Monday 11 February 2013

விஸ்வரூபம்:



தமிழ் சினிமாவில் பல காரணங்களுக்காக மறக்கப்படாமல் இருக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் இந்த விஸ்வரூபம். பட ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகள். முதலில் செல்வராகவன் இயக்குவதாக இருந்து, பின்னர் அவர் நீங்கிக் கொள்ள, கமலே இயக்குவது என முடிவானது. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளிலேயே பட்ஜெட் 40கோடியை நெருங்க, மிரண்டு போன தயாரிப்பு தரப்பு விலகிக்கொள்ள முடிவு செய்யவே, கமல் தன் சொத்துக்களை முதலீடாகக் கொண்டு ராஜ்கமல் ப்ரொடக்சன் மூலமாக தயாரிப்பையும் ஏற்று படவேலைகளை தொடர்ந்தார்.

படப்பிடிப்பு முடிந்து ரீலீஸுக்கு தயாரான நேரத்தில் கமல் படத்தை நேரடியாக டிடிஹெச்ல் ரீலீஸ் செய்ய முயல, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்கொடி தூக்க.. பிரச்சனை மீண்டும் தொடங்கியது. இந்தப் பிரச்சனையை ஒருவாறு சமாளித்து முதலில் தியேட்டரில் தான் படம் ரீலீஸ், ஒரு வாரத்திற்குப் பிறகே டிடிஹெச்ல் ஒளிபரப்பாகும் என்கின்ற ரீதியில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாக, அந்நேரத்தில் கமல் என்ன நினைத்தாரோ, படத்தை முன்கூட்டியே இஸ்லாமிய மதத்தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியாக காண்பிக்க மீண்டும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

படத்தில் முஸ்லீம்களையும் இஸ்லாமிய மதத்தையும் புண்படுத்துவது போல் காட்சியமைப்புகள் இருப்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று பிரச்சனை வெடித்தது. இதை எதிர்த்து கமல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய.. அதே நேரத்தில் அவசரகதியில் படம் வெளியாக எல்லா மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாய் செய்தி கசிய விசயம் மிகப்பெரிய சென்சேஷனானது. விரக்தியின் உச்சிக்கு சென்ற கமல் நான் எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன்.. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று அறிவித்ததை தொடர்ந்து கமல் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்க தொடங்கினர். இதை தொடர்ந்து காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியது. அது வரை ஏதோ ஒருகாரணத்துக்காக அமைதிகாத்த தமிழ் திரையுலகின் சில புள்ளிகள் மட்டும் கமலுக்கு ஆதரவாக வாய் திறக்க.. “கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக…” விசயம் செல்வதை லேட்டாக உணர்ந்த தமிழக அரசின் தலைமையும் கொஞ்சம் இறங்கிவர, படம் இப்போது சம்பந்தப்பட்ட சில காட்சிகளின் தணிக்கைக்கு பின்னர் வெளியாகி இருக்கிறது.

கமலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இது ரொம்பவே ஸ்பெசலான படம். கதைகளன், திரைக்கதை, எடிட்டிங், இசை, கலை, கேமரா, மேக்கிங்க் என தமிழ்சினிமா தொடத்துடிக்கும் சில உச்சங்களை இந்தப்படம் தொட்டு வந்திருக்கிறது.

படம் பெரும்பாலான மக்கள் பார்த்திருப்பார்கள் என்பதால், கதையை பற்றி சற்று விரிவாக பேசுவதில் எந்த பாதகமும் இல்லை என்று நினைக்கிறேன். இந்தியன் ஆர்மியை சேர்ந்த விகாஷ் இப்ராகிம் காஷ்மீரி(கமல்) நேட்டோ படை(அமெரிக்க இங்கிலாந்து கூட்டுப்படை பிரிவு)க்கு உளவு வேலை பார்க்க தாலீபன் தீவிரவாத குழுவுடன் இணைகிறார். அங்கு தாலீபன்கள் பிடித்து வைத்திருக்கும் அமெரிக்க வீரர்களை கண்டுபிடிக்க உதவுகிறார். பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடைபெற இருக்கும் சீசியம் அணுக்கதிர் வீச்சு பேரழிவை தடுத்து நிறுத்தவும் விகாஷின் டீம் அமெரிக்காவின் FBI க்கு உதவுகிறது…! தப்பிச் சென்ற தலிபான் இனத் தலைவர் உமரின் அடுத்த குறி இந்தியா என்பதால் இந்த விஸ்வரூப போராட்டம் தொடரும் என்ற டைட்டிலுடன் படம் முடிகிறது.

நான் – லீனியர் டைப்பில் அமைந்த ஸ்கீரின்ப்ளே. அதை நான் சற்று லீனியர் முறையிலேயே சொல்ல முயலுகிறேன்.. தொர்கா நெடுஞ்சாலை (பாகிஸ்தானாக இருக்கலாம்…) எல்லைப்பகுதியில் காட்டப்படும் ஒரு காகித பிரசுரத்தில் இந்திய ராணுவத்தால் தேடப்படும் தீவிரவாதி இந்த விகாஷ் காஷ்மீரி என்று கமல் படம் காட்டப்படுகிறது. அவனை தாலீபான் தலைவர் உமர் தாலீபானில் சேர்த்துக்கொள்ள காஷ்மீரி அல்கொய்தாவிற்கு ட்ரெய்னிங்க் கொடுக்கிறான். அப்போது நேட்டோ படைக்கு அமெரிக்க வீரர்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தையும் காட்டிக் கொடுக்கிறான், மேலும் அமெரிக்கப்படை தாக்குதலின் போது உமரின் குடும்பம் அழிகிறது. காஷ்மீரியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்ட உமர் அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயல, காஷ்மீரி தப்புகிறான்.

தன் குடும்பத்தை இழந்து வன்மத்தோடு அலைந்து கொண்டிருக்கும் உமர், அமெரிக்காவில் இருந்து கொண்டே, அங்கு அணுக்கதிர் வீச்சு தொடர்பான நாச வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். விகாஷ் காஷ்மீரி உமரின் நம்பிக்கையான கையாளாக தாலீபானில் இருந்த போது உமருடனான உரையாடலின் மூலம் அவனது திட்டங்களை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கும் விகாஷ், இந்த நாச வேலைகளை தடுக்க அமெரிக்காவில் விஸ்வநாத் என்ற பெயருடன், கதக் நாடக கலைஞர் என்கின்ற போர்வையில் இயங்கிக் கொண்டிருக்கிறான். அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக வேர் கவுஸ் பற்றி துப்புத் துலக்க சென்ற போது, விஸ்வநாத்தை கண்காணிக்க அவரது மனைவி நிருபமாவால் அனுப்பப்பட்ட டிடெக்டிவ் விஸ்வநாத்தை பிந்தொடர்ந்து மாட்டிக் கொள்கிறான்.

டிடெக்டிவ் மூலமாக விஸ்வநாத்தை நெருங்கும் உமர், விஸ்வநாத் தான் காஷ்மீரி என்று தெரிந்துகொண்டு அவனைக் கொல்ல முயல, அதில் இருந்து தப்பிக்கும் காஷ்மீரி(கமல்) உமரின் திட்டத்தை எப்படி தன் டீம் மற்றும் FBI துணையுடன் முறியடித்தார் என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் ஆரம்பத்தில் சற்றே பெண் தன்மையுடன் அறிமுகமாகும் கமலஹாசனின் விஸ்வநாத் என்னும் கேரக்டர் அருமை. போன் அடிக்கும் போதும், வேக வைத்த சிக்கனை எடுக்க ஓடும் போதும் அந்த நடையில் காட்டும் நளினம் கமலின் முத்திரை. தன் மனைவி தன்னைக் கண்காணிக்க அனுப்பி இருக்கும் நபரிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ள அவர் ஓடும் போது உடுத்தியிருக்கும் ஆடையில் கூட அத்தனை பெர்பெக்‌ஷன். பரூக்கிடம் ‘நான் சொல்லுவேன்.. ஆனா நீங்க என்ன நம்பணும்’ என்று கண்சிமிட்டுவது என பெண் தன்மையிலும் ஆணுக்கான அடையாளமாக உச்சஸ்தாயியில் அடித்தொண்டையில் இருந்து ஆரம்பித்து, அரபு மொழியில் நமாஸ் செய்யத் தொடங்கி, கண் இமைக்கும் பொழுதில் அனைவரையும் காலி செய்துவிட்டு தப்பிச் செல்லும் காட்சியிலும் படம் ஹைஸ்பீடில் பயணிக்கத் தொடங்குகிறது. கமல் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வது கூட கிளிசேவாகிவிடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.

கமலின் மனைவி நிருபமாவாக பூஜாகுமார். சொல்லிக் கொள்ளும்படியான ரீ-எண்ட்ரீ. வாய்ஸ் மாடுலேசன்களில் கமலின் ட்ரெய்னிங்க் நன்றாகவே தெரிகிறது. வயது வித்தியாசம் அதிகமுள்ள, பெண் தன்மையுடன் வளைய வரும் தன் கணவனை வெறுக்கும் கதாபாத்திரம். நீயூக்ளியார் ஆங்காலஜிஸ்ட் ஆக பணிபுரியும் இடத்தில் தன் மேலதிகாரி விரித்த வலையில் விழும் நிருபமா, தன் கணவனை பிரிய அவன் தரப்பிலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், ஒரு டிடெக்டிவ் கொண்டு கமலை கண்காணிக்கிறார். தன் உயிரை தன் கணவன் விஸ்வரூபம் எடுத்து காப்பாற்றும் காட்சியிலும், தன் கணவன் ஜனாதிபதியுடன் உரையாடுவதை கண்டு பெருமிதம் கொள்ளும் இடங்களிலும் பூஜாகுமார் கொள்ளை அழகு.

தாலிபன் தலைவன் உமராக வருபவரின் நடிப்பு செம்ம ஷார்ப். சின்ன சின்ன பார்வைகளில் கூட தன் கோபம், வெறுப்பு, இயலாமை, சோகம் இவைகளை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக தன் கூட்டத்தில் ஒரு துரோகி இருக்கிறான் என்று அவனை உணர்ச்சிவசப்பட்டு அடிக்கும் இடத்திலும், அவனுக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் போடும் போது எந்த உணர்ச்சியையும் காட்டாமல் புறாக்களுக்கு வாயில் உணவை திணிக்கும் காட்சியிலும் எக்செலண்டான நடிப்பு.

நாசருக்கும், ஆண்ட்ரியாவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை. படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆப்கன் குகைகளும், மலைத் தொடர்களும், கிராமங்களும் அச்சு அசல் ஆப்கானிஸ்தானை நம் கண்முன் நிறுத்துகின்றன. உமரின் இளைய மகன் நாசரை கமல் ஊஞ்சலாட்ட முயற்சிப்பதும், அவன் தான் ஒரு குழந்தை இல்லை என்று மறுத்து ஓடுவதும், ஜிகாதியாக போகப் போகும் உமரின் மூத்தமகன் அந்த ஊஞ்சலில் அமர்ந்து தன்னை தள்ள சொல்லும் காட்சியும். அவன் தற்கொலை தாக்குதலுக்கு தயாராகி விடைபெறும் போது காட்டப்படும் வாசல் கதவு போன்ற ப்ரேமும் கமலின் புத்திசாலித்தனத்திற்கு நல்ல உதாரணம். முதலாவது ஃபைட் ப்ளாக்கின் மேக்கிங் க்ளாசிக் ரகம்.

ஏகப்பட்ட டெக்னாலஜி தொடர்பான விசயங்கள், “ஹைஜேக் ரேடர், சீசியம், தும்பி கேமரா, புறா விடு கதிர்வீச்சு, முகலாய கத்தி, நேட்டோ படை என பாமர ரசிகனுக்கு புரியாத பல விசயங்கள் படத்தில் உண்டு. பெரும்பாலான விசயங்களை கமல் ஹாவ் வேயில் ஓப்பன் செய்வதால் பல ரசிகர்கள் என்ன நடக்கின்றது என்றே புரியாமல் புலம்புவதை கேட்கமுடிந்தது.அதுபோல் தான் சில வசனங்களும்.. எல்லோருக்குமே புரிந்துவிடாது. ஒளிப்பதிவாளர் ஷானு வர்கீஸ், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா மற்றும் எடிட்டிர் மகேஷ் என அனைத்து டெக்னீசியன்களுக்கும் ஒரு முக்கியமான அடையாளம் இந்த விஸ்வரூபம்.

சங்கர் லாய் இசானின் இசையில் ஏற்கனவே பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும், “அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக்கதிர்தான்…” பாடல் மனதை ஏதோ செய்தது என்பது உண்மை. ஆங்காங்கே பிண்ணனியிசையும். படம் நெடுக கமலின் ட்ரேட் மார்க் வசனங்கள், உதாரணமாக ‘என்ன அமெரிக்கால மழ பெய்யாது’ ‘எங்க அம்மாவ எனக்கு புறந்ததில இருந்தே தெரியும்..’ ‘எந்த கடவுள்..?’ ‘அசுரனோட சாவ கொண்டாடுறதில என்ன தப்பு…? அத அவன் பொண்டாட்டி புள்ளட்ட போய் சொல்லிப்பாரு…’ ’நாங்க சிலுவைலெல்லாம் அறைய மாட்டோம்… கடல்ல மூழ்கடிச்சிருவோம்…’

இப்படி படத்தை சிலாகிக்க பல இடங்கள் இருந்தாலும்………. சில குறைகளும் கண்ணுக்கு தெரியாமல் இல்லை. மிக முக்கியமாக சிலர் அங்கலாய்க்கிறார்கள்… மிக நுணுக்கமாக ஆப்கன் மக்களின் வாழ்க்கையை கமல் சித்தரித்திருக்கிறார் என்று. மன்னிக்கவும் சத்தியமாக எனக்கு அப்படி தோன்றவில்லை… அவர்களது வாழ்க்கையே எப்போதும் துப்பாக்கியும் தோட்டாக்களும் நிரம்பியது தானா…? இவைகளை தவிர்த்து அவர்களிடம் வாழ்வியலுக்கான கூறுகள் ஏதுமே இல்லையா…? சிறுவர்கள் விளையாடினால் கூட ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டுதான் விளையாடுவார்கள் என்பதுதான் அந்த நுண்ணிய அவதானிப்பா…?

ஒரு அமெரிக்க படைவீரன் ஒரு பெண்ணை சுட்டுவிட்டு நொந்து கொள்வது போல் ஒரு காட்சியமைப்பு. இதன் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார். அமெரிக்கர்கள் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களை போரின் போது கொல்லமாட்டார்கள் என்பதா…? ஆனால் அடுத்த காட்சியிலேயே அவர்கள் அனுப்பும் லாஞ்சர் வீட்டை தரைமட்டமாக்கி சிறுவர்களையும் பெண்களையும் அழிக்கிறது… இதற்கு என்ன பொருள்…? இரண்டு விதமான மனிதர்களும் அவர்களது படையில் உண்டு என்று சொல்ல வருகீறீர்களா…? அது அவ்வாறெனில் தாலீபன் தரப்பில் அந்த தர்க்க நியாயத்தை பதிவு செய்யாதது ஏன்…?

தாலீபன்களின் சில குறைபாடுகளை நான் மறுக்கவில்லை… சில குழந்தைமனம் கொண்ட இளைஞர்களை தற்கொலைபடையாக மாற்றுவதும், பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட தர மறுப்பதும், சில நல்ல விசயங்களை கூட கண்மூடித்தனமாக எதிர்ப்பதையும் காட்சியாக காட்டியிருப்பது வரவேற்கதக்கது. ஆனால் அவர்கள் தரப்பில் யாருமே நல்லவர் இல்லை என்பது போன்ற ஒரு மாயபிம்பத்தை மறைமுகமாக ஏற்படுத்த முனைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாடல் வரிகளில் உள்ள நடுநிலைத்தன்மை கூட காட்சியமைப்புகளில் இல்லை. உதாரணமாக “டாலர் தேசத்தில் சமதர்மம் கிடையாது…” “போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை.. போர்தான் எங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டது…” “அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக்கதிர்தான்….” போன்ற வரிகளில் உள்ள நடுநிலைத்தன்மையை ஆராய்ந்தால் அது புரியும்.

தாலீபன் மற்றும் ஆப்கனின் குறைகளையும், அவர்கள் செய்யும் தவறுகளையும் அப்பட்டமாக பிரதிபலிக்கும் விஸ்வரூபம், அவர்கள் தரப்பு நியாயத்தை பதிவு செய்யாதது ஏன்…? பதிவு செய்ய விருப்பமில்லையா.? அல்லது இந்திய அரசாங்கம் அதை அனுமதிக்காதா….? அப்படி அனுமதிக்காத பட்சத்தில், அதை பகடி செய்வது போல் விகாஷ் காஷ்மீரி இப்படி பேசுவது போல் ஒரு வசனமாவது வைத்திருக்கலாமே… “உங்கள் தரப்பு நியாயத்தைப் பேச எங்கள் அரசாங்கம் என்னை அனுமதிக்கவில்லை….” என்று.

ஒரு கலைஞனாக எதை சொல்ல வேண்டும், எதை சொல்ல வேண்டியதில்லை என்று தீர்மானிக்கும் உரிமை கூட எனக்கு இல்லையா.. என்றெல்லாம் கேட்டு தப்பித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இதில் நீங்கள் பேசி இருப்பது ஒரு சமூக(இஸ்லாமிய சமூகமல்ல) பிரச்சனையை.. எனவே இருபக்க நியாயத்தையும் நீங்கள் பேசியிருக்க வேண்டும்.. அப்படி பேசாததால் சில விஷமிகள் நீங்கள் ஒரு சாரருக்கு சாதகமாக படம் எடுத்திருக்கிறீர்கள் என வசைபாட ஏதுவான சூழலை உருவாக்கியிருக்கிறீர்கள்… அமெரிக்க தாலீபன் அரசியலைப் பற்றி எதுவுமே அறியாத சாதாரண மக்களின் மனதில் இந்த திரைப்படம் தாலீபன் தரப்பு தவறுகளை மட்டும் மிக அழுத்தமாக பதிவு செய்வதால், அவர்கள் தாலீபன் மற்றும் ஆப்கன் தரப்பில் மட்டுமே தவறு இருக்கிறது. அதைத்தான் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் தட்டிக் கேட்கின்றன என்கின்ற தவறான அடிப்படை சிந்தனைக்குள் மாட்டிக் கொள்ளக்கூடும். இது ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மீதான இன துவேசம் வளர காரணமாகக்கூடிய அபாயம் இருக்கிறது. வேறு யாராக இருந்தாலும் நாங்கள் இதனை அவர்களிடம் எதிர்பார்த்திருக்க மாட்டோம்…. நீங்கள் உலக அரசியல் அறிந்தவர் என்பதால் மட்டுமல்ல….

“ஒரு ஓநாய் தரப்பு நியாயத்தையே ஹேராமில் உரக்க சொல்லி அதனை எல்லார் மனதிலும் அழுத்தமாக பதிய வைத்தவர் அல்லவா நீங்கள்..” எனவே ஒரு தரப்பு நியாயத்தை பேசாமல் விட்டதை எதேச்சையான நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை…, ஏனென்றால் நீங்கள் தானே சொன்னீர்கள் “மனமிருந்தால் மார்க்க பந்து….”

இருப்பினும் மொகலாய கத்தி, அந்த இரண்டு பொம்மைகள்(யூகமே), ஆண்ட்ரியா கதாபாத்திரம், டாக்கின்ஸ் கொண்டு வந்து சேர்த்த வீடியோ ஆதாரம் போன்ற விசயங்கள் இரண்டாம் பாகத்தில் முக்கியபங்கு வகிப்பதைப் போல் சிறிதேனும் ஆப்கன் தரப்பு நியாயத்தையும் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையும் சிறிது இருக்கிறது.

1 comment: