்னேற அடுத்த கட்ட நடவடிக்கைகளாக KIDNAPPING என்று முடிவு செய்து களத்தில் இறங்க.. அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதை லாஜிக் சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு மேஜிக்கோடு கொஞ்சம் சிரிக்க வைத்து சொல்லி இருக்கிறார்கள்.


கிட்நேப் செய்வதற்கான அடிப்படை விதிகள் ஐந்து என்ற விதிகளோடு தொடங்கும் விஜய் சேதுபதியின் அலட்டலான நடிப்பு படு சுவாரஸ்யம். ” அதில் முதல் விதியான ”அதிகாரத்தின் மீது கை வைக்காதே..” என்னும் விதியை மீறி அவர்கள் ஒரு அமைச்சரின் மகனை கிட்நேப் செய்ய முனைவதில் இருந்து ஆரம்பிக்கிறது படத்தின் சுறுசுறுப்பு. விஜய் சேதுபதி ஆங்காங்கே பேசும் அந்த உடைந்து போன ஆங்கிலம், கடத்திய பெண்ணையே காசு கொடுத்து தங்கள் கட்சிக்கு சாதகமாக்கும் முயற்சி, கடத்தியப் பின்னர் வீட்டுக்கு போன் செய்து அவர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சி, சண்டே நாங்க எந்த வேலையும் பாக்க மாட்டோம்.. அதனால மண்டே கால் பண்றே… என அலம்புவது என விஜய் சேதுபதி படத்தை பக்காவாக பேலன்ஸ் செய்கிறார். சின்ன சின்ன கேரக்டர்களில் எல்லாம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார்கள். உதாரணமாக அந்த டாக்டர் ரவுடி, நம்பிக்கை கண்ணன், ஞானோதயம், அருட்பிரகாசம் இப்படி.. ஷம்மு கேரக்டரைசேசன் அருமை. ஆனால் அது மனதில் நிற்காமல் போய்விடுகிறது.


அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் சூப்பர். அவரது மகனை அப்பாவுக்கு அப்படியே நேர் எதிரான கதாபாத்திரமாக காண்பித்து, கடைசியில் க்ளைமாக்ஸ்சில் அடித்திருக்கும் ட்விஸ்ட் மிக அருமை. ஆனால் ஏன் அவரே லஞ்சம் கொடுக்க வரச் சொல்லிவிட்டு அவர்களை காட்டியும் கொடுக்க வேண்டும் என்னும் கேள்விக்கு பதிலே இல்லை. பல இடங்களில் ட்விஸ்ட் என்று அடிக்கும் திருப்பங்கள் எல்லாம் குறும்பட அளவிலேயே இருந்ததென்னவோ உண்மை.

இப்படி எல்லாம் கிட்நாப் செய்ய முடியுமா..? இதெல்லாம் நடக்குமா..? என்ற எந்த எதிர்பதமான கேள்விகளும் கேட்காமல், கண்ணை மூடிக் கொண்டு ஒரு குழந்தை கதை கேட்பது போல் கதை கேட்டுக் கொண்டே இருந்தால்.. குழந்தைக்கு கிடைப்பது போன்ற சுவாரஸ்யமான திருப்பங்கள் நமக்கும் கிடைக்கும்… கேள்வி கேட்கத் தொடங்கினால்.. கேள்விக்கு பதிலும் கிடைக்காது.. கேள்வி மட்டுமே மிஞ்சி நிற்கும்.


சந்தோஷ் நாராயணின் இசையும் பிண்ணனி இசையும் மிகமிக அருமை. படத்தின் பெரும்பாலான இடங்களில் இசை அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது. வசனங்கள் படத்தை லைவ்வாக வைத்திருப்பதில் அதிகபடியாகவே உதவி இருக்கின்றன எனலாம்.. இல்லையென்றால் திரைக்கதையின் இரண்டாம் பாதியில் உள்ள தொய்வு பல் இளித்திருக்கும். அதிலும் குறிப்பாக பிரம்மா என்னும் அந்த போலீஸ் அதிகாரி அத்தனை பில்டப்புகளுடன் வந்தும்.. அதனால் எந்த பலனும் இல்லை என்பது பெரிய மைனஸ். ஏற்கனவே படத்தின் மீது இருந்த அதீதமான எதிர்பார்ப்பு, விஜய் சேதுபதியின் ஸ்கீரின் ப்ரசன்ஸ், ஸ்டூடியோ க்ரீனின் விளம்பரங்கள், ஆங்காங்கே தலைகாட்டும் சின்ன சின்ன காமெடிகள், இவை எல்லாம் சேர்த்து ஓரளவுக்கு படத்தை ரசிக்க வைக்கிறது என்றாலும்.. ஒரு வாரம் கழித்து அந்தப் படத்தில் என்ன இருந்தது என்று எண்ணிப் பார்த்தால் எதுவுமே நினைவுக்கு வராது என்பதும் உண்மையே…


பாவம் தமிழக மக்கள் மிகுந்த மன இறுக்கத்துடன் வாழ்கிறார்கள் போலும். எங்களை சிரிக்க வைக்கமாட்டீர்களா என்று ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் தவம் இருக்கிறார்கள். ஒன்றுமில்லாத வசனங்களுக்குக்கூட சிரிப்பு வைத்தியம் எடுக்க வந்தவர்கள் போல் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மூன்றாம்தர மேம்போக்கான சிரிப்பு வைத்திய காட்சிகள் இந்த படத்தில் குறைவு என்பது என் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.



1 comment: