Friday 21 March 2014

கிம் கி டுக் வரிசை - 4

“I always ask myself one question: what is human? What does it mean to be human? Maybe people will consider my new films brutal again. But this violence is just a reflection of what they really are, of what is in each one of us to certain degree.”                                                                                                                                                                                                                                                     Kim Ki-duk
 SAMARITAN GIRL:

2004ல் நடந்த பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளி கரடி விருதைப் பெற்றுத் தந்து, கிம் கியின் ரசிகர் பட்டாளம் ஐரோப்பாவில் இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த திரைப்படம்… காமம் குரோதம் இரண்டுமே மிகக் குறைவாக கையாளப்பட்ட கிம் கி யின் படம் எதுவென்று கேட்டால் குழப்பமே இல்லாமல் “சமரிட்டன் கேர்ள்” திரைப்படத்தைக் கைகாட்டலாம்.. அதுபோல கிம் கியின் முக்கியக் கதாபாத்திரங்கள் கொஞ்சமேனும் வசனத்தை உதிர்ப்பதும் இத்திரைப்படத்தில் மட்டும்தான்..


இரண்டு தோழிகள். பள்ளியில் பயிலும் இவர்களுக்கு பாரீஸ் செல்ல ஆசை.. அதற்கு அதிகமாக பணம் தேவை என்பதால், அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தன் உடலை விற்க முன்வருகிறாள்… அதற்கான ஆளை தேர்ந்தெடுப்பது, பணத்தை நிர்வகிப்பது, போலீஸ் வரும்போது எச்சரிக்கை செய்வது இது போன்ற செயல்களில் மற்றொரு தோழி ஈடுபடுகிறாள்… ஒரு நாள் போலீஸ் வருவதை கவனிக்கத் தோழி தவறிவிட.. போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக மற்றொரு தோழி மாடியில் இருந்து குதித்து இறந்து போகிறாள்… இதுவரை சேர்ந்த பணமும் தோழியின் மரணமும் உறுத்திக் கொண்டே இருக்க… தன் தோழி உடலுறவு கொண்ட அதே நபர்களை சந்தித்து அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு, அவர்கள் கொடுத்த பணத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுக்கிறாள் மற்றொரு தோழி.. ஒரு கட்டத்தில் இது அவளது போலீஸ்கார தகப்பனுக்கு தெரிந்துவிட… அவள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர் பாதிவழியிலேயே மிரட்டி அனுப்புகிறார்… ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு வாடிக்கையாளரை கோபம் கொண்டு அடிக்க அவன் இறந்தும் போகிறான்… தான் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்ததையும் உணர்ந்த அவளது தந்தை போலீஸிடம் சரணடைய… தனியே விடப்படும் அச்சிறுபெண் எஞ்சிய தன் வாழ்வை தனித்து கடக்கவேண்டிய நிர்ப்பந்தத்துடன் படம் முடிவடைகிறது..

இத்திரைப்படம் எதைப் பற்றி பேச வருகிறது…? இரண்டு வயது முதிர்ச்சி அடையாத சிறுமிகள் உலகமயமாக்கலின் தாக்கத்தால், வெளிநாட்டின் மீது மோகம் கொண்டு, அதற்காக தங்கள் உடலையே விற்கத் துணிந்தார்களே…!! அதைப் பற்றியா..? படம் பேசவருகிறது… இத்திரைப்படம் அதைத்தான் மையமாகக் கொண்டு பேச முன்வந்திருந்தால், அவர்கள் செல்ல விரும்பும் வெளிநாடான பாரீஸ் தொடர்ப்பான செய்தி ஒரே காட்சியோடு முடிவடைந்திருக்காது… ஆக திரைப்படம் அதைப் பற்றி பேச வரவில்லை என்று உறுதியாக நம்பலாம்… அடுத்ததாக நம் முன் வந்து நிற்கும் கேள்வி ஒருவேளை திரைப்படம் வழி தவறிப் போன மகளுக்கும், அவளை காக்க விரும்பும் தந்தைக்கும் இடையிலான மனப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமோ…? இருக்கலாம்… ஆனால் முழுக்க அப்படியும் சொல்ல முடியாது… ஏனென்றால் திரைப்படம் முழுக்க அதைப் பற்றித்தான் பேச வருகிறது என்று நம்பினால், இறந்து போகின்ற அந்த தோழியின் பகுதிகள் படத்துக்கு தேவையற்றவை… அது முற்றிலும் வேறு மாதிரியான ஒரு கதைக் கோணத்தைக் கொண்டு நிற்கிறது.. ஆக திரைப்படம் அதைப் பற்றியும் பேச வரவில்லை… அல்லது இவை தவிர்த்து, திரைப்படம் சிறுவயதிலேயே இவர்கள் வழிமாறி போவதற்கு உளவியல் ரீதியிலான காரணம் என்ன…? என்று ஆராய முற்படுகிறதோ..? என்று எண்ணினால் அந்த உளவியல் ரீதியிலான பார்வைக்கான சுவடும் திரைப்படத்தில் இல்லை… அப்படியானால் திரைப்படம் எதைப்பற்றி பேச விரும்புகிறது…

நம் அனைவருக்குமே பரிச்சியமான ரன் திரைப்படம் எதைப்பற்றி பேசுகிறது… காதலையும் காதலுக்கான தடங்கலையும் பற்றி பேசுகிறது என்று நமக்குத் தெரியும்… ஒரு உதாரணத்து நான் அத்திரைப்படத்தை மூடநம்பிக்கைகளை கேலி செய்யும் நோக்கோடு எடுக்கப்பட்ட ஒரு சமூக சிந்தனையுள்ள திரைப்படம் என்று கூறினால், நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா…? ஏன் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள்.. அதில் தான் விவேக் வருகின்ற எல்லா இடமும் அப்படித்தானே இருக்கும்… அந்தக் காட்சியை நான் விவரித்தால் கூட நீங்கள் அத்திரைப்படத்தை சமூகசிந்தனையுள்ள திரைப்படமாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.. ஏனென்றால் உங்களுக்கு தெரியும்.. அது ஒரு காதல்படம்.. விவேக் வரும் இடங்கள் எல்லாமே படத்தின் கதையை நகர்த்த உதவாமல், பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய தனி ட்ராக் என்று… இப்படி நம் தமிழ் சினிமாவில் நிறைய காட்சிகள் காமெடிக்காகவும், கவர்ச்சிக்காகவும், வியாபாரத்திற்காகவும் என்று வெளிப்படையாக இடைச்செருகல் செய்யப்படுகின்றன… அதனால் பெரும்பாலான நம் தமிழ்திரைப்படங்களில் கதையை புரிந்துகொள்ள வரும் எல்லாக் காட்சிகளையும் நாம் வெகு சிரத்தையெடுத்து கவனிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை… ஆனால் இந்த விதி உலகம் முழுவதும் எல்லோராலும் போற்றப்படும், பார்க்கப்படும் படங்களுக்கு கொஞ்சம் கூட பொருந்தாது… ஏனென்றால் அவர்கள் எந்தவொரு காட்சியையும், ஏன் ப்ரேமைக் கூட… நேரத்தை ஈடுசெய்வதற்காகவோ அல்லது வேறு எந்த வணிக சமரசத்துக்காகவும் வைப்பதில்லை.. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் கதையை பார்வையாளனுக்கு புரியவைக்க.. அந்த இயக்குநர்கள் ஏதோவொரு விசயத்தை மெல்ல தூவிக் கொண்டே செல்கிறார்கள்… அதனால் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியையும் ஆழ்ந்த கவனத்துடன் கடப்பதென்பதும் என்னைப் பொருத்தவரை மிக முக்கியமானது… அப்படி கவனித்து எனக்கு கிடைக்கப் போவது என்ன…? என்று நீங்கள் கேட்டால், நீங்கள் என்ன இழந்தீர்கள் என்பதை உணரவில்லை என்று பொருள்…


நான் புரிந்துகொள்வது இதுதான்… இத்திரைப்படத்தை மதரீதியிலான புரிதலும் அணுகலும் இல்லாமல் புரிந்து கொள்வதென்பது கடினம்… உங்கள் கவனத்துக்கு இன்னும் இரண்டு விசயங்களையும் கொண்டு வரவிரும்புகிறேன்.. இயக்குநர் கிம் கி டுக் அவர்கள் ஒரு மத ஆலோசகர் அல்லது சமய அறிவுரை வழங்குவதற்கான (Preacher) படிப்பை படித்துவிட்டு  பாதியிலேயே கைவிட்டவர் என்பது ஒன்று… மற்றொன்று தென்கொரியாவில் அதிகமான மக்களால் கடைபிடிக்கப்படும் இரண்டு மதங்கள் பெளத்தமும், கிறிஸ்துவமும்… இப்போது திரைப்படம் சார்ந்த விவாதத்துக்குள் செல்வோம்..


திரைப்படம் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.. முதல் பகுதி 1) Vasumitra இரண்டாம் பகுதி 2) Samaria மூன்றாம் பகுதி 3) Sonata

VASUMITRA: இதில் இறந்து போகின்ற அந்தப் பெண் தோழியின் பெயர் Jae Yeong.. இவள்தான் பணம் சேர்ப்பதற்காக தன் உடலை விற்க முன்வருபவள்.. மேலும் இவள் தனக்கு முன்மாதிரியாக கொள்வது, புராண காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த வசுமித்ரா என்னும் பெயருள்ள தாசியை… இந்த தாசியிடம் அப்படியென்ன சிறப்பென்றால், இவளிடம் உறவு கொள்பவர்கள் அதன் முடிவில் ஒரு மிகச்சிறந்த புத்த துறவியாக மாறிவிடுவார்களாம்.. அதனால் தானும் வசுமித்ராவைப் போல் ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு தர விரும்புவதாகவும், அதனால் இனிமேல் தன்னை வசுமித்ரா என்றே அழைக்க வேண்டும் என்றும் தன் தோழியிடம் கோரிக்கை வைக்கிறாள்… இது படத்தில் வருகின்ற காட்சி… எனக்கு புத்தமதத்தைப் பற்றி அதிகமாக தெரியாது என்பதால், வசுமித்ரா தொடர்பான தகவல்களுக்கு இணையத்தை நாடிய போது WOMEN IN BUDDHISM என்ற புத்தகத்தில் வசுமித்ரா பற்றிய குறிப்புகள் கிடைத்தன… அவை புனைவுக் கதையா…? அல்லது வரலாற்று சம்பவமா என்பதை அறியமுடியாவிட்டாலும், அவளைக் கடந்தால் தான் புத்தநிலையை அடையமுடியும் என்பதாக அந்த வரிகளுக்கு பொருள் கொள்ளமுடிந்தது…

ஆக Jae Yeong என்ற அந்தக் கதாபாத்திரம் ஒரு பெளத்த மதத்துக்கான அடையாளம்… மேலும் காமம் என்பது ஒர் கலையாகவும், அங்கீகரிக்கப்பட்ட வடிவமாகவும் பெளத்தத்தில் பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது… ஏனென்றால் தான் தன் உடலை விற்பதை அப்பெண் குற்றமாக கருதவில்லை.. மேலும் அதில் அவள் சந்தோசம் கொள்கிறாள்… எப்போதும் அன்பின் வடிவமாக அவள் முகத்தில் புன்னகையும் சந்தோசமும் இருந்து கொண்டே இருக்கிறது… அந்தப் புன்னகை அவள் மாடியில் இருந்து குதிக்கும் போதும், இறந்த சடலமாக இருக்கும் போதும் அவளது முகத்தில் இருந்து தவறுவதே இல்லை.. இத்தனைக்கும் இறப்புக்கு முன்னர் அவள் காண விரும்பிய நபரை காண்பதற்கு முன்பே அவள் இறந்தும் போகிறாள்.. இருந்தும் அவளது முகத்தில் புன்னகை இருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று…


வாடிக்கையாளருடனான கலவிக்கு பின்னர் தோழிகள் இருவரும் பொதுக் குளியலறையில் அமர்ந்திருக்கும் போது Jae Yeongவின் உடலை அவளுடைய தோழி அழுத்தமாக துடைத்துக் கழுவிக் கொண்டிருப்பாள்… அப்பொழுது அவள் சொல்கின்ற வசனங்கள் முக்கியமானது… “I AM NOT DIRTY..” EVAN ITS NOT A MURDER..” ஒருவனுடன் கலவி முடித்து வந்ததால், என்னுடல் அசுத்தமானதாக மாறிவிடாது… மேலும் குற்றமாக கருதும் அளவுக்கு நான் ஒன்றும் கொலை செய்யவில்லை…” ஆக இந்த கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தின் படி அவள் செய்வது குற்றமில்லை… மேலும் அவள் பெளத்தத்துக்கு விரோதமாகவும் எதுவுமே செய்யவில்லை… பெளத்தத்தின் அடிப்படையே ”ஆசைதான் துன்பத்துக்கு காரணம்” என்பதே அல்லவா..? சாகும் போதும் சிரிப்பை உதடுகளில் அணிந்து கொண்டு இறந்து போகும் அந்த கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது அவளுக்கு ஆசையே இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது… “பாரிஷ் போக ஆசை தான்..” சாகும் முன் தன் மனம் கவர்ந்த, தன் வாடிக்கையாளனான அந்த இசையமைப்பாளரை காண ஆசைதான்…” ஆனால் இவை எதுவுமே நிறைவேறாத போதும் அவளால் சிரித்துக் கொண்டே மரணத்தை தழுவிக் கொள்ள முடிகிறது… போலீஸிடம் தப்பித்து அரைகுறை ஆடையுடன் ஓடும் போதும் சிரிக்கிறாள்.. தன் உடலை அசுத்தமென எண்ணி, அழுந்தத் துடைத்து தூய்மைப்படுத்த நினைக்கும் தோழியைப் பார்த்தும் சிரிக்கிறாள்… போலீஸிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதிக்கும் முன்பும் சிரிக்கிறாள்.. உயிர் பிரிந்த சடலமாக கிடக்கும் போது சிரித்துக் கொண்டே தான் கிடக்கிறாள்.. அவளது உடலை கட்டிக் கொண்டு அழும் தோழி Yeo jin “இங்கு சிரிக்க என்ன இருக்கிறது..? ஏன் சிரிக்கிறாய்…?” என்று கேட்டுக் கொண்டே அவள் உடலை மூடுகிறாள்.. அது விடாமல் விரட்டி, தன் உயிரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சமூகத்தின் சட்டத்தைப் பார்த்து அவள் வீசும் பரிகாச சிரிப்பு…

இதைப் படித்தவுடன், ஆக பதின்மவயதை அடையாத ஒரு சிறுபெண் பந்தி விரிப்பதை சரியென்கிறாயா..? என்று சகட்டுமேனிக்கு ஏச வேண்டாம்… கொரிய நாட்டில் விபச்சாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட தொழில்.. சிறு பெண்களுக்கு அல்ல… ஆனாலும் பெரும்பாலான படிக்கும் வயதுள்ள பெண்கள், ஏதோவொரு காரணத்துக்காக இது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதே நாம் பல நேரம் கடக்கும் செய்தி… ஆக இது போன்ற சமூக அநீதிகளை தடுப்பதற்காக அரங்கேற்றப்படும் சட்டங்கள் எல்லாம், சில நேரங்களில் இப்படி அவர்களது உயிரைக் குடிப்பதற்க்கும், பெரும்பாலான நேரங்களில் அந்த அரசு இயந்திரங்களின் தாகத்தை தணிப்பதற்க்கும் மட்டுமே பயன்படுவதால் தான்… அவர் அந்த சட்டங்களை சாடுகிறார்… அவரோடு சேர்ந்து நானும்…

அடுத்ததாக சமரியா.. Samaria


SAMARIA: இத்திரைப்படத்துக்கு ஏன் சமரிட்டர்ன் கேர்ள் என்று பெயரிட வேண்டும்… இத்திரைப்படத்தில் எந்தவொரு கதாபாத்திரத்தின் பெயரும் சமரியா அல்ல… ஆக அந்த தலைப்பின் மூலமாகவும் அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்பது பொருள்… பொதுவாக சமரிட்டர்ன் கேர்ள் என்பதற்கு என்ன பொருள் என்று பார்த்தோமானால் “பிரதிபலன் எதிர்பார்க்காமல், உதவி செய்பவள்..” என்று பொருள்.. மேலும் இரண்டாம் பகுதியின் பெயர் சமரிட்டன் அல்ல.. சமரியா..? இந்த சமரியாவிற்கு பொருள் என்ன என்று தேடினால் அது நம்மை கிறிஸ்துவத்துக்குள் சென்று தள்ளுகிறது… யோவான் சுவிஷேசத்தில் 4:6ல் சமரியா ஸ்தீரி நீர் மொண்டு கொள்ள கிணற்றுக்கு வருகிறாள்.. இயேசு அவளிடம் தண்ணீர் கேட்கிறார் என்பதாய் செல்கிறது அந்த அதிகாரம்… அவளுக்கு ஐந்து கணவன்கள்… கணவன் அல்லாத இன்னொருவனிடம் அவள் தங்கியிருக்கிறாள் என்பது அவளைப் பற்றிய பின்குறிப்பு…

இப்போது கதைக்குள் செல்வோம்… SAMARIA மற்றும் SAMARITAN GIRL என்ற குறிப்பால் உணர்த்தப்படும் பெண் Yeo jin தான்… அவள் தான் பெரும்பாலும் இந்தப் பகுதியை ஆக்ரமிக்கிறாள்.. அவளால்தான் கதையும் நகர்ந்து செல்கிறது… இவளது குணாதிசத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நாம் மீண்டும் VASUMITRAவிற்குள் செல்ல வேண்டும்.. அவளுக்கு என்னதான் பாரீஷ் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தாலும், இவர்கள் செய்துவரும் தாசி ரீதியிலான தொழிலில் அவளுக்கு விருப்பம் இல்லை… ஒருமுறை அதை நிறுத்திவிடுவோமா என்றுகூட கேட்கிறாள்… மேலும் வாடிக்கையாளராக வந்து செல்லும் ஆண்களை அவள் மிருகங்கள் என்று வர்ணிப்பதோடு அடியோடு வெறுக்கவும் செய்கிறாள்… அவளுக்கு அந்த தொழிலை ஆதரிப்பதில் மத ரீதியிலான தடங்கல் இருக்கிறது…. ஏனென்றால் அவள் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவள்.. அவளுக்கு காரில் வரும் போதுகூட அவளது தகப்பன் சுவிஷேசம் குறித்த ஏதோவொன்றை பிரசங்கித்துக் கொண்டே இருக்கிறார்… மேலும் செக்ஸ் சார்ந்த அவளது பார்வை எப்படிப்பட்டது என்பதற்கும் ஒரு காட்சி இருக்கிறது…

தன் தோழியை வாடிக்கையாளருடன் அனுப்பி விட்டு, Yeo Jin தனித்திருக்க… அங்கே விடப்பட்டிருக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் புகைப்படத்தை அவள் பார்த்துக் கொண்டிருக்க… அவளை ஒரு இளைஞன் நெருங்குகிறான்… அதைப் பார்த்துவிட்டு அவள் அந்தப் படத்தை கீழே போடுகிறாள்.. அவ்விளைஞன் அவளை தவறாகப் புரிந்துகொண்டு அவளையே பார்க்கிறான்… என்ன பார்க்கிறாய்..? என்று கேட்டவளிடம், என்னால் தான் எதையும் பார்க்க முடியவில்லையே..? நீ ஆடை அணிந்து கொண்டல்லவா இருக்கிறாய்..? என்று கேட்க அவள் சொல்லும் பதில் முக்கியமானது… YOU KNOW YOU DID, AND YOU ARE LOOKING NOW பைபிளின் மிக பிரபலமான வசனம்.. “எப்போது நீ ஒரு பெண்ணை இச்சை கொண்டு பார்க்கிறாயோ.. அப்போதே நீ அவளுடன் விபச்சாரம் செய்தாயிற்று..” என்கின்ற ரீதியில் ஒரு வசனம் வரும்… அதைத் தான் அந்தப் பெண் வழிமொழிகிறாள்… ஆக அவள் கிறிஸ்துவத்தில் ஊறியவள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்… அந்த இடத்தில் அவள் தனக்குள்ளும் உணர்ச்சிகள் இருப்பதை மறைத்துக் கொள்கிறாள்.. மேலும் அது போன்ற அசுத்தமான ஆடவனை தொடுவதையே பாவமாக கருதுபவள் அவள்… அது அந்த இசையமைப்பாளனை தன் தோழிக்காக சென்று அழைக்கும் போது அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்… அவன் ஆடையை மட்டுமே பிடித்து இழுப்பாள்… அவனை தொடத் தயங்குவாள்… இப்படி அவள் ஒரு கிறிஸ்துவ மதத்துக்கான பிரதிநிதியாக வருகிறாள்… அப்படி இருந்தவள் எப்படி தன்னை ஒரு பாலியல் தொழிலாளியாக மாற்றிக் கொள்கிறாள் என்பது நமக்கு ஆச்சரியம் அளிக்கும்… ஆனால் அதையும் அவர் மிக அழகாகவே விளக்குகிறார்…


Yeo jin ஒரு காட்சியில் தன் குற்றவுணர்ச்சியை தன் தோழியிடம் வெளிப்படுத்துவாள்… எப்படி என்றால் ”நீ என்னைவிட அதிகமாக கஷ்டப்படுகிறாய்… ஆனால் அதற்கான பலனை மட்டும் நான் அனுபவிக்கிறேன்.. உனக்குப் பதிலாக போனில் நான் பேசுகிறேன்.. ஆனால் உன்னை அனுப்பிவைக்கிறேன்… பணத்தையும் நான் வாங்கிக் கொள்கிறேன்.. அங்கு அந்த மிருகங்களிடம் நீ கஷ்டப்படுகிறாய்… இது என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது..” என்று தன் தோழி இறப்பதற்கு முன்பே அதை சொல்லி இருப்பாள்.. தோழி இறந்தவுடன் அந்த குற்றவுணர்வு இன்னும் அதிகமாக அவளை அழுத்தும்… அப்பொழுதுதான் அவள் முடிவு செய்வாள்.. தானும் தன் தோழியைப் போல் மாற வேண்டும்… அவள் அனுபவித்த அதே துன்பத்தை தானும் அனுபவிக்க வேண்டும் என்று… பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே போதுமே… அது அப்படி அல்ல.. அதற்கான பதில் கிறிஸ்துவத்தில் இருக்கிறது…

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கருத்தாய்வு கூட்டத்தில் இயக்குநர் மிஷ்கின் ஒரு விசயம் சொன்னார்… குண்டடி பட்டுக் கிடப்பவனை அந்த மருத்துவ கல்லூரி மாணவன் ஏன் முதுகில் தூக்கி சுமக்கிறான்.. அதே மாணவன் படத்தின் இறுதிக்காட்சியில் குழந்தையை தன் நெஞ்சில் தாங்கி செல்கிறான்… முதலில் வருவது பாவத்துக்கான குறியீடு… அவனது பாவத்தை முதுகில் சிலுவையைப் போல் சுமக்கிறான்… அடுத்தவனின் பாவத்தை சுமப்பவன் கைவிடப்படான்.. அவனுக்கு ஜெயமுண்டு.. அதைத்தான் இறுதிகாட்சி விளக்குகிறது… கிரிடத்தை நெஞ்சில் ஏந்திச் செல்கிறான் என்று விளக்கியிருப்பார்… அது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது..

அதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால்… அந்த விசயம் இத்திரைப்படத்தை புரிந்து கொள்ளவும் எனக்கு உதவியது என்பதால் தான்… மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்துகிடக்கும் தன் தோழியை தன் முதுகில் சுமப்பாள்.. அப்போதே அவள் தன் தோழியின் பாவத்தை (கிறிஸ்துவ மத புரிதலின் அடிப்படையில்..) சுமக்கத் தொடங்குகிறாள்.. அதில் தனக்கு பங்குண்டு என்பதால் அதற்கான பிராய்சித்தம் தேடுகிறாள்.. எப்படி..? தேவகுமாரன் இயேசு மனிதனின் பாவங்களை போக்க… மனிதனாகவே பிறந்து, மனிதர்களின் பாவத்துக்காக சிலுவையை சுமந்தாரே…? அதே போல.. தாசியாகவே மாறுகிறாள்… தாங்கள் முன்னரே பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்கிறாள்… எந்த பிரதிபலனும் இன்றி உதவி செய்து, சிலருக்கு காதலியாக, சிலருக்கு மனைவியாக இருந்து… விவிலியத்தில் கிணற்றடிக்கு வந்த ஐந்து கணவன்களைக் கொண்ட சமாரியா பெண்ணைப் போல், ஒரு சமரியாவாக, ஒரு சமரிட்டன் கேர்ளாக மாறி நிற்கிறாள்… அந்த சமாரியப் பெண்ணை ஏற்றுக் கொண்ட கடவுள் தன்னையும் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன்….


SONATA: இது மகிழ்ச்சியான இசையை கொடுக்கும் ஒரு இசைக் கருவியின் பெயர்… இது படத்தின் க்ளைமாக்ஸ் பகுதியில் தான் வருகிறது.. அதற்கு முன்னரே Yeo jinன் போலீஸ் தந்தை பலி வாங்கும் நடவடிக்கையில் இறங்கத் தொடங்க… அதில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்… மற்றொருவர் கொலை செய்யப்படுகிறார்… இது அவரது தந்தை தன் மனம் திருந்தும் பகுதியாக இடம்பெறுகிறது..

ஏனென்றால் Yeo jinன் தந்தையும் கிறிஸ்துவ மதம் சார்ந்த நம்பிக்கையை அதிகமாக மகளுக்கு போதிப்பவர்…. அவரோடும் மதம் தொடர்புடையதாகவே இருக்கிறது.. தன் நண்பனோடு ஹோட்டலில் அமர்ந்திருக்கும் போது, தன் நண்பன் அருகில் இருக்கும் பள்ளி செல்லும் சில பெண்களை கிண்டல் செய்யும் இடம் மிக முக்கியமானது… அவர்களோடு பேச முற்பட்டு, உறவுக்கு அழைக்கலாமா என்ற எண்ணத்துடன் காய் நகர்த்தும் நண்பனை, தான் அப்போது இருக்கின்ற சூழ்நிலையால் ஒரு அறை மட்டும் அறைந்துவிட்டு நகலும் Yeo jin னின் தகப்பன், அடுத்த காட்சியில் கல்லெறிவார்…. தன் பெண்ணுடன் படுக்க முனைபவனின் மீது. “உங்களில் யார் பரிசுத்தமானவர்களோ…? அவர்கள் அவள் மீது முதலாவது கல்லை எறியுங்கள்…” என்னும் யோவான் 8:7 வசனங்களை பிரதிநிதிப்படுத்தும் காட்சி அது.. அதோடு அவர் நிற்காமல், தன்னை மன்னிக்கும்படி வேண்டியும், அவனை மன்னிக்க முடியாமல் அந்த மனிதனின் வீட்டுக்கும் சென்று, அவளது மகள், மனைவி முன் அவரை அவமானப்படுத்தி அந்த மனிதனின் தற்கொலைக்கும் காரணமாகிவிடுவார்.. அந்தக் காட்சி… அவர் தான் போதித்த மதநெறிகளுக்கு முரண்படும் காட்சி…. பாவம் செய்தவரை மன்னிப்பது தானே கிறிஸ்துவத்தின் அடிப்படையே…


மேலும் ஆணுக்கு அடிப்படையாகவே இருக்கின்ற தனக்கென்றால் ஒரு நியாயம்… ஊருக்கென்றால் ஒரு நியாயம் என்பதையும் அது பகடி செய்கிறது.. ஒரு காட்சியில் Yeo jinவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட 40 வயது மனிதன் சொல்லுவான்… ”ஒழுக்கத்தையும், வேல்யூஸையும் தூக்கிப் போடு.. இதல்லவா உண்மையான சந்தோசம்… இது சந்தோசம் இல்லையா…?” என்று Yeojin உடலை தடவுவான்.. அடுத்த நொடி தன் மகளுக்கு போன் செய்து அவள் பள்ளியில் தான் இருக்கிறாளா..? என்று செக் செய்து கொள்வான்… அது போல தன் தோழியிடம் படுத்திருந்துவிட்டு செல்பவர்களை திட்டும் Yeojin தன் தோழியை திட்டுவதே இல்லை… இப்படி அனைவருமே தங்களுக்கென்று ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம் என்று வேஷம் போடுபவர்கள் என்பதான பகடியும் திரைப்படத்தில் உண்டு…

இப்போது Yeojinனின் தகப்பன் மதத்தின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் ஒரு மன்னிக்கவே முடியாத மிகப்பெரிய குற்றம் புரிந்தவராக மாறி நிற்கிறார்.. ஏனென்றால் தன் மகளின் தாசித் தொழில் அந்த டைரியின் கடைசி நபருடன் முடிவுக்கு வருகிறது… பாவமே செய்யாத Yeo jinக்கும் மீட்பு உண்டு.. பாவங்கள் செய்த சமாரியாவுக்கும் மீட்பு உண்டு… போகும் போதும் வரும் போதும் மகளுக்கு பிரசங்களை பொழிந்தும் அவள் தடம் மாறிப் போய்விட்டாளே என்ற வருத்தம் தந்தைக்கு இருந்தது… ஆனால் தடம் மாறிப்போனது அவள் மட்டும் அல்ல.. தானும் தான்.. தன் கோபம் ஒருவன் பூமியில் ரத்தம் சிந்த காரணமாக மாறிவிட்டது…. ஆனால் தன் மகளோ மன்னிக்கக்கூடிய பாவத்தைத் தான் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவராக.. தான் எப்படி உணர்ச்சிவசப்பட்டு அன்பை போதிக்கின்ற மதத்தை மீறி, கோபத்தை வெளிப்படுத்தினேனோ…. அது போல அவள் உணர்ச்சிவசப்பட்டு மதத்தை மீறி, காமத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்… இரண்டுமே மனிதனின் வேறுபட்ட ஒருவகை உணர்ச்சி தானே என்பதாக ஒரு புரிதல் ஏற்படுகிறது… தன் மனைவியின் கல்லரையில் வைத்து, தன்னால் கொல்லப்பட்ட நபருக்காக அழுகிறார்… தன் தந்தை தன்னால் பாதை மாறிப் போய்விட்டாரே என்று மகள் அழுகிறாள்… முதல் காட்சியில் தன் மகளை குழந்தையாக பாவித்து அவர் உணவூட்டுகிறார்.. இறுதியாக மகள் குழந்தைதனமாக கோபம் கொண்டு வெறிச்செயல் புரிந்து, வழி தெரியாமல் நிற்கும் தன் தந்தைக்கு கிழங்கை உணவாக ஊட்டுகிறாள்… இது ஒருவிதமான புரிதல்.. குழந்தைத்தனமாக நினைத்த பெண் குழந்தை அல்ல.. அவளை குழந்தையைப் போல் கருதியதால்தான், அவள் மீது அவளது தகப்பன் குற்றம் சாட்டுவதும் இல்லை.. கேள்வி கேட்பதும் இல்லை… அறியாமல் செய்கிறாள்.. என்றே எண்ணுகிறான்… ஆனால் அவள் குழந்தையல்ல.. தெளிவாகவே இருக்கிறாள்.. என்பதை புரிந்து கொள்கிறார்.. கார் ஓட்டத் தெரியாத தன் மகளுக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் அவர், இனி நான் உன்னை பின் தொடரமாட்டேன்… நீயாக கவனமாகச் செல்.. ஏனென்றால் இன்னும் பயணம் நெடுந்தூரம் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்வதாக முடிகிறது திரைப்படம்…


ஆக இத்திரைப்படம்…. மனித மனதின் கட்டற்ற உணர்ச்சிகளை அடக்கி ஆளவும் வேண்டும் பண்படுத்தவும் வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டமும், மத நெறிகளும் அதை செய்துகாட்டுவதில் தவறி நிற்பதை சூசகமாக சுட்டிக் காட்டுகிறது…. எந்தமதமாக இருந்தாலும் அதன் அடிப்படை அன்பு தான் என்பதை, அதன் வரைமுறைகளை பிடித்துக் கொண்டு தொங்கும் நாம் மறந்துவிடுகிறோம்.. சட்டத்திற்க்கும் மத நெறிகளுக்கும் முரண்பட்ட ஒரு செயலை ஒரு மனிதன் செய்யும் போது, உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு கோபம் கொப்பளிக்க.. அவனுக்கு தண்டனை தருவதை சட்டமாக்கி, அதை குற்றவுணர்ச்சியில்லா மனதுடன் ஏற்றுக் கொண்ட நாம்… அந்த குற்றவாளி குற்றம் செய்த போது இருந்த மனநிலையும் சரி, அதற்கு நாம் தண்டனை கொடுத்தபோது நமக்கு இருந்த மனநிலையும் சரி அதீதமான உணர்ச்சி கொந்தளிப்பால் ஏற்பட்டது தான் என்பதை ஏன் மறந்து போகிறோம்…. சட்ட திட்டங்களையும், மத நெறிகளையுமே புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருக்கும் நாம் சக மனிதர்களின் மன உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள தலைப்பட்டால் என்ன..? என்ற கேள்வியையும் எழுப்பிச் செல்கிறது இத்திரைப்படம்..

அடுத்தப் பதிவு

Spring Summer Fall Winter and Spring (2003)

2 comments: