காடு பறிபோனதில் எனக்கு பெருத்த கவலை உண்டு..
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியை ஒட்டியே அமைந்திருக்கும் ஊர் தான் எங்கள்
ஊர் என்பதால், கடலைப் பார்த்து கடலின் மீது காதல் கொள்ளும் முன்பே நான் அனுதினமும்
பார்த்த மலைகளோடும் காடுகளோடு காதல் கொண்டவன் நான்… இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும்
அழிந்து வரும் காடுகள் சார்ந்தும், காட்டுயிர் சார்ந்தும் எனக்கு வருத்தங்கள் எப்போதும்
உண்டு.. அந்த வருத்தத்தோடு இப்போது ஒட்டியிருக்கும் மற்றொரு வருத்தம் பறி போகியிருக்கும்
இந்த “ காடு” தலைப்பு தொடர்பானது… காட்டுயிர் சார்ந்து நான் கனவு கண்டு கொண்டிருக்கும்
ஒரு கதைக்கு காடு என்ற தலைப்பையே நானும் யோசித்திருந்தேன்… ம்ம்ம்…. இன்னும் அடுத்த
காலடி எடுத்து வைக்கும் முன்னர் இன்னும் எத்தனை விசயங்களை பறி கொடுக்க வேண்டி இருக்கும்
என்றே தெரியவில்லை… சரி கதைக்கு வருவோம்… இந்த காடு என்கின்ற தலைப்பே என்னை கவர்ச்சிகரமாக
இழுத்ததால், இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து
இருந்தேன்…
தமிழகத்தின் காடுகள் என்று பார்த்தால், அதில்
மிகமுக்கியமானதாக விளங்குவது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி காடுகள் தான்… இதன் மலையடி
வார மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம் தான் கதைக்களம்.. காடு சார்ந்த கதைக்களம்
என்றாலே காட்டிலாகா அதிகாரிகளைப் பற்றியோ, இல்லை மலைவாழ் மக்களைப் பற்றியோ, அல்லது
அடிக்கடி இவர்களுக்கு இடையில் நடைபெறும் சட்டமீறல்களைப் பற்றியோ பேசாமல் திரைப்படம்
எடுக்க முடியாது.. ஆனால் அப்படி எடுக்கின்ற திரைப்படத்தில் யாரை குற்றவாளியாகக் காட்டுவது
என்பது மிகப்பெரிய தலைவலி.. ஏனென்றால் வன இலாகா அதிகாரிகளின் மெத்தனமும், அரசாங்கத்தின்
மேம்போக்கான சட்ட திட்டங்களும் தான் காட்டு வளம் அழிவதற்கு காரணம் என்கின்ற கருத்தும்,
அதே நேரம் காட்டிற்குள்ளாகவே சட்டத்துக்கு புறம்பாக இருந்து கொண்டும், அல்லது அவ்வபோது
காட்டுக்குள் விறகு பொறுக்க சென்று வந்தும் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கும்
மலைவாழ் மக்கள் தான் காட்டு வளம் அழிவதற்கு காரணம் என்றும் இரண்டு விதமான எண்ணவோட்டங்கள்
நம்மிடையே உண்டு.. இதில் யார் உண்மையான குற்றவாளி….
இதற்கு நேர்மையான முறையில் பதில் சொல்வது
பலருக்கு சங்கடங்களையும் திரைப்படத்துக்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதால் திரைப்படப்
பாணியிலேயே அதற்கு விடையளித்து இருக்கிறார்.. இயக்குநர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள்…
ஆக அவரின் கூற்றுப்படி இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது அதாவது வன இலாகா அதிகாரிகளும்
அதே நேரம் மலையோர கிராம மக்களும் இருவருமே
தவறு செய்கிறார்கள் என்பதுவே அவரது தீர்மானம்… இது பல நேரங்களில் உண்மையாக இருக்கவும்
வாய்ப்பு உண்டு.. இரண்டு கிராமத்து இளைஞர்கள், ஒருவன் படித்துவிட்டு காட்டிலாகா அதிகாரியாக
முயற்சிப்பவன் காட்டின் மீது பெரிய அன்போ நேசமோ இல்லாதவன்… மற்றொருவன் படிக்காதவன்..
காட்டை நம்பியே ஜீவனம் செய்பவன்… காட்டின் மீது அளவு கடந்த பாசமும் அன்பும் கொண்டவன்…
அந்தப் படித்த கிராமத்து இளைஞன் வன இலாகா அதிகாரியாக மாறி, சட்டத்துக்கு புறம்பாக சந்தன
மரங்களை வெட்டி கடத்தும் கும்பலுக்கு உதவுகிறான்… தன் சொந்த மலையோர கிராமத்து மக்களையே
நயவஞ்சகமாக பேசி மலையில் இருந்து துறத்துகிறான்…. ஆக காட்டு வளத்தை அழிப்பவன் மலைவாழ்
மக்கள் இனத்தை சேர்ந்த ஒருவன், அதே நேரம் காட்டிலாக அதிகாரி…. ஆக இருவருமே குற்றவாளிகள்..
பிரச்சனை தீர்ந்தது…. என்று நினைத்துவிட்டார் போல இயக்குநர்…
ஒருவன் காட்டின் மரங்களை வெட்டி காட்டு வளத்தை
குலைக்கிறான் என்றால், அங்கு ஹீரோவுக்கு என்ன வேலை… அந்த துரோகியை வென்று காட்டைப்
பாதுகாப்பது தானே…. வழக்கமான சினிமா சம்பிரதாயத்தின்படி அதையே தான் செய்கிறார் நாயகன்
விதார்த்தும்… இடையிடையே பள்ளி செல்லும் ஒரு பெண்ணை காதலிக்கவும் செய்கிறார்… திரைப்படத்தின்
பலவீனங்கள் என்று பார்த்தால் அதன் சுவாரஸ்யம் இல்லாத, உணர்ச்சி இல்லாத திரைக்கதை, நடைமுறை
பிரச்சனையை பேசுவதற்கான தளம் அமைந்தும், நாயகனின் காதல், நண்பனின் துரோகம் என்னும்
வணிக அம்சங்களுக்கு உட்பட்ட தளத்திலேயே திரைக்கதையை பெரும்பாலும் நகர்த்தியது, துண்டு
துண்டான காட்சிப் படிமங்கள், காடு பற்றிய கதையை வழக்கமான சந்தனமரம் கடத்தும் கடத்தல்
சினிமாவாக குறுக்கியது.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்…
திரைப்படத்தின் முதல்பாதியில் மொத்தத்துக்கு
நடக்கும் சம்பவம் இதுவொன்றுதான்… படித்த நண்பன் செய்த குற்றத்தை படிக்காத நண்பன் விதார்த்
தான் செய்ததாக ஏற்றுக் கொள்வது, வேறு எதுவுமே இல்லை.. வன இலாகா அதிகாரிகளின் அத்துமீறலை
காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் அந்த மலைவாழ் நபரின்
படுகொலை சம்பவம் படு அபத்தமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது… அதற்கும் கதையின் மையத்துக்கும்
எந்த தொடர்பும் இல்லை.. இதுபோல் தான் புரட்சிகர எழுத்தாளராக வரும் சமுத்திரக்கனியின்
நாகா கதாபாத்திரமும்… இவர் பேசும் வசனங்கள் மிக கூர்மையானவையாக இருக்கும் அதே பட்சத்தில்
கதைக்கு தொடர்பே இல்லாததாகவும் இருக்கிறது… நாயகனின் நண்பன் கெட்டவன் என்று பார்வையாளனுக்கு
சொல்ல ஒரு சாமியாரும், நாயகனுக்கு சொல்ல ஒரு எழுத்தாளரும் என இரண்டு கதாபாத்திரங்கள்
வலிய திணிக்கப்பட்டு இருக்கின்றன… இவை எல்லாமே திரைக்கதையில் ஒட்டாமல் துருத்திக் கொண்டு
இருக்கின்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை…
காடு என்றவுடன் வனவிலங்குகளின் வாழ்வியலில்
ஏற்பட்ட பிரச்சனைகள், அந்த விலங்குகள் தொடர்பான நுண் தகவல்கள், காட்டிலாகா அதிகாரிகளின்
நடவடிக்கைகள், சந்தனமரம் கடத்துவது தவிர்த்து காட்டு வளம் அழிவதற்கான காரணங்கள், காடுகளை
அழித்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள், அதில் உண்டாகும் மண் அரிப்பும், காட்டாற்று வெள்ளமும்,
அத்துமீறி செயல்படும் அதிகாரிகள், மலைவாழ் மக்கள், சுரங்கி வரும் காட்டின் நிலப்பரப்பு
என காடு சார்ந்த பிரச்சனைகளும் காட்டைப் போலவே பிரம்மாண்டமானது… ஆனால் அது போன்ற தகவல்கள்
இல்லாமல் போனதும் ஒரு ஏமாற்றமே…
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் வசனங்கள்
தான்…. நாயகன் விதார்த் அடிக்கடி பேசும் வசனமான “ உயிர் வாழ்றதுக்காக இந்த காட்டுலருந்து
எத வேணும்னாலும் எடுத்துக்குவோம்…. ஆனா வசதியா வாழ்றதுக்காக இந்த காட்லருந்து ஒரு செடியக்
கூட பிடுங்க மாட்டோம்” என்று அடிக்கடி சொல்லும் வசனம் மலைவாழ் மக்களின் சார்பாகவே ஒலிக்கிறது…
அதுபோல் ”மாற்றத்தைக் கொண்டு வாரோம்னு சொல்லிட்டு பேழ்றதுல திங்காதீங்க… திங்குறதுல
பேழாதீங்க…” என்று சொல்கின்ற வசனமும். எழுத்தாளராக வரும் சமுத்திரக்கனி உடனான எல்லா
வசனங்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.. அதுபோல காட்டைப் பற்றி தெரிந்த மலைவாழ் மக்களுக்கே
காட்டிலாகா பணியை கொடுக்கலாமே என்கின்ற செய்தியும் யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான்….
இது தவிர்த்து படத்தில் சிங்கம் புலி தம்பி இராமையா அவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தும்
ஓரிரு காமெடிகள் சிரிப்புக்கு கேரண்டி கொடுத்தன… நடிப்பாக பார்த்தால் முதலில் மிளிர்வது
சிறிது நேரமே வந்து செல்லும் சமுத்திரக்கனி தான்… அந்த தெனாவெட்டான உடல்மொழி, தீர்க்கமான
பார்வை என கவருகிறார்… விதார்த்துக்கு நடிக்க வாய்ப்பு அதிகமெல்லாம் இல்லை… அதீதமாக
கவரவும் இல்லை… நாயகியாக வந்து செல்லும் சம்ஸ்கிருதி அழகாக இருக்கிறார்… ஆனால் கதாபாத்திரத்துக்கு
பொருந்தவே இல்லை… அது போல் இயக்குநர் ப்ரேமில் இருக்கும் துணை நடிகர்களின் ஒப்பனைகளிலும்,
முக பாவனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி இருக்கலாம்… புரட்சிகரமான மலைவாழ் மக்களின்
பாடலில் லிப்ஸ்டிக் மற்றும் கண்-மைகளை அப்பிக் கொண்டு நிற்கும் துணை நடிகைகளை பார்க்கும்
போது சிரிப்புதான் வருகிறது… அது போலத்தான் அவர்களது முகபாவனைகளும்…
படத்துக்கு இசையமைப்பாளர் கே அவர்களின் இசை
மிகப்பெரிய ப்ளஸ்… அது போலத்தான் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவும்… காட்டின் அழகையும்
அடர்த்தியையும் ஒரு சேர அள்ளி வந்திருக்கிறது மகேந்திரன் ஜெயராஜின் கேமரா… காசி விஸ்வநாதனின்
கத்தரி இன்னும் துணிந்து சில இடங்களை இயக்குநர் ராஜாங்கத்தின் அனுமதியுடன் கத்தரித்து
இருந்தால் சபாஷ் போட்டிருக்கலாம்… இயக்குநருக்கு கதையில் இருந்த முதிர்ச்சி, திரைக்கதை
மற்றும் காட்சியமைப்புகளில் இல்லையோ என்று தோன்றுகிறது…
காடு திரைப்படத்தை பாராட்ட வேண்டும் என்றால்,
அதற்கும் முதற்காரணம் மற்றும் முழுக்காரணம் அது காடு பற்றிய படம் என்பதாலும், காடு
பற்றிய விழிப்புணர்வை கொஞ்சமாவது பேசுவதாலும், புரட்சிகர எழுத்தாளர் பேசும் சில அற்புதமான
நடைமுறை சிக்கல் சார்ந்த வசனங்களுக்காகவும் மட்டுமே அன்றி வேறெதர்காகவும் இல்லை… காட்டின்
மீது காதல் உள்ளவர்களுக்கு காடு பற்றி தமிழில் வந்த திரைப்படம் என்று சொல்லிக் கொள்ள
இந்த ஒரு திரைப்படத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பதும் ஒரு சிறப்பு காரணமாக கொள்ளலாம்…