Wednesday 22 May 2013

நேரம்:


அல்போன்ஸ் புத்திரன் என்ற புதிய இயக்குநரின் முதல்படம். படத்தின் ஆரம்பத்திலேயே “குவாண்டின் டொரொண்டினோ” அவர்களின் மேற்கோளான ”என் படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் எடுக்கப்படாத படங்களில் இருந்து திருடப்பட்டவை” என்பதை காட்டி அதனை தானும் வழிமொழிகிறேன் என்று படத்தை தொடங்குகிறார் இயக்குநர். இதை எதற்காக போட்டிருக்கிறார் என்னும் ஆராய்ச்சியை எல்லாம் இறுதியில் வைத்துக் கொள்வோம். மேலும் படத்தில் டைட்டில் கார்ட் மட்டும் இரண்டு நிமிடத்துக்கு குறைவில்லாமல் வருகிறது.


படத்தின் ஒன்லைனர் என்னவென்றால் ”ஒருவனுக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டால் எல்லாமே நன்றாக நடக்கும்.. கெட்ட நேரம் தொடங்கி விட்டால் எல்லாமே கெட்டதாக நடக்கும்…” என்பதே

படத்தின் ஆரம்பகாட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். அதாவது கதாநாயகனுக்கு கெட்டநேரம்.. எனவே தொடர்ந்தால் போல் எல்லாமே கெட்ட விசயங்களாகவே நடக்கிறது. முதலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் நேரத்தில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் நாயகனுக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் வேலை போகிறது. இதனால் வட்டி ராஜா என்னும் ரவுடியிடம் வட்டிக்கு பணம் வாங்கி தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கிறான். வேலை கிடைத்ததும் பணத்தை திருப்பிக் கொடுக்க திட்டம். ஆனால் நான்கு மாதமாகியும் வேலை கிடைக்கவில்லை. ரவுடி பணம் கேட்டு மிரட்டத் தொடங்குகிறான். அதே நேரத்தில் வேலை இன்னும் கிடைக்கவில்லை என்னும் காரணத்தைச் சொல்லி, காதலியின் தகப்பன் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க.. அவள் வீட்டை விட்டு வருகிறாள்.. அவளது தகப்பனோ தன் மகளை கடத்தியதாக போலீசில் புகார் செய்ய.. அங்கும் ஒரு பிரச்சனை.. காதலனை சந்திக்க வரும்  வழியில் நாயகியின் செயினை ஒருவன் பறித்துவிட்டு ஓடி விடுகிறான்… அங்கொரு பிரச்சனை.. வட்டி ராஜாவுக்கு வட்டி கட்ட நண்பனிடம் கடனாக வாங்கி வைத்திருந்த பணத்தை ஒருவன் நாயகனிடம் இருந்தும் திருடி விடுகிறான்.. இது தலை போகிற பிரச்சனை… இது போதாதென்று தங்கையை கல்யாணம் செய்த மச்சானிடம் இருந்தும் புதிதாக ஒரு பிரச்சனை. இத்தனை பிரச்சனைகளையும் நாயகன் எப்படி சமாளித்தான்.. அவனுக்கு நல்ல நேரம் வந்ததா இல்லையா…? என்பது மீதிக்கதை..


சமீபகாலத்தில் வந்த தமிழ்படங்களில் அதிகமான கதாபாத்திரங்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் கதையை நகர்த்திச் செல்லும் விதமாகவும் காட்சிப்படுத்தி இருக்கும் திரைக்கதை உண்மையாகவே பாராட்டப்பட வேண்டியது. இது போன்ற பல முக்கியமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கதை நகர்வில் குறிப்பிட்ட பங்களிப்பைக் கொடுத்த மற்றொரு சமீபத்திய படம் “மெளன குரு”


இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான, வெற்றி(கதாநாயகன் நவீன்), வேணி (நாயகி நஸ்ரியா), வட்டி ராஜா(சிம்ஹா), லைட் அவுஸ்(ரமேஷ்), கட்டகுஞ்சு (ஜான் விஜய்), சரவணன்(ர்)(தம்பி ராமையா), வெற்றியின் நண்பன் கதாபாத்திரம், வெற்றியின் மச்சினன் கதாபாத்திரம், இது போக நாசர், சார்லி, நாசரின் தம்பியாக வரும் மாணிக்கம் மற்றும் அந்த ஆட்டோ டிரைவர் என எல்லாருமே ஒன்று பிரச்சனையை உருவாக்குபவர்களாகவோ அல்லது அதை தீர்த்து வைப்பவர்களாகவோ கதையோடு பயணிக்கிறார்கள்.


மேலும் ஆரம்ப காட்சியில் சிம்கா சாப்பிட்டுக் கொண்டு இருப்பதும் பின்பு அது அவரது வீடில்லை என்பதை விளக்குவதும், நாலு மாதங்கள் ஓடுகின்ற விதத்தை ஒரு டூத்பேஸ்டைக் கொண்டு காட்சிப்படுத்தியதும், காதலியின் போன்கால் வரும்போது காதலின் ப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு சீக்கிரமே கதைக்குள் வந்துவிடுவதும் ஒரு வித்தியாசமான அட்மாஸ்பியரில் போலீஸ் ஸ்டேசனைக் காட்ட எண்ணி வெள்ளை அடிக்கும் சூழலை பயன்படுத்தி இருப்பதும், கோணலாக தொங்கிக் கொண்டு இருக்கும் வாய்மையே வெல்லும் போர்ட்டும் க்ளாஷ்.  ஆங்காங்கே வரும் சில காமெடி துணுக்குகள், உதாரணமாக நாசர் பாடத் தொடங்கியவுடனே அவரது அடியொட்டிகள் வெற்றியை திட்டுவது போல் திட்டு கவனத்தை திருப்புவது, தன் பெயரை சரவணர் என்று சொல்வதற்கு தம்பி ராமையா சொல்லும் விளக்கம் என குறிப்பிட்ட சில காட்சிகள் அருமை..


சிறப்பான நடிப்பு என்கின்ற அடிப்படையில் என்று பார்த்தால் நாயகன் நாயகியை பின் தள்ளிவிட்டு நாசரும் வில்லனாக வந்து கலக்கிய சிம்ஹாவும் தான் மனதில் நிற்கிறார்கள். நாயகன் நவின் இன்னும் பல படிகள் தாண்டவேண்டும். நாயகி நஸ்ரியா காஜலின் தோற்றத்தில் இருப்பதால் இவருக்கு இனி ஏறுமுகம் என்றே தோன்றுகிறது. நடிப்பு பற்றி.. நடிக்கவே தெரியவில்லை என்று எந்த கதாநாயகியை நாம் ஒதுக்கி இருக்கிறோம்.. இசை வெறும் இரைச்சல்.. பெரிதாக ஒன்றும் இல்லை.. 5டி 7டி கேமராக்களில் எடுத்ததாக இருந்தாலும் நல்ல குவாலிட்டியான அவுட்புட் என்பது மகிழ்ச்சியான செய்தி.


என் படத்தின் காட்சிகள் எடுக்கப்படாத படத்தில் இருந்து திருடப்பட்டவை என்னும் வார்த்தைகளை யோசித்த போது.. இந்த சாயலில் ஓடிக் கொண்டே ஒரு படம் பார்த்ததாக நினைவு. ”“ரன் லோலா ரன்” என்னும் திரைப்படம். கதாநாயகன் தன் பாஸ்க்கு கொடுக்க வேண்டிய பணத்தை ட்ரெயினில் ஒருவன் திருடி விடுவான். நாயகன் தன் காதலியிடம் கேட்பான். அவள் நான் 12 மணிக்குள் வந்துவிடுகிறேன் காத்திரு என்று சொல்லிவிட்டு தன் தந்தையிடம் உதவி கேட்க செல்வாள். அவர் ஒரு சண்டையில் நீ என் பொண்ணே இல்லை என்று அடித்து விரட்டி விடுவார். மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டு இருக்கும். “நீ பனிரெண்டு மணிக்குள் திரும்பிவராவிட்டால் நான் எதிரே உள்ள சூப்பர் மார்கெட்டில் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கப் போகிறேன்.. அதைவிட்டால் எனக்கு பணத்தை மீட்க வேறுவழியில்லை என்று சொன்னது நினைவு வரும்.. ஓடத் தொடங்குவாள்… தன் காதலனின் பணத்தை திருடியவன் அவளை கடந்து செல்வான்.. நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கும்.. அவள் ஓடிக் கொண்டே இருப்பாள்….” இப்படி யாரும் சொல்லிவிடுவார்கள் என்ற காரணத்துக்காகவே இயக்குநர் அந்த மேற்கோளை பயன்படுத்தினாரா தெரியவில்லை.. ஆனால் இதற்கும் இந்தப் படத்திற்கும் உண்மையாகவே எந்த சம்பந்தம் இல்லைதான் இருந்தாலும் படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இந்தப்படமும் நினைவுக்கு வந்தது அவ்வளவே..


குவாண்டின் டொரொண்டினோவுக்கு வருவோம். இவர் இப்போது பல தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு ஆஸ்தான இயக்குநராக ஆகிவிட்டிருக்கிறார். மிக நல்ல விசயம். அதற்காக டொரொண்டினோவின் ஸ்டைலை இவரிடமும் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் டொரொண்டினோவின் எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு நிலையற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். அந்த பாத்திரம் எந்த நேரத்தில் எப்படி செயலாற்றும் என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது. அதுதான் அவரது ப்ளஸ். ஆனால் அது இதில் மிஸ்சிங். என்னதான் சிம்ஹாவை அவ்வளவு பில்டப்புடன் காட்டினாலும் அவரால் ஒரு மிகப்பெரிய இழப்பு ஹீரோ தரப்புக்கு வரும் என்னும் எண்ணமே தோன்ற மாட்டேன் என்கிறது. மேலும் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன திருப்பங்கள் சில இடங்களில் எளிதாக யூகிக்க கூடியதாக இருப்பதும் ஓர் நெகட்டிவ்… அதை தவிர்த்துப் பார்க்கையில் இன்றைய தமிழ் திரைப்பட சூழலில் இது ஒரு மறுக்கமுடியாத நல்ல முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

1 comment: